மாச்சலப் பிரதேச மாநிலத்தில், பிஜேபி கட்சியின் சார்பாக போட்டியிட்டு எம்பி -யாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளவர் நடிகை கங்கனா ரனாவத். நடிகை கங்கனா, சண்டிகர் விமான நிலையத்திற்கு வந்த பொழுது, அவரது   கன்னத்தில் துணை பாதுகாப்பு படை பெண் காவலராக பணியாற்றும்  குல்விந்தர் கவுர்  அறைந்துவிட்டார்.

அறைந்ததோடு மட்டுமின்றி அதற்கான காரணத்தையும் குல்விந்தர் கவுர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். தான் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் பஞ்சாப் விவசாயிகளின் போராட்டத்தைப் பற்றி நடிகை கங்கனா கொச்சைப்படுத்தி பேசியதற்காக அறைந்ததாகவும் கூறியுள்ளார். அந்த விவசாயிகளின் போராட்டத்தில் தனது தாயும் கலந்து கொண்டு இருந்ததாக அவர் தெரிவித்திருந்தார். தற்போது குல்விந்தர் கவுர் எந்த விசாரணையும் இன்றி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஒன்றரை வருடமாக நடந்த விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு போராடிய விவசாயிகள் 800 பேருக்கு மேல் உயிர் இழந்துள்ளனர். இந்த நிலையில் நடிகை கங்கனா ரனாவத் 100 ரூபாய் 200 ரூபாய் வாங்கிக் கொண்டு போராட்டத்திற்கு வந்திருக்கிறார்கள் என்றும் போராடுபவர்கள் அனைவரும்  தீவிரவாதிகள் என்றும் வெளிநாடுகளில் இருந்து காலிஸ்தான் தீவிரவாதிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு போராடுகிறார்கள் என்றும் பலவாறாக அயோக்கியத்தனமாக பேசியிருந்தார்.
இப்பொழுது அறை விழுந்த பிறகும் கூட அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “பஞ்சாபில் அதிகரித்து வரும் தீவிரவாதத்தை குறித்து கவலைப்படுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்பொழுது பஞ்சாபில் தீவிரவாதம் அதிகரித்து உள்ளதாக கங்கனா ரானாவத் கூறியுள்ளார். இப்பொழுது பஞ்சாபில் தீவிரவாதம் உள்ளதா? இதற்கு ஆதாரம் என்ன? பஞ்சாபில் இப்பொழுது எத்தனை தீவிரவாத சம்பவங்கள் நிகழ்ந்தேறியுள்ளன? ஆதாரங்களை கங்கனாவால் காட்ட முடியுமா?

இப்படி எந்தவித ஆதாரமும் இன்றி முழு பொய்யை — விசத்தை ஒரு தேசிய இனத்தின் மீது தொடர்ந்து கக்கிக் கொண்டிருக்கும் கங்கனா ரனாவத்திற்கு என்ன தண்டனை? பணம், பதவி இருந்து விட்டால் எதுவும் பேசலாம் என்று இருக்கும் கங்கனாவிற்கு ஒரு கன்னத்தில் மட்டும் அறை விழுந்தது போதுமானதா?  என்பதுதான் ஜனநாயகத்தை நேசிக்கும், பாசிசத்தை கருவறுக்கத் துடிக்கும் மக்களின் கேள்வி.

படிக்க:

பாரத்மாத்தாகீ ஜே முழங்குகின்ற கைப்பிள்ளைகளே, உங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!

♦ தேசிய திரைப்பட ஆவண காப்பகம் மற்றும் திரைப்பட பிரிவு மீதான தாக்குதல், அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதலே!

இந்த அறை என்பது நடிகை கங்கனாவின் மீது மட்டும் விழுந்த அறை அல்ல.

  • 800 விவசாயிகள் இறந்த பிறகும் கூட விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் திமிர்த்தனமாக இருக்கும் பாசிச பாஜக – வின் மீது விழுந்த அறை. குறிப்பாக கூறினால் தெய்வக் குழந்தையின், பாசிச திமிரின் மீது விழுந்த அடி.
  • மணிப்பூர் மக்களை மதரீதியாக பிரித்து, மோத விட்டு ரத்தம் குடித்துக் கொண்டிருக்கும் பாஜக பாசிஸ்டுகளின் மீது விழுந்த அடி.
  • ‘தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பிரிட்ஜ் பூசனை தண்டிக்க வேண்டும்’ என்று இந்தியாவின் அடையாளமாகத் திகழும் மல்யுத்த வீராங்கனைகள் வீதியில் இறங்கி போராடிய பொழுதும், தங்களது பதக்கங்களை துறந்த பொழுதும், குற்றம் நடந்ததற்கான போதுமான ஆதாரங்கள் இருப்பதாக டெல்லி போலீசே ஒப்புக்கொண்ட நிலையிலும் கூட பாஜக வைச் சேர்ந்த பாலியல் குற்றவாளி பிரிட்ஜ் பூசனை கைது செய்து தண்டனை பெற்றுக் கொடுத்து நீதியை நிலை நாட்டாத மோடி ,அமித்ஷா கும்பலுக்கு விழுந்த அடி.
  • மாட்டுக்கறி வைத்திருந்ததாக கூறி இஸ்லாமியர்கள் அடித்து கொல்லப்பட்ட, துன்புறுத்தப்பட்ட போது மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஆட்சியாளர்கள் மீது விழுந்த அடி.
  • சில ஆண்டுகளுக்கு முன்பு “இஸ்லாமிய சமூகத்தினரை இனப்படுகொலை செய்ய வேண்டும்”என்று ஹரிதுவாரில் பேசிய சாமியார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் அல்லது இனப்படுகொலை நடக்கட்டும் என்று காத்துக் கொண்டிருக்கும் காவி பயங்கரவாதிகளின் மீது விழுந்த அடி.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

மேல் தட்டு வர்க்கத்தினரின் நலன்களை காப்பதையே முதன்மை நோக்கமாக,
மேல் அதிகாரிகளின் கட்டளைக்கு கீழ்படிவதையே முதன்மை கடமையாக கொண்டு இயங்கி வரும் துணை பாதுகாப்பு படையில் செயல்படும் ஒரு காவலர் பொங்கி எழுந்த இந்த செயல் என்பது  அந்தக் காவலருடன் நின்று விடுமா?

பாசிசத்தால் தொடர்ந்து அடக்குமுறைக்கும் ஒடுக்கு முறைக்கும் உள்ளாகி தங்கள் வாழ்வாதாரத்தையும் சுதந்திரத்தையும்  இழந்து தவிக்கும் மக்கள்,  ஒரு கட்டத்தில் வெகுண்டு எழும்பொழுது, ஆட்சியதிகாரத்தில் இருந்துகொண்டு பாசிசத்தை மக்கள் மீது திணித்துக் கொண்டிருப்பவர்களின் முகத்தில் அடிப்பதுடன் நின்று விட மாட்டார்கள். அவர்களை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிவதுடன் அவர்கள் செய்த பாசிச ஒடுக்கு முறைகளுக்கான உரிய தண்டனையை மக்கள் மன்றங்களில்  வைத்து வழங்குவார்கள்.

குமரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here