தரமான கல்வியை உத்திரவாதப்படுத்த ஆக்கமும், அறிவுரையும் ஒன்றிய/ மாநில அரசுகளுக்கு வழங்க தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றம் (National Council of Educational Research and Training) என்ற தன்னாட்சிபெற்ற ஒரு அமைப்பை காங்கிரஸ் தலைமையிலான ஒன்றிய அரசு 1961-ஆம் ஆண்டு உருவாக்கியது.
அதுமுதல் அவ்வமைப்பு 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு பாடப்புத்தகங்கள் முதல் உயர்கல்வி மட்டுமல்லாமல் சிவில் சர்வீசஸ், SSC, JEE, சமீபத்திய NEET போன்ற போட்டித் தேர்வுகளுக்கான பாடப்புத்தகங்களையும் தயாரித்து, அச்சிட்டு, வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் பாடப்புத்தகங்களை CBSE பள்ளிகள், 18 மாநிலங்களிலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என்று நாடு முழுவதும் ஏறக்குறைய 5 கோடி மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
கல்வியாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், துறைசார்ந்த வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள் பரிந்துரைக்கும் பாடங்களை இந்நிறுவனத்தின் நிர்வாகக் குழு பரிசீலித்து ஒப்புதல் அளிக்கிறது. அதற்கேற்ப NCERT-யின் பாடப்புத்தகங்கள் புதுப்பிக்கப்பட்டு அச்சடித்து விநியோகிக்கப்படுகிறது.
2014-ல் பாசிச பாஜக ஆட்சிக்கு வந்ததும் எல்லா துறைகளிலும், கல்வி நிறுவனங்களிலும், பல்கலைக்கழக நிர்வாகங்களில் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதிகளை நிரப்பி வருகிறது. அதுபோலவே NCERT-யிலும் காவி சிந்தனைபடிந்த நபர்களை நியமித்து தனது இந்துராஜ்ஜிய கனவுக்குத் தடைகளாக, நெருடல்களாக இருப்பவைகளையெல்லாம் பாடபுத்தகங்களிலிருந்து தொடர்ச்சியாக நீக்கியும், மாற்றியும், புரட்டியும் வருகிறது.
குரங்கு கையில் பூமாலை!
காவிகள் கையில் பாடத் திட்டம்!
2018-ஆம் ஆண்டில் ஒன்றிய கல்வி அமைச்சராக இருந்த பிரகாஷ் ஜாவடேகர் “மாணவர்களின் சுமையைக் குறைப்பதற்காக” கூறிக் கொண்டு பாடத்திட்ட பகுத்தறிவாக்க செயல்முறை (Curriculum Rationalisation Exercise) என்ற பெயரில் இந்த புரட்டு வேலைகளை ஆரம்பித்து வைத்தார். அப்போது முதல் இன்றுவரை NCERT அமைப்பு பல்வேறு கூட்டல், கழித்தல், ஒதுக்குதல், மாற்றுதல், மற்றும் விபரமேம்பாடு என்று ஏறக்குறைய 1334 திருத்தங்களை சமூக அறிவியல், அரசியல் அறிவியல், மற்றும் வரலாறு உள்ளிட்ட சுமார் 182 பாடப்புத்தகங்களில் செய்துள்ளது.
சமீபத்தில் 12-ஆம் வகுப்பு வரலாறு பாடப்புத்தகத்திலிருந்து முகலாயரின் நீதி பரிபாலன முறை, காந்தி கொலையில் இந்து மகாசபையின் தொடர்பு, மவுலானா அபுல்கலாம் அசாத், இந்திராவின் அவசரநிலை காலகட்டத்தில் நிகழ்த்தப்பட்ட அரசபயங்கரவாதம், இந்தியாவில் நக்சல்பாரி எழுச்சி மற்றும் புகழ்பெற்ற போராட்டங்களான சிப்கோ போராட்டம், நர்மதா நதியைக் காக்க நடத்தப்பட்ட போராட்டம் பற்றிய பாடங்கள்/பக்கங்களை NCERT நீக்கியுள்ளது. குறிப்பாக குஜராத்தில் 2002-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட முஸ்லீம் இனப்படுகொலையை (Gujarat anti-muslim riots) வெறும் குஜராத் கலவரம் (Gujarat riots) என்று திருத்தியும் உள்ளது. இத்திருத்தங்களைக் கண்டித்து உள்நாட்டு, வெளிநாட்டு வரலாற்று ஆய்வாளர்கள் 250 பேர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். நாடு முழுவதும் கண்டனங்களும் குவிந்து வருகின்றன.
இதையும் படியுங்கள்: பள்ளிப் பாடத்திட்டங்களில் பகவத்கீதையை புகுத்தும் சங்பரிவார் கும்பல்!
இத்திருத்தங்களை வரவேற்றுப் பேசியிருக்கும் டில்லியில் பல கலவரங்களை முன்நின்று நடத்திய கபில் மிஸ்ரா என்ற காவி பாசிஸ்ட், “முகலாயர்களின் தவறான வரலாற்றை NCERT-யில் இருந்து நீக்குவது ஒரு சிறந்த முடிவு. திருடர்கள், பிக்பாக்கெட்டுகள் மற்றும் இரண்டு பைசா தெருப்பொறுக்கிகள் முகலாய சுல்தான்களாகவும், இந்தியாவின் பேரரசர்களாகவும் அழைக்கப்பட்டனர். தற்போது அக்பர், பாபர், ஷாஜகான், ஔரங்கசீப் ஆகியோர் வரலாற்று புத்தகங்களில் இல்லை, குப்பை தொட்டியில் உள்ளனர்” என்று முகலாயர்கள் மீது பாசிச வெறியை வெறுப்பாக கக்கியிருக்கிறான்.
பாட திருத்தங்களின்
பின்னணியும் நோக்கமும்
ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கைபர், போலன் கணவாய்கள் வழியாக திராவிடர் நிலப்பரப்புக்குள் நுழைந்த நாடோடி ஆரிய பார்ப்பனர்கள் தனித்தான மொழியையும், காட்டுமிராண்டிகளுக்கே உரிய கலாச்சாரத்தையும் கொண்டிருந்தாலும், தங்களுக்கென ஒரு வரலாறைக் கொண்டிருக்கவில்லை. அதனால்தான் தங்களது புராண புரட்டுகளையும், கட்டுக்கதைகளையும் உண்மை என்று அன்று முதல் இன்றுவரை பரப்பித் திரிகின்றனர். தங்கள் இனத்திலிருந்து மக்கள் அனைவருக்குமான தலைவராக ஒருவரைக்கூட காட்ட வக்கில்லாத பார்ப்பனர்கள் அனுமன், ராமர், சிவன் போன்ற கற்பனைப்பாத்திரங்களுக்கு மிகப்பெரும் சிலைகளை நிறுவி கடவுள்களாக/நாயகர்களாகக் கட்டமைக்கின்றனர். உலகில் எங்கேயுமே கேள்விப்பட்டிராத வகையில் தங்கள் அமைப்பைத் தடைசெய்த வல்லபாய் படேலுக்கு 3000 கோடி செலவில் உலகத்திலேயே பெரிய சிலையை நிறுவியும் உள்ளனர்.
இந்தியாவின் வரலாறு புராணங்களில் இருந்துதான் தொடங்குகிறது என்றும், இந்தியா ஒரு காலத்தில் இந்துராஜ்ஜியமாக இருந்தது என்றும் பல புரட்டுகளை பரப்பிவரும் பார்ப்பனர்கள் அவற்றுக்கு இடைஞ்சலாக இருப்பவற்றை பல்வேறு காலகட்டங்களில் அழித்து வந்திருக்கின்றனர். பார்ப்பனீய கொடுங்கோன்மையை எதிர்த்த சித்தர்களை, திருவள்ளுவரை, அம்பேத்கரை வள்ளலாரை, தங்களின் பிரதிநிதிகளாக மாற்றுவது என நடந்து கொள்கின்றனர். அதன் ஒரு அம்சமாகத்தான் தற்போது பாடபுத்தகங்களில் கொண்டு வந்திருக்கும் மேற்குறிப்பிட்ட மாற்றங்கள்.
ஏற்கனவே அக்னிவீரர்கள் என்ற பெயரில் இந்து ராஜ்யத்திற்கான காலாட்படையை கட்டிவரும் காவி பாசிஸ்டுகள் சிவில் சமூகத்திலும், அறிவுத்துறையிலும் தம்முடைய சித்தாந்தத்தில் வளர்த்தெடுக்கப்பட்ட தலைமுறையை உருவாக்க விரும்புகின்றனர். ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களில் வரலாறு, தேசபக்தி என்று அப்பாவி சிறுவர்களுக்கு சொல்லிக் கொடுத்து மூளைச்சலவை செய்வதையே இன்று அதிகாரப்பூர்வமாக திருத்தப்பட்ட பாடப்புத்தகங்களின் மூலம் எதிர்கால தலைமுறையினருக்கு சொல்லித்தர விரும்புகின்றனர். இப்பாடப்புத்தகங்களைப் பயின்று இந்துத்துவா நஞ்சு ஊட்டப்பட்ட ’ஜாம்பி’ (zombie) களாக வெளிவரும் மாணவர்கள் அக்னிவீரர்களின் தளகர்த்தர்களாக இருந்து இந்து சாம்ராஜ்யத்தை நிறுவுவார்கள் அல்லது இந்து ராஜ்யத்திற்குட்பட்ட அறிவுத்துறையினராக, குடிமக்களாக இருப்பார்கள்.
பாட திருத்தம் சமூகத்தில்
ஏற்படுத்தப் போகும் விளைவுகள்
வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் அறிவியல் வளர்ச்சியின் பலன்களை அனுபவித்துக் கொண்டே அறிவியலுக்கு எதிரான மனநிலை உள்ளவர்களைக் கொண்ட நம்நாட்டில், பரிணாம வளர்ச்சியை பள்ளியில் படித்துக்கொண்டே பிரம்மாவின் தலையில் இருந்து ஒருவனும், தோள்களில் இருந்து ஒருவனும், வயிற்றிலிருந்து ஒருவனும், தொடையிலிருந்து ஒருவனும் பிறந்ததாக நம்புவதும், நம்ப வைப்பதும் நடக்கிறது. நன்கு படித்தவர்கள் கூட சாதிப் படிநிலை, ஜோதிடம், ராசிபலன், பில்லி சூனியம், கார்ப்பரேட் சாமியார்கள் போன்ற பல்வேறு மூடநம்பிக்கைகளால் மூழ்கி இருக்கின்றனர். கல்வி பரவலாக்கப்பட்ட போதும், சுதந்திரத்துக்கு முன்பிருந்ததைவிட கல்வியறிவு கூடியிருந்தபோதும் நாட்டுமக்கள் இன்னமும் சாதி, மதம், ஆணாதிக்கம், கண்மூடித்தனமான மூடநம்பிக்கைகள், தனிநபர் வழிபாடு போன்ற பிற்போக்குத்தனத்திலேயே உழல்கிறார்கள்.
அறிவியல் பூர்வமான சிந்தனையை வளர்க்காமல் அறிவியலை மட்டுமே வளர்ப்பதால்தான், ராக்கெட் ஏவுவதற்கு தேங்காய் உடைத்து பூஜை செய்வதும், ரபேல் விமானத்துக்கு எலுமிச்சைப்பழம் கட்டுவதும் மந்திரிகளாலும், மெத்தப்படித்த அறிவாளிகளாலும் கூச்சமில்லாமல் நடத்தப்படுகிறது. 21-ஆம் நூற்றாண்டிலும் இந்திய சமூகத்தில் இந்த இழிநிலைதான் நீடிக்கிறது என்ற நிலையில் காவி பாசிஸ்டுகள் கல்வியில் கொண்டுவரும் இப்படிப்பட்ட மாற்றங்கள் நமது சமூகத்தை இன்னும் பின்னுக்கு இழுத்து புதைகுழியில் தள்ளிவிடும். வரலாறை திரித்தும் புரட்டியும் தயாரிக்கப்பட்ட பாடப்புத்தகத்தை படிக்கும் ஒரு மாணவனின் கருதுகோல் என்னவாக இருக்கும்? அவன் எப்படிப்பட்ட மனிதனாக சமுதாயத்தில் நுழைவான்?
“பாரத நாடு மேற்கே ஆப்கானிஸ்தான் முதல் கிழக்கே மியான்மர், தாய்லாந்து, இந்தோனேசியா வரை பரவி இருந்த மிகப்பெரிய இந்து நாடு. முகலாயர்களும், ஆங்கிலேயர்களும் படையெடுத்து நூற்றாண்டுகளாக அதை சிதைத்து விட்டனர். அதனால் முகலாயர்களின் இன்றைய வாரிசுகளான முஸ்லிம்களும், ஆங்கிலேயர்களின் இன்றைய வாரிசுகளான கிறிஸ்தவர்களும் நாட்டின் எதிரிகள். இந்து மதத்தின் வர்ணாசிரம முறை சிறந்தது. அதுவே சமூக ஒழுங்கிற்கும் இயக்கத்திற்கும் அடிப்படையானது. அதற்கு எதிரான கருத்துகளான சமத்துவத்தை சமூக நீதியைக் கூறும் கருத்துக்கள், உழைக்கும் மக்களின் அதிகாரத்தைக் கோரும் கம்யூனிசம் போன்றவை தீங்கானவை. காந்திக்கும் கோட்சே என்பவருக்கும் இருந்த முன்விரோதமே காந்தி கொல்லப்பட காரணம்” போன்ற இந்துத்துவ கருத்துக்களால் மூளைச்சலவை செய்யப்பட்டு மதவெறியூட்டப்பட்ட இலட்சக்கணக்கான ஆர்.எஸ்.எஸ். சங்கிகளாக வெளிவருவார்கள். இன்றைக்கு ஒரு எச். ராஜா, ஒரு ரங்கராஜ் பாண்டே, ஒரு அர்ஜுன் சம்பத், ஒரு அண்ணாமலை போன்றவர்களை எதிர்கொள்ளும் நாம் நாளை இலட்சக்கணக்கான எச். ராஜாக்களையும், ரங்கராஜ் பாண்டேக்களையும், அர்ஜுன் சம்பத்துகளையும், அண்ணாமலைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
பாசிஸ்டுகளும் பாட திருத்தமும்!
வரலாற்று சான்றுகள்!
“பாடபுத்தகங்களை என்னால் கட்டுப்படுத்த முடியுமானால் நாட்டையே என்னால் கட்டுப்படுத்த முடியும்” என்ற ஹிட்லர் ஜெர்மனியில் ஆட்சியைப் பிடித்தபின் செய்த முதல் காரியமே பள்ளி பாடத்திட்டங்களை மாற்றியமைத்ததுதான். பள்ளி குழந்தைகளுக்கு உயிரியல் (Biology) கட்டாயமாக்கப்பட்டு இன அறிவியல் (Race Science) என்ற பாடம் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்பாடத்தில் ஆரிய இனமே மேலானது என்று கற்பிக்கப்பட்டு ஒரு ஆரிய இன நபரின் நிறம், கண், தோற்றம், முடி எப்படி இருக்கும் என்றும் யூதர்களை எப்படி வேறுபடுத்தி கண்டுபிடிப்பது என்றும் பயிற்றுவிக்கப்பட்டனர். ஆரிய இனவெறி ஊட்டப்பெற்று ஜெர்மனிய இளைஞர்களை போருக்குத் தயாரிக்கவும், ஆரிய இனத்திற்காக உயிரை தியாகம் செய்வதற்கும் தயாரிக்கப்பட்டனர். ஒவ்வொரு பள்ளி பாடபுத்தகங்களின் அட்டையிலும் ஹிட்லரின் படத்தோடு அவன் கூறிய இனவெறியூட்டும் வசனங்களையும் அச்சிட்டு இருந்தனர். ஹிட்லர் தான் ஒரு இன உணர்வாளனாக (வெறியனாக) வளர்வதற்கு லியோபோல்ட் போட்ச் என்ற பள்ளி ஆசிரியர்தான் காரணம் என்று தனது சுயசரிதையில் எழுதியுள்ளான். இன்றைய “ஜெய் ஸ்ரீராம்” போலவே அன்று நாஜி வணக்கமான “ஹெய்ல் ஹிட்லர்” (Heil Hitler) பள்ளி குழந்தைகளுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டிருந்தது.
இதையும் படியுங்கள்: சங்கி கும்பல் உருவாக்கிய, சாவர்க்கர் ‘புல்புல்’ பறவையில் பறந்த கதை!!!
அதேபோல இத்தாலியின் பாசிஸ்ட்டான முசோலினியும் பாடபுத்தகங்களை மாற்றி அவனது பாசிஸ்ட் கட்சிக்கு ஆள்பிடிக்கும் வேலையை செய்தான். ஒவ்வொரு குழந்தையும், இளைஞரும் முசோலினிக்கும் அவனது பாசிஸ்ட் கட்சிக்கும் விசுவாசமானவர்களாக இருக்குமாறு பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தயாரிக்கப்பட்டார்கள்.
1915-ல் துருக்கியில் நடைபெற்ற அர்மீனிய மக்களின் இனப்படுகொலை பற்றிய பக்கங்கள் துருக்கி நாட்டு பாடபுத்தகங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. ருவாண்டா நாட்டில் 1994-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு முந்தைய பள்ளி பாடபுத்தகங்களில் இனக்குழுக்களை வேறுபடுத்தும் பக்கங்கள் புகுத்தப்பட்டன. இதுபோன்று உலகில் எங்கெல்லாம் இனப்படுகொலைகள், இனவெறி மோதல்கள் நடந்துள்ளதோ அந்நாடுகளிலெல்லாம் பாடப்புத்தகங்களில் அதற்கேற்ப மாறுதல்களை ஆட்சியாளர்கள் செய்துள்ளனர். இந்தியா ஒரு இனப்படுகொலையின் விளிம்பில் உள்ளது என்று இனப்படுகொலைக்கான சர்வதேச அமைப்பு எச்சரித்துவரும் வேளையில் காவிபாசிஸ்டுகளின் கைகளில் சிக்கியுள்ள கல்வியும் ஒரு இனப்படுகொலைக்கான தயாரிப்பாகவே இருக்கப்போகிறது.
பாடத் திருத்தங்களை
எதிர்த்து நில்!
அனைவருக்கும் கல்வி என்று கல்வியை பரவலாக்கியதற்காக சதாசர்வ காலமும் ஆங்கிலேயரை சபித்துக் கொண்டிருக்கும் பார்ப்பன கூட்டம் தற்போது தனக்கு கிடைத்துள்ள வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு மனுநீதியின் மறுபதிப்பான தேசிய கல்விக் கொள்கை 2020- ஐ அமுல்படுத்தி மீண்டும் பெரும்பாலான மக்களை கல்வியிலிருந்து ஒதுக்கிவிட துடிக்கிறது. அதை அப்படியே வழிமொழியும் NCERT-யின் இயக்குனரான தினேஷ் பிரசாத் சக்லானி, “தேசிய கல்விக் கொள்கையை படிப்படியாக அமல்படுத்துவதற்கான நடவடிக்கையே இம்மாதிரியான திருத்தங்கள்” என்கிறார்.
காவி பாசிஸ்டுகளின் வரலாற்றுத் திரிபுகள் ஏதோ NCERT-யின் பாடபுத்தகங்களில் மட்டும்தான் அதிலும் CBSE பள்ளி பாடபுத்தகங்களில்தான் என்று நாம் கடந்துபோக முடியாது. பாடபுத்தகங்களில் வரலாற்றை தனது இந்துத்துவ கொள்கைகளுக்கு ஏற்ப திருத்தும் காவி பாசிஸ்டுகளுக்கு எதிராக கண்டன அறிக்கை, தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்ற அரசியல் நடவடிக்கைகளுக்கு நாம் கவனம் செலுத்துவதோடு சமூக நடவடிக்கைகளும் கவனம் செலுத்த வேண்டும்.
நமது நாட்டில் வரலாறு என்பதே வெறும் அரசர்களையும், அரச பரம்பரைகளையும், குறிப்பான வரலாற்று நிகழ்வுகளையும் பற்றி மட்டுமே படிப்பது என்று சுருக்கப்பட்டுள்ளது. மாறாக, வரலாறு என்பது மனித குலத்தின் படிப்படியான வளர்ச்சியையும், பொருள் உற்பத்தியில் ஏற்படும் மாற்றங்கள் எப்படி மனித குலத்தை அடுத்த அடிக்குக் கொண்டு செல்கிறது என்பது பற்றியும், அதனால் மனித சமுதாயத்தில் ஏற்படும் விளைவுகளையும் விவரிப்பதாக இருக்க வேண்டும். இந்த சமூக விஞ்ஞான பார்வையை உருவாக்கும் கல்விமுறை மார்க்சியம் மட்டும்தான். ஆனால் இத்தகைய வரலாறு எந்த பள்ளியிலும், எந்த பாடபுத்தகத்திலும் இருப்பதில்லை.
“இந்தியாவின் வரலாறு என்பது பௌத்தத்துக்கும் பிராமணியத்துக்கும் இடையிலான மோதலின் வரலாறு அன்றி வேறில்லை” என்றார் அண்ணல் அம்பேத்கர். ஆனால் அப்படிப்பட்ட வரலாறை யாரும் சொல்லிக்கொடுக்கப்போவதுமில்லை. இந்தியாவின் உண்மையான வரலாறை பாடபுத்தகங்களுக்கு வெளியிலிருந்துதான் நாம் கற்றுக்கொள்ள முடியும். அது தொடர்பான புத்தகங்களை வாங்கிப் படிப்பதன் மூலமும், நாம் படித்தவற்றை நமது குழந்தைகளுக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் சொல்வதன் மூலமும் காவி பாசிஸ்டுகளின் புரட்டுகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த முடியும். “தனது வரலாற்றை மறக்கும் எந்த ஒரு இனமும் அடிமைப்படுத்தப்படுவதை தடுக்க முடியாது” என்பதே உண்மை. இதை உணர்ந்து கொண்டு காவி பாசிஸ்டுகளுக்கு எதிராக களமாட நம்மையும் நமது வாரிசுகளையும் தயார்படுத்துவோம்.
- மதியழகன்
புதிய ஜனநாயகம் (மா – லெ)
மே மாத இதழ் 2023
படியுங்கள்
பரப்புங்கள்!