மாஸ் படையினரின் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதாக போரை தொடங்கிய இஸ்ரேல் 200 நாட்களைக் கடந்தும் அதன் பாசிச இனவெறி தாக்குதலை நிறுத்தவில்லை.

இதுவரை யூத ஜியோனிச வெறியர்களின் தாக்குதலில் 35,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அதில் 75 சதவீதம் குழந்தைகள் மற்றும் பெண்கள் என பாலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கருகிய பெண்களும் குழந்தைகளும்!

இஸ்ரேல் இன வெறியர்களின் தொடர் தாக்குதலால் வீடிழந்த ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து  ரஃபாவின் தல் அஸ்-சுல்தான்( Tal as – sultan) அகதிகள் முகாமில் தஞ்சம் அடைந்திருந்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை 26 ஆம் தேதி இரவு  மக்கள் தூக்கத்தில்  இருந்த போது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை வான்வழியாகவும் தரை வழியாகவும் நடத்தியது. இதில் சில மக்கள் வெடித்து சிதறினார்கள். பலர் அருகில் இருந்த எரிபொருள் டேங்க் தீப்பற்றியதில் அவர்களும் சேர்ந்து எரிந்து போனார்கள்.

இந்த தாக்குதலுக்கு பிறகு  பயங்கரமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. அதில் தலை இல்லாத குழந்தையின் சடலத்தை ஒரு மனிதன் தூக்கி வருவது போல் பார்த்த காணொளி அனைவரையும் கதிகலங்க வைத்தது. எரிந்த குவியல்களில் மக்கள் தங்கள் உறவுகளை தேடியது பார்ப்போரை கண்கலங்க வைத்தது. இது திட்டமிட்டு நடத்திய துல்லியமான தாக்குதல் என்று கூறுகிறார்கள்.

இந்த தாக்குதலில் ஹமாஸின் முக்கியமான தலைவர் கொல்லப்பட்டதாக கூறும் இஸ்ரேல் இந்த படுகொலையை நியாயப்படுத்துகிறது. இது குறித்து பேசிய இஸ்ரேலின் அதிபர்  ஜியோனிச இனவெறியன் பெஞ்சமின் நெதன்யாகு இந்த தாக்குதல் “சோகமான தவறு” என்று கூறுகிறான். இது பற்றி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறுகிறான். குற்றவாளி விசாரணை நடத்தினால் முடிவு என்னவாக இருக்கும்?

தாக்குதலின் போது பலர் தூங்கிக் கொண்டிருந்ததால் குறைந்தபட்சம் 45 பேர் பலியானதாக அல்ஜசீரா செய்தி நிறுவனம் கூறுகிறது. பலர் காயமடைந்திருக்கிறார்கள். முகாமில் மருத்துவ சிகிச்சை அளித்து வந்த 2 ஊழியர்களும் இந்த ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்கள். அதனால் காயடைந்தவர்களுக்கு முழுமையான மருத்துவ சிகிச்சையும் அளிக்க முடியாத நிலை உள்ளது.

ரஃபாவின் தல் அஸ் – சுல்தான் முகாம் மீது கிட்டத்தட்ட ஏழு 900 கிலோ எடையுள்ள ஏவுகணைகளை கொண்டு தாக்கியதாக காசாவின் அரசு ஊடக அலுவலகம் கூறுகிறது. தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்பு இடத்தை காலி செய்ய இஸ்ரேல் அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.

இந்த தாக்குதலுக்கு அடுத்த நாளும் அதாவது திங்கட்கிழமை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்த அல்- மவாசியில்(Al – Mawazi) இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில்  13 பேர் குழந்தைகள் மற்றும் பெண்கள்.

ரஃபா மீதான தாக்குதலை நிறுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்ட 2 நாட்களுக்குப் பிறகு  தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில்  (UNSC)அவசரக் கூட்டத்தைக் கூட்டி உள்ளது. படுகொலையை பார்த்து முதலை கண்ணீர் வடிக்கும் அமெரிக்கா ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) இஸ்ரேலுக்கு ஆதரவாகவே இதுவரை வாக்களித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலோ அல்லது சர்வதேச நீதிமன்றமும் சொல்வதை இஸ்ரேல் இனவெறி அரசு கேட்க மயிரளவும் தயாராக இல்லை. போர் விதிமுறைகள் கடைப்பிடிக்கவும் இல்லை. ரத்த கவுச்சி அடிக்கும் இஸ்ரேலின் கரங்கள் பாலஸ்தீனியர்களை முற்றாக ஒழித்த பிறகே இந்த போரை நிறுத்தும் என தோன்றுகிறது.

படிக்க:

 பாலஸ்தீனத்தின் மீதான இன அழிப்பு போருக்கு எதிராக போராடுவோம்!
 பாலஸ்தீன குழந்தைகளைக் கொன்றுகுவிக்கும் சீயோனிச வெறியர்கள்!

சமீபத்தில் ஒரு காணொளியை பார்க்க நேர்ந்தது. ஒரு மான் கூட்டத்திற்குள் பாயும் சிங்கம் அப்போது தான் ஈன்றெடுத்த மான் குட்டியை விட்டுவிட்டு உயிர் பிழைத்து ஓடுகிறது. எழுந்து நிற்க முடியாமல் தள்ளாடும் குட்டியை சிங்கம் வளர்க்கிறது. இது Animal planet-ல் ஒளிப்பரப்பான காணொளி. தான் பசியில் இருந்த போதும் குட்டி மான் என்று தெரிந்து அதை கொல்லாமல் வளர்க்கிறது ஒரு மிருகம்.

ஆனால் பெரும்பான்மை மனித இனமோ உண்டு கொழுத்த  இரத்தவெறி பிடித்த ஏகாதிபத்திய முதலாளித்துவ கும்பலிடம் சிக்கியுள்ளது. போர் வெறிப்பிடித்த மனித மிருகமான நெதன்யாகுவோ இதுவரை பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன குழந்தைகளை குறிவைத்துக் கொன்று இனவழிப்பை நிகழ்த்துகிறான். சர்வதேச சமூகமோ தடுக்காமல் வேடிக்கைப் பார்க்கிறது. அதனை நியாப்படுத்த பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் என்கிறது.

ALL EYES ON RAFAH

அமெரிக்காவோ இஸ்ரேலின் இனவெறியை கண்டிக்கும் மாணவர்களின் போராட்டத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்குகிறது. பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் நாடுகளின் மீது தாக்குதல் தொடுக்கிறது. இந்தியாவோ பாலஸ்தீனத்தை ஆதரித்து பதிவிட்டாலே வெறுப்பை உமிழ்கிறது.

ரஃபாவின் தாக்குதலை கண்டிக்கும் விதமாக “ALL EYES ON RAFAH” (எல்லா கண்களும் ரஃபாவை நோக்க) என்ற வாசகத்துடன் கூடிய படம் ட்ரெண்டானது. பல கோடி மக்கள் பார்த்தும் பகிர்ந்தும் உள்ளார்கள். இந்தியாவில் நடிகை சமந்தா, நடிகர் வருண் தவான் உள்ளிட்ட பிரபலங்களும் பகிர்ந்துள்ளார்கள். இதனை பொருத்துக் கொள்ளாத இஸ்ரேல் பாசிஸ்டுகளின் கூட்டாளிகளான காவி பாசிஸ்டுகள் வெறுப்பை கொட்டியுள்ளார்கள்.

உலகம் முழுவதும் பெரும்பான்மை மக்கள் இனரீதியாகவும், மத ரீதியாகவும் ஒடுக்கப்பட்டு வருகிறார்கள். நாம் சமூகவலைதளங்களில் காட்டும் எதிர்ப்புகள் மக்களுக்கு பிரச்சினைகளை தெரியப்படுத்துமே தவிர தீர்க்கப் போவதில்லை. நம் மக்களுக்கான அரசியலை நாம்  தேர்தெடுக்காத வரையில் மக்கள் மீதான போரை அவர்கள் நிறுத்தப் போவதில்லை.

  • நலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here