சாதி ஆதிக்க வெறியர்கள்+ ஆணாதிக்க வெறியர்கள் கூடாரமே பாஜக என்பது மீண்டும் ஒரு முறை புதுச்சேரியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் பெண் அமைச்சராக இருந்த  தலித் சமூகத்தை சார்ந்த அமைச்சர் சந்திர பிரியங்கா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரியில் ஆளும் கட்சியாக இருக்கும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி, தற்போதைய முதல்வர் என்.ரங்கசாமியால் 2011 பிப்ரவரி 7 ஆம் நாள் தொடங்கப்பட்டது. என்.ரங்கசாமி, இந்தியத் தேசிய காங்கிரஸில் இருந்து வெளியேறி தனி கட்சியை உருவாக்கினார். அதற்கு அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் என்று பெயரிட்டார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டு சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை கைப்பற்றினார். ஒன்றிய  அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பதால் புதுச்சேரி அரசியல் எப்போதும் தனித்தன்மை வாய்ந்ததாகவே இருந்தது.

புதுச்சேரி: 'தலித்' அமைச்சருக்கே நிகழ்ந்த கொடூரம்!
என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியுடன் மோடி

தற்போது நடைபெற்று வரும் பாஜக கூட்டணி ஆட்சி எப்படிப்பட்டது என்பதை அம்பலப்படுத்தும் வகையில் சந்திர பிரியங்கா வெளியிட்டுள்ள அறிக்கை முக்கியத்துவம் உடையது. பாரதிய ஜனதா கட்சி ஆணாதிக்க வக்கிரமும், தலித்துகள் மீதான இழிவான கண்ணோட்டத்தையும் கொண்டது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது அவரின் அறிக்கை. நாட்டின் முதன்மை உறுப்பினர் என்று கருதப்படுகின்ற ஜனாதிபதி திரௌபதி முர்மு பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருவதை நாம் அறிவோம்.

நாம் அனைவரும் இந்துக்கள் என்ற போர்வையில் பார்ப்பன கும்பலின் மேலாதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதற்கு பார்ப்பனரல்லாத வைசிய, சத்திரிய, சூத்திர, பஞ்சம சாதிகளை தனது அடிமைகளாக வைத்துக் கொண்டு மனுதர்ம  ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும், பாரதிய ஜனதா கட்சி, புதுச்சேரியில் மட்டுமின்றி இந்தியாவிலிருந்து தூக்கி எறியப்பட வேண்டிய கொடூரமான, பாசிச பயங்கரவாத அமைப்பாகும் என்பதை சந்திர பிரியங்கா ராஜினாமா நிரூபித்துள்ளது.

ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து முன்னேறுவது சமூக அங்கீகாரத்தையும் கௌரவத்தையும் பெறுவது என்பது நிலவுகின்ற சமூக சூழலில் குதிரைக் கொம்பாகும். பல்வேறு தடைகளை மீறி அதுவும் ஒரு பெண்ணாக அரசியலில் வளர்ச்சி அடைந்து அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பிறகு ஆணாதிக்க வக்கிரங்களும் தலித் என்பதால் இழிவுபடுத்தப்படுவதையும் சகித்துக் கொள்ள முடியாமல் அவர் வெளியிட்ட ராஜினாமா அறிக்கை இதுதான்.

தமிழிசை சவுந்திரராஜனுடன் சந்திர பிரியங்கா

அதில் கூறியிருப்பதாவது: “என்னைச் சுற்றி பின்னப்பட்டுள்ள வலையில் சிக்கியுள்ள நிலையில் நான் இக்கடிதத்தினை எழுதுகிறேன். ஒரு சட்டப்பேரவை உறுப்பினராக மாநில அமைச்சராக என் பணியினை மனத் திருப்தியுடனும் மக்களின் ஆதரவுடனும் இந்த நிமிடம் வரை ஓயாமல் செய்து வருகிறேன். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து பெண்கள் அரசியலுக்கு வந்தால் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் என பொதுவாக கூறுவார்கள். ஆனால் கடின உழைப்பும், மன தைரியமும் இருந்தால் இதைப் பற்றி கவலைப்படாமல் களத்தில் நீந்தலாம் என்பதற்கான பல முன்னுதாரணங்கள் வரலாற்றில் உள்ளதைப் பார்த்து களமிறங்கி கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி மக்களுக்காக இரவு பகலென ஓடி ஓடி உழைத்து வருகிறேன். மக்கள் செல்வாக்கு மூலம் மன்றம் நுழைந்தாலும் சூழ்ச்சி அரசியலிலும், பணம் என்ற பெரிய பூதத்தின் முன்னும் போராடுவது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்ந்து கொண்டேன்.

தலித், பெண் என இரு பெருமைகளோடு இருந்த எனக்கு அதுதான் மற்றவர்களின் உறுத்தல் என்பது தெரியாமல் போனது. தொடர்ந்து ஜாதிய ரீதியிலும் பாலின ரீதியிலும் தாக்குதலுக்கு உள்ளாவதாக உணர்ந்தேன். சொந்தப் பிரச்சினைகளை ஆணாதிக்க கும்பல் கையில் எடுத்து காய் நகர்த்துதல் நாகரீகமல்ல.. ஆனால் தொடர்ந்து குறிவைக்கப்பட்டேன்.. ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக்கொள்ள இயலாதல்லவா.?

அமைச்சராக என் செயல்பாடுகள் குறித்து கண் மூடித்தனமாக விமர்சனம் செய்பவர்களுக்கு நான் அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் என் துறைகளில் என்னென்ன மாற்றங்கள் முன்னேற்றங்கள் செய்துள்ளேன் என்பதை விரைவில் பட்டியலாக சமர்ப்பிக்கிறேன் என உறுதியளிக்கிறேன்.. சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த மக்களுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன்.. ஆனால் ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி அமைச்சராக நீடிக்க இயலாது என்பதை உணர்ந்து எனது அமைச்சர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன்.

இதற்காக எனது தொகுதி மக்களிடம் நான் மனமார்ந்த மன்னிப்பினை கேட்டுக்கொள்கிறேன்.. மேலும் என் மக்களுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினராக என் பணியினை தொடர்ந்து ஆற்றுவேன் என உறுதி அளிக்கிறேன்.. எனக்கு இப்பதவியினைக் கொடுத்த முதல்வருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..

மேலும் அவருக்கு எனது ஒரு தாழ்மையான வேண்டுகோளை முன் வைக்கிறேன்.. புதுச்சேரியில் பெரும்பான்மையாக உள்ள இரு சமூகங்கள் வன்னியர் மற்றும் தலித். இச் சமூகங்களில் இருந்து வந்துள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் தம் மக்களுக்காக அயராது பாடுபட்டு வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்:

அச்சமூகங்கள் மேலும் மேம்பட காழ்ப்புணர்ச்சியில்லாத அரசியலை உறுதி செய்ய காலியாகும் இந்த அமைச்சர் பதவியை வன்னியர், தலித் அல்லது சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு அளித்து நியாயம் செய்ய வேண்டும்.. மக்கள் பின்புலம் இல்லாவிட்டாலும் பணத் திமிரினாலும், அதிகார மட்டத்தில் உள்ள செல்வாக்கினாலும் பதவிக்கு வந்துவிட துடிப்பவர்களுக்கு இப்பதவியினை கொடுத்து பெரும்பான்மையாக உள்ள வன்னியர், தலித் மக்களுக்கு துரோகம் செய்ய வேண்டாம்.

எனக்கு வாக்களித்து என்னை சட்டமன்ற உறுப்பினர் ஆக்கிய அரசுக்கு முழு ஆதரவு அளித்து வரும் என் மக்களுக்கு எவ்வித இடைஞ்சலும் அளிக்காமல் தாழ்த்தப்பட்ட தொகுதியான என் நெடுங்காடு தொகுதிக்கு மக்கள் நலத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டுகிறேன்.. இதுநாள் வரையில் அமைச்சர் பணியினை திறம்பட செய்வதற்கு உறுதுணையாக இருந்த அரசு அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும், எனக்கு உறுதுணையாக இருக்கும் எனது தொகுதி மக்களுக்கும், என் நலன் விரும்பிகளுக்கும் குறிப்பாக என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து அம்மாக்கள், சகோதரிகள், தோழிகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை இரு கரம் கூப்பி தெரிவித்துக் கொள்கிறேன்.

இறுதியாக, பெண்களுக்கான முன்னுரிமை, அதிகாரத்தில் பங்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு என மேடைகளில் மட்டுமே முழங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்ளவும் விரும்புகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த ராஜினாமா கடிதமே பாஜகவின் யோக்கியதையை நிரூபிக்கிறது என்பதால் கூடுதலாக சொல்வதற்கு எதுவும் இல்லை.

  • கணேசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here