மிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட சேதம் ஓய்வதற்குள் தூத்துக்குடி, கன்யாகுமரி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் மழை பெய்துள்ளது. இந்த இயற்கைக் சீற்றங்களால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக ஒன்றிய அரசிடம் பேரிடர் நிவாரணத் தொகையாக தமிழக அரசு கேட்ட ரூபாய் 20,000 கோடியைத் தருவது குறித்தான கேள்விக்கு திமிர்த்தனமாக பதிலளித்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “எந்த மாநிலத்திலும் ஏற்பட்ட பேரழிவுகளை “தேசியப் பேரிடராக” ஒன்றிய அரசு அறிவித்தது இல்லை” என்று கூறியிருந்தார். 2004  சுனாமி பேரழிவைத் தொடர்ந்து 2005-ல் பேரழிவுகள் மேலாண்மைச் சட்டம் மூலம் பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authority) ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அது உருவாக்கப்பட்டபோதே எதுவெல்லாம் தேசியப் பேரிடர் என்பதை வரையறுக்காமல் அரைகுறையாக உருவாகி இன்றுவரையில் தொடர்கிறது. ஆனால் நிர்மலா குறிப்பிட்டது உண்மை. ஒரு பேரிடரை ‘தேசிய பேரிடர்’ என்று அறிவிக்க சட்டப்படி எந்த ஏற்பாடும் இந்தியாவில் இல்லை.

ஆனால்,“‘தீவிர இயற்கைப் பேரிடர்’ (Calamity Of Severe Nature) என்று அறிவிக்கும் முறை உள்ளது. பொதுவாக, தேசிய பேரிடர் மேலாண்மைக் கொள்கையின்படி, மாநில அரசுகளே மாநிலப் பேரிடர் நிவாரண நிதி (SDRFs) வழியே பேரிடர் நிவாரணம் வழங்க வேண்டும். ‘தீவிரமான இயற்கைப் பேரிடர்’களுக்கு மட்டுமே தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து கூடுதல் உதவி வழங்கப்படும்(NDRF). இந்த வகையில், ரூ.54,770 கோடியை 2021-22 முதல் 2025-26 வரையிலான காலகட்டத்துக்கு நிதி ஆணையம் ஒதுக்கியிருக்கிறது.

தமிழக அரசு இப்போது அதைத்தான் கேட்கிறது. ‘தேசியப் பேரிடராக இந்த வெள்ளப் பாதிப்பை அறிவிக்க வேண்டும்’ என்று தமிழக அரசு கோரியதில் எந்தத் தவறும் இல்லை; ஏனென்றால், பல அரசியலர்கள் எளிய மக்களுக்குப் புரிவதற்காக அப்படியான பிரயோகத்தையும் பயன்படுத்துகிறார்கள்.


இதையும் படிக்க:

பேரிடர் நிதி: நிர்மலா சீதாராமன் திமிர் பேச்சு! தமிழக மக்கள் மீதான வன்மம்!


ஒரு மாநிலத்தின் வெள்ள பாதிப்பை இந்த வரையறையின் கீழ் ஒன்றிய அரசு அறிவித்தால்தான் அதன் நிதியுதவியை மாநிலம் பெற முடியும். 2015 சென்னை வெள்ளத்தை அப்படி மோடி அரசு அறிவித்தது. 2018இல் கேரளம் இதே அறிவிப்பின் கீழ் நிதியுதவி பெற்றது. இந்த நிதியுதவியெல்லாமும்கூட நேர்ந்த இழப்புக்கு முன் பொருட்டு இல்லை.

இதையெல்லாம் நிர்மலா அறியாதவரா? மிக மோசமாக ‘டெக்னிகாலிடிக்ஸ்’ பேசினார். வார்த்தை விளையாட்டு விளையாடினார்”.  (அருஞ்சொல் கட்டுரையில் சமஸ்)

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த பாதிப்புகளுக்கு நிவாரணமாக 20,000 கோடிகளைக் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து கொடுக்குமாறு தமிழக அரசு கேட்டிருக்கிறது. ஆனால் இதுவரை இரண்டு தவணைகளாக 900 கோடிகளை மட்டுமே ஒன்றிய அரசு அளித்துள்ளது. ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தமிழகம் வந்து பார்வையிட்டு சென்ற பின்னரும் தமிழகம் கேட்ட கூடுதல் நிதியைத் தராமல் மறுத்துள்ளது ஒன்றிய அரசு. தொகையைத் தரமுடியாது என்று சொல்வதற்கு எந்தவித நேர்மையான விளக்கமும் கொடுக்காமல் சொந்தநாட்டு மக்களையே எதிரிகளைப்போல கருதி இந்த செய்தியாளர் சந்திப்பை நடத்தியுள்ளார் நிர்மலா சீதாராமன். ஆனால் இதே குஜராத் 2021-ஆம் ஆண்டு மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது உடனடியாக பார்வையிட்ட மோடி அடுத்தநாளே 1000 கோடிகளை வெள்ள நிவாரணமாக அள்ளித்தந்தார்.

மக்களோடு நேரடித்தொடர்பு இல்லாத ஒன்றிய அரசு மக்களோடு நேரடியாகத் தொடர்பிலிருக்கும் மாநில அரசுகளுக்கு பேரிடர் காலங்களில் தரும் ஒத்துழைப்பு பாசிச பா.ஜ.க.-வின் ஆட்சியில் தனது அல்லது கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஒருமாதிரியாகவும், எதிர்க்கட்சிகள் ஆட்சியிலுள்ள மாநிலங்களில் வேறு மாதிரியாகவும் உள்ளது. குறிப்பாக தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களில் இது அப்பட்டமாகத் தெரிகிறது. தமிழகத்திலுள்ள பா.ஜ.க. பாசிஸ்டுகள் மற்றும் தமிழகத்திலிருந்து ஒன்றிய அமைச்சரவையில் இருக்கும் பாசிஸ்டுகள் தங்களது ஊடக மாமாக்களின் மூலம் மக்களிடையே பொய்யான தகவல்களைப் பரப்பி மாநில அரசுக்கு எதிரான மனநிலையை உருவாக்கி வருகிறார்கள். ஆளுனருடன் கூட்டுசேர்ந்துகொண்டு ஒன்றிய அரசிடமும் பொய்யான தகவல்களைத் தருகின்றனர். அதன் வெளிப்பாடுதான் நாங்கள் கொடுத்த 4000 கோடி எங்கே என்று முட்டாள்தனமாக கேட்கிறார் ஒன்றியத்தின் நிதியமைச்சர்.

பேரிடர்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டிய கடமையில் இருக்கும் மாநில அரசுகள், ஒன்றிய அரசின் இத்தகைய புறக்கணிப்பால் மேலும் கடும் நிதி நெருக்கடிக்குள் சிக்கும் நிலைமை உருவாகிறது. மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை எள்ளளவும் கண்டுகொள்ளாத பாசிஸ்டுகள் நிவாரணம் வழங்குவதாகவும், மக்களை மீட்பதாகவும் போட்டோசூட் எடுத்துக்கொண்டிருக்கின்றனர். ஒன்றிய அரசிடம் பாதிப்புகளை எடுத்துச்சொல்லி உடனடியாக போதுமான நிதியை கேட்க வக்கில்லாத, விருப்பமில்லாத பா.ஜ.க. பாசிஸ்டுகள் மக்களின்மீது அக்கறையுள்ளவர்களாக நடிக்கின்றனர்.

தேசிய பேரிடர் நிவாரண நிதி குறித்தான நிர்மலா சீதாராமனின் இந்த திமிர்த்தனமான பதிலைத் தொடர்ந்து வெளிவரும் பல்வேறு புள்ளிவிபரங்கள் பேரிடர் நிவாரண நிதிப்பகிர்வில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவருவதைக் காட்டுகின்றன. முதலாளித்துவத்தின் கோரத்தாண்டவத்தால் ஏற்படும் காலநிலை மாற்றங்களின் காரணத்தினால் ஏற்படும் பேரிடர்களை முதலாளித்துவத்தை ஒழிப்பதன்மூலமே முடிவுக்குக்கொண்டுவரமுடியும் என்பதையும், அப்பேரிடர்களால் பாதிக்கப்படும் மக்களைக்காக்க வக்கில்லாத இந்தியாவின் தேசியப் பேரிடரான ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பலை நாட்டிலிருந்து விரட்டியடிப்பதும்தான் நிரந்தரத்தீர்வு என்பதையும் மக்களிடம் கொண்டுசெல்வோம்.

ஜூலியஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here