வகுப்பறையில் சாணி பூசிய டெல்லி பல்கலைக்கழக முதல்வர்! பதில் சம்பவம் செய்த மாணவர்கள்!

ஆர்.எஸ்.எஸ் தனது கருத்துக்களை பரப்ப, பார்ப்பன பண்பாட்டை நிறுவ அதற்கேற்ற ஆட்களை அதிகார மையங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் அமர்த்தியுள்ளது. குறிப்பாக கல்வி நிறுவனங்களில் நுழைவதன் மூலம்  மாணவர்களிடம் இந்துமத வெறியூட்டுவது பண்பாட்டு ரீதியாக சீரழிக்கும் செயல்களிலும் ஈடுபடுகிறது.

0
வகுப்பறையில் சாணி பூசிய டெல்லி பல்கலைக்கழக முதல்வர்! பதில் சம்பவம் செய்த மாணவர்கள்!
“நீங்கள் ஆராய்ச்சி செய்ய விரும்பினால் அதன் அதை உங்கள் வீட்டிலேயே செய்யுங்கள்”

மாட்டு சாணி என்றாலே நமக்கு ஞாபகத்திற்கு வருவது சங்பரிவார் கும்பல் தான். மாட்டின் மூத்திரத்தை குடிப்பது, சாணியை கரைத்துக் குடிப்பது உடல் முழுவதும் பூசிக்கொண்டு நோய் விரட்டி என சொல்வது என சாணியில் விதவிதமான டிஸ்க்கள் தயாரித்து சாப்பிடும் காட்டுமிராண்டிகள் தான் சங்பரிவார் கும்பல்.

சமீபத்தில் சென்னை ஐஐடியில் தலைவராக இருக்கும் பார்ப்பன காமகோடி மாட்டின் மூத்திரத்தில் ஆன்டி-ஆக்சிடென்ட் இருப்பதாகவும் அது பல்வேறு விதமான நோய்களை குணப்படுத்தும் என்று கூறியது தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காமகோடிக்கு எதிராக கண்டன குரல்களும் வலுவாக இருந்தன. இப்படி எந்த விதமான அறிவியல் ஆதாரங்களும் இல்லாத சாணியை மக்கள் மூளையில் ஏற்ற பார்க்கிறார்கள்.

இப்படியாக அவ்வப்போது படித்த முட்டாள்கள் பாமர மக்களையும் இந்து மதத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் படித்த இளைஞர்களையும் அறிவுக்கு ஒவ்வாத அறிவியலற்ற செய்திகளை பரப்பி அவர்களை முட்டாளாக்குகிறார்கள். அப்படியான சம்பவம்தான் தற்போது டெல்லி பல்கலைக்கழகத்தில் நடந்துள்ளது.

டில்லி பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள லட்சுமிபாய் கல்லூரியின் முதல்வர் பிரதியுஷ் வத்சலா வகுப்பறை சுவர்களில் மாட்டு சாணத்தை பூசிய காணொளி கடந்த ஒரு வாரத்திற்கு முன் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மாட்டு சாணத்தை சுவர்களில் பூசுவதினால் கோடை காலத்தில் வெப்பத்தை தவிர்க்க முடியும் என்று கூறியுள்ளார்.

“பாரம்பரிய இந்திய அறிவை பயன்படுத்தி வெப்ப  கட்டுப்பாட்டை பற்றிய ஆய்வு என்ற தலைப்பிலான  திட்டத்தின் ஒரு பகுதியாக கல்லூரியின் இரண்டாவது மாடி  வகுப்பறைகளில் இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டதாக” இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

“….அதிகரித்து வரும் வெப்பம் குறித்து பல மாணவர்கள் எங்களை அணுகியுள்ளனர். எனவே இந்த  வகுப்பறைகளை குளிர்ச்சியாக்க சில உள்நாட்டு முறைகளை செயல்படுத்தலாம் என்று நாங்கள் நினைத்தோம்” என்று வத்சலா தனது செயலை நியாயப்படுத்தும் விதமா இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறியுள்ளார்.

வகுப்பறைகளில் சாணியை பூசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும்பான்மை மக்களிடையே கடும் எதிர்ப்பை உருவாக்கியது. வகுப்பறையில் சாணி பூசம் வீடியோவை வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்த வத்சலா சி பிளாக்கில் வெப்ப பிரச்சினையை தீர்க்க பழைய முறைகள் பின்பற்றப்படுகின்றன. இங்கு வகுப்புகள் நடத்துபவர்களுக்கு விரைவில் இந்த அறைகள் புதிய வடிவத்தில் வழங்கப்படும். உங்கள் கற்பித்தல் அனுபவத்தை மிகவும் வசதியாக மாற்ற முயற்சிகள் நடந்து வருகின்றன என்று எழுதியுள்ளார். கல்லூரி முதல்வர் வத்சலாவின் இந்த நடவடிக்கையை ஆசிரியர்களின் ஒரு பிரிவினரே விமர்சித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க:

பசுவின் சாணமும் மூத்திரமும் உனக்கு! பசுவின் கறி எனக்கு!

மகா கும்பமேளா: மக்கள் வரிப்பணத்தில் மூடத்தனத்தை வளர்க்கும் பாஜக அரசு!

“அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை தீவிரமாக கவனிக்க வேண்டும். கல்லூரி கவுன்சிலின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் வகுப்பறைகளில் மாற்றங்களை (சாணி பூசூவது) எவ்வாறு தொடங்க முடியும்? கல்லூரி உட்கட்டமைப்பை மேம்படுத்தாமல் இப்படி செய்வது சரி அல்ல” என்று கல்லூரியின் அகாடமிக் கவுன்சில் உறுப்பினரும் (AC) பேராசிரியருமான நீலம் விமர்சித்துள்ளார்.

இதனிடையே இதற்கு எதிர்வினை ஆற்றும் வகையில் டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவரும் இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் NSUI தலைவருமான ரோனக் காத்ரி கல்லூரி முதல்வரின் அலுவலகத்திற்குள் நுழைந்து சுவர்களில் சாணியை பூசினார். காத்ரி கூறுகையில் “நீங்கள் ஆராய்ச்சி செய்ய விரும்பினால் அதன் அதை உங்கள் வீட்டிலேயே செய்யுங்கள்” என்று காட்டமாக தெரிவித்தார்.

“லட்சுமிபாய் கல்லூரியின் முதல்வர் கல்விப் பணிகளுக்காக நியமிக்கப்பட்டார். ஆர்எஸ்எஸ் திட்டத்தை செயல்பட அல்ல. அவரது இந்த நடவடிக்கைகள்  மாணவர்களின் உண்மையான பிரச்சனைகளான உதவித்தொகை, உள்கட்டமைப்பு மற்றும் கல்வி போன்றவற்றிலிருந்து திசை திருப்பும் தெளிவான முயற்சியாகும்.” என்று என் NSUI ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

டெல்லி பல்கலைக்கழக துணைவேந்தர் யோகேஷ் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் “நான் ஒரு நிபுணராக இல்லாததால் அதன்  அறிவியல் அம்சம் குறித்து  கருத்து தெரிவிக்க முடியாது. இந்த பரிசோதனை முக்கியமானதாக இருந்தால் வகுப்பறையில் அதை செய்வதற்கு முன்பு  முதல்வர் வத்சலா தனது வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ பரிசோதனை பரிசோதனை செய்து இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்” என சிங் தி இந்துவிடம் கூறினார்.

“முதல்வர் அன்பாக பேசுகிறார். அடிக்கடி மாணவர்களை சந்திப்பார். இருப்பினும் குடிநீர் பற்றாக்குறை அல்லது வகுப்பறைகளில் மின்விசிறி இல்லாதது போன்ற பிரச்சனைகளுடன் நாங்கள் அவரை அணுகும் போது அவர் செவிசாய்க்கவில்லை அல்லது பல மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மூன்றாம் ஆண்டு பி.காம் மாணவி ஒருவர் கூறினார்.

தி பிரிண்ட் இணையதளத்திடம் மாணவர்கள் கூறுகையில் “வத்சலா சாணியால்  பூசிய வகுப்பறையில் மின்விசிறி வேலை செய்யவில்லை. மாட்டு சாணி தான் இந்த பிரச்சனையை தீர்க்க அவர் எடுத்த வழி” என்று  கூறினர்.

“முதல்வரின் வேலை மாணவர்களின் கவலைகளை கேட்டு தீர்வுகளை கண்டறிவது தான். வகுப்பறைகளில் பரிசோதனைகளை நடத்துவது அல்ல. வகுப்பறையை சாணியால் குளிர்விக்க விரும்பினால் அவரது அலுவலகத்திற்கும் அதிக குளிர்ச்சி தேவைப்படும்” என்று காத்ரி கூறினார். முதல்வர் அலுவலகத்தில் மாட்டுச்சாணியை பூசி அவர் நடத்திய போராட்டம் சமூக ஊடகங்களில் பரவலாக பாராட்டப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ் தனது கருத்துக்களை பரப்ப, பார்ப்பன பண்பாட்டை நிறுவ அதற்கேற்ற ஆட்களை அதிகார மையங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் அமர்த்தியுள்ளது. குறிப்பாக கல்வி நிறுவனங்களில் நுழைவதன் மூலம்  மாணவர்களிடம் இந்துமத வெறியூட்டுவது பண்பாட்டு ரீதியாக சீரழிக்கும் செயல்களிலும் ஈடுபடுகிறது.

டெல்லி பல்கலைக்கழக சம்பவம் போல் மாணவர்களால் பதிலடி கொடுக்கப்படும் போது இவர்களை அடக்கவும், அம்பலப்படுத்தவும் முடியும். டெல்லி மாணவர்களின் இந்த நடவடிக்கை பாராட்டிற்கு உரியது.

  • சுவாதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here