ஸ்ரீமாதா வைஷ்னோ தேவி உருவப்படத்துடன் 5,10 ரூபாய் நாணயங்களை புழக்கத்தில் விட்டுள்ளது ஒன்றிய அரசு.
நாணயத்தில் படத்தை அச்சிடும் மரபு;
பொதுவாக சுதந்திரப்போராட்ட தியாகிகளின் நினைவை போற்றும் விதமாகவும், அவர்களின் நூற்றாண்டு போன்ற சிறப்பு நிகழ்வுகளை ஒட்டியும் தபால் தலை வெளியிடுவது, நாணயங்கள் வெளிடுவது மரபு.
வரலாற்றில் ஒரு மன்னன் மற்றொரு நாட்டை பிடித்து அதன் கஜானாவை சூறையாடி கிடைத்த தங்கத்தை உருக்கி தன் நாட்டு நாணயமாக மாற்றுவதும் மரபுதான்.
நாம் மன்னர் காலத்தில் இல்லை;
மோடி தான் பரப்ப விரும்பும் இந்துத்துவாவை அனைத்து மக்கள் மீதும் திணிப்பதை ஏற்க முடியாது. இப்பொழுது மோடி உள்ளிட்டவர்கள் மன்னர் போலத்தான் இந்துமத கடவுளை அனைவரும் பயன்படுத்தும் 5, 10 ரூபாய் நாணயத்தில் அச்சிடுகின்றனர்.
பள்ளியில் பிற மத கடவுள்களைப்பற்றி பேசினாலே மதமாற்றம் என்று கூப்பாடு போட்டு, ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வைத்துள்ள நாகர்கோவில் சங்கிகள், மோடி அரசின் இந்த நாணயத்திற்கு நேர்மையாக விளக்கம் தர முடியுமா?
சங்கிகளின் கைப்பாவையாகிவிட்ட ரிசர்வ் வங்கி:
அரச இலச்சினையுடன் ரூபாய் நாணயத்தை வெளியிடும் அதிகாரம் இந்திய ரிசர்வ் வங்கிக்குதான் உள்ளது. தனி நபர்களோ, அமைப்போ தன் விருப்பத்துக்கு அதை பயன்படுத்த முடியாது. அப்படி இருக்க மக்கள் புழக்கத்திற்கான நாணயத்தில் ஒரு புறம் சிங்க இலச்சினையுடனும், மறுபுறம் இந்து கடவுள் படம் கொண்டதாக அச்சு தயாரித்து வார்க்கப்பட்டது எப்படி என்பதற்கு பதில் சொல்ல வேண்டும். அரசின் அனைத்து உறுப்பிகளும் காவிமயமாவதையே இது நிரூபிக்கிறது.
மதச்சார்பின்மையை நிலைநாட்டுவோம்;
நாம் பல மதத்தை பின்பற்றுகிறோம். பல கடவுள்களை வழிபடுகிறோம். அல்லது மத – இறை நம்பிக்கை இல்லாத பகுத்தறிவாளர்களாக உள்ளோம். இது தனி நபர் உரிமை! இந்த மண்ணில் இந்துக்கள்தான் இருக்க வேண்டும் என்பதையோ, இந்திதான் பேச வேண்டும் என்பதையோ, ராமன் உள்ளிட்ட காவிகள் முன்னிறுத்தும் கடவுளைத்தான் வழிபட வேண்டும் என்பதையோ ஏற்க முடியாது. இதில் காவி பாசிஸ்ட்டுகள் தொடுக்கும் தாக்குதல்களை ஒன்றிணைந்து முறியடிப்போம்.
- இளமாறன்