மக்கள் அதிகாரம் தலையங்கம்
‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ ஓர் அருவருப்பான, பிரச்சாரப்படம்; தரமான திரைப்பட விழாக்களில் திரையிட தகுதியற்றது. ஜுரிக்கள் குழு அந்த படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம் என கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவின் (IFFI) நிறைவு கூட்டத்தில் திரைப்பட விழாவின் ஜுரி குழு தலைவரும், இஸ்ரேலிய திரைப்பட இயக்குனருமான நடாவ் லேபிட் விமர்சித்தது சங்கிகளை கலங்கடித்துள்ளது. ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர், இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ஆகியோர் பார்வையாளர் வரிசையில் இருக்கும்போதே இந்த கருத்துக்களை வெளிப்படுத்தியது ஒன்றிய மோடி அரசின் முகத்தில் துப்பியது போல் ஆகிவிட்டது.
இந்த அவமானத்தை மறைக்க திரைப்பட விழாவின் ஜுரிக்களில் ஒருவரான சுதிப்தோ சென் மூலம் நடாவ் லேபிட் மேடையில் தெரிவித்த கருத்து ஒட்டுமொத்த ஜுரிக்களின் கருத்தல்ல என சமாளிக்க முயற்சித்தனர்.
இன்னொருபுறம், இஸ்ரேல் தூதர் நாவோர் கிஷோர் இயக்குனர் லேபிட் கருத்துக்காக தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். அது குறித்து அவர் பதிவிட்ட ட்விட்டர் பதிவில் “நீங்கள் உங்கள் கருத்துக்களை ‘தைரியமாக’ தெரிவித்துவிட்டு ஊருக்கு சென்றுவிடுவீர்கள். இங்கு இருக்கும் நாங்கள் தான் விளைவுகளை சந்திக்க வேண்டும். எங்கள் இன்பாக்ஸ்கள்தான் நிரம்பி வழியும். விருந்தினராக அழைத்தவர்களை இழிவுபடுத்தியுள்ளீர்கள். இதற்கு நீங்கள் அவமானப்பட வேண்டும்” என சங்கிகள் மீதான தனது அச்சத்தை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார்.
உண்மையில் யார் அவமானப்பட வேண்டும்?
தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் போன்ற ஒரு மதவாத, பாசிச கருத்துக்களை கொண்ட படத்தை எடுத்த இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரியும், அந்த படத்தில் நடித்த நடிகர்களும், அந்த படத்தை விதந்தோதிய வட இந்திய ஊடகங்களும், நாட்டு மக்களை பிளவுபடுத்தும் கதையை கொண்ட இழிவான திரைப்படத்துக்கு வரிச்சலுகைகள் அறிவித்த, அதனை சர்வதேச திரைப்பட விழாவில் நுழைத்த ஒன்றிய மோடி அரசும்தான் அவமானப்பட வேண்டும். ஒரு மோசமான திரைப்படத்தின் மீதான தனது கருத்தை தெரிவித்த இயக்குனர் நடால் லேபிட் அவமானப்பட வேண்டியவரல்ல.
இதையும் படியுங்கள்: தி காஷ்மீர் ஃபைல்ஸ் சொல்ல மறந்த கதைகள்
கடந்த சில நாட்களாக, நடாவ் லேபிட்டின் ஒரு திரைப்படத்தின் மீது தெரிவித்த கருத்தை இந்திய நாட்டுக்கு எதிராக, நாட்டு மக்களை அவமதித்ததாக திசைதிருப்பும் இழிவான வேலையில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளனர். நடிகர் அனுபம் கெர் போன்ற சங்கிகள் சமூக வலைத்தளங்களில் இயக்குனர் லேபிட்டை தரம் தாழ்ந்த வகையில் வசைபாடி வருகின்றனர். வட இந்திய ஊடகங்கள் இயக்குனர் லேபிட்டை ஒரு தேசிய வில்லனாக சித்தரிக்கத் தொடங்கிவிட்டன. இந்தியா டுடே தொலைக்காட்சி பேட்டியின் தலைப்பில் “India Today grills Director lapid” என கீழ்த்தரமான வாசகத்துடன் இயக்குனர் லேபிட்டுடனான பேட்டியை வெளியிட்டுள்ளது. ஆனால், அந்த பேட்டியில் அவமானப்பட்டு நின்றது என்னவோ பேட்டி எடுத்த ராகுல் கன்வால் தான். எத்தனை முறை கேட்ட போதும் நடாவ் லேபிட் தனது கருத்தில் உறுதியாக நின்றார்.
தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் வெளியான சில நாட்களில் படக்குழுவினரை சந்தித்த பிறகு பிரதமர் மோடி “கருத்து சுதந்திர கொடி பிடிப்பவர்கள் கடந்த ஐந்து, ஆறு நாட்களாக சத்தமின்றி அமைதியாகிவிட்டதாக” தொலைக்காட்சி காணொலிகளில் தெரிவித்தார்.
தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை விமர்சித்து பேசியவர்களை பார்த்து சங்கிகளும், “நடுநிலை” கருத்தாளர்களும் தி காஷ்மீர் ஃபைல்ஸ் போன்ற படம் எடுப்பதும் கருத்து சுதந்திரம் தானே என நக்கலடித்தனர்.
முரண்நகையாக, ஒரு படைப்பாளி அதிகாரத்திற்கு அஞ்சாமல் தனது கருத்தை வெளிப்படுத்தியதை கண்டு பதற்றம் அடைகின்றனர். கருத்து சுதந்திரம் என்பதெல்லாம் கிடையாது என வாலறுந்த பார்ப்பன நரிகள் கூச்சலிடுகின்றன.
பாவம் பாசிஸ்டுகள், அவர்கள் அஞ்சி நடுங்க சொல் ஒன்றே, உண்மை சொல் ஒன்றே போதுமானதாக இருக்கிறது.