2
மணிப்பூரில் நடப்பது சாதியை முன்னே நகர்த்திய, பாஜக-வின் தந்திரமா? அல்லது தொல்பழங்குடிகளின் நிலங்களைப் பறிக்கும் அதன் நில அளவை நடவடிக்கையா? அதிகார அத்துமீறலா? என்று நாம் விவாதிக்கிறோம். அவற்றை ஒட்டி மக்களின் கோபம் எங்கே தொடங்கியது என்பதையும் சேர்த்து விவாதிக்கிறோம்.
பெரும்பான்மையாக 53% உள்ள மெய்தெய்க்கு “பட்டியல் பழங்குடி” அந்தஸ்து கொடுப்பதா? இதுபற்றி மணிப்பூர் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோது “ஒன்றிய அரசுக்குச் சிபாரிசு ஒன்றை அனுப்புங்கள்” என்று வழிகாட்டுதல் கொடுத்தது. அப்போதிலிருந்தே ‘குக்கி மாணவர் தலைவர்கள்’ பெரும்பான்மையாக உள்ள மாணவர் அமைப்பு உடனே எதிர்த்துப் போராட்டத்தில் இறங்கியது. இதுதான் ஆரம்பமா? அதே சந்தர்ப்பத்தில் நில அளவையும் ஒரேநேரத்தில் தொடங்கப் படுகிறது. இது ஒருவேளை ஒன்றிய– மாநில பாஜகவின் கூட்டான தூண்டுதலா? இதனை இரண்டும் இணைந்த ஒரே கட்டத்தில் நடந்த தொகுப்பான சம்பவங்களாகவே நாம் பார்க்கமுடியும் ; பாஜக , வடகிழக்கு வட்டாரத்தில் தனது கிரிமினல் வேலைகளை இன்னொரு சுற்று தொடங்கிவிட்டது என்று ஊகிக்கவும் முடியும்.
மாநில அதிகாரத்திலிருந்து தீர்மானிக்கமுடியாத (எஸ்.டி பட்டியலில் புதிய சமூகக் குழுவைச் சேர்க்கும்) ஒரு விசயம் பற்றி, உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் 2000 – ஆம் ஆண்டு ஒர் வழக்கு விவாதிக்கப்பட்டது; அங்கு இவ்விசயம் “மாநில உயர்நீதிமன்றத்தின் வரம்பைத் தாண்டிய ஒன்று” எனத் தெளிவாகத் தீர்ப்பு கொடுக்கப்பட்டது. அப்படி ஒரு தீர்ப்பு வந்தபிறகும் அது ஏன் இப்போது மன்றத்தில் முன்வைக்கப்படவில்லை? என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் இப்போது சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், மோடியின் ஒன்றியக்குடுமி ஆடும்போது அதைத் தாண்டி எதுவும் நடக்காது என்பது தெரிந்ததுதானே!
மெய்தெய் சமூகத்தில் “பெரும்பான்மை இந்துக்கள்” இருப்பதாகச் சொல்கிறார்கள். இது யார் செய்த ஆராய்ச்சியின் எப்போதைய முடிவு? “மணிப்பூரைக் காவல் காக்கும் காலக்கடவுள்” விஷ்ணுவுக்கே வெளிச்சம்! இன்றும்கூட மெய்தெய்யின் ஒரு பிரிவு மக்கள் சொந்தப் பழங்குடி நம்பிக்கையைப் பின்பற்றுகிறார்கள்; தவிர, மற்றும் ஒரு பிரிவு கிறித்தவத்தைப் பின்பற்றுகிறது; மெய்தெய் சர்ச்சும் பாஜக குண்டர்களால் சமீபத்தில் தாக்கப்பட்டிருக்கிறது என்பது இதற்குக் கூடுதல் சாட்சி. அப்புறத்துக்கு இப்புறம் மெய்த்தெய் என்ன சூப்பர் ஹிந்து?
முரண்பாட்டில் பச்சையாகத்தெரியும் மற்றொரு உண்மை – நாகர்களும் குக்கிகளும் கிறித்தவர்கள். பாஜக மதரீதியில் இப்பகுதியில் குட்டையை குழப்பி, தாக்குதல் நடத்தி, ஆதாயம் அடையப் பார்க்கிறது. முரண்கள் இருந்தாலும் இதுநாள்வரை பழங்குடிகள் ‘மதரீதியாக’ மோதிக் கொண்டதில்லை. பிளவுபடுத்தி மோதவைக்கும் முஸ்தீபுகளை ஆர்எஸ்எஸ் தொடங்கிவிட்டது. சட்டப் பிரிவு 355-ஐ மணிப்பூர்மீது பாய்ச்சி, ஒன்றியத்திலிருந்து பாதுகாப்புப் படையை அங்கு அனுப்பி கலவரம் தூண்டியிருப்பது அதன் முதல் அடையாளம்; இன்னொரு வழியில், நிலைமை தனக்குக் கட்டுப்படவில்லை என்றால் “356 காத்திருக்கிறது, குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரவும் தயங்கமாட்டோம்” என்று எச்சரிக்கை செய்ய ஒரு வாய்ப்பு. ஆனால் பழங்குடிகள் அந்த அளவு முடங்கிப் போகவில்லை என்பது நல்ல செய்தி.
மெய்தெய்யை எஸ்டிக்குள் இணைப்பதை எதிர்த்து மாணவர் சங்கம் பெரிய எதிர்ப்பு இயக்கத்தை அறிவித்துள்ளது. மெய்தெய் சமூகம் சார்ந்த மணிப்பூர் முதலமைச்சர் ஆதாயமடையப் பார்ப்பது வெளியேவந்து நாறத்தொடங்கிவிட்டது. வெறுமனே பொருளாதாரச் சுயநலம் என்று மட்டும் இதை நாம் பார்க்கக் கூடாது; வரலாற்று மோசடிகளை எல்லாம், ஒரேவீச்சில் அடிமையாக உள்ள முதல்வர் N.பிரேன்சிங் ஆட்சியின்மூலம், ஆர்எஸ்எஸ்-பாஜக , மணிப்பூரில் செய்து முடித்துவிடத் துடிக்கிறது என்று பார்க்கவேண்டும்.
சென்ற பாகம் 1-ல் மெய்தெய் சமூகக் குழுவை எஸ்.டி-யில் சேர்ப்பது ஏன் என்பதை பாகம்2 -ல் பார்க்கலாம் எனக் குறிப்பிட்டோம்.அதனை மேலே சுருக்கமாகப் பார்த்தோம் .
முதல் பாகம்: காவிகளால் பற்றி எரியும் மணிப்பூர் மாநிலம்!
000
வட கிழக்குப் பழங்குடிகள் வரலாற்றைத் தெளிவாக இனம் பிரித்துப் பார்ப்பது மிகக் கடினம் என்று சென்ற பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம்.ஆனால் குறைந்த அளவாவது ஆர்எஸ்எஸ் புதிதாக மாற்றி எழுத விரும்பும் மெய்தெய் குழுவின் பழைய, புதிய வரலாற்றுப் புதிர்கள் பற்றி அவசரமாகக் கொஞ்சம் அறிவது நல்லது. விரிவாக்கினால், சில லட்சம் சொற்களுக்கு வரும். அவ்வளவு தாங்கமாட்டோம்.
இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாற்று உண்மைகளை மறைத்துவிட்டு, பொய்களைக் கடைவிரித்து இன்றைய தேசியத்தை அச்சில் வார்த்து வருகிறது ஆர்எஸ்எஸ் – பாஜக. எதற்காக? ஒற்றை இன, ஒற்றைப் பண்பாட்டை முன்மொழியும் பாசிசத்தைக் கொண்டுவருவதற்காக.
மெய்தெய் பற்றி உண்மையின் சில துளிகளை இனி இங்கே பார்க்கலாம்.
மெய்தெய் சொல்லிக் கொள்ளும் பெருமிதம், ஆரிய வம்சத்தவர் என்பதாம்.
** தூய ஆரியர் என்பது நிச்சயமான பொய் ; திபேத் – பர்மிய – மங்கோலிய – ஆஸ்திர்லாய்டு – தாய் -ஆரியப் பழங்குடி ஆகிய இத்தனைக் கலப்பும் மற்றும் தெற்காசியக் கருப்பர் இன மற்றும் ஆர்எஸ்எஸ் – பாஜகவின் ‘ஆத்மார்த்த எதிரியான ‘ திராவிடர்கள் சேர்ந்து வளர்ந்தே மெய்தெய் ஆக உருப்பெற்றார்கள். இது வரலாறு.
* மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து வில்லும் அம்பு சகிதம் வந்த ஆரியர்களின் கிளை என்று சாதித்துப் பார்த்தார்கள்.
** வந்தவழி என்றால் பிராந்தியத்தின் பல நூறு பழங்குடி ஆறுகளின் கலப்பாகவே, சுவடாகவே இருக்கமுடியும். அதற்கும் முன்னால் வெகுகாலத்துக்கு முந்தைய பழமை என்றால், புதிய கற்காலமனிதன் கி.மு.2000 -க்கு முன்னால் அங்கே வந்திருக்கவேண்டும் என்று சொல்கிறார்கள், அந்தக் கி.மு – வின் தொடர்ச்சியாக வடகிழக்குப் பிராந்தியம் இருக்கவேண்டும். எப்படிப் பார்த்தாலும் தூய ஆரியம் என்று அவாள் சாதிப்பது பொய்.
* வடக்கின் சடங்காச்சாரம் பதிந்த தந்தை தாய்களின் ரத்தப் பாரம்பரியம் என்று விளக்குகிறார்கள்.
** அதுவும் பொய். ‘ இந்தியா ‘வின் பல பகுதிகளிலிருந்தும் இங்கு வந்து கலந்த மக்கள் ‘ மெய்தெய் – மயப்பட்டார்கள், சமஸ்கிருதமயப்படுதல் என்று சொல்கிறோமே அதுபோல ; இதுவே ” தேசிய மெய்தெய் பாரம்பரியம் ” !
* இப்பிராந்தியத்தில் 29 பண்டைப் பழங்குடிகள், “அட்டவணைப் பழங்குடிகளான ” ( STs ) ‘ இந்து மக்கள் ‘ வாழ்ந்துவருகிறார்கள் என்று ஒரு வாதம்.
**இதுவும் ஒரு தந்திரமான புள்ளிக் கணக்கு. மிக முக்கியமாக ,’ இந்து ‘ அல்லாத மெய்தெய் பேசும் மக்களோ வெறும் அட்டவணைச் சாதிகள் என்கிறார்கள், அதாவது, எஸ்.சி -க்கள். ஆக, தற்போதைய பாஜக தந்திரத்தின்படி, மெய்தெய்யை எஸ்.டி ( STs ) ஆக்கிவிட்டால் இவர்கள் எஸ்.டி-க்களிலேயே உயர்ந்தவர்கள் என்ற ஆதிக்கத்திற்கு வருவார்கள் ; SC- க்கள் அடிமைகளாகக் கீழே வைக்கப்படுவார்கள். ஆய்வாளர்களின் அதிர்ச்சிதரும் கணிப்புகள் இவை.
இப்படி பொய் வரலாற்றுக்கு சட்டரீதியான அங்கீகாரம் கொடுப்பதற்காகவே சங்கிகள் அதிகாரத்தைக் கேடாகப் பயன்படுத்திக் கலவரம் செய்து அமைதியான பூமியை ரத்த பூமியாக்கிவருகிறார்கள்.
இன்னொரு சிறிய கணக்கைப் பார்ப்போம். 1991 புள்ளிவிவரப்படி, ‘ இந்துக்கள் ‘ 58% ; கிறித்தவர்கள் 34.11% ; முசுலீம்கள் 7.26%. தங்குல்கள் ( நாகர்கள் ), கிழக்கு மலைப் பகுதிகளில் வாழும் ததௌகள் ( குக்கிகள் ), வடமேற்கு மற்றும் தெற்கு மலைப் பகுதிகளின் மக்கள் சேர்ந்து பெரிய பழங்குடிமக்களாக இயற்கையாகவே வளர்ந்தவர்கள்; ‘இந்துக்கள் ‘ என்று கூட்டிக் கணக்கு காட்டப்பட்டவர்கள் அல்ல. இதில் மிகச் சிறு அளவிலான பழங்குடிகள் அங்கமி, சேமா, சால்தேக்களும் அடங்குவார்கள். பழங்குடிகள் சமவெளிக்கு வரவர நிலம் – மக்கள் இரண்டுக்கும் உள்ள விகிதமும் மாறியிருக்கிறது. 67.5% மக்கள் 1/10 நிலப் பகுதியான பள்ளத்தாக்கிலும், 32.5% மக்கள் 9/10 மலைப் பகுதியிலும் நிரம்பி வாழ்கிறார்கள். சிறிதுசிறிதாக மலைப்பகுதியை “பாதுகாக்கப்பட்ட அரசுப் பகுதி”யாக ஆக்கிவிட்டு அதை கார்ப்பரேட்டுகளுக்கு கைமாற்றிக் கொடுப்பதே காவிகளின் கொள்ளைத் திட்டம்.
இதெல்லாம் போதாது என்று தற்போது அந்த மாநிலத்துக்கு சூட்டி அழகு பார்க்கப்படும் ” மணிப்பூர் ” என்ற பெயரே மணி + புரா என்ற சமஸ்கிருதச் சொற்களின் கூட்டு என்று சில பண்டித விளக்கம் கொடுக்கிறார்கள். அந்த மாநிலத்துக்கு பார்ப்பன மூலம் சூட்டுவதை நாம் எதற்காக ஏற்கவேண்டும் ? முன்பு அதே இடத்துக்கு மிட்டெய்–லெய்பாக், ஸன்னா–லெய்பாக், பொய்ரெய்–லாம், (ட்)டில்லி–கோக்டாங் என்ற பெயர்கள் இருந்தன. அவற்றில் பழங்குடி மணம் இருக்கிறதே, மூத்ததாகவும் இருக்கிறதே என்ன செய்யலாம்?? தற்போதைய அதன் தலைநகரின் பெயர் இம்பால். இதன் பழைய பெயர்கள் பழங்குடி மணத்தோடு யும்பால், காங்லா என்று வழங்கப்படுகிறது –என்ன செய்யலாம் ? இதைத் தவிர, சுற்றியுள்ள பகுதிகளின் பெயர்களிலும் சமஸ்கிருத வாடை இல்லை. அதாவது , ஆசியப் பொருளாதார–பண்பாட்டுச் சந்திப்பில் 2500 ஆண்டு காலம் வளர்ந்து கடந்துவந்துவிட்ட தொல்பழங்குடிப் பகுதிகளே அவை.
இதுதான் ஆர்எஸ்எஸ்-பாஜக — மணிப்பூரின் வரலாற்றுக்கும், மெய்தெய்க்கும், முத்திரைச் சூடு போட்டு ஆரியப் பார்ப்பனமயமாக்கிவரும் மந்திரம், தந்திரம்.
மணிப்பூருக்கும் மெய்தெய்க்கும் இப்போது அவாள் ” ஸம்ஸ்காரம் ” செய்து கொண்டிருக்கிறார்கள். “ஸம்ஸ்காரம் ” என்றால் ” நன்றாக ஆக்கியது ” என்று பொருள். கலப்பு மொழிக்கு ” ஸம்ஸ்கிருதம் ” என்று பெயர்சூட்டி ஒசத்தியாக முடிசூட்டியதுபோல என்று வைத்துக் கொள்ளுங்கள் ! இதுதான் கார்ப்பரேட்–காவி வக்கிரம் ! இவர்களின் பாசிச நடவடிக்கைகளால்தான் மணிப்பூர் பற்றி எரிகிறது !
இராசவேல்.
முதல் பாகம்: காவிகளால் பற்றி எரியும் மணிப்பூர் மாநிலம்!