டந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச பாஜக அறுதிப்பெரும்பான்மையை இழந்து கூட்டணி கட்சிகளையே நம்பி ஆட்சி அமைக்கிறது. இந்த தேர்தல் பாசிஸ்டுகளுக்கு குறைந்தபட்ச பாடம் புகட்டி உள்ளது எனலாம்.

இந்த தேர்தலில் தோற்போம் என்று தெரிந்தே பாஜக கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெறும் என்ற பொய்யான பிம்பத்தை மோடியின் ஆதரவு மீடியாக்கள் மூலம் பாசிச பாஜக பரப்பியது. பாஜக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றதற்கு இதுவும் ஒரு காரணம் எனலாம்.

பாஜக கூட்டணியின் வெற்றிக்கு தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, சிறப்பு புலனாய்வு துறை, வருமானவரித்துறை உள்ளிட்டவற்றை மோடி தனது பாசிச நோக்கத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்தியதே வெற்றிக்கு முக்கிய காரணமாய் அமைந்துள்ளது. குறிப்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ததன் மூலம் டெல்லியில் 7 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது.

அதேபோல் ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரணை கைது செய்ததன் மூலம் அங்கு எட்டு தொகுதிகளை கைப்பற்றியுள்ளது பாரதிய ஜனதா கட்சி. இப்படி குறுக்கு வழியில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தாலும் கூட, பாஜக தனது அரசியல் தோல்வியை மறைக்க முடியாது.

80 நாடாளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மிகப்பெரிய மாநிலமாக உத்தர பிரதேசம் உள்ளது. இந்த மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் என்ற பாஜக சாமியார் ஆட்சி செய்கிறார். இந்த மாநிலமே பாஜகவுக்கு அதிகமான எம்பிக்களை வழங்குகிறது. இதில் உள்ள ஒரு தொகுதி தான் வாரணாசி.

2014 ஆம் ஆண்டு முதன்முறையாக வாரணாசி தொகுதி மூலம் எம்பி கணக்கை துவங்கிய பிரதமர் மோடி, 2019 ஆம் ஆண்டும், தற்போது 2024 ஆம் ஆண்டு என மூன்று முறை வெற்றி பெற்றுள்ளார். இதில் ஒரு முறை அரவிந்த் கெஜ்ரிவாலையும் இரண்டு முறை அஜய் ராய் என்ற காங்கிரஸ் தலைவரையும் எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த இரண்டு முறை வாரணாசி தொகுதியில் மோடி பெற்ற வெற்றிக்கும் இந்த முறை பெற்ற வெற்றிக்கும் பாரிய வேறுபாடு உள்ளது. தன்னை பரமாத்மா என்றும் கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டவன் என்றும் நான் பயோலாஜிக்கலாக பிறக்கவில்லை என்றும் பிதற்றிய மோடி இந்த முறை வாரணாசியில் இடறி விழுந்துள்ளார்.

2014ல் 3,72,000 வாக்குகள் வித்தியாசத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்தார் மோடி. 2019 ஆம் ஆண்டில் அதே வாரணாசி தொகுதியில் 6,74,000 வாக்குகளை பெற்றார் இது எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை விட 4 லட்சத்து 79 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் இருந்தது.

ஆனால் இந்த நாடாளுமன்ற தேர்தலோ மோடிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கோடி மீடியாக்களாலும் சங் பரிவார் கும்பலாலும் உலக தலைவர் என போற்றப்படும் மோடி தனது சொந்த தொகுதியில் மக்கள் செல்வாக்கை இழந்துள்ளார். இந்த முறை அஜய் ராயை விட வெறும் 1,52,513 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் மிகக்குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே மோடி வென்றிருக்கிறார்.

படிக்க:

 பத்திரிக்கைச் செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் முடிவு!

 தேர்தல் கருத்துக்கணிப்புகள் என்ற பெயரில் மோடிக்கு சொம்படித்த கோடி மீடியாக்களுக்கு செருப்படி!

வாரணாசி தொகுதியில் மோடியின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் என்பதையே இது காட்டுகிறது. முதல் இரண்டு வாக்கு எண்ணிக்கையிலும் மோடி பின்னடைவை சந்தித்தார். இது பாஜகவினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.

பிரதமர் வேட்பாளர் ஆன மோடியின் தார்மீக தொகுதியாக வாரணாசி பார்க்கப்படுகிறது. ஆனால் வாரணாசியின் வளர்ச்சியை மேம்படுத்தாமல் வெறும் மதப் பிரிவினை அரசியலை மட்டும் பேசி வரும் மோடியை மக்கள் புறக்கணிக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்துக்களால் புனித நதியாக பார்க்கப்படும் கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்காக கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் வாக்குறுதி கொடுத்தார் மோடி. நமாமி கங்கை திட்டத்திற்காக கடந்த 2019, 2020 ஆம் ஆண்டு வரை 20,000 கோடி ரூபாய் செலவழிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் கங்கை தூய்மை அடையவில்லை.

இந்துமத சடங்கு என்ற பெயரில் இறந்தவர்கள் பிணங்களை பாதி இழந்த நிலையிலேயே கங்கையில் வீசுவதும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தொழிற்சாலை கழிவுகள் கங்கையில் கலப்பதும், புனித நதி என்று நீராட செல்லும் பக்தர்கள் தங்களது உடைகளை கங்கையில் வீசி எறிவதும் என கங்கை, மக்கள் பயன்படுத்த தகுதியற்ற நதியாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால்(CPCB) அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தூய்மைப்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட 20 ஆயிரம் கோடியும் என்ன ஆனது என்று தெரியவில்லை. மோடி கொடுத்த வாக்குறுதிகள் இந்தியா முழுவதும் எப்படி செயல்படுத்தப்படவில்லையோ அது போல வாரணாசியிலேயும் செயல்படுத்தப்படவில்லை. இதற்கு மாறாக கார்ப்பரேட்டுகளுக்கு நலன் பயக்கும் திட்டங்களை வாரணாசியில் தொடங்கி வைத்துள்ளார். கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சியைத் தான் மோடி வாரணாசியின் வளர்ச்சி என்கிறார்.

அந்த அளவுக்கு ஒன்றும் தெரியாத முட்டாள்கள் இல்லை என்று மோடிக்கு தனது ஓட்டின் மூலம் பதில் அளித்துள்ளார்கள் வாரணாசி மக்கள். வெறும் மதவாத அரசியலை மட்டும் பேசியே ஓட்டை வாங்கி விடலாம் என்று நினைத்த மோடிக்கு வாரணாசி மக்கள் பாடம் புகட்டி உள்ளனர்.

மோடியை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரசின் அஜய் ராய் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய போது பெரும் வேலையில்லாத் திண்டாட்டம் இளைஞர்களின் கனவுகளை சிதைக்கும் அதே வேளையில் பணவீக்கம் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் எதிர்கொள்ளும் சவால்களை அதிகப்படுத்துகிறது என்று கூறினார்.

மேலும் பேசிய அஜய் ராய் “கடந்த 2014இல் வாரணாசியில் மோடி போட்டியிட முடிவு செய்த போது இப்பகுதியில் வளர்ச்சிக்கான நம்பிக்கையை உள்ளூர் மக்களிடையே ஏற்படுத்தியது. ஆனால் காசியின் கலாச்சாரம் சிதைந்து அது மக்களின் எதிர்பார்ப்புகளை ஏமாற்றி வருகிறது என்று ராய் கூறுகிறார். அவர் மேலும் குறிப்பிடுகையில் கடந்த தசாப்தத்தில் வாரணாசியைப் பொறுத்தவரை மருத்துவம் அல்லது கல்வித்துறையில் குறிப்பிட்ட தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்றும் மருத்துவமனைகளின் நிலைமை பரிதாபமாக உள்ளது என்றும் வாரணாசி பிரதமரின் தொகுதியாக இருந்தாலும் புதிய கல்வி நிறுவனங்கள் எதுவும் நிறுவப்படவில்லை என்றும் கூறினார்.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்தாலும் சொந்தத் தொகுதியிலேயே ஊடகங்களாலும் சங்கிகளின் ஐ டி விங்குகளாலும் ஊதிப் பெருக்கப்பட்ட மோடியின் பிம்பத்தை வாரணாசி மக்கள சுக்குனூறாய் உடைத்தெறிந்துள்ளனர். இது மத வெறுப்பை உமிழும் சங்பரிவார் கும்பல்களுக்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கை.

வாரணாசி தொகுதியில் பெரும்பான்மை இந்துக்களால் புறக்கணிக்கப்பட்ட மோடியையும் சங் பரிவார் கும்பலையும் இந்தியாவே புறக்கணிக்கும் வரை தெருவிலே நம் போராட்டத்தை தொடருவோம்.

  • நந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here