ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் மெத்தனம் காட்டும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்!
நேற்று (19.07.2022) -ல் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்திருந்த வழக்கு மாண்புமிகு நீதிபதிகள் S.S.சுந்தர் & ஸ்ரீமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
ஸ்டெர்லைட் நிர்வாகம், குறிப்பிட்ட சில பொருட்கள் & கழிவுகளை – அகற்ற அனுமதி கோரிய வழக்கு இது. ஓராண்டாய் நிலுவையில் இருந்து வருகிறது.
அரசு தரப்பின் பதில் என்ன என்று நீதிமன்றம் கேட்டபோது, அரசு வழக்கறிஞர் சொன்னதுதான் அதிர்ச்சியானது. “இன்று வரை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தரப்பில் எங்களுக்கு எழுத்துப் பூர்வமான பதில் எதுவும் தரவில்லை. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் உதவியாளருக்கு 10 முறைக்கு மேல் வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பியும், பேசியும் பயனில்லை, வழக்கு விசாரிக்கப்படும் 02.30 மணி வரை instruction -ம் இல்லை, ஒரு அதிகாரி கூட நீதிமன்றத்திற்கும் வரவில்லை. இந்த வழக்கில் ஆஜராக உள்ள A.A.G -வேறு நீதிமன்றத்தில் உள்ளார். எனவே வேறு தேதி கொடுங்கள்” என்றார்.
உடனே தங்கள் அதிருப்தியை வெளியிட்ட நீதிமன்றம், “ஓராண்டாய் வழக்கு நிலுவையில் உள்ளது. நாளை மறுதினம் உத்தரவிற்காக ஒத்தி வைக்கிறோம்” என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தனர்.
உச்சநீதிமன்றம், ஸ்டெர்லைட்டின் பராமரிப்பு கோரும் மனுவை ஏற்கனவே தள்ளுபடி செய்து விட்டது. பிரதான அப்பீல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதையெல்லாம் சொல்லி போகிற போக்கில் தள்ளுபடி செய்ய வைக்க வேண்டிய ஸ்டெர்லைட் வழக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவரின் அலட்சியத்தால், ஸ்டெர்லைட்டிற்கு ஆதரவாக உத்தரவாக வாய்ப்புள்ளது.
13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டு, சர்வதேச கவனத்தை ஈர்த்து, முதல்வரின் கவனத்தில் உள்ள ஒரு வழக்கின் நிலையே இதுதான் எனும்போது, “மக்கள் போராட வேண்டாம், அரசு பார்த்துக் கொள்ளும்” என்பதை எப்படி நம்புவது? நாளை (21.07.2022) விசாரணைக்கு வரும் வழக்கையாவது சரியாக நடத்த தமிழக அரசு முயற்சிக்குமா?
அல்லது அதற்கும் போராட வேண்டுமா?
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817.