வருகிற ஆகஸ்ட் 22, 2026 அன்று மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சார்பாக தஞ்சாவூரில் “தமிழ் மக்கள் இசை விழா” நடைபெற உள்ளது. “தமிழ் மக்கள் இசை விழாவா? இது என்ன புதுசா இருக்கு?” என்று இன்றைய இளைய தலைமுறையினர் புருவம் உயர்த்துவதைக் காண முடிகிறது.
உண்மையில் இது திடீரென முளைத்த விழாவல்ல; பார்ப்பனிய ஆதிக்கத்திற்கும், மறுகாலனியாதிக்கப் பண்பாட்டுப் படையெடுப்புகளுக்கும் எதிராக மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக முழங்கிவரும் வரலாற்றுப் பூர்வமான பண்பாட்டுப் போரின் தொடர்ச்சியே இந்த இசை விழா.
வரலாற்றுப் பின்னணியும் முதல் இசை விழாவும்
1991 – அரசியல் அடக்குமுறைக் காலம்: 1991 ஆம் ஆண்டில் திமுக அரசு மத்திய அரசால் கலைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு தமிழகத்தில் பல்வேறு முற்போக்கு இயக்கங்கள் மீதும் கடுமையான அடக்குமுறைகள் ஏவப்பட்டன. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக திமுக மீது குற்றம்சாட்டி, ஜெயலலிதா ஆட்சிக் கட்டிலில் ஏறிய காலம் அது.
1992 டிசம்பர் 6 – பாபர் மசூதி இடிப்பு: அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, “ராமருக்குக் கோயில் கட்டுவதாகச் சொல்கிறீர்களே… அப்படியானால் கருவறைக்குள் பிற்படுத்தப்பட்டோரையும் தாழ்த்தப்பட்டோரையும் அனுமதிப்பீர்களா?” என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கேள்வியை மக்கள் கலை இலக்கியக் கழகம் எழுப்பியது.
1993 மே 24 – திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டம்: இதன் தொடர்ச்சியாக, 1993 மே 24 அன்று திருச்சி திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) ரங்கநாதர் கோயில் கருவறைக்குள் நுழைந்து அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் படங்களை வைத்துப் புகைப்படம் எடுத்தனர் ம.க.இ.க. தோழர்கள். கோயில் கதவுகளை அடைத்துப் பார்ப்பனர்கள் தடிகளால் கொடூரமாகத் தாக்கியபோதும், போராட்டத்தின் அரசியல் நோக்கம் திசைதிரும்பிவிடக் கூடாது என்பதற்காகத் தோழர்கள் திருப்பித் தாக்கவில்லை. “சூத்திரர்களும் தாழ்த்தப்பட்டோரும் பெண்களும் கருவறைக்குள் நுழையக்கூடாது” என்ற சனாதன விதிகளை உடைத்தெறிந்த இப்போராட்டம், சனாதன சாதி ஆதிக்கத்திற்கு எதிராகத் தமிழகத்தில் நடைபெற்ற முக்கியமான பண்பாட்டுப் போராட்டங்களில் ஒன்றாக அது அமைந்தது.
திருவையாறு தியாகய்யர் உற்சவமும் ‘தமிழிசை’ மீட்பும்
ஆண்டுதோறும் திருவையாறில் நடைபெறும் தியாகராஜ ஆராதனை இசை விழாவில் தெலுங்கு மற்றும் சமஸ்கிருதக் கீர்த்தனைகள் மட்டுமே பாடப்படும்; தமிழ் மொழி “நீச மொழி” எனக் கூறிப் புறக்கணிக்கப்பட்டது.
தமிழறிஞர்களான முத்துத் தாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரியப்பப் பிள்ளை, பாபநாசம் சிவன் போன்றோர் தமிழில் பாடியதற்காக மேடையை விட்டே இறக்கப்பட்டு, தமிழிசை பாடிய கலைஞர்கள் அவமதிக்கப்பட்டனர்; தமிழுக்கு உரிய இடம் மறுக்கப்பட்டது.
பார்ப்பன மேலாதிக்கத்திற்கு எதிராக, “திருவையாறு உற்சவத்தில் தமிழில் பாட வேண்டும்” என்று, நினைவில் வாழும் தோழர் சீனிவாசன் தலைமையில் ம.க.இ.க. தோழர்கள் மேடையிலேயே முழக்கமிட்டனர். அப்போதும் தோழர்கள் தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.
ஆபிரகாம் பண்டிதர் உள்ளிட்ட தமிழிசை ஆய்வாளர்கள், கர்நாடக இசையின் வேர்கள் தமிழிசையில்தான் உள்ளன என்று வலியுறுத்தியுள்ளனர். தமிழிசையைக் களவாடித் தெலுங்கிலும் சமஸ்கிருதத்திலும் கீர்த்தனைகளாக மாற்றி, தங்களுடைய உடைமை எனப் பார்ப்பனர்கள் உரிமை கொண்டாடுகின்றனர். ஆபிரகாம் பண்டிதர் (கருணாமிர்த சாகரம்) போன்ற இசை அறிஞர்கள் கர்நாடக இசையின் தாய் தமிழிசைதான் என்பதை ஆணித்தரமாக நிறுவியுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, “களவாடிய இசையே கர்நாடக இசை!” என்ற முழக்கத்தோடு, 1994-ஆம் ஆண்டு தஞ்சையில் முதல் தமிழ் மக்கள் இசை விழா ம.க.இ.க.வால் நடத்தப்பட்டது.
2007 வரை தொடர்ந்த பண்பாட்டுப் போர்
1994-இல் “களவாடிய இசையே கர்நாடக இசை!” என்ற முழக்கத்துடன் தொடங்கிய தமிழ் மக்கள் இசை விழா, அதன் பின்னர் ஒவ்வொரு காலகட்டத்திலும் அன்றைய அரசியல், பொருளாதார, பண்பாட்டு தாக்குதல்களை மையமாகக் கொண்டு பல்வேறு தலைப்புகளில் நடைபெற்றது. 2007-ஆம் ஆண்டு “தனியார்மயம்–தாராளமயம்–உலகமயமாக்கல் (GATT/WTO): விடுதலைப் போரின் வீர மரபு!” என்ற கருப்பொருளுடன் நடைபெற்ற இசை விழா, அந்தக் கட்டத்தின் முக்கிய நிகழ்வாக அமைந்தது.
இடைவெளியும் களப் போராட்டங்களும்
2007-க்குப் பிறகு, இந்தியச் சமூகத்தின் மீது ஏவப்பட்ட எண்ணற்ற பொருளாதார, சமூகத் தாக்குதல்களை எதிர்த்துக் களப் போராட்டங்களில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ம.க.இ.க.விற்கும் அதன் தோழமை அமைப்புகளுக்கும் ஏற்பட்டது:
கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிரான போராட்டங்கள், பணமதிப்பிழப்பு (Demonetization), ஜி.எஸ்.டி (GST) வரி விதிப்பு எதிர்ப்பு இயக்கங்கள், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடுவதற்கான மக்கள் போராட்டங்கள், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் உரிமைக்கான போராட்டங்கள் எனத் தீவிரமான களப் போராட்டங்களால், தமிழ் மக்கள் இசை விழாவைத் தொடர்ந்து நடத்த முடியாத சூழல் உருவானது.
கீழடியும் தமிழ் மக்கள் இசை விழாவும்!
மத்தியில் பாசிச மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, “ஆரியர்கள் வந்தேறிகள் அல்ல; பார்ப்பனர்களே நாட்டின் பூர்வ குடிகள்; சரஸ்வதி நாகரிகம்தான் இந்தியாவின் வேத நாகரிகம்” என்று கற்பனைக் கதைகளை உருவாக்கி வரலாற்றுத் திரிபுவாதத்தைச் செய்து வருகிறது.
படிக்க:
♦ வேத நாகரிகத்தைத் துரத்தும் கீழடி!
♦ அறிவியல்–தொழில்நுட்பத்தில் இந்தியா ஏன் பின்தங்கியது? கீழடி உணர்த்தும் பாடம்!
ஆனால், கீழடி, சிவகளை, கொடுமணல் அகழ்வாய்வுகள், இந்திய வரலாறு தென்னகத்தின் நதிக்கரைகளில் இருந்தே தொடங்குகிறது என்பதையும், அது வேத நாகரிகத்திற்கு முந்தைய மதச்சார்பற்ற நகர நாகரிகம் என்பதையும் அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளன!
கீழடி, சிவகளை, கொடுமணல் போன்ற அகழாய்வுகள், தென்னகத்தின் தொன்மையான நகர நாகரிகத்தை புதிய அறிவியல் ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன. இந்திய வரலாற்றைப் பற்றிய நிலைநிறுத்தப்பட்ட பல கருத்துகளை மறுபரிசீலனை செய்யவும் அவை தூண்டியுள்ளன.
இந்த வரலாற்று உண்மைகளை மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில்தான் இந்த ஆண்டின் தமிழ் மக்கள் இசை விழா நடைபெறுகிறது.
அதன் முழக்கம்:
கீழடியை உயர்த்திப் பிடிப்போம்!
வேத நாகரிகத்தைத் துரத்தியடிப்போம்!
இந்திய வரலாற்றை தென்னகத்திலிருந்து எழுதுவோம்!
என்கிற முழக்கத்தின் அடிப்படையில், மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பாக தமிழ் மக்கள் இசை விழா நடைபெற உள்ளது.
அழைப்பு!
இது வெறும் பொழுதுபோக்கு இசை நிகழ்ச்சியல்ல; உழைக்கும் மக்களின் பண்பாட்டுப் போர் முழக்கம்! சாதி ஏற்றத்தாழ்வுகளையும், மதவெறியையும் இந்திய மண்ணில் புகுத்தி, நாட்டைப் பிளவுபடுத்தும் சனாதனப் பண்பாட்டை வீழ்த்த வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை அல்லவா?
நாள்: ஆகஸ்ட் 22, 2026
இடம்: தஞ்சாவூர்
விழா சிறக்கத் தாராளமாக நிதி தாரீர்!
வரலாற்றை மீட்கும் இந்தப் பண்பாட்டுப் போரில் உங்கள் பங்களிப்பையும் பதிவு செய்யுங்கள்.
- தமிழ்மணி







