ந்திய அரசின் துறைகளில்  மேலிருந்து கீழ் வரை காவிகள் தங்களின் கருத்தியலுக்கு ஒத்துவரக்கூடிய நபர்களை போட்டு நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
பாஜக ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டாலும் ஆர்எஸ்எஸ் -ன் கருத்தியலுக்கு ஏற்ப இந்திய அரசு நிர்வாகத்தை கொண்டு செலுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை ஏற்கனவே பாஜக — ஆர் எஸ் எஸ் கும்பல் செய்து முடித்திருக்கிறது என்று நாம் வலியுறுத்தி கூறிக் கொண்டிருக்கிறோம்.

இதை மெய்ப்பிக்கும் விதமாக தற்பொழுது  செய்திகள் வெளிவந்துள்ளன.  விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சட்டப் பிரிவான விதி பிரகோத்ஸ் (vidhi prakosth) என்ற அமைப்பின் சார்பாக செப்டம்பர் 8 ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட  கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்களில்  சுமார் 30 ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளும் இருந்துள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் வாரணாசி, மதுரா கோயில்கள் தொடர்பான சட்ட தகராறுகள் குறித்தும், வஃக்ப் வாரிய(சட்ட திருத்த) மசோதா குறித்தும், மதமாற்றங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்தியாவில் மதக்கலவரங்களை நிகழ்த்தி இந்து முஸ்லிம்களிடையே பிரிவினையை உருவாக்கி வளர்க்க வேண்டும் என்பதற்காக இந்து மத வெறியர்கள் கையில் எடுத்த ஆயுதங்கள் தான் அயோத்தி, மதுரா காசி.

இந்துக் கோயில்களை இடித்து விட்டு அல்லது இந்துக்களின் புனித இடங்களை ஆக்கிரமித்து முஸ்லிம்கள் மசூதிகளை கட்டி உள்ளதாக சென்ற  நூற்றாண்டில் இருந்து பெரும் சர்ச்சையை காவி மதவெறியர்கள் கிளப்பி வருகின்றனர்.

பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டதில் இருந்து “அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து விட்டோம். இனி எங்கள் இலக்கு மதுரா, காசி” என்று காவி பாசிஸ்டுகள்  முழங்கி வருகின்றனர்.

காசி என்று பரவலாக அறியப்படும் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவில்  அமைந்துள்ளது. இந்தக் “காசி விஸ்வநாதர் கோயிலை இடித்து அந்த இடத்தில் ஞானவபி மசூதியை முகலாய அரசர் ஔரங்கசீப் கட்டியதாக”  1980ல் இருந்து இந்து மதவெறியர்கள் பிரச்சனையை கிளப்பிவருகின்றனர். யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள மதுரா நகரில் “கிருஷ்ணர் பிறந்த இடத்தில் இஸ்லாமியர்கள் சாஹி ஈத்கா மசூதியை (Shahi Eidgah Mosque) கட்டி இருக்கின்றனர். எனவே  அந்த மசூதியை இடிக்க வேண்டும்”  என்று இந்து மதவெறியர்கள் பல ஆண்டுகளாக பல வகைகளில் போராடி வருகின்றனர்.

படிக்க:

 இனியாவது மக்கள் பக்கம் நிற்குமா இந்திய நீதித்துறை?
♦ நீதித்துறைக்கு நெருக்கடி தருவது யார்?

இந்த நிலையில், இந்தப் பிரச்சினையை குறித்து   இந்தக் கூட்டத்தில் விவாதித்து இருக்கின்றனர் என்றால் எதற்காக எப்படிப்பட்டது விசயங்களை விவாதித்து இருப்பர் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள முடியும்.

இந்து மதத்தின் கொடுங்கோன்மையை சகிக்க முடியாமல் இந்து மதத்தை விட்டு வெளியேறுபவர்களை தடுத்தாக வேண்டும் அப்பொழுதுதான் இந்தியாவில் இந்து பெரும்பான்மையை தக்க வைக்க முடியும் என்பதற்காக மதமாற்றத்தை ஆர் எஸ் எஸ் கும்பல் எதிர்த்து வருகிறது.

அதேசமயம் வஃக்ப் வாரிய சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வருவதன் மூலம்  வஃக்ப் வாரியத்தின் கீழ் உள்ள ஏராளமான சொத்துக்களை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான்  வஃக்ப் வாரிய(சட்ட திருத்த) மசோதா நிறைவேற்றி அமல்படுத்தப்பட வேண்டும் என்று சங்கிகள் கூக்குரல் எழுப்பி கொண்டிருக்கிறார்கள்.

இந்துக்களின் நன்மைக்காக செயல்படுவதாக  கூறிக் கொண்டிருக்கும் விஸ்வ ஹிந்து பரிஷத் -ன்  சட்ட அமைப்பு நடத்தும் கூட்டத்தில், இந்து பெண்கள் இன்னும் வீடுகளில் அடிமையாக நடத்தப்படுவதை எப்படி தடுப்பது என்பது குறித்து விவாதிக்கவில்லை; இந்து மதத்தில் இன்னும் தீண்டாமை கொடுமை நடைமுறையில் உள்ளதை எப்படி தடுப்பது? இந்துக்கள் அனைவரையும் சகோதரர்களாக சமமாக ஒருவருக்கொருவர் பழகிக் கொள்ளும்படி — வாழும் படி செய்வது எப்படி?  என்று இவர்கள் விவாதிக்கவில்லை.

இந்து முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கக்கூடிய பிரச்சனைகள் குறித்து (அதாவது வாரணாசி, மதுரா விஷயங்களைப் பற்றி)  இவர்கள் அக்கறையோடு விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதில் பணி ஓய்வு பெற்றுள்ள 30 உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளும் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த நீதிபதிகள் பணியில் இருக்கும் பொழுது எப்படிப்பட்ட மனநிலையில் தங்களிடம் வந்த வழக்குகளின் கையாண்டு இருப்பர் என்பதை நாம் சொல்லி யாரும் புரிந்து கொள்ள வேண்டிய நிலையில் இல்லை.

இப்படிப்பட்ட  காவி மனநிலையில் உள்ளவர்களை, இந்திய அரசின்  துறைகளில்,  ஆர் எஸ் எஸ் —  பாஜக கும்பல் போட்டு நிரப்பி வருகிறது. இதன் மூலம் பாஜக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களின் கண்ணோட்டத்தின் படி அரசாட்சி நடப்பதற்கான அனைத்து வேலைகளையும் தெளிவாக திட்டமிட்டு செய்து வருகிறது.

இன்னொரு புறம், மிக முற்போக்கான, சர்வாதிகாரத்துக்கு அடிபணியாத நீதிபதி என பலராலும் விதந்தோதப்பட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் வீட்டு விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றிருக்கிறார். உச்சநீதிமன்றத்தில் அதிகமான வழக்குகளில் ஒரு வாதி இந்திய அரசு. இந்த நிலையில் தலைமை நீதிபதி வீட்டுக்கு பிரதமர் போனது என்னவிதமான செய்தியை மற்ற நீதிபதிகளுக்கு கொடுக்கும். ஒய்வுபெற்ற பிறகு ஆர்.எஸ்.எஸ் சங் பரிவார கூட்டங்களுக்குச் செல்லும் சங்கி நீதிபதிகள் பதவியில் இருக்கும்போதே அதனை இனி செய்வார்கள். தலைமை நீதிபதி வீட்டுக்கு பிரதமர் போனதும் சங்கி கூட்டத்துக்கு ஒய்வுபெற்ற நீதிபதிகள் போனதும் இந்திய நீதித்துறை சுதந்திரமானது என்ற பிம்பத்தை தவிடுபொடியாக்கியுள்ளது.

இதனை மக்களிடையே அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டிய கடமை புரட்சிகர ஜனநாயக சக்திகளுக்கு உள்ளது. இவற்றை முறியடிக்காமல் கார்ப்பரேட்-காவி பாசிசத்தை வேரறுக்கவே முடியாது.

குமரன்

செய்தி ஆதாரம்: https://thewire.in/communalism/30-former-judges-of-supreme-court-high-courts-attend-meet-organised-by-vishwa-hindu-parishad#:~:text=HOME,Vishwa%20Hindu%20Parishad

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here