அரசு பள்ளிகளை தனியாருக்கு தத்துக்கொடுக்கும் திமுக அரசு!

ஆரம்பப்பள்ளிகளின் இடைநிற்றல் 16 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0
தனியார் பள்ளிகள் சங்க துவக்க விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

(2025-2026) கல்வியாண்டில் 500 அரசுப்பள்ளிகளைத் தத்தெடுத்து அந்தப் பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை அருகில் உள்ள தனியார் பள்ளிகளின் பங்களிப்புடன் நிறைவேற்றித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனியார் பள்ளிகள் சங்கம் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு பாராட்டு தெரிவித்து பேசியிருந்தார்.

இதன் நோக்கம் படிப்படியாக அரசுப்பள்ளிகளைத் தனியாரிடம் ஒப்படைப்பதோடு, கல்வியைத் தனியார்மயமாக்கும் தேசியக் கல்விக் கொள்கையை மறைமுகமாகத் திணிக்கும் முயற்சியாகும்.

தமிழ் நாட்டிற்கு தனி கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டும் என்று திமுக அரசு கடந்த காலங்களில் அறிவித்து அந்த அடிப்படையில் மாநில கல்விக் கொள்கை குழு உருவாக்கப்பட்டு, அது கல்விக் கொள்கையை வகுக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தததையும் அந்தக் குழு, மாநிலத்திற்கு இதுதான் கல்விக் கொள்கை என்று முடிவு செய்து, அதனை முன் வைக்கும் முன்பே, திமுக அரசு தேசிய கல்விக் கொள்கையில் உள்ள பல அம்சங்களை அமல்படுத்தியது என்பதை நாம் அறிவோம்.

குறிப்பாக, இல்லம் தேடி கல்வி, வானவில் மன்றம், எண்ணும் எழுத்தும் திட்டம், நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டம் போன்ற பல திட்டங்களை தமிழ்நாட்டில் அமல்படுத்தினார்கள். மேலும் தேசிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல அம்சங்களை எடுத்துக்கொள்ளலாம் என பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் அப்போதும் கூறினார்.

இந்த நிலையில் தான், மாநில உயர்நிலைக் கல்விக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த, பேராசிரியர் ஜவகர் நேசன் 2023 மே மாதம் பதவி விலகினார். அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “மாநிலக் கல்விக் கொள்கையைத் தயாரிப்பதற்காக அமைக்கப்பட்ட குழு; இரகசியமாகவும், ஜனநாயகமற்ற முறையில் செயல்படும் தலைமையைக் கொண்டுள்ளதாலும், சில மூத்த IAS அதிகாரிகளின் அதிகார எல்லை மீறல்களாலும், குறிப்பாக முதல்வரின் தனி செயலாளராக இருந்த உதயசந்திரன் அவர்களின் முறையற்ற தலையீடுகளாலும் இயங்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

அதன் விளைவாக, மோடி அரசின் தேசியக் கல்விக்கொள்கை 2020-ன் அம்சங்களை உள்ளடக்கி மாநில கல்விக்கொள்கையை வடிவமைக்கும் திசையை நோக்கி இக்குழு சென்று கொண்டிருக்கிறது.” என்று கூறினார். இந்த செய்தி, தமிழக அரசு கல்விக் கொள்கையில் இரட்டை நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கிறதோ? என்ற சந்தேகத்தை எழுப்பியது.


படிக்க: தனியார் கொள்ளையர்களின் பிடியில் பள்ளி, கல்லூரிகள்! விடிவு எப்போது?


ஆனால் தற்போது படிப்படியாக 500 அரசுப்பள்ளிகளைத் தத்தெடுத்து அந்தப் பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை அருகில் உள்ள தனியார் பள்ளிகளின் பங்களிப்புடன் நிறைவேற்றித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறுவது கல்வியைத் தனியார்மயமாக்கும் தேசியக் கல்விக் கொள்கையை மறைமுகமாகத் திணிக்கும் முயற்சி என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது.

தமிழகத்தில் ஏறக்குறைய 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இதில் அரசுப்பள்ளிகளில் 24310 தொடக்கப்பள்ளிகள், 7024 நடுநிலைப்பள்ளிகள், 3135 உயர்நிலைப்பள்ளிகள், 3110 மேல்நிலைப்பள்ளிகள் என 37579 பள்ளிகள் இயங்குகின்றன. அரசு உதவி பெறும் பள்ளிகள் 8328 செயல்படுகின்றன. இதில் 46 லட்சம் மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். ஆனால் குறைந்த அளவு இயங்கும் 12 ஆயிரம் தனியார் பள்ளிகளில் ஏறக்குறைய 65 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

அரசுப்பள்ளிகளில் மூன்றில் ஒரு பங்கு கூட செயல்படாத தனியார் பள்ளிகள் தான் அதிக அளவு ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை விடத் தனியார் பள்ளிகளில் அதிக அளவு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். 2500 பள்ளிகளில் கழிப்பறை வசதிகள்கூட இல்லையென்று ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.


படிக்க: பள்ளிக்கூடங்களை சூழும் காவி விசம்!


ஆரம்பப்பள்ளிகளின் இடைநிற்றல் 16 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை பலப்படுத்திகல்வித் தரத்தை மேம்படுத்தப்படுவதற்கு பதிலாக அரசுப்பள்ளிகளை தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு தத்துக்கொடுக்க முயல்வது ஏழை, எளிய குழந்தைகளின் கல்வி உரிமையை பறிக்கும் செயலாகும்.

பல தனியார் பள்ளிகளில் விளையாட்டு மைதானம், ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்டு அடிப்படை கட்டமைப்பு வசதிகளே கிடையாது. கல்வி கொடுக்க வேண்டியது அரசின் முதன்மையான கடமையாக இருக்க வேண்டுமே தவிர அரசு பள்ளிகளுக்கு செலவிடாமல் அதிலிருந்து தமிழ்நாடு அரசு தப்பிப்பது, நிதி சுமையை காரணம் காட்டி தனியாருக்கு தத்துக்கொடுப்பது முற்றிலும் நியாயமற்ற நடவடிக்கையாகும்.

அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளோடு இணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக 500 பள்ளிகளை தத்துக்கொடுக்கும் நடவடிக்கையினை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். அரசு பள்ளிகளை மேம்படுத்த அரசே அதற்கான கூடுதல் நிதியை ஒதுக்கி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட வேண்டும். ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அனைத்தும் பூர்த்தி செய்திட தமிழக அரசை வலியுறுத்துவது மட்டுமல்லாமல் கல்வி மறுப்பு என்பது எந்த வடிவத்தில் திணிக்கப்பட்டாலும் அதை எதிர்த்து அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து போராடுவதன் மூலமே எதிர்கால சந்ததிகளின் உரிமைகளை பாதுகாக்க நம்முன் உள்ள ஒரே தீர்வாகும்.

  • பரூக்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here