இல்லை என்பதைத்தான் அங்கிருந்து வரும் பிணங்கள் முகத்தில் அறைந்து சொல்கின்றன. எனது மகனின், எனது கணவனின் “உடலையாவது கொண்டு வந்து கண்ணில் காட்டுங்கள்” என கதறுவதும் தொடர்கிறது!
துபாயில் ஒட்டகம் மேய்க்க ஏன் போகிறார்கள்?
முதலில் இந்த கேள்விக்கு நாம் பதில் தேட வேண்டும். பொதுவாக நம்மூரில் பண்ணையார்கள் மிகப்பெரும் ஆட்டுப்பண்ணை மாட்டுப்பண்ணை வைத்து, பண்ணை அடிமைகளை வேலை வாங்கியது நமக்குத் தெரியும். குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்கள் இப்படி ஆடு மாடுகளை மேய்ப்பதும், மாட்டுத் தொழுவங்களை சுத்தம் செய்வதும், பால் கறந்து கொடுப்பதும் என கொத்தடிமையாக வேலை செய்து வந்தார்கள். அதன் நீட்சியாகத்தான துபாயில் ஒட்டகம் மேய்க்கிறார்கள்.
நம்ம ஊர் பண்ணையார்களைப் போல அரபு ஷேக்குகளிடம் ஒட்டகங்கள் கூட்டம் கூட்டமாக உள்ளன. அவற்றை மேய்ப்பது சாதாரண வேலை அல்ல! அது குறித்து துபாய் சென்று கம்பெனியில் வேலை செய்து திரும்பிய எனது நண்பனின் அனுபவத்தை கேட்டேன்.
ஒரு முறை கம்பெனி வண்டியில் சுற்றிப் பார்த்து வரலாம் என பாலைவனத்தின் நடுவே ,மாலை நேரத்தில் சென்றுள்ளனர். அப்பொழுது அங்கு ஒட்டகம் மேய்த்துக் கொண்டிருந்த ஒரு தமிழன் இவர்களைப் பார்த்து ஓடி வந்து பேசி உள்ளான்.
ஒட்டகம் மேய்ப்பது எளிதானதா? அந்த இளைஞனிடம் அவன் பார்க்கும் வேலை குறித்து விசாரித்துள்ளனர். அதன் மூலம்தான் ஒட்டகம் மேய்ப்பது என்பது எவ்வளவு கொடுமையானது என்பது எனது நண்பனுக்கு உரைத்துள்ளது.
இதையும் படியுங்கள்: உரை வீச்சு : கூத்தாநல்லூர் முத்துக்குமார் குவைத்தில் கொலை: நம் உயிர் உலகச்சந்தையின் கைகளிலா ?
பாலைவனத்தில் பகலில் கடும் வெயிலும், கடும் சூறாவளி காற்றுடன், கூட மணலை வாரி இறைத்த படி வீசும். அதே நேரம் இரவில் கடுமையான பனியுடன், குளிர் காற்றும் வீசும். இந்த தட்பவெப்ப நிலையில் பாலைவன மணற்பரப்பில் ஆங்காங்கே சிறு செடிகள் படர்ந்து பூத்திருக்கும். ஒட்டகங்கள் அதைத்தான் மேயும்.
அரபு ஷேக்குகள் தங்களது ஆட்கள் மூலம் தண்ணீர் லாரியை அனுப்புவார்கள். அது இவர்களைத் தேடிப் பிடித்து இவர்கள் வைத்துள்ள தோல் பையில் தண்ணீரை நிரப்பும். அதைத்தான் ஒட்டகங்களும் குடிக்கும், இவர்களும் குடிக்க வேண்டும். இப்படி திக்குத் தெரியாத பாலைவனத்தில் அலைந்து திரிந்து, பகலில் வெயிலில் கருகியும், இரவில் பனிக்காற்றில் குளிரால் உறைந்தும் அந்த இளைஞன் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருந்தான்.
உடலை முழுவதுமாக மறைத்துக் கொள்ள நம்மூர் சணல் சாக்கு போன்ற துணியை தந்துள்ளனர். மற்றபடி ஒட்டகத்துடன் அந்த இளைஞனும் திறந்த வெளியில் தான் படுத்துக் கொள்ள வேண்டும். கூடாரம் அமைக்க உரிமை இல்லை. இப்படியே ஒரு நான்கு மாதம் போனால் அவன் பிணமாகத்தான் மாறுவான் என்பது எனது நண்பனுக்கு புரிந்துள்ளது.
இந்த வேலைக்கு எப்படி வந்தான்?
அவன் தனது கதையை கண்ணீர் விட்டு கதறியபடி சொல்லியுள்ளான். கட்டுமான வேலை என்று காண்ட்ராக்டர்கள், ஏஜென்சிகள் பொய் சொல்லி அனுப்பி வைத்துள்ளனர். அரபு ஷேக்குகளோ ஒட்டகம் மேய்க்க வைத்துள்ளனர். நாங்கள் அந்த இளைஞன் மீண்டும் உயிருடன் தமிழகத்திற்கு திரும்ப உதவி செய்தோம் என தான் நேரில் கண்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
அவருடன் நான் பேசியது 2010இல். அவர் வளைகுடாவுக்கு போனதோ 1995இல். ஆனால் இன்று வரை துபாய்க்கு வேலை தேடி போய் அரபு ஷேக்குகளிடம் அடிமைகளாக மாறி ஒரு கட்டத்தில் தப்பி ஓட முயற்சிக்கும் போது அல்லது அவர்கள் போட்ட உத்தரவுகளை, வேலைகளை செய்யாமல் மறுக்கும்போது ஈவிரக்கம் இல்லாமல் சித்திரவதை செய்து கொன்று வருவது இன்று வரை தொடர்கிறது.
எந்த தைரியத்தில் அரபு ஷேக்குகள் இதை செய்ய முடிகிறது?
இதையெல்லாம் தட்டிக் கேட்கும் துணிவு கொண்ட அல்லது பிழைப்பதற்காக வளைகுடாவுக்கு செல்லும் இளைஞர்கள் மீது அக்கறை கொண்ட அரசுகள் இந்தியாவில் இல்லை என்பது தான் வெளிப்படையான உண்மை!
56 இன்ச் மோடியும் இதை தடுப்பது இல்லையா?
இல்லவே இல்லை. பாசிஸ்ட் மோடிக்கு நம் நாட்டில் உள்ள உழைக்கும் மக்களை பிடிக்கிறதோ இல்லையோ வளைகுடாவின் அரபு ஷேக்குகளை, மன்னர்களை மிகவும் பிடிக்கிறது. நேரில் பார்க்கும் போது ஆரத்தழுவியும் கொள்கிறார்.
நம் நாட்டிலேயே கார்ப்பரேட்டுகள் FTE , NEEM என்று புதிதாக டிப்ளமோ இன்ஜினியரிங் படித்தவர்களை வேலைக்கு எடுத்து லாபத்தை அள்ளுகிறார்கள்.இதற்காக அனுபவமற்ற இளைஞர்களை நேரடியாக எடுத்து உற்பத்தியில் ஈடுபடுத்தி கை கால்களை ஊனமாக்கி விரட்டுவதும், சிலர் எந்திரத்தில் சிக்கி உயிரையே விடுவதும் கூட நடக்கத்தானே செய்கிறது!
உள்ளூரிலேயே தனது குடிமக்களின் உயிரைப் பாதுகாக்க அக்கறை காட்டாத கேடுகெட்ட கார்ப்பரேட் பாசிஸ்டுகளிடம் நாம் கருணையை, மனிதாபிமானத்தை, உயிர் வாழும் உரிமையை எதிர்பார்க்க முடியுமா? வளைகுடாவில் சிக்கி கொத்தடிமைகளாக உலர்ந்து வருபவர்களுக்கு என்றாவது விடியுமா?
வளைகுடாவில் இருக்கும் பண்ணையார்களான அரபு ஷேக்குகளால் நடக்கும் சித்திரவதைகள், படுகொலைகளைகளுக்கு முடிவு கட்ட வேண்டும். அதேபோல் நம் நாட்டில் தொழில் தொடங்கி நம் இளைஞர்களையே ஊனமாக்கும், உயிர்பலி வாங்கும் கார்ப்பரேட்டுகளை தண்டிக்கவும் வேண்டும். இதற்கு நாம் முதலில் அதிகாரத்தில் உள்ள கார்ப்பரேட் பாசிஸ்ட்களை வீழ்த்தியாக வேண்டும்.
இளமாறன்