இந்தியாவில் கேதர்நாத் முதல் ராமேஸ்வரம் வரை உள்ள சிவன் கோவில்கள் ஒரே நேர்கோட்டில் உள்ளது என்று எரிக் சொல்ஹெய்ம் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் வியந்து இருந்தார்.
சிதம்பரம் நடராசர் கோவிலில் உள்ள நடராசர் சிலை பூமியின் மையப்பகுதியில் உள்ளதால் தில்லைக் கூத்தனின் ஆட்டம் என்றாவது நின்றுவிட்டால் உலகம் அழிந்து விடும்.
பாருங்கள் நடராசனின் மகிமையை.
பூமியின் centre of gravity பகுதியில்தான் சிதம்பரம் நடராசர் கோவிலில் உள்ள நடராசர் சிலை அமைந்துள்ளது. அந்தப் பகுதியை தேர்வு செய்து நடராசர் அருள் பாலித்துக் கொண்டு உள்ளார்.
திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலின் மேல் பறக்கின்ற விமானங்களை சனீஸ்வரர் உடைய காஸ்மிக் பவர் இழுத்து விடும் என்பதால் விமானத் தடம் அது வழியே செல்வதில்லை.
நீங்கள் வாழ்க்கையில் செய்கின்ற பாவ புண்ணியங்களை தொலைப்பதற்கு தென்னிந்தியாவில் உள்ள பரிகார கோவில்களுக்கு செல்வதன் மூலம் ‘ப்ரீத்தி ‘ செய்து கொள்ளலாம்.
நீண்டகாலம் திருமணமாகாதவர்கள் திருமணஞ்சேரி கோவிலுக்கு செல்வதன் மூலம் திருமண பிராப்தம் உண்டாகிவிடும்.
தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான வைத்தீஸ்வரன் கோயிலில் டஜன் கணக்கில் உள்ள நாடி சோதிடர்களிடம் நீங்கள் நம்பிச் சென்று கண்டம் பார்த்தால் உங்களது வாழ்க்கையில் உள்ள சகல நல்லது கெட்டதுகளையும் தெரிந்து கொண்டுவிட முடியும்.
படிக்க
- பழந்தமிழரிடையே சூழலியல் விழிப்புணர்வு! | வி.இ.குகநாதன்
- காளையார்கோவில் பாசிச குண்டர்களின் வெறியாட்டம்!
இப்படி ஒவ்வொரு கோவில்கள் பற்றி திருத்தல வரலாறு என்ற பெயரில் கற்பனைக்கு எட்டாத அமானுஷ்ய சக்திகளை நமக்கு அறிமுகப்படுத்தி ரீல் சுற்றுகிறார்கள் பார்ப்பன பௌராணிகர்கள்.
இவர்கள் தான் இப்படி என்றால் உலகில் எரிக் சொல்ஹெய்ம் போன்ற சுற்றுச்சூழல், அறிவியல் என்று பேசிக்கொண்டு உள்ள பலரும் கூட இதுபோன்ற சரடு திரித்தல்களை எவ்வித அறிவியல் கண்ணோட்டமும் இன்றி ஏற்றுக்கொள்கிறார்கள்.
This is fascinating, India 🇮🇳! pic.twitter.com/Zt7qGGGDTR
— Erik Solheim (@ErikSolheim) June 21, 2022
பல நூற்றாண்டுகளாக முன்னோர்கள் கடைப்பிடிப்பது தவறாக எப்படி இருக்கும் என்று வேறு வாதத்தை புரிகிறார்கள்.
அதுவும் குறிப்பாக யூட்யூப் சேனல் ஆரம்பித்தவுடன் பல தற்குறிகள் தனக்கு தெரிந்த ஒரு சதவீத உண்மையை 99% பித்தலாட்டங்கள் உடன் கலந்து அன்றாடம் சேனல் வியாபாரம் நடத்துவதால் அதைப் பார்க்கும் பலரும் இவையெல்லாம் உண்மை என்று கருதிக் கொண்டு நேரத்தை வீணடிக்கின்றனர்.
அறிவியல் அற்ற மூடநம்பிக்கைகளை முறியடிப்பதற்கு நாம் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது.
எனவே கண்முன்னே நடக்கின்ற அறிவியல் அற்ற செப்படி வித்தைகளை தொடர்ந்து அம்பலப்படுத்துவதன்மூலம் பகுத்தறிவுள்ள அறிவியல்பூர்வமான ஜனநாயக சமூகத்தை உருவாக்க முடியும்.
- இரா.கபிலன்.