கள்ளக்குறிச்சி கனியமூர் மெட்ரிக் பள்ளியில் நடந்த மாணவி ஶ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு கள்ளக்குறிச்சி, சின்னசேலம் வட்டாரங்களில் உள்ள இளைஞர்கள், மாணவர்கள் தன்னெழுச்சியாக ஒன்று திரண்டு போராடினார்.
ஐந்து நாட்கள் நடந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்ட பள்ளி நிர்வாகம், போலீஸ், அதிகாரிகள் உள்ளடக்கிய கூட்டம் பள்ளி வளாகத்தில் வாகனங்களை தீ வைத்து கொளுத்துவது, பள்ளி கட்டிடங்களை கொளுத்துவது என்று செயல்பட்டனர்.
இதன் விளைவாக மாணவர் – இளைஞர்களின் எழுச்சிமிகு போராட்டம் கொடூரமான முறையில் ஒடுக்கப்பட்டது.
சமூக நலனுக்காக போராட முன் வருகின்ற மாணவர்கள், இளைஞர்கள் மீது பாடம் புகட்டுகின்ற வகையில் மூன்று தனித்தனி எஃப் ஐ ஆர்-கள் மூலம் கடும் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி, கடலூர், வேலூர் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணத்தை ஒட்டி வாட்ஸ் அப்பில் செய்தி பரப்பியவர்கள், போராடாத வீதியில் வருவோர் செல்போரை எல்லாம் கைது செய்த போலீசின் காட்டாச்சி தலை விரித்தாடியது. இதற்கு எதிராக பல்வேறு இயக்கங்கள் போராடியதன் விளைவாக கணிசமான மாணவர்கள், இளைஞர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இதையும் படியுங்கள் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கோரி தடையை மீறி ஆர்ப்பாட்டம்!
ஆனாலும் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட செயலாளர் தோழர் ராமலிங்கம் உள்ளிட்ட 13 பேர் மீது குண்டர் சட்டத்தையும் பிறர் மீது கிரிமினல் வழக்குகளையும் பதிவு செய்து இன்றுவரை சிறையில் அடைத்துள்ளது போலீசு.
இத்தகைய சூழலில் சிறையில் 40 நாட்கள் அடைபட்டு கிடந்த தோழர் ராமச்சந்திரன் நிபந்தனை பிணையில் வெளிவந்தார் அவர் அன்றாடம் நிபந்தனைக்காக கையெழுத்திடுவதற்கு செல்லும்போது நேற்று விபத்தில் அகால மரணம் அடைந்தார்.
போராடும் தருணங்களில் இழப்புகள் தவிர்க்க முடியாது.
சிறை கொடுமைகளையும், சித்திரவதைகளையும் எதிர்கொண்டு தான் நியாயத்திற்கான போரில் நாம் வெல்ல முடியும் என்பதை தோழர் ராமச்சந்திரனின் திடீர் மரணம் நமக்கு உணர்த்துகிறது.
- திருச்செங்கோடன்
Need for justice