ரமலான் மாதமான இம்மாதத்தில், இரண்டு இரவுகள், இசுரேல் ராணுவ வெறிக்கூட்டம் அல்-அக்சா மசூதி மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. அப்போது தொழுகை கூட முடிந்திருக்கவில்லை. அதற்கு முன்னாலேயே தாக்குதல் தொடங்கிவிட்டது . ரப்பர் குண்டுகளைப் பிரயோகித்தார்கள் ; மற்றொருபக்கம், குண்டுகளை வீசினார்கள். கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் போட்டார்கள். யார் மீது? தன்னை அல்லாவிடம் ஒப்படைத்துவிட்டு தொழுது கொண்டிருந்த பாலஸ்தீனியர் மீது அந்தப் பாசிச ராணுவம் கொலைத் தாக்குதல் நடத்தியது.
குறைந்தது 12 பாலஸ்தீனியர் குற்றுயிராக்கப்பட்டார்கள். கொல்லப்பட்டுமிருக்கலாம். 400 பேருக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர் கைது செய்யப்பட்டு வதைக் கூடத்திற்கு அனுப்பப்பட்டார்கள். அதைத் தொடர்ந்து ‘மேற்குக் கரை’ நெடுக இசுரேலிய வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. தொழுதவர் மீது ராணுவம் வீசிய குண்டுகள் சாதா குண்டல்ல, விஷவாயுக் குண்டுகள். கிழக்கு ஜெருசேலத்தில் வந்தேறி ஒருவன், ஒரு பாலஸ்தீனச் சிறுவனைச் சுட்டுக் கொன்றான்.
ஏப்ரல் 19 அன்று நடத்தப்பட்ட தாக்குதலை ஒட்டி “இசுரேலியக் குடியேற்றக்காரர்கள்” அடுத்த நாள் விடியலிலேயே அவசர அவசரமாகப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார்கள். எங்கே, அல்-அக்சா பகுதிக்கு. தொழுகை நடத்திய சிலரையும் விரட்டினார்கள், எந்த ஒளிவு மறைவுமில்லாமல் பாலஸ்தீனியரை நீக்கி, இசுரேலியரைப் புதிதாகக் குடியேற்றுவதற்காக. இது ‘குடியேற்ற’க் காலனிய வாடிக்கை என்பது உலகறிந்த ரகசியமாகிவிட்டது. காசா, மேற்குக்கரை, கிழக்கு ஜெருசேலம் ஆகிய இடங்களில் வாழும் பாலஸ்தீனியர் (இவர்கள் மொத்த மக்களில் 80% பேர்) இசுரேலின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள். அவர்கள் எங்கே வாழ்கிறார்களோ அங்கே குடியுரிமையும் கிடையாதாம். தங்கள் வாழ்க்கையைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தை ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கவும் முடியாது. மற்ற 20% இசுரேலியக் குடிமக்கள் என்பது பெயரளவுக்கே, அவர்கள் இரண்டாம்தரக் குடிமக்களே; எதையும் இம்மி அளவு நகர்த்தக் கூட அவர்களுக்கு உரிமை இல்லை, அவர்களால் முடியாது.
அண்மையில் இசுரேலியக் ‘குடியேற்றக் காரர்கள்’ தங்களுக்கேயான ‘ஜனநாயகத்தைக்’ காக்கப் போராடினார்கள். சிலருக்கு இதில் குழப்பமும் ஏற்பட்டது. 24 மார்ச், 2023-ல் இதுகுறித்து ஆதாரங்களை எடுத்துக்காட்டி “மக்கள் அதிகாரம்” தளத்தில் இராசவேலின் கட்டுரை வெளியானது; அக்கட்டுரை அமெரிக்க எடுபிடியான இசுரேலின் வலதுசாரி கிரிமினல் நடவடிக்கைகள் அனைத்தையும் விரிவாக அம்பலப் படுத்தித் தெளிவுபடுத்தியது.
இதையும் படியுங்கள்: இஸ்ரேலில் ஜனநாயகத்தைக் காப்பாற்றவே முடியாது ஏன் ? அப்படி ஒரு ஜனநாயகம் அங்கே என்றுமே இருந்ததில்லை!
சுமார் 1,00,000 பேர் நெதன்யாஹூவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ததற்குக் காரணம் உண்டு. நெதன்யாஹூ சீர்திருத்தம் கொண்டுவரக் கூடாது, அவருக்கும் முன்னால் இருந்தது போலவே ‘அடக்குமுறைகள்’ தொடர வேண்டும், பாலஸ்தீனியர்களின் முதுகெலும்பு நிரந்தரமாக முறிக்கப்படவேண்டும் என்பதே உண்மை நோக்கம்.
ஜியோனிச இனவெறி தலைக்கேறி ஆட்டம் போடும் இயக்கத்தின் இலக்கு அதுவே. வந்தேறியவர்கள் நாட்டின் ஆதிமூலச் சொந்தக்காரரான, மண்ணின் மைந்தர்களான, பாலஸ்தீனியர்களை வெளியே விரட்டியடித்து அவர்களை உலகெங்கும் அலையும் நிரந்தர அகதிகளாக்கிவிடுவதே ஜியோனிச வெறி ! (படத்தைப் பார்த்து, தெளிவாக விளங்கிக் கொள்ளுங்கள்.)
இத்தனைக்கொடிய அநியாயமான வன்முறைகளுக்குப் பிறகும் இசுரேலியர் மத்தியில் நியாயக் குரல்கள் ஓங்கி எழவில்லை. இதுமட்டுமல்ல , ஒருவாரத்துக்கு முன்னால் “ஜனநாயகம் எங்கள் உயிர், உயிர் கொடுத்துக் காப்போம்!” என்று கத்துவதற்காகத் திரட்டப்பட்ட கூட்டம் பொசுக்கெனக் காணாமல் போனதெங்கே ? எப்படி ? 2021-ல் காசா பகுதிமீது ரமலான் சமயத்தில் 11 நாள் தொடர்ச்சியாகக் குண்டுவீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. அதுவும் இனவெறித் தாக்குதலே!
இவ்வளவு கிரிமினல் வேலைகளும் திரும்பத் திரும்பக் கண்முன்னே நடக்க ஜனநாயகப் பற்று கொண்ட அமெரிக்க மக்கள் சும்மாவா இருக்கிறார்கள் ? இல்லை, ‘நூர்’ பாலஸ்தீன மக்களுக்காக 60 மாதங்களாகத் தொடர்ந்து போராடி வருகிறார் . அதற்காகவே பால் பல்கலைக் கழகத்தில் ( Paul University ) “எதிர்க் குரலை ” ஒழுங்குபடுத்தி வடிவமைத்துள்ளார்.
ஆயிரக்கணக்கில், நூர் தவிர வேறு பல அமைப்புகளும், இசுரேலுக்கு அமெரிக்கா வாரிவழங்கும் கொழுத்த நிதியை எதிர்த்துப் போராடினாலும், அவை வலுப் பெறவில்லை.
“பாலஸ்தீனியர்களுக்கு எதிரான ‘ஜனநாயகம்தான்’ அமெரிக்க ஜனநாயகமா?” என்ற கேள்விகளை ஓயாமல் எழுப்பும் ஜனநாயகக் குரல்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருக்கின்றன. அவற்றை நாம் கவனிப்போம். அவை இனி பல வடிவங்களில் “பாலஸ்தீனம் தீப்பற்றி எரிவது ஏன் ?” என்ற தலைப்பிலான செய்திகளாக “மக்கள்அதிகாரம் தளத்தில் ” வந்துகொண்டே இருக்கும், கவனியுங்கள்!
ஆதாரம் : Counter Punch.
( வழி : gourilankeshnews.com )
ஆக்கம் : இராசவேல்