கிண்டி கவர்னர் மாளிகையை (ராஜ்பவன்) கையகப்படுத்து!

அதிகாரமற்ற கவர்னர் என்ற ஒரே ஒரு நபருக்காக இத்தனை ஏக்கர் பரப்பளவில் உள்ள ராஜ்பவனை கையகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதுதான்.

கிண்டி கவர்னர் மாளிகையை (ராஜ்பவன்) கையகப்படுத்து!
கவர்னர் ஆர்.என்.ரவியும், கவர்னர் மாளிகையும்…

ட்டக்கூத்தனுக்கு இரட்டைத் தாள்பாள் என்று தமிழகத்தில் ஒரு பழமொழி உள்ளது.

“அக்காலத்தில் அரசி கோபம் கொண்டால் அவளது பிணக்கு நீங்க வேண்டிப் புலவர்களைத் தூது அனுப்புவது மரபு. அதன்படியே மன்னனான குலோத்துங்கன் தன் ஆசானும் அவைக்களப் புலவருமான ஒட்டக்கூத்தரைத் தூதனுப்பினான்.”

ஒட்டக்கூத்தர் அரசியின் அறை வாயிலில் வந்து நின்று, “மென்மையான மலரிலுள்ள தேன்போன்ற இனிமையான பெண்ணே, கதவைத் திறக்கும்படி நான் உன்னை வேண்டத் தேவையில்லை, கதவைத் திறந்து விடு, இல்லாவிடில் ஏறுபோன்ற நடையுடைய வாள்வீரனாகிய குலோத்துங்கன் உன் வாசலுக்கு வந்தால் தாமரை இதழ்போன்ற உனது கைகள் தாமாகவே கதவைத் திறந்துவிடும்” எனும் பொருள்பட,

“நானேயினியுன்னை வேண்டுவதில்லை – நளினமலர்த் தேனே கபாடந் திறந்திடு திறவாவிடிலோ வானேறனைய வாள்விரவிகுலாதிபன் வாசல் வந்தால் தானே திறக்குநின் கையிதழாகிய தாமரையே”

எனும் பாடலைக்கூறவே,பாடலில் இருந்த ஆணவத் தொனியால் மேலும் கோபமுற்ற அரசி கதவின் இன்னொரு தாழ்ப்பாளையும் தாளிட்டுக்கொண்டாள்” என்கிறது ஒட்டக்கூத்தர் பழமொழிக் கதை.

அந்தப் பழமொழிக் கதையை நிரூபிக்கின்ற வகையில் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படாத இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் எடுபிடிகள் அல்லது தரகர்கள் மாநிலங்களுக்கு கவர்னர்களாக நியமிக்கப்பட்ட காலத்திலிருந்து அதிகாரத்தை நிலை நாட்டுவதற்கு இரட்டை தாள்பாள் போடும் முறையை கையாளுகின்றனர்.

நீண்டகால சட்டப் போராட்டத்திற்கு பிறகு கவர்னரின் அதிகாரம் குறித்தும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை நிராகரிக்கின்ற அதிகாரம் கவர்னருக்கு கிடையாது என்பது உச்ச நீதிமன்றத்தினால் நிலைநாட்டப்பட்டது.

சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக்கள் குறித்து முடிவெடுக்க எவ்வளவு காலம் ஆளுநர் எடுத்துக் கொள்ளலாம் என்பதை இந்த தீர்ப்பு வரையறுத்துள்ளது. இதுவே இந்த தீர்ப்பின் முக்கிய அம்சமாகும்.

ஒரு மசோதாவுக்கு குறித்து முடிவெடுக்க எவ்வளவு காலம் ஆளுநர் எடுத்துக் கொள்ளலாம் என்று அரசியல் சாசன சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. எவ்வளவு விரைவில் சாத்தியமோ அவ்வளவு விரைவில்” என்ற வார்த்தைகளே அரசியல் சாசன சட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் ஆளுநர்கள் சில நேரங்களில், குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ‘ காலவரையற்ற’ நேரத்தை எடுத்துக் கொள்கின்றனர்.

படிக்க:

  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் உச்சந்தலையில் சம்மட்டியால் ஓங்கி அடித்த உச்சநீதிமன்றம்!

  அய்யா வைகுண்டருக்கு ஸ்டிக்கர் ஒட்டும் ஆளுநர் இரவி! தமிழ் ஆன்மீக சமூகத்தின் கண்டனம்!

இந்த தீர்ப்பு காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது. சில விவகாரங்களில் ஒரு மாதத்துக்குள்ளும் சில விவகாரங்களில் மூன்று மாதங்களுக்குள்ளும் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறுகிறது. இது தீர்ப்பின் முக்கியமான அம்சமாகும்.

கவர்னரின் அதிகாரம் பறிக்கப்படுவதை கண்டவுடன் தமிழக கவர்னரான ஆர்.என். ரவி தனது அதிகாரத்தை நிலை நாட்ட இரட்டைத் தாள்பாள் முறையை கையாளத் துவங்கினார்.

இந்தத் தீர்ப்பு வந்தவுடன் இந்திய ஒன்றியத்தின் துணை ஜனாதிபதியான ஜெகதீப் தன்கர் என்ற இந்து மதவெறி பிடித்த ஆர்எஸ்எஸ்காரர், ‘நீதிமன்றம் நாடாளுமன்றத்தை விட அதிக அதிகாரம் படைத்தது கிடையாது’ என்று வானத்திற்கும், பூமிக்கும் எகிறிக்குதித்தார்.

தனது அதிகாரத்தை நிலை நாட்டுவதற்கு தமிழகத்தின் ஆளுநராக உள்ள மற்றொரு இந்து மதவெறி பிடித்த ஆர்எஸ்எஸ் காரரான ஆர்.என்.ரவி மூலம் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை கூட்டுவதற்கு முயற்சி செய்தார். அந்த முயற்சி இன்று படுதோல்வியில் முடிந்துள்ளது.

மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படாத இதுபோன்ற கவர்னர் பதவியின் மூலம் மக்களின் வரிப்பணத்தை தின்று கொழுத்துக் கொண்டு வலம் வருகின்ற ஆர்.என். ரவியின் ஆட்டத்திற்கு முடிவு கட்ட வேண்டுமென்றால் உடனடியாக சென்னையில் உள்ள ராஜ்பவனை சட்டமன்ற அலுவலகமாக அறிவித்து கையகப்படுத்த வேண்டும்.

இது ஒன்றும் புதிது கிடையாது. “சுதந்திரத்திற்குப் பிறகு, ராஜ்பவனை ஒட்டிய பெரிய நிலங்கள் பிற பொது நோக்கங்களுக்காக கையகப்படுத்தப்பட்டன. ராஜ்பவனுடன் இடத்தைப் பகிர்ந்து கொள்ளும் இடம் இந்திய தொழில்நுட்ப நிறுவனம், மெட்ராஸ் ((IIT -MADRAS) ஆகும், இதன் 388 ஏக்கர் வளாகம் 1958 இல் பூங்காவிலிருந்து பிரிக்கப்பட்டு, ராஜ்பவன் தோட்டத்தின் கிழக்கு எல்லையை உருவாக்குகிறது. கிண்டி குழந்தைகள் பூங்கா, பாம்பு பூங்கா, அரசியல் தலைவர்களுக்கான பல்வேறு நினைவுச்சின்னங்கள் மற்றும் புற்றுநோய் நிறுவனம் ஆகியவை வடக்கில் பூங்காவின் சிறிய பகுதிகளை எடுத்துக் கொண்டன.

1954 இல் காந்தி நினைவுச்சின்னத்திற்காகவும், 1974 இல் ராஜாஜி நினைவுச்சின்னத்திற்காகவும், 1975 இல் காமராஜ் நினைவுச்சின்னத்திற்காகவும் நிலம் மாற்றப்பட்டது. 1958 இல், கிட்டத்தட்ட 625 ஏக்கர் பூங்காவிற்காக தமிழ்நாடு வனத்துறைக்கு மாற்றப்பட்டது, 1977 இல், தேசிய பூங்காவிற்காக கிட்டத்தட்ட 88 ஏக்கர் வனத்துறைக்கு வழங்கப்பட்டது.

இன்று, கவர்னரின் குடியிருப்பு வளாகம் அருகிலுள்ள மற்ற கட்டிடங்களிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் கவர்னரின் மாளிகை, ஜனாதிபதி தொகுதி மற்றும் பாரதியார் மண்டபம் ஆகியவை உள்ளன, இவை சமீபத்தில் சேர்க்கப்பட்டவை ‘அட் ஹோம்’ மற்றும் பிற அரசு விழாக்கள் நடைபெறும் தெற்கே நன்கு அலங்கரிக்கப்பட்ட ஒரு பெரிய புல்வெளி, கிழக்கு மற்றும் வடக்கே அலங்கார தோட்டங்கள், மேற்கு மற்றும் வடக்கே தோட்டக்கலை மற்றும் மூலிகைத் தோட்டங்கள் ஆகியவை இல்லத்திற்கு ஒரு பசுமையான சூழலை அளிக்கின்றன.

ராஜ் பவன் இன்னும் சில வரலாற்று கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கும் தாயகமாகும். வெள்ளை மாளிகை, தி காட்டேஜ், தி நூக், தி கவர்னர் செயலகம் மற்றும் கவர்னர் வீட்டு அலுவலகம் ஆகியவை சமகால பயன்பாட்டிற்காக புதுப்பிக்கப்பட்ட வரலாற்று கட்டிடங்கள். ராஜ் பவன் கலைமான் உட்பட அரிய வகை தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கும் தாயகமாகும்.

இன்று இருக்கும் ராஜ்பவன், நீண்ட வரலாற்றில் நிகழ்ந்த பல்வேறு சேர்த்தல்கள் மற்றும் மாற்றங்களின் தொகுப்பாகும்.” ராஜ் பவன் குறித்து அரசாங்கத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு தற்போது பயன்படுத்தப்படும் சட்டமன்ற வளாகம் போதுமான அளவிற்கு இல்லை என்பதால், ராஜ்பவன் அமைந்துள்ள இடம் முக்கியமான பகுதியிலும் உள்ளது என்பதால் இதனை கையகப்படுத்தி சட்டமன்ற வளாகமாக அறிவிக்க வேண்டும்.. அதிகாரமற்ற கவர்னர் என்ற ஒரே ஒரு நபருக்காக இத்தனை ஏக்கர் பரப்பளவில் உள்ள ராஜ்பவனை கையகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதுதான்.

கிண்டியில் உள்ள ராஜ்பவன் மட்டுமல்ல கவர்னர்கள் கிழிக்கின்ற கிழிப்பிற்கு கோடை காலத்தில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ள ஊட்டி பங்களாவையும் கையகப்படுத்தி தமிழகத்தில் நீண்ட பாரம்பரியம் உள்ள பழங்குடி மக்களின் வாழ்வை பாதுகாப்பதற்கான ஆணையத்தின் அலுவலகமாக அமைக்க வேண்டும்.

கவர்னர் பதவி என்பது தேவையற்றது என்பதை வலியுறுத்தி சட்ட ரீதியான போராட்டத்தையும், மக்கள் எழுச்சியின் மூலம் தூக்கி எறிகின்ற போராட்டத்தையும் நடத்தி “இரட்டை தாள்பாளை” உடைத்தெறிய வேண்டும்.

  • மருது பாண்டியன்

1 COMMENT

  1. ராஜ்பவன் கவர்னர் வீட்டை தமிழக சட்டமன்றமாக மாற்ற மக்களிடம் பரப்புரை செய்வோம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here