சென்னை அருகே, கவரப்பேட்டை ரயில் நிலையத்தில், கடந்த 11ஆம் தேதியன்று, நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் மீது பாக்மதி விரைவு ரயில் மோதிய விபத்தில் 13 பெட்டிகள் சிதறி கவிழ்ந்ததுடன் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த விபத்து நாட்டு மக்களிடையே பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. பாசிச மோடியின் ஆட்சியில் “ரயில் விபத்து என்பது அவ்வப்போது வழக்கமாக நடைபெறுவதுதான்” என்று பெரும்பான்மையான மக்கள் கடந்து செல்லும் நிலை சங்கிகளால் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
2023 ஆம் ஆண்டு ஒரிசா மாநிலம் பாலசோரில் நடந்த ரயில் விபத்தில் 296 பேர் பலியாகினர். 2024 ஆம் ஆண்டில் மேற்கு வங்கம் மாநிலத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் 15 பேர் உயிர் இழந்தனர். இப்படி ரயில் விபத்தில் பலியானவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
கடந்த ஐந்து ஆண்டுகள் மட்டும் 200 ரயில் விபத்துகளில் ஏற்பட்டுள்ளன. இந்த விபத்துகளில் 351 பேர் பலியாகி உள்ளனர். 970 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபரங்கள் அனைத்தும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவேக் பாண்டே என்பவர் எழுப்பிய கேள்விகளுக்கு ரயில்வே துறை வெளியிட்ட புள்ளி விவரங்களில் காணக் கிடைக்கின்றன.
2021 – 22 ஆம் ஆண்டில் ரயில் பாதையை புதுப்பிப்பதற்காக ரூ.1,04,066.92 கோடி ஒதுக்கி செலவு செய்யப்பட வேண்டிய நிலைமையில் ரயில் பாதையை புதுப்பிப்பதற்காக செலவிடப்பட்ட தொகை தொகை வெறும் ரூ.671.92 கோடி மட்டுமே. இது இப்பணிக்கு மொத்தம் தேவைப்படும் தொகையில் வெறும் 0.7 சதவீதம் மட்டுமே என்ற விவரம் சிஏஜி அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
மோடி அரசின் அலட்சியத்தால் அவல நிலையில் இந்திய ரயில்வேத் துறை!
இவ்வளவு குறைவாக ஒதுக்கீடு செய்து பராமரிப்பு பணிகளை செய்வதாலும் பாதுகாப்பு பணியிடங்கள் உட்பட பல்வேறு ரயில்வே பணியிடங்களில் லட்சக்கணக்கான காலியிடங்கள் ஆள் எடுத்து நிரப்பப்படாமல் உள்ளதாலும் ஏராளமான ரயில் விபத்துக்கள் ஏற்படுகின்றன.
ஒவ்வொரு முறை ரயில் விபத்து நடக்கும் பொழுதும் இந்த விபத்திற்கு காரணம் சமூகவிரோதிகளின் சதிதான் என்று சங்கிகள் பேசிக்கொண்டே இருக்கின்றனர். கவரப்பேட்டையில் நிகழ்ந்தது ரயில் விபத்து என்று சொல்வதற்கு மனம் மறுக்கிறது. எதிர்பாராமல் நடப்பதற்கு பெயர்தான் விபத்து.
ஆனால், சாலை விதிகளை மதிக்காமல் சென்றதால், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிதனால், அனுபவமற்ற சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதித்ததால், முறையாக பராமரிப்பு பணிகள் செய்யாமல் வாகனத்தை ஓட்டிக்கொண்டு இருந்ததால், முறையாக பராமரிக்கப்படாத சிக்னல் தாறுமாறாக இயங்கியதால் ஏற்படும் விபத்துகளையும் நாம் விபத்து என்று தான் கூறுகிறோம்.
கோரமண்டல் ரயில் விபத்தும், மேற்கு வங்க உழைக்கும் மக்களும்!
இப்படிப்பட்ட விபத்துகள் நடக்க காரணமாக இருந்தவர்களை குற்றவாளிகள் என்று கூறுகிறோம். அவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் கூறுகிறோம். ஒருவர் செய்யக்கூடாதவைகளை செய்தாலும் குற்றவாளி தான். அதே சமயம், செய்ய வேண்டியவற்றை செய்யாமல் விட்டாலும் அவர் குற்றவாளி தான்.
உயிரியல் ரீதியாக பிறக்காத மோடி, காவல்கார (சௌகிதார்) மோடியின் அரசு, ரயில் பாதை புனரமைப்பிற்குத் தேவையான நிதியை ஒதுக்காதது, காலிப் பணியிடங்களை நிரப்பாதது, கவாச் போன்ற பாதுகாப்பு தொழில்நுட்பத்தை பெயரளவிற்கு புகுத்தி விட்டு ரயில்வே முன்னேற்றிக் கொண்டிருப்பதாக நாடகமாடுவது போன்ற அயோக்கியத்தனங்களை தற்போது செய்து கொண்டிருக்கிறது. எனவே ரயில் விபத்துக்கள் என்பவை விபத்துகளே அல்ல. அவை பாசிச மோடியின் அரசால் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் — படுகொலைகள் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
— குமரன்