மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குணா மாவட்டத்தைச் சேர்ந்தவர் 25 வயதான தேவா பார்தி. இவருக்கு கடந்த 14 ஆம் தேதி அன்று திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் பொழுது, அதுவும் திருமணம் நடப்பதற்கு சற்று நேரத்திற்கு முன்னதாக போலீசாரால் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இவருடன் இவரது மாமா கங்காராம் -ம் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்த நிலையில் இவர்கள் அழைத்துச் செல்லப்பட்ட சில மணி நேரத்தில் மணமகன் தேவா மாரடைப்பால் இறந்து விட்டார் என்று காவல்துறையிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலையடுத்து தேவா பாரதியின் உறவினர்கள் காவல் நிலையத்திற்கு சென்று பார்த்த பொழுது அங்கு தேவா பார்தி இல்லை. தேவாவை விசாரித்துக் கொண்டிருந்த பொழுது அவருக்கு நெஞ்சுவலி வந்ததாகவும் எனவே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்த பொழுது இறந்து விட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தேவா பார்தி ஆரோக்கியமான உடல்நிலை கொண்ட 25 வயது இளைஞர். அவருக்கு எந்த நோயும் கிடையாது. அவருக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பே இல்லை என்றும் போலீசாரின் சித்திரவதையால் தான் அவர் இறந்து விட்டதாகவும் அதை மறைப்பதற்காக போலீசார் நாடகம் ஆடுவதாகவும் தேவாவின் உறவினர்கள் கூறி ஜூலை 15 அன்று காவல் நிலையத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் தேவா பார்தியின் மணப்பெண்ணும் தேவா பார்தியுடன் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட தேவாவின் மாமாவான கங்காராமின் மனைவியும் தீக்குளித்துள்ளனர். இவர்களை மக்களில் சிலரும் காவலர்களும் தடுத்துள்ளனர். இதில் கங்காராமின் மனைவி தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து, ஜூலை 16, அன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற தேவாவின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரை பார்க்க விடாமல் காவல்துறையினரால் தடுக்கப்பட்டுள்ளனர். எனவே ஆத்திரமடைந்த உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த போலீசார் முயற்சித்துள்ளனர். இதைக்கண்டு ஆத்திரமுற்ற பெண்கள் தங்கள் ஆடைகளை களைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இத்தனை நடந்த பிறகுதான், தற்பொழுது, தேவா பார்தியின் மரணம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தேவாவின் மீதும் அவரது மாமாவின் மீதும் ஏற்கனவே பல திருட்டு வழக்குகள் உள்ளதாகவும் சமீபத்தில் நடந்த ஒரு திருட்டு குறித்து விசாரிப்பதற்காகத் தான் அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றதாகவும் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
படிக்க: லாக்கப் மரணம் – காவல்துறையின் அதிகாரத்திமிர்!
திருமணம் முடிந்து ஒரு சில நாட்களுக்கு பிறகு அவரை அழைத்து சென்று விசாரித்து இருக்கலாம். ஆனால் திருமணம் நடப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக உடனடியாக அழைத்துச் சென்று விசாரிக்க வேண்டிய அளவிற்கு என் தேவை வந்துவிட்டது? குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் காவல்துறை இப்படித்தான் விசாரணைக்கு அழைத்துச் சென்று விசாரிக்கிறதா? இந்திய நாட்டில் கொலை, பாலியல் வன்கொடுமை, நில அபகரிப்பு போன்ற மிகவும் காத்திரமான வழக்குகளில் குற்றம் சட்டப்பட்டுள்ள எத்தனை பேர் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களை எல்லாம் இப்படி காவல்துறை விசாரிக்காது.
பணம், பதவி, சாதிய செல்வாக்கு உள்ளவர்கள் எப்படிப்பட்ட குற்றத்தில் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவதில்லை என்பதுதான் இந்தியாவில் எதார்த்தமாக உள்ளது.
தேவா பார்தி குற்றவாளியா, இல்லையா என்பது இனிமேல் தான் தெரியவர வேண்டும். அப்படி தெரிய வருமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆனால் தேவா பார்தியின் விசயம் இன்னொரு ஜெய் பீம் திரைப்படத்தின் கதையாக இருந்து விடுமோ என்ற அச்சம் காவல்துறையினரை பற்றி நன்கு அறிந்தவர்களின் மனதில் எழாமல் இருக்க வாய்ப்பு இல்லை.
— குமரன்






