இந்தியா ஜனநாயக நாடாக இருப்பதால் இங்கு சாதி, மதம், பாலினம் அல்லது பிராந்தியத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்ட இடமில்லை என்று இந்தியாவின் ஹிட்லர் மோடி அமெரிக்க பத்திரிக்கையாளர் சப்ரினா சித்திக் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்திருந்தார். இது எந்த அளவுக்கு பொய் என்பதை ஆர்.எஸ்.எஸ்-ன் அடிவருடிகள் நிரூபித்து விட்டார்கள்.
கடந்த ஜூன் 22 அன்று அமெரிக்காவுக்கு அரசு முறை சுற்றுப்பயனம் மேற்கொண்ட இந்திய பிரதமர் மோடி அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றியதை சங்கிகள் பெருமையாக சமூக வலைதளங்களில் பரப்பி கொண்டிருந்தனர்.
இந்நிலையில் வெள்ளை மாளிகையில் பிடன் – மோடி சந்திப்பிற்கு பிறகு இருவரும் செய்தியாளர்களிடம் பேசிய பொழுது கேள்வி எழுப்பிய இரண்டு பத்திரிக்கையாளர்களில் wall Street journal சப்ரினா சித்திக் என்ற பெண் பத்திரிக்கையாளரும் ஒருவர். அவர் “முஸ்லீம்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கும், இந்தியாவில் பேச்சுரிமையை நிலை நிறுத்துவதற்க்கும் உங்கள் அரசு என்ன நடவடிக்கைகளை எடுக்க தயாராக உள்ளீர்கள்” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலாக தான் மேலே நாம் குறிப்பிட்டிருந்த பதிலை மோடி அளித்திருந்தார். இந்தியாவில் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை என்றுமே மோடி கண்டித்து பேசியது இல்லை. இரண்டு தினங்களுக்கு முன்னர் கூட மகாராஷ்டிராவில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக கூறி இஸ்லாமியர்கள் இருவர் கடுமையாக தாக்கப்பட்டதில் ஒருவர் கொல்லப்பட்டார்.
இதுபோல் சங்பரிவார் கும்பலால் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டு கொல்லப்படுவது இந்தியாவில் சாதாரண நிகழ்வாக மாறியுள்ளது. இது எதையும் கண்டிக்காத மோடி இந்தியா ஜனநாயக நாடு என்று பொய்யை அவிழ்த்துவிட்டுள்ளார்.
பத்திரிக்கையாளர் சப்ரினா சித்திக் எழுப்பிய கேள்வி மோடியை மட்டுமல்ல ஒட்டுமொத்த சங்பரிவார் கும்பலுக்கும் கோபத்தை எழுப்பியுள்ளது. இந்த கேள்வியை எழுப்பிய பத்திரிக்கையாளர் அமெரிக்காவில் உள்ளதால் சுட்டுக் கொள்ள முடியாது அல்லவா! அதனால் அவரின் டிவிட்டர் கணக்கில் சென்று அநாகரீகமாக பேசியுள்ளார்கள்.
தாக்குதல் தொடுத்த இந்துத்துவ கும்பல்
குறிப்பாக, சப்ரினா சித்திக்-ன் தந்தை இந்தியர் என்றும், தாய் பாகிஸ்தான் என்றும் சித்திக்கை பாகிஸ்தானி என்றும் அவர் மீது தாக்குதல் தொடுத்துள்ளது இந்துத்துவத்தை பரப்பும் சமூக வலைதள கும்பல். ஒரு முக்கிய பாஜக சார்பு இணையதளம் OpIndia, சித்திக்கை குறிவைத்து “பாகிஸ்தான் பெற்றோரின் மகள்” எனக் குறிப்பிட்டு, “இஸ்லாமியர்களின்” கருத்துகளை ஆதரிப்பதாகக் கூறி விமர்சித்து ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது.
A Pakistani Islamist at Wall Street Journal ambushed Modi at press conference today. This lying hater Sabrina Siddiqui has never in her life said 1 word about Pakistan’s brutal repression and assaults on women, minorities. She only attacks India. Hate is in DNA of Pakistanis. pic.twitter.com/5xGeBI3XUF
— Indian-Americans (@HinduAmericans) June 22, 2023
அதுபோல் 2018 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பாகிஸ்தான் கொடியுடன் ட்வீட் செய்திருந்தார். அதனை குறிப்பிட்டும் தாக்குதல் தொடுத்துள்ளனர்.
இதுபோல் தொடர்ந்து சப்ரினா சித்திக்கை ட்ரோல் செய்தது சங்பரிவார் கும்பல் இந்த கேள்வி திட்டமிட்டே கேட்கப்பட்டுள்ளதாகவும் பரப்பியது. பத்திரிக்கையாளர் சப்ரினா சித்திக் எழுப்பிய கேள்வி சரியானதா, இல்லையா என்பதே விவாதமாக இருந்திருக்க வேண்டும். அப்படியில்லாமல் அவர் மீது சமூக வலைதளத்தில் தாக்குதல் தொடுப்பது பாசிஸ்டுகளின் அணுகுமுறை.
கண்டித்த வெள்ளை மாளிகை
பத்திரிக்கையாளர் சப்ரினா சித்திக் மீது சமூக வலைதளங்களில் தொடுக்கப்படும் தாக்குதலையும், இதனை மிகைப்படுத்தும் தூண்டுதலையும் நாங்கள் அறிவோம். இது ஏற்றுக் கொள்ளமுடியாதது. எந்தச் சூழ்நிலையிலும் எங்கும் ஊடகவியலாளர்கள் துன்புறுத்தப்படுவதை நாங்கள் முற்றாகக் கண்டிக்கிறோம் என வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளார் கிர்பி பதிலளித்திருந்தார்.
அதுமட்டுமில்லாமல் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா “இந்தியப் பிரதமர் மோடியுடன் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தால், அவரிடம் ஒருவேளை நீங்கள் இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கவிட்டால் ஒரு கட்டத்தில் இந்தியாவில் பிளவு ஏற்படுவதற்கான வாய்ப்பு வலுவாக உள்ளது என்று கூறுவேன். அதுவே எனது உரையாடலின் பகுதியாக இருக்கும்.
இல்லாவிட்டால், அதிபர் பைடனாவது பிரதமர் மோடியை சந்திக்கும்போது இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தியாவில் இஸ்லாமிய சிறுபான்மையினரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவது குறித்து பேச வேண்டும் . ஆனால், உண்மையாகவே நமது நட்பு நாடுகளுடன் மனித உரிமைகளைப் பற்றிப் பேசுவது கடினமானதுதான்” என்றார்.
தாக்குதலுக்கு பதிலளித்த சப்ரினா சித்திக்
இந்த தாக்குதல்களின் விளைவாக, சித்திக் தனது தந்தையுடன் இணைந்து இந்திய கிரிக்கெட் அணிக்காக உற்சாகப்படுத்திய படத்தை டிவிட்டரில் வெளியிட்டிருந்தார்.
2011 உலக கோப்பை கிரிக்கெட் வெற்றிக் கொண்டாட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் சீருடையில் தனது தந்தையுடன் இருக்கும் படத்தை பகிர்ந்த சப்ரினா “சிலர் எனது சொந்த பின்புலத்திலிருந்து சில விவரங்களை சுட்டிக்காட்ட முனைகின்றனர். முழுமையான விவரங்களுடன் நோக்குவதே சரியானதாக இருக்கும். சில விவரங்கள் நாம் நினைப்பதை விட சிக்கலானவை.” என்று ட்விட்டரில் எழுதியுள்ளார்.
ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் தொடுக்கும் பாசிசம்
2014 பாசிஸ்டுகள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஹத்ராஸ் பாலியல் கொலையில் செய்தி சேகரிக்க சென்ற சித்திக் கப்பான் ஜாமீன் வழங்காமல் 2 வருடங்கள் இழுத்தடித்தார்கள். பாசிச கும்பலுக்கு எதிராக கேள்வி எழுப்புபவர்களை மிரட்டுவதும், கைது செய்வதும், கொலை செய்வதும் அவர்களது சமூக வலைத்தளங்களை முடக்குவதும் பாசிஸ்டுகளில் ஆட்சியில் தொடர்கிறது.
இதையும் படியுங்கள்: சித்திக் காப்பனின் ஜாமீனுக்காக உத்தரவாதம் வழங்கிய மாபெரும் மனிதாபிமானிகள்!
சப்ரினா சித்திக் பத்திரிக்கையாளராக தனது வேலையை சரியாகவே செய்துள்ளார். ஆனால் அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அமெரிக்க அரசு கண்டித்த பிறகே இந்துத்துவவாதிகள் நிறுத்தியுள்ளனர். என்ன தான் இருந்தாலும் பெரியண்ணன் சொன்னால் நிறுத்திதானே ஆகனும். ஆனால் இது நிற்க போவதில்லை. பாசிஸ்டுகள் இதற்கென்று ஐடி விங்கை உருவாக்கி செயல்படுகிறார்கள். தமிழ்நாட்டிலோ, இந்தியாவிலோ பாசிஸ்டுகளுக்கு எதிராக கேள்வி எழுப்ப முடியாத நிலையே தொடர்கிறது.
இந்தியாவை பொறுத்தமட்டில் பத்திரிக்கைத் துறை பாசிச எதிர்ப்பு, பாசிச ஆதரவு என்ற இரண்டு தடத்தில் தான் பயணிக்கிறது. நடுநிலை என்பதெல்லாம் பாசிச ஆதரவு நிலைபாடு தான். பாசிஸ்டுகளை எதிர்த்து நிற்பவர்கள் ஒன்றுபட வேண்டும் என்ற அவசியத்தை பல தருணங்களில் இந்துத்துவ கும்பல் நமக்கு உணர்த்துகிறது. அதில் ஒன்று தான் சப்ரினா சித்திக் மீது நடத்தப்பட்ட தாக்குதல்.
- நலன்