டிசம்பர் முதல் வாரத்தில் கோவையில் இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்துள்ளார் .
ஓட்டு போட்டவர்களுக்கே ஆப்பு!
கோவையின் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரம் 63வது வார்டில், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 18 லட்சம் ரூபாய் மதிப்பில் இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ATM இயந்திரத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்துள்ளார்.
அட்டையை திணிக்கும் அட்டை (பூச்சி)!
இதற்காக அந்த வார்டு மக்களுக்கு நவீன அட்டை ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதனைக் கொண்டு ஒரு நாளைக்கு 20 லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: இனி தண்ணீர் காசுக்கு!!!
“இதுபோன்று இயந்திரங்களை தெற்கு தொகுதியில் ஐந்து இடங்களில் இந்த ஆண்டு நிறுவுவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.” என அறிவித்தும் உள்ளார் வானதி.
அட்டை இருந்தால் மருத்துவம். அட்டை இருந்தால் ரேசன். அட்டை இருந்தால் ஓட்டு. இனி அட்டை இருந்தால்தான் தண்ணீர். நாளையோ அட்டையில் காசிருந்தால்தான் தண்ணீர்.
சூயஸூக்கு சூடம் காட்டும் அம்மணி!
“சூயஸ் திட்டம் என்பது 24 மணி நேரம் குடிநீர் வழங்குகின்ற திட்டம் தான். அதேசமயம் பொது குடிநீர் குழாய்களை அவர்கள் அகற்றினால் இது குறித்து மாநகராட்சியிடம் பேச்சுவார்த்தை மேற்கொள்வோம்” என்று வானதி தெரிவித்தார்.
பொதுக்குழாய்க்கு மஞ்சத்தண்ணி!
நம் பொதுக்குழாய்களுக்கு மாலை போட்டு மஞ்சள் தண்ணீர் தெளிக்கப்படுகிறது.
அதாவது “அகற்ற மாட்டார்கள் “ என்று மறந்தும் சொல்லவில்லை. அகற்றினாலும் ஒரே வழி மாநகராட்சியிடம் பேசுவது மட்டும்தான் என சூயஸ்க்கு ஆதரவாக நிற்கிறார். மக்களை திசைத்திருப்பி சுற்றவைக்க வழிகாட்டவும் செய்கிறார்.
Break the meter! Enjoy the water!
இது தென்னாப்பிரிக்காவில் தண்ணீர் கொள்ளையர்களை கலங்கடித்த முழக்கம். வரலாறு மீண்டும் திரும்பாமலா போகும்?. கோவையின் போர்க்குரலுக்கு காத்திருப்போம். தண்ணீர் அடிப்படை உரிமை என்பதற்கு கரம் கொடுப்போம். சூயசை திணிக்கும் காவிகளின் கார்ப்பரேட் கொள்ளைக்கும் கொள்ளி வைப்போம்.
- இளமாறன்