அண்ணாமலைக்கு அரோகரா!
தினமும் காலை செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி, சமூக ஊடகங்களை திறந்தால் பாரதிய ஜனதா கட்சிக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திருவாளர் அண்ணாமலையின் வாய்ச் சவடால்கள், வெற்றுக் கூச்சல்கள், அண்டப்புளுகுகள் முதல் பக்கத்திலிருந்து முக்கிய பக்கம் வரை நிரப்பிக் கொள்கிறது.
இதை பார்த்தவுடன் எனக்கு சிறுவயதில் அனுபவித்த ஒரு சம்பவம் தான் நினைவுக்கு வருகிறது. சிலகாலம் வேலையிலிருந்து ஏதோ ஒரு பிரச்சனையால் மனம் பிறழ்ந்த ஒரு நபர் தினமும் பள்ளிக்கூடத்தின் வாசலில் வந்து நிற்பார். அவர் தன்னை பிறர் கவனிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் துணிகளை சிறு சிறு துண்டுகளாக கிழித்து உடம்பு பூரா சுற்றிக்கொண்டு நிற்பார்.
மாணவர்கள் மட்டுமின்றி தெருவில் போகின்ற, வருகின்ற அனைவரும் அவரை ஏதோ ஒரு வகையில் பார்க்காமல் போக முடியாது. இடையிடையில் பழைய எம்ஜிஆர், சிவாஜி சினிமா பாடல்களுக்கு கர்ண கடூரமான குரலில் பாடிக்கொண்டே நடனம் ஆடுவார். அப்படியும் கவனிக்காமல் செல்பவர்களுக்கு அவரது சில செய்கைகள் அருவருப்புடன் கூடிய கவனத்தை உருவாக்கிவிடும்.
பசி கொடுமையால் குப்பைத் தொட்டியில் கிடக்கும் உணவுப் பொருள்களை அரக்கப்பரக்க எடுத்து தின்பார். அப்படி மேல்நிலைப்பள்ளி படிக்கும் காலத்தில் அவரைக் கவனிக்காமல் செல்லவே முடியாது. திருவாளர் அண்ணாமலையின் செய்கைகள் அனைத்தும் அவரை எனக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது.
கார்ப்பரேட்டுகளின் பிடியில் உள்ள ஊடகங்கள் மற்றும் பண மூட்டைகள் நடத்துகின்ற ஊடகங்கள் பாரதிய ஜனதா கட்சியிடம் கணிசமாக பணத்தை வாங்கிக்கொண்டு அண்ணாமலையை பற்றி தினம் ஒரு செய்தியை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த செய்திகள் எதுவும் மக்களின் வாழ்க்கையை மயிர் அளவுகூட உயர்த்துவதற்கு பயன்படாது என்றாலும், ஊடகங்களில் அவரது சேட்டைகள் மற்றும் அறிக்கைகள் என்ற பெயரில் அவர் வெளியிடும் அபத்த குப்பைகள் அனைத்தும் எனது பள்ளியில் “தவிர்க்கமுடியாமல் சந்தித்த நபரை போல” அனைவர் வாழ்விலும் நுழைந்து இம்சை செய்கிறார். கடந்த காலத்தில் பாரதிய ஜனதா கட்சி பொறுப்பிலிருந்த பொன்னார், தமிழிசை போன்றவர்களை காட்டிலும் அதிகமாக ஊடகங்களில் இவர் பெயர் அடிபடுவதால் தொடர்ந்து இவரைப்போன்ற “தரமான தலைமை இருந்தால் தமிழகத்தில் பாஜக கனவிலும் மலராது” என்பதை மட்டும் கூற முடியும்.
படிக்க:
♦ மக்களிடம் பிடுங்கி கார்ப்பரேட்டுகளுக்கு படையல்!
♦ பாஜகவின் சமத்துவ விருந்தாம்.
ஆனால் பாஜக இதுபோன்ற “அரை”வேக்காடுகளை மட்டும் நம்பி களத்தில் இறங்கவில்லை. மேலிருந்து கீழ் ஒரே சித்தாந்தத்தின் வார்ப்பில் உருவாக்கப்பட்ட பாசிச குண்டர் படை அனைத்து துறைகளிலும் ஊடுருவி வேலை செய்கிறது என்பதால் எச்சரிக்கையுடன் ஒவ்வொரு துறையிலும் புகுந்து துரத்தி அடிப்பது, வீழ்த்துவது என்ற செயலில் தமிழகத்தை முன்னுதாரணமாக மாற்ற வீச்சாக செயல்பட வேண்டும்.
சண்.வீரபாண்டியன்.