ரஷ்யாவை சுற்றி வளைத்து அடக்கி ஒடுக்குகின்ற நோக்கத்துடன் NATO மூலம் அமெரிக்கா, ரஷ்யாவின் மீது தாக்குதலை தொடங்கியது.. இந்த முறை அமெரிக்காவின் தாக்குதல் உக்ரைன் வழியாக ஏற்பாடு செய்யப்பட்டது.
உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் தாக்குதலைத் துவங்கியவுடன், அமெரிக்கா ஜனநாயகத்திற்கு பாடுபடுவதைப் போல ஒப்பாரி வைத்து, ரஷ்ய அதிபர் விளாத்திமிர் புதின் மீது போர்க் குற்றவாளி என்று தனது நாடாளுமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றியது.
இரண்டு எதிர் எதிர் முகாம்களில் இருந்து கொண்டிருந்தாலும், அமெரிக்காவின் குடியரசுக் கட்சி எம்பி இந்த முன்மொழிதலை வைத்தவுடன், அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி இதனை ஆதரித்தது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் புதின் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த சர்வதேச நீதிமன்றத்தில் இருந்து புதின் ஒரு போர்க்குற்றவாளி என்று அறிவித்து அவரை கைது செய்வதற்கு வாரண்ட் பிறப்பித்துள்ளது. ரஷ்யா இந்த ஐசிசி என்ற நிறுவனத்தின் உறுப்பினராக இல்லை என்ற காரணத்தினால், பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
இதில் கொடுமை என்னவென்றால், சர்வதேச அளவில் பயங்கரவாத நாடாகவும், உலகின் பல்வேறு நாடுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மீது தனது சிஏஏ உளவுப் படையின் மூலம் அச்சுறுத்தலையும், தனக்கு கட்டுப்படாத நாடுகளின் மீது ராணுவத்தின் மூலம் தாக்குதல்களையும் கொடுத்து வரும் அமெரிக்கா, ரஷ்ய அதிபரை போர்க் குற்றவாளி என்று அறிவித்துள்ளதுதான் வேடிக்கையானது.
நினைவிருக்கிறதா?
ஈராக் அதிபர் சதாம் உசேன் மீது உயிரியல் ஆயுதங்களை வைத்திருக்கிறார் என்று குற்றம் சுமத்தி போர் தொடுத்தது அமெரிக்கா! ஈராக் போரை நடத்திய ஜார்ஜ் புஷ் மீது போர்க்குற்றவாளி என்ற அறிவிப்பு செய்து தமிழக மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியது புதிய ஜனநாயகம்.
2009ஆம் ஆண்டு ஈழத்தில் தமிழர்களின் மீது நடந்த இனப்படுகொலையை நடத்திய இந்தியா உட்பட அமெரிக்க முகாமில் உள்ள நாடுகளை போர் குற்றவாளிகள் என்று அறிவித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறியது மக்கள் கலை இலக்கிய கழகம் உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள்.
குஜராத் இனப்படுகொலையை நடத்திய பாசிச பயங்கரவாத கும்பலான ஆர்எஸ்எஸ் மோடியின் மீது போர்க் குற்றவாளி என்று அறிவித்து நடவடிக்கை எடுக்க கோரி போராடியது, இந்தியாவில் உள்ள மார்க்சிய லெனினிய அமைப்புகள். ஆனால் இனப்படுகொலை குற்றவாளி இந்தியாவின் பிரதமராக உள்ளார்.
சர்வதேச ரீதியில் உள்ள போர்க் குற்றவாளிகள் ஆனாலும் சரி! இந்திய அளவில் உள்ள போர்க் குற்றவாளிகள் ஆனாலும் சரி! மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி, அவர்களின் மீது ஒரு நிர்பந்தத்தை உருவாக்காத வரை, அவர்கள் தமது குற்றங்களிலிருந்தும் தமது கொடூரமான சதி செயல்களில் இருந்தும் சட்டரீதியாக தப்பி விடுவார்கள் என்பதுதான் நிதர்சனமாக உள்ளது.
இதையும் படியுங்கள்:
- அமெரிக்காவின் பதிலிப் போர் உத்தி! ரஷ்யாவுக்கு உக்ரைன்; சீனாவுக்கு தைவான்!
- ரஷ்யா உக்ரைன் மோதல் 2014-ஆம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது!
இதனால் ரஷ்ய அதிபர் உக்ரைன் மீது நடத்துகின்ற தாக்குதல் நியாயமானது என்று நாம் நியாயப்படுத்தவில்லை. ஆனால் ரஷ்யா மீது தடைகளை விதிப்பதற்கும் ரஷ்ய அதிபர் மீது போர்க் குற்றவாளி என்று குற்றம் சுமத்துவதற்கும் எந்த அருகதையும் அமெரிக்காவிற்கும் அதன் கைப்பாவைகளான சர்வதேச நீதிமன்றங்களுக்கும் இல்லை.
ரஷ்யாவே போரை நிறுத்து என்று ஓங்கி குரல் கொடுக்கின்ற அதே வேளையில், ரஷ்ய அதிபரை போர்க் குற்றவாளி என்ற அறிவித்து, சர்வதேச ரீதியில் ஜனநாயக காவலர்களைப் போல நாடகமாடும் அமெரிக்காவின் முகத்திரையை கிழித்தெறிய வேண்டும்.
- கணேசன்.