பத்திரிக்கையாளரும் , உண்மையை கண்டறியும்(Fact Check) ALT நியூஸின் இணை இயக்குனருமான முகமது ஜூபைர்; மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும், பகைமையை ஊக்குவித்ததாகவும் கூறப்பட்டு, டெல்லி போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு முகமது ஜூபைர் போட்ட டிவிட்டால் தான், இந்த கைது நடந்துள்ளது என டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் கைது ஏன் என்பதற்கு, FIR ஆதாரம் கூட காட்டாத போலீஸ், நேரம் எடுத்துக் கொண்டு ஆதாரங்களை உருவாக்கி ,மீடியாக்களிடம் கொடுத்துள்ளது.
முகமது ஜூபைரின் செய்தி நிறுவனத்தின் சக ஊழியரான பிரதிக் சின்ஹா கூறும் போது: “2020-ல் அவர் மீது தொடர்ந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக ஜூன் 27 திங்கட்கிழமை டெல்லி சிறப்பு போலீசார் அழைத்திருந்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றுள்ளார். ஆனால் முதல் தகவல் அறிக்கை வழங்கப்படாத நிலையில் புதிய வழக்கில் கைது செய்துள்ளனர்” என தெரிவித்தார்.
பின்னர் @balajikijaiin என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது. இவர் இந்த மாதம் தான் டிவிட்டரில் புதிய கணக்கை துவக்கியுள்ளார். இதுவரை ஒரு டிவிட் மட்டுமே போட்டுள்ளார். இவரை பின்தொடர்பவர்கள் என்று யாரும் இல்லை. இதிலிருந்தே தெரிகிறது!, பாசிச கும்பல் முகமது ஜூபைரை கைது செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே போலியான ஆதாரங்களை உருவாக்கியுள்ளது என்று!
முகமது ஜூபைர் தொடர்ந்து பாசிஸ்டுகளின் செயல்களை அம்பலப்படுத்தும் விதமாக டிவிட்டரில் செயல்பட்டு வந்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு யதிநரசிங்கானந்த் உட்பட மூன்று இந்துத்துவவாதிகளை வெறுக்கத்தக்கவர்கள் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு அன்றே உத்திரபிரதேச காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.
இதுபோல் சங் பரிவார் கும்பலின் பல பேச்சுக்களை அம்பலப்படுத்தியுள்ளார். இதனை பொறுத்துக் கொள்ளாத பாசிச கும்பல் அதிகாரத்தை பயன்படுத்தி அவரை கைது செய்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு போடப்பட்ட டிவிட் பதிவுக்கு இப்பொழுது கைது செய்துள்ளார்கள். அந்த டிவிட் பதிவில் என்ன தான் உள்ளது என்று பார்த்தால், புகழ்பெற்ற ஹிருஷிகேஷ் முகர்ஜி இயக்கிய 1983ஆண்டு வெளியான ஹிந்தி நகைச்சுவைத் திரைப்படத்தில் வரும் காட்சியை 2014க்கு முன் ஹனிமூன் ஹோட்டல், 2014க்கு பின் ஹனுமன் ஹோட்டல் என்று டிவிட் பதிவிட்டுள்ளார். இதில் வரும் காட்சி எடிட் செய்யப்படாதது என்றும் ஹனிமூன்/ஹனுமன் காட்சி படத்தில் வரும் நகைச்சுவைகாட்சி என்றும் பலரும் அவர் டிவிட் பக்கத்தில் தற்போது அவருக்கு ஆதராக பதிவிட்டுள்ளனர்.
மேலும் இந்த ஸ்கிரீன்ஷாட்டை indianexpressம் தனது இணையதள பக்கத்தில் பயன்படுத்தியுள்ளது ,என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் அவர் பதிவிட்டது தான் இந்து மத உணர்வுகளை புண்படுத்தி விட்டதாகவும், இந்து மத கடவுளான பிரம்மச்சாரியான ஹனுமனை அவமதிக்கும் வகையில் இருப்பதாகவும் சங்பரிவார் கும்பல் கூறுகிறது.
அவரை கைது செய்த பின்னர் டெல்லி காவல்துறை அவரது டிவிட்டர் பதிவுகள் பெரும்பாலும் குறிப்பிட்ட மதத்தை அவமதிப்பதாகவும், வன்முறையை தூண்டுபவையாகவும் உள்ளதாக கூறியுள்ளது. மேலும் அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153 (கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தூண்டுதல் அளித்தல்) மற்றும் 295 (வேண்டுமென்றே மற்றும் தீங்கிழைக்கும் செயல்கள், மதம் அல்லது மத நம்பிக்கைகளை அவமதிப்பதன் மூலம் எந்த வகுப்பினரின் மத உணர்வுகளையும் சீற்றம் செய்யும் நோக்கம் கொண்டது) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் டெல்லி காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை(25.06.2022) அன்று ,2002 குஜராத் படுகொலை நீதிக்காக போராடிய சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாட்டை கைது செய்த காவி கும்பல் தற்போது 2018 ஆம் ஆண்டு போட்ட டிவிட்டர் பதிவுக்காக முகம்மது ஜூபைரை கைது செய்துள்ளது. ஜனநாயகம் குறித்து டெல்லி ஜி7 மாநாட்டில் பெருமையாக பேசிய மோடி, இன்று கருத்துரிமைக்கு இங்கு இடமில்லை, ஜனநாயகம் என்று இந்தியாவில் ஒன்றுமில்லை என்று தொடர்ச்சியான கைதுகள் மூலம் நிரூபித்துள்ளார்.
படிக்க:
- காவி பாசிசத்திற்கு எதிராகப் போராடினால் புல்டோசர்! வழக்கு போட்டால் கைது! அமுலாகிறது சட்டப்படியான பாசிசம்!
- குஜராத் இனப்படுகொலை 2002! குற்றவாளிகள் தப்பி விட்டனர்! எதிர்த்து போராடியவர்கள் ஒடுக்கப் படுகின்றனர்!
பாசிஸ்டுகள் தனக்கு எதிராக கருத்து கூறுபவர்களையும். எதிர்த்து போராடுபவர்களையும் அரச பயங்கரவாதத்தை கொண்டு ஒடுக்கப் பார்க்கிறார்கள். இவர்களை எதிர் கொள்ளவில்லை என்றால் நாளைய இலக்கு நாமாகவும் இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
- மாரிமுத்து