ந்தியாவில் வகுப்புவாத – கார்ப்பரேட் நச்சுக் கூட்டணி, தீவிரமாக இயங்கி வருவதை நாம் பல உதாரணங்களில் பார்த்து வருகிறோம். ஒன்றுக்கொன்று நேரடியாக தொடர்பில்லாத இரண்டு செய்திகளை எடுத்துக் கொண்டு இந்த நிலைமையை பற்றி ஆய்வு செய்வோம்.

செய்தி ஒன்று: 

இது, நம்மை ஒத்த ‘பெரும்பான்மைவாத’ அரசியலின் வெறியாட்டத்துக்கு பின், மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கும் இலங்கையில் இருந்து வந்தது. இலங்கையின் மின்சார வாரிய தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ சில நாட்களுக்கு முன்பு பேசும் போது, இலங்கையின் மன்னார் பகுதியில் இரண்டு காற்றாலை மின் உற்பத்தி மையத்திற்கான ஒப்பந்தம் அதானிக்கு தரப்படுவதற்காக, அந்த நாட்டின் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே மூலமாக அழுத்தம் தரப்பட்டதாகவும், அதற்கு இந்திய பிரதமர் மோடியின் விருப்பமே காரணம் என்றும் கூறியிருந்தார். அது ஒரு வீடியோவாக வெளியானது. அவர் மிக மிக இயல்பாக பேசியிருந்தார். ஆனால் இந்த உரை, இந்தியாவில் பரவிய பிறகு அவசர அவசரமாக தனது கருத்துக்கு மறுப்பு தெரிவித்த பெர்டினாண்டோ, பதவியில் இருந்து ராஜினாமாவும் செய்துவிட்டார்.

செய்தி இரண்டு:

சில நாட்கள் முன், பாஜக தனது செய்தித் தொடர்பா ளர்களை நீக்கிவிட்டு, செய்தி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது. அதனை கீழ்க்காணும் தலைப்பில் நையாண்டி செய்தது டெலிகிராப் ஆங்கில இதழ். “உஸ்ஸ்… உங்களுக்கு தெரியுமா?, பாஜக அனைத்து மதங்களையும் மதிக்கிறது. எந்த மதத்தையும் சேர்ந்த எந்த மத பெரியவர்களையும் அவமதிப்பதை பாஜக கடுமையாக கண்டிக்கிறது. எந்த மதத்தை யும், பிரிவையும் அவமதிக்கும் எந்த தத்துவத்தையும் பாஜக கடுமையாக எதிர்க்கிறது. இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரும் எந்த மதத்தையும் விரும்பி பின்பற்றுவதற்கான உரிமையை வழங்குவதுடன், ஒவ்வொரு மதத்தையும் உயர்வாக மதிக்கிறது இந்திய அரசமைப்பு சட்டம்” இந்த ராஜ ரகசியத்தை வெளியிட்ட நபர் யார் தெரியுமா? மோடி அல்ல, அமித் ஷா அல்ல. முகம் தெரியாத ஒரு பாஜக தலைவர்.” இதுதான் அந்த முகப்பு பக்கம் வெளியிட்ட செய்தி. பாஜகவின் நடவடிக்கைகளுக்கு நேர்மாறாக இருக்கும் இந்த அறிக்கை, உலக நாடுகளை சமாதானப்படுத்துவதற்காக வெளியிடப்பட்டது. பாஜக செய்தித் தொடர்பாளர்கள் நூபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரின் பேச்சுக்கள் சமூக ஊடகங்களில் வெளியான பிறகு, கத்தார் நாடு முதலில் தனது கோபத்தை வெளிப்படுத்தியது; அதைத் தொடர்ந்து சவூதி அரேபியா, ஈரான், மாலத் தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுடன் கூடவே இஸ்லாமிய நாடுகளின் அமைப்பான இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பும் அதிருப்தியை வெளியிட்டன. இது பாஜகவிற்கு அழுத்தத்தை உருவாக்கியது.


இதையும் படியுங்கள்: நுபுர் சர்மாவுக்கு ஒரு நீதி! தீஸ்தாவுக்கு ஒரு நீதி!. இதுதாண்டா பார்ப்பன மனுநீதி!


எது அழுத்துகிறது?

மேலே குறிப்பிட்ட வளைகுடா – அரபு நாடுகளுடன் இந்தியா மேற்கொள்ளும் வர்த்தகத்தின் மதிப்பு ஆண்டுக்கு ரூ.11.5 லட்சம் கோடிகளாகும். அதில் இறக்குமதி மட்டுமே ரூ.8 லட்சம் கோடி மதிப்பில் நடக்கிறது. இது அல்லாமல், இந்தியாவில் இருந்து வளைகுடா நாடுகளில் மட்டும் 80 லட்சத்திற்கும் அதிகமானோர் பணியாற்றுகிறார்கள். அவர்கள் ஈட்டி அனுப்பும் அந்நிய செலாவணி, அமெரிக்காவில் இருந்து வருவதை விட வும் ஒரு மடங்கு அதிகம். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து ரூ.3 லட்சம் கோடியும், சவூதி அரேபியாவில் இருந்து ரூ. 1 லட்சம் கோடியும் இந்தியாவிற்கு அந்நிய முதலீடு வந்துள்ளது. இவை எல்லாவற்றோடும் சேர்த்து கவனிக்க வேண்டிய இன்னொரு செய்தி, பேச்சுவார்த்தையில் உள்ள ஒப்பந்தங்கள். அபுதாபியை சேர்ந்த இண்டர் நேசனல் ஹோல்டிங் நிறுவனம் ரூ.15,400 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டை அதானியின் 3 நிறுவனங்களில் மேற்கொள்ள உள்ளது. சவூதி அராம்கோ உடன் அம்பானியால் ஏற்படுத்த முடியாத ஒப்பந்தத்தை சாத்தியமாக்குவதற்கான அதானியின் முயற்சிகள் நடக்கின்றன.

கூட்டுக் களவாணிகள்

அரசாங்கத்தில் இருக்கும் மிகப்பெரும் கட்சியை, சில தனியார் நிறுவனங்களுடைய நலன் சார்ந்த கவலைகள் இத்தனை அழுத்துமா என்றால், ஆம் என்பது தான் பதில். மோடியின் பிரதான கவலை அதுதான். அவர் தனது முதல் ஆட்சிக் காலத்தில் மேற்கொண்ட 41 வெளிநாட்டு பயணங்களில் 52 நாடுகளுக்கு சென்றார். 165 நாட்கள் அந்த நாடுகளில் செலவிட்டார். அந்த பயணங்களில் அவரோடு சென்ற பல்வேறு முதலாளிகளில் மிக முக்கியமானவர் கெளதம் அதானி. இந்த பயணங்கள் பல கோடி மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தங்களை பெறுவதற்காக பயன்படுத்தப்பட்டன. அதில் சுமார் 13 வர்த்தக ஒப்பந்தங்களை அதானி மட்டும் பெற முடிந்தது. ஜப்பான், ரஷ்யா, சுவீடன், இஸ்ரேல், மொசாம்பிக், மலேசியா, ஈரான், ஓமன், வங்கதேசம் மட்டுமல்லாது பாகிஸ்தான், சீனா உள்ளிட்டு பல நாடுகளுடன் இந்த ஒப்பந்தங்கள் போடப் பட்டன.இந்த கூட்டுக்களவாணித்தனம் இன்னும் வலுப்பட்டே வருகிறது.

நூபுர் சர்மாவின் கருத்திற்கு எதிராக இஸ்லாமியர்களின் கண்டனப் போராட்டம் நடந்தது. அதற்கு பலிவாங்கும் நோக்கோடு அரசு இயந்திரங்கள் முடுக்கிவிடப்பட்டன. முகமது ஜாவேத் என்ற உள்ளூர் தலைவரின் வீடு, புல்டோசர்களைக் கொண்டு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. உண்மையில் அந்த வீடு அவருடைய மனைவிக்கு சொந்தமானது. ஆனால், கணவரின் பெயரில் ‘அறிவிக்கை’ வழங்கினார்கள். இந்த இடிப்புக்காக எந்த சட்ட நடைமுறையையும் பின்பற்றவில்லை. ஆம், வீடு இடிக்கப்பட்டது, சட்டத்தின் ஆட்சியின் மீதான நம்பிக்கையும் நொறுக்கப்பட்டது. நீதியை நிலைநாட்டவேண்டிய நீதிமன்றங்களும், அரசமைப்புச் சட்டப்படி நடக்க வேண்டிய அரசாங்க அமைப்புக்களும் கேலிக்குரிய விதத்தில் மாற்றப்பட்டுள்ளன. கடந்த காலங்களில், ஊழல் முறைகேடுகளை வெளிப்படுத்தும் ‘போராளிகளாக’, ‘மனித நேயத்தின் தூதுவர்களாக’, ‘எதேச்சதிகாரத்தின் எதிரிகளாக’ தங்களை காட்டிக்கொண்டு, சுழன்று சுழன்று உழைத்த ‘ஊடக முதலாளிகள்’ இப்போதெல்லாம் பெட்டிப் பாம்பாக அடங்கிவிட்டார்கள்.அதற்கு மிக முக்கியமான காரணம், இந்திய ஊடகங்கள் பெருமளவில் கார்ப்பரேட் மயமாக மாறியிருப்பதும் ஆகும். மார்க்சிஸ்ட் கட்சி யின், அரசியல் தீர்மானம் சுட்டிக்காட்டுகிறபடியே ‘வகுப்புவாத-கார்ப்பரேட்’ இடையிலான நச்சுக் கூட்டணி வலுவாக இருக்கிறது. எனவே அவர்கள் வகுப்புவாத பிரச்சாரத்திற்கு தூபம் போட்டு வலுப்படுத்துகிறார்கள்,அரசின் கூட்டுக் களவாணித் தனங்களையும் மறைக்கிறார்கள்.


இதையும் படியுங்கள்: நெருங்குகிறது காவி புல்டோசர்! | மக்கள் அதிகாரம் பத்திரிக்கைச் செய்தி


 

உற்பத்தியின் ஒரு பகுதி

சர்வதேச அரங்கில், மோடி அரசாங்கம் அணிந்து கொண்டிருக்கும் முகமூடி, இந்திய அரங்கில் தேவைப்படவில்லை. உள்ளிருக்கும் எதிரிகளாக கட்டமைத்திருக்கும் முஸ்லிம் சிறுபான்மை மதத்தினரை ஆத்திரமூட்டும் விதத்தில் பேசி, அவர்களை மதமாக திரளச் செய்திருப்பது உத்தியின் ஒரு பகுதியாக இருக்கிறது. மிகவும் நியாயமான போராட்ட எழுச்சியாக இருப்பினும், அது பெரும்பாலும் வலதுசாரித் தளத்திலேயே இருக்கிறது. வேறு எந்த மைய நீரோட்ட முழக்கத்தோடும் அது இணைக்கப்படவில்லை. எனவே, களத் திற்கு முஸ்லிம்கள் மட்டும் வந்திருக்கிறார்கள். எதிரே அரசு நிற்கிறது. அது மதச்சார்பற்ற, அனைவருக்குமான அரசாக இல்லை மாறாக இந்துவெறி அரசாக செயல்படுகிறது. அதன் மூலம் 80% மக்களை 20% மக்களுக்கு எதிராக நிறுத்தும் உத்தி வலுப்படுகிறது. இந்த செயல்திட்டத்தை உள்நாட்டு கார்ப்பரேட்டுகளும் முழுமையாக ஆதரிக்கிறார்கள். அவர்களின் உள்நாட்டு மற்றும் சர்வதேச நலன்களை மோடி பாதுகாத்து நிற்கிறார்.

ஒற்றுமையால் வீழ்த்துவோம்

இந்தியாவில் வகுப்புவாதச் செயல்பாடுகள் தனியாகவும், கார்ப்பரேட் செயல் திட்டம் தனியாகவும் முன்னெடுக்கப்படவில்லை என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மிகச் சரியான வரையறுப்பே இந்த சூழலை எதிர்கொள்வதற்கான வழிகாட்டி ஆகும். ‘புல்டோசர்’ வடிவம் எடுத்திருக்கும் இந்த ஆட்சிக்கு ஒரு தரப்பில் இருந்து மட்டும் எதிர்ப்பினை வலுப்படுத்த முடியாது. ஆர்எஸ்எஸ் – பாஜக புல்டோசர் வெறுப்பு பேச்சுக்களை முன்னெடுக்கிறது. அந்த புல்டோசர் மக்களை பிளக்கிறது. அதே புல்டோசர் முஸ்லிம்களின் வீடுகளை இடிக்கிறது. அதே புல்டோசர்தான் ஏழைகளைச் சுரண்டுகிறது. பொதுச் சொத்துக்களை விற்கிறது. மாநில உரிமைகளை நசுக்குகிறது. பாலின சமத்துவத்தை சிதைப்பதுடன், சாதி ஒடுக்குமுறைகளுக்கு ஆதரவாக நிற்கிறது. அரசமைப்பின் அடித்தளத்தை சீரழித்து, நவீன இந்தியாவை நாசமாக்கப் பார்க்கிறது. இதனை எதிர் கொள்வதற்கு பரந்துபட்ட மக்கள் ஒற்றுமை தேவை. இந்திய அரசமைப்பை பாதுகாப்பதற்கான ஒற்றுமை. வகுப்புவாத-கார்ப்பரேட் நச்சுக் கூட்டணியை உணர்ந்த ஒற்றுமை. சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டக் களத்தில் அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்கவும், மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டக் களத்தில், கார்ப்பரேட் கூட்டுக் களவாணிப் போக்கிற்கு எதிராகவும் உருவான பரந்துபட்ட ஒற்றுமை–என்ன செய்தது என்பதை மறந்துவிட முடியுமா?

  • இரா.சிந்தன்

நன்றி: தீக்கதிர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here