
கிமு 482-ல் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தை நிறுவிய ஸ்ரீ ஆதிசங்கரரின் 2,534-வது புனித தினத்தில் காஞ்சி சங்கர மடம் புதிய சங்கராச்சாரி ஒருவரை நியமிப்பதாக அறிவித்துள்ளது. ( சங்கர மடத்தை நிறுவி 2,500 ஆண்டுகளாகிறது என்பதே ஒர் புரட்டு என்பது தனிக்கதை)
மூத்த சங்கராச்சாரியான சந்திரசேகரன், ”மடத்தின் ஸ்ரீ காரியங்களுக்கு காசு இல்லை. மடத்திலிருந்து வெளியாகும் வெளியீடுகளையும், சங்கரர் உருவம் பதித்த படங்கள் போன்றவற்றை காசு கொடுத்து வாங்கி நிதி தாருங்கள்” என்று ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினாராம். ”இப்படித்தான் இருந்தது சங்கர மடத்தின் நிதி நிலைமை. 1000 ஆண்டுகள் பாரம்பர்யம் கொண்டது சங்கர மடம். இந்த மடத்துக்கு விசிட் அடிக்காத ஆட்சியாளர்களோ, பெரும் செல்வந்தர்களோ இல்லை எனும் அளவுக்கு செல்வாக்கு. ஆனால் மடத்தை பணம் கொழிக்கும் தலமாக சந்திரசேகரேந்திரர் மாற்றவில்லை” என்கிறார்கள் ஜெயேந்திரனுக்கு எதிரான பார்ப்பனக் கும்பல்.
சங்கரமடம் உருவான காலத்தில் இருந்து அது மன்னர்களின் மீது அதிகாரம் செலுத்துகின்ற ’ஆதிக்கபுரியாகவும்’ மன்னராட்சிக்குப் பிறகு பிரிட்டன் காலனி ஆதிக்கத்தின் போது பார்ப்பனக் கும்பலின் ஆதிக்கத்தை நிலைநாட்ட வழிகாட்டுகின்ற மடமாகவும், 1947-க்கு முன்னர் இந்திய அரசியலில் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட போதே அதன் மீது கருத்துச் சொல்கின்ற அளவிற்கு செல்வாக்கு கொண்டதாகவுமே செயல்பட்டது.
ஆனால் 90-கள் வரை சங்கர மடத்தின் நிதி நிலைமை சுமாறாகத்தான் இருந்து வந்தது. 90-களில் புதிய தாராளவாதக் கொள்கைகள் அமலாக துவங்கியது முதல் திடீர் பணக்காரர்கள் பலர் உருவாகினர். இப்படி உருவான திடீர் பணக்காரர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும், நீதிபதிகள் முதல் ஐஏஎஸ் ஐபிஎஸ் வரை அதிகாரத்தில் இருந்த பார்ப்பனக் கும்பலுக்கும் இடையில் பல்வேறு காரியங்களை முடித்து தருகின்ற புரோக்கர் மடமாகவே சங்கர மடம் மாறத் துவங்கியது.
இவ்வாறு சங்கர மடத்தை மாற்றியதில் முக்கியப் பங்கு பார்ப்பன பாசிச ஜெயலலிதாவிற்கே தண்ணி காட்டிய ஜெயேந்திரன் என்ற பெயர் கொண்ட சங்கராச்சாரிக்கு உண்டு. அந்த காலகட்டத்தில் தான் தனது திறமையான புரோக்கர்தனங்களை பயன்படுத்திக் கொண்டு பல்லாயிரம் கோடி சொத்துக்களை சங்கரமடம் சேர்க்கத் துவங்கியது.
இன்றைய சங்கரமடத்தில் ஒரு லட்சம் கோடி சொத்துகளுக்கும் அதிகமாகவே புழக்கத்தில் உள்ளது என்கிறார்கள் மடத்தில் பணிபுரியும் ஊழியர்கள். இதில் மடத்தில் செல்வாக்குள்ளவர்கள் பல கோடிகளை கொள்ளையடித்துவிட்டார்களாம். ”ஒரு நாளைக்கு பல கோடி ரூபாய் தினசரிப் புழக்கமாகவே கைகள் மாறுகின்றன. இப்படிப்பட்ட பெருந்தொகையான கோடிகளை விஜயேந்திரர் தம்பி ரகுதான் கையாள்கிறார். தற்போது வரை சங்கர மடம் அவரது அதிகாரத்துக்கும் உட்பட்டது என்கிறார்கள். சங்கர மடத்தின் சொத்துக்களை யார் யாருக்கு எந்தெந்த வகையில் எப்படியெப்படி கொடுப்பது, எந்தெந்த கம்பெனிகளை எந்தெந்த வகையில் ஹேண்ட்லிங் செய்வது என்பதில்தான் பெரும் போட்டியே நிலவுகிறது என்கிறார்கள் மடத்தின் ஊழியர்கள்” என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது.
இப்படி பல்லாயிரம் கோடி சொத்து கொண்ட சங்கர மடத்தின் வாரிசாக ’தத்தியான’ விஜயேந்திரன் நியமிக்கப்பட்ட காலத்தில் இருந்து மனம் வெதும்பிக் கொண்டிருந்த பார்ப்பன கும்பல்களின் தலைமையிலிருந்த இருவர்கள் மத்தியில் புதிய சங்கராச்சாரியாக யாரை கொண்டு வருவது என்பதில் போட்டி நிலவி வந்தது.
தமிழகத்தின் அதிமுகவை இயக்குகின்ற நிழல் அதிகார பீடமான ஆடிட்டர் குருமூர்த்தியும், பாசிச பாஜகவிற்கும் பண முதலைகளுக்கும் லாபி செய்து கொண்டிருக்கும் சுப்பிரமணியசாமி ஆகிய இரண்டு பார்ப்பனர்களுக்கும் இடையில் தான் சங்கர மடத்தின் புதிய சங்கராச்சாரியை கொண்டு வருவதற்கான போட்டி நிலவி வந்தது.
படிக்க:
♠ இந்துமத பண்டிகைகளும், மதவெறி தேசியவாத அரசியலும்!
♠ காஞ்சியில சங்கரரு… தில்லையில தீட்சதரு… || மகஇக பாடல்
இந்தப் போட்டியில் ஆடிட்டர் குருமூர்த்தி வெற்றி பெற்றுள்ளதாகவே தெரிகிறது ஏனென்றால் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சங்கராச்சாரி கும்பகோணம் அருகில் உள்ள வலங்கைமான் என்ற பகுதியை பூர்வீகமாக கொண்டவர்.
இதுதொடர்பாக காஞ்சி சங்கர மடம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்:, ”ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 70-வது பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், புனித அட்சய திருதியை தினத்தில் (ஏப்.30-ம் தேதி, புதன்கிழமை) ஸ்ரீ துட்டு சத்ய வெங்கட சூர்ய சுப்ரமண்ய கணேச சர்மா திராவிட்டுக்கு, காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் உள்ள பஞ்ச கங்கா தீர்த்தத்தில் காலை 6 மணி முதல் 9 மணிக்குள் சந்நியாஸ்ரம தீட்சை அருள உள்ளார்.
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் நிர்மல் மாவட்டம், பசாராவில் உள்ள ஸ்ரீ ஞான சரஸ்வதி தேவஸ்தானத்தில், கர்நாடகாவைச் சேர்ந்த பிரம்மஸ்ரீ சந்துகுட்லு ஹோசமனே ரத்னாகர பட் சர்மாவிடம் (ரிக்வேத சலக் ஷண கனபாடிகள்) ரிக்வேதம் பயின்ற ஸ்ரீ கணேச சர்மா திராவிட், அங்கேயே வேதம் பயிற்றுவித்து வந்துள்ளார். 2006-ம் ஆண்டு வேத கல்வியைத் தொடங்கிய காலத்தில் இருந்தே, ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் பூஜ்ய ஸ்ரீ சங்கராச்சாரியார் சுவாமிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். ரிக் வேதம் தவிர யஜூர்வேதம், சாமவேதம், சதாங்கம், தஷோபநிஷத் படிப்புகளை முடித்த, ஸ்ரீ கணேச சர்மா திராவிட், தற்போது சாஸ்திரக் கல்வியை தொடர்கிறார்”. என்று புதிய சங்கரன் தேர்வுக்கான இலக்கணத்தை அறிவித்துள்ளது.
துறவிகள் என்றால் முனிவர்கள் என்றால் பொருள்களின் மீது பற்றற்றவர்கள் என்பதுதான் ஒரு காலத்தில் சொல்லப்பட்ட கர்ண பரம்பரை கதையாக இருந்தது. ஆனால் ஆண்டவனுக்கும் பக்தர்களுக்கு மத்தியில் புரோக்கர் வேலை செய்து வருகின்ற பார்ப்பன கும்பலில் ஒரு பிரிவினர் மடாதிபதிகளாகவும், கார்ப்பரேட் சாமியார்களாகவும் உருமாறி பல்லாயிரம் கோடி சொத்துக்களுடன் சொகுசு வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர்.
தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள 71-ஆவது பீடாபதியான சங்கராச்சாரி, ஸ்ரீ துட்டு சத்ய வெங்கட சூர்ய சுப்ரமண்ய கணேச சர்மா திராவிட் பார்ப்பதற்கு தெலுங்கு பட ஹீரோவை போல தேஜஸ் ஆக இருப்பதால் சங்கர மடத்திற்கு செல்லும் பெண் பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று நாம் தெரிவிக்கலாம். ஏனென்றால் ஜெயேந்திரன் செய்த பாலியல் சேட்டைகள், சல்லாபங்கள் முதல் தாதா, ரவுடிகளை போல இறங்கி அடித்து வேலை செய்தது வரை அனைத்தையும் தமிழகம் சந்தித்தது தான்.
நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்கும் போது சங்கரமடத்தில் புதிய சங்கராச்சாரி வருவது பற்றி நமக்கு ஏன் கவலை என்று சிலர் கருதலாம். வஃக்பு சட்டத் திருத்தத்தில் இஸ்லாமியர்களுக்கு சொந்தமான அறக்கட்டளைகள் மற்றும் செல்வங்களை நிர்வகிப்பதில் இஸ்லாமியர்களை தவிர பிற மதத்தினரையும் அனுமதிக்கலாம் என்று தெளிவாக பாசிச பாஜக கூறியுள்ள சூழலில் சங்கர மடத்திற்கும் பார்ப்பன கும்பலை தவிர, ’சொல்லிக் கொள்ளப்படும் இந்து மதத்தில்’ வேறு யாரையாவது நியமிக்கலாமே என்று போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலம் பார்ப்பன (இந்து) மதத்தின் யோக்கியதையை அம்பலப்படுத்த முடியும் என்பது தான்.
- பார்த்தசாரதி.
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி
கட்டுரை ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்