கடந்த மூன்று ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குஜராத் மாநில முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு மக்களை அழைத்துக் கொண்டு வந்து கூட்டம் சேர்ப்பதற்காக குஜராத் அரசு போக்குவரத்துக் கழகத்தில்(GSRTC) இருந்து 34,868 பேருந்துகளை குஜராத் மாநில பாஜக அரசு வாடகைக்கு அமர்த்தி இருக்கிறது. இதற்கு மொத்தம் கொடுக்க வேண்டிய வாடகை 116 கோடியே 50 லட்சம் ரூபாய். இதில் 22 கோடியே 15 லட்சம் ரூபாயை இன்னும் கொடுக்காமல் பாக்கி வைத்திருக்கிறார்கள். கொரோனா பொது முடக்கம் இல்லாமல் போயிருந்தால் மோடியின் பொதுக்கூட்டத்திற்கு ஆள் சேர்க்கும் வேலைக்கு இதைவிட அதிகமான மக்கள் வரிப்பணத்தை இந்த பாசிஸ்டுகள் செலவழித்து இருப்பார்கள்.
தனது கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பதற்காக மக்கள் வரிப்பணத்தை செலவழிக்கும் மோடி அரசு, கொரோனா காலத்தில் எவ்வளவு கொடூரமாக நடந்து கொண்டது?
புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல ரயில்கள் இன்றி, கைக்குழந்தைகளுடன் 500, 1000 கிலோ மீட்டர்கள் நடந்தே சென்றதை இந்த உலகமே கண்டது. ஏழு மாத கர்ப்பிணிப் பெண் கூட வேகாத வெயிலில் நடந்து சென்றதை பார்த்து மனித உள்ளம் கொண்டோர் கண்ணீர் வடித்தனர்.
புலம்பெயர் தொழிலாளர்கள் இப்படி சிரமப்படுகிறார்கள். அவர்கள் சிரமத்தை குறைக்கும் வகையில் இலவச ரயில்களை இயக்கி அவர்களின் சொந்த ஊருக்கு செல்வதற்கு வழி செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி மோடி அரசை கேட்டுக் கொண்டார்.
அதற்கு “புலம்பெயர் மக்களுக்காக கவலைப்படுவோர் அவர்களின் மூட்டை முடிச்சுகளை தலையில் தூக்கிக்கொண்டு அவர்களுடன் நடந்து செல்ல வேண்டியது தானே” என்று ஈவு இரக்கமே இன்றி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திமிராக பதில் அளித்தார்.
ஊருக்கு செல்ல ரயில்கள் இல்லாததால் நடந்தே சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் களைப்பில் (இரயில்கள் வராது என்ற நம்பிக்கையில்) தண்டவாளத்தில் தூங்கிய போது அவர்கள் மீது ரயில் ஏறியதில் 14 பேர் உயிரிழந்தனர். இதற்குப் பிறகும் கூட புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதற்கு ஒன்றிய பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
‘மக்கள் போக்குவரத்து வசதி இன்றி சாவததைப் பற்றி கவலை இல்லை… மக்களின் தேவைக்காக செலவு செய்ய முடியாது. ஆனால் மோடி பேசும் பொதுக்கூட்டங்களுக்கு ஆள் சேர்த்தே ஆக வேண்டும். அதற்கு மக்களின் வரிப்பணத்தை வாரி இறைப்போம்’ என்று பாஜக அரசு செயல்படுகிறது, செயல்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி அம்பானி, அதானி வகையறாக்கள் தொழில் நடத்தி சொத்து சேர்க்க வேண்டும் என்பதற்காக உலகத்தை சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருக்கிறார் மோடி.
அப்படி, மோடி உலகம் சுற்றுவதற்கு (2014 லிருந்து 2022 வரை) சுமார் 1,500 கோடி ரூபாயை பாஜக அரசு செலவழித்துள்ளது.
இதையும் படியுங்கள்: ரூ.12,000 கோடி ஊழல்: இந்தியர்களின் தலையில் நிலக்கரியை அரைத்த அதானி
மேலும் ’25 லட்சம் கோடி ரூபாய் கடனை முதலாளிகள் திருப்பி கொடுக்க வேண்டியதில்லை’ என்று ஒன்றிய பாஜக அரசு தள்ளுபடி செய்தது. இதில் வெறும் 40,000 கோடி ரூபாயை செலவு செய்து இருந்தால் போதும்; புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு அளித்து ரயில்களின் மூலம் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்திருக்க முடியும். அதைச் செய்வதற்கு குறைந்த பட்ச மனிதாபிமானம் இருந்தால் போதும். அந்த குறைந்தபட்ச மனிதாபிமானம் கூட இல்லாத பாசிஸ்டுகள் தான் ஆர் எஸ்எஸ் – பாஜக வினர் என்பதை மக்கள் மறந்து விடக் கூடாது. இவர்கள் வீழ்த்தப்படாவிட்டால் உழைக்கும் மக்கள் நசுக்கப்படுவதையோ நாடு சுடுகாடு ஆவதையோ யாராலும் தடுக்க முடியாது.
- பாலன்
செய்தி ஆதாரம்: Thewire
https://m.thewire.in/article/government/gujarat-government-public-transport-buses-rent-dues-pm-cm
https://m.thewire.in/article/government/last-five-years-modi-foreign-visits-rs-254-crore