நாடு பேரழிவை நோக்கி செல்கிறது! மீட்க ஒன்றுபடுவோம்!
ராகுல் காந்தி அறைகூவல்!


பாசிச மோடியின் ஆட்சியில் இந்திய மக்கள் உழைப்பு சுரண்டப்பட்டு கையளவே ஆன சில பெரும் பணக்காரர்களுக்கு தாரைவார்க்கப்படுவதை அம்பலப்படுத்தியும் இந்த நாட்டின் மக்களை மதம், மொழி, சாதி, மாநிலம் எனப் பலர் வழிகளில் பிரித்து மோதவிடும் ஆர்.எஸ்.எஸ்-பாஜக சதித்தனத்தை  முறியடித்து ஒற்றுமையை கட்டமைக்கவும் இந்த இந்திய ஒற்றுமை பயணம் அறிவித்திருந்தது. 3500 கி.மீ செல்லும் இந்த பயணம் 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அதன் துவக்க நிகழ்வு நேற்று மாலை கன்னியாகுமரியில் நடந்தது. இந்த துவக்க நிகழ்வில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது உரையில்

“இன்று இந்தியாவில் இருக்கின்ற ஒவ்வொரு ஜனநாயக நிறுவனமும், ஆர்எஸ்எஸ் பிஜேபி என்கிற அந்த இயக்கங்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது.

அவர்கள் நினைக்கிறார்கள் இந்தக் கொடி அவர்களின் தனிப்பட்ட உரிமை என்று. அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று சொன்னால், தனிப்பட்ட முறையிலே அவர்கள் மட்டுமே இந்த நாட்டினுடைய எதிர்காலத்தை, மாநிலங்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியும் என்று நினைக்கிறார்கள்.


இதையும் படியுங்கள்: கழுத்தை நெரிக்கும் காவி பாசிசம் மக்கள் அதிகாரம் மாநாடு | தோழர் காளியப்பன் அறைகூவி அழைக்கிறார்


இந்த நாட்டிலே இருக்கின்ற எதிர்க்கட்சிகளை வருவாய் புலனாய்வுத் துறை, சிபிஐ, வருமான வரித்துறை போன்ற அமைப்புகளை வைத்து அச்சமூட்டி பயமுறுத்தலாம் என நினைக்கிறார்கள். இங்கு பிரச்சனை என்னவென்று சொன்னால் அவர்கள் இன்னும் இந்தியர்களை முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை.

இந்திய மக்கள் ஒரு நாளும் பயப்பட மாட்டார்கள். ஒருநாளும் அச்சமடைய மாட்டார்கள். அவர்கள் எத்தனை மணி நேரம் எங்களை உள்ளே அழைத்து வைத்து கேள்வி கேட்கிறார்கள் என்பதைப் பற்றி நாங்கள் ஒரு நாளும் கவலைப்பட மாட்டோம். இந்திய நாட்டினுடைய எந்த எதிர்க்கட்சித் தலைவரையும் இது போன்ற அச்சுறுத்தல்களால், இது போன்ற விசாரணைகளால் முடக்கவும் முடியாது, எங்களை பயமுறுத்தவும் முடியாது.

மோடி குஜராத்தில் செய்ததைத்தான் இப்போது நாட்டுக்குச் செய்துவருகிறார்!'' - ராகுல் காந்தி தாக்கு | Congress mp rahul gandhi criticized pm modi in gujarat

பாஜக நினைக்கிறது இந்த நாட்டை மொழியின் மூலம் பிளந்து விடலாம் என்று. ஆனால், அவர்களால் எக்காலத்திலும் ஒரு நாளும் இந்த தேசத்தைப் பிளக்க முடியாது.

இந்த நாடு எப்பொழுதும் ஒரே நாடாக, ஒற்றுமையாகத்தான் இருக்கும். இன்று, இந்தியா வரலாற்றில் இல்லாத மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறது.

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வேலையில்லாத் திண்டாட்டம்! ஒரு பேரழிவை நோக்கி இந்த தேசம் நகர்ந்து கொண்டிருக்கிறது. துரதிஷ்டவசமாக எனக்கு எதிரே இருக்கின்ற நம்முடைய ஊடக நண்பர்கள் வாய்மூடி மௌனமாக இருக்கிறார்கள்.

இந்த நாட்டினுடைய தொலைக்காட்சியில் அவர்கள் காட்டுகிற செய்திகளில் ஒரு நாளும் வேலையில்லா திண்டாட்டத்தைப் பற்றி அவர்கள் பேச மாட்டார்கள். விலைவாசி உயர்வைப் பற்றி அவர்கள் பேசமாட்டார்கள். பிரதமரின் முகத்தை மட்டும்தான் தொலைக்காட்சியில் காண்பிப்பார்கள்.

பாஜக அரசு, திட்டமிட்ட முறையில் விவசாயிகளை, கூலித் தொழிலாளர்களை, ஏழைகளை நசுக்கி வருகிறது. சில குறிப்பிட்ட பெரும் பணக்கார தொழிலதிபர்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்தை தங்கள் கைகளுக்குள் வைத்திருக்கிறார்கள்.

PM Narendra Modi Meets Mukesh Ambani, Ratan Tata, Anand ...

துறைமுகங்களாக இருந்தாலும் சரி, விமானநிலையங்களாக இருந்தாலும் சரி, நிலக்கரி சுரங்கங்களாக இருந்தாலும் சரி, மின்சாரம் தயாரிப்பதாக இருந்தாலும் சரி … இத்தனை தொழில்களும் சில தொழிலதிபர்களின் கைகளில் சிக்கிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் இல்லாமல் நம் பிரதமரால் ஒருநாள் அரசியல் ரீதியாக உயிர் வாழ முடியாது.

அவர்கள் இந்த நாட்டினுடைய ஊடகத்தை கைகளில் வைத்துக்கொண்டு 24 மணி நேரமும் பிரதமரின் படம் தங்கள் ஊடகத்திலே இருப்பதை அந்த தொழிலதிபர்கள் பத்திரமாக பார்த்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு வேண்டிய கொள்கைகளையும், அவர்களுக்கு வேண்டிய திட்டங்களையும் மட்டுமே அமல்படுத்துவதை நமது பிரதமர் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையாக இருந்தாலும் சரி, குறைபாடுடைய ஜிஎஸ்டி வரியை அமல் படுத்துவதாக இருந்தாலும் சரி, விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களாக இருந்தாலும் சரி, இவைகள் எல்லாமே சில தொழிலதிபர்களுடைய பெரும் பணத்தைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைதான்.


இதையும் படியுங்கள்:வரிக்கு மேல் வரி! மக்கள் கழுத்தை நெறி! இதுவே முதலாளித்துவ சுரண்டல் வெறி! 


ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு என்ன அணுகுமுறை இருந்ததோ, என்ன நோக்கம் இருந்ததோ, அதே நோக்கமும் அணுகுமுறையும்தான் இன்றைய பாஜக அரசும் கொண்டிருக்கிறது.

இந்தியாவைப் பிளவு படுத்துங்கள்; இந்தியர்களை ஒருவரை ஒருவர் மோதவிடுங்கள் அந்த மோதல் நடந்து கொண்டிருக்கும்போது, சத்தமில்லாமல் அவர்களுடைய பணத்தை திருடிக் கொள்ளுங்கள் என்று வெள்ளைக்கார ஏகாதிபத்தியம் நினைத்ததைத்தான் இன்று மோடி அரசு செய்து கொண்டிருக்கிறது.

ஒருகாலத்தில் பிரிட்டிஷாருடைய கிழக்கிந்திய கம்பெனி உலகத்தினுடைய பொருளாதாரத்தை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தது போல இன்று இந்தியாவின் பொருளாதாரத்தை சில பெரும் தொழில் நிறுவன முதலாளிகள் தங்கள் கைகளில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையாக இருந்தாலும் சரி குறைபாடுடைய ஜிஎஸ்டி வரிவிதிப்பு நடவடிக்கையாக இருந்தாலும் சரி, விவசாயிகளுக்கு எதிரான சட்டமாக இருந்தாலும் சரி, இவை அனைத்தினுடைய நோக்கம் என்னவென்று சொன்னால் பெரு முதலாளிகளுக்கு உதவுவதும், ஏழை எளிய மக்களுக்கான வாழ்வை சுரண்டுவதும்தான்.


இதையும் படியுங்கள்: கார்ப்பரேட்டுகளின் சுரண்டலுக்காகவே காவி பாசிசம்!


சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பலவிதமான வேலைவாய்ப்புகளை உருவாக்கின. நம்முடைய விவசாய வேளாண்மைத் தொழில் பலவிதமான வேலை வாய்ப்புகளை உருவாக்கின. ஆனால், இன்று சிறு, குறு தொழில்கள் முடக்கப்பட்டு செயலிழந்து கிடக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை பார்க்கிறோம்.

இந்த நாட்டினுடைய வேளாண் குடிமக்கள், உயிர் வாழவேத் தகுதி இல்லாத நிலைமையை நோக்கி தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலை, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவே முடியாது என்பதாக இருக்கிறது. நம்முடைய இளைஞர்கள் எந்தவிதமான வேலைவாய்ப்பையும் பெற்று சம்பாதிக்க முடியாத ஒரு சூழ்நிலை! விலைவாசி விஷம் போல் ஏறிக் கொண்டிருக்கின்றன.

வரலாற்றில் இல்லாத மிக மோசமான காலகட்டத்திற்கு தள்ளப் பட்டிருக்கிறோம்.  இந்தியர்கள் அனைவரையும் ஒற்றுமையாக இணைக்க வேண்டியதையும், அவர்களை ஒருமுகப்படுத்துவதையும், அவர்கள் ஒன்றாக செயல்படுவதையும் செய்து காட்ட வேண்டிய தருணம் இப்போது வந்து இருக்கிறது.” என்று ஆர்.எஸ்.எஸ்- பாஜகவுக்கு எதிராக நாட்டு மக்கள் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். பரந்துபட்ட மக்களிடம் ஆர்.எஸ்.எஸ்-பாஜகவின் மக்கள் விரோத தன்மையை அம்பலப்படுத்த எடுத்துக்கொண்ட முயற்சி வரவேற்புக்குரியது.

அதே போல் கடந்த மாதம் முதல் CPI(M) கட்சி “மோடியின் ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்” என்ற தொடர் பிரச்சார இயக்கத்தை தொடங்கி நடத்தி வருகிறது. மக்கள் அதிகாரம் அமைப்பு வருகிற அக்டோபர் 8ந்தேதி “கழுத்தை நெரிக்கும் காவி பாசிசம் வீழ்த்த ஒன்றுபடுவோம்” என்ற தலைப்பில் மாநாட்டை அறிவித்து பிரச்சாரம் செய்து வருகிறது.

ஆர்.எஸ்.எஸ்-பாஜகவுக்கு எதிரான  இயக்கங்கள் அனைத்தும் ஒன்றிணையட்டும்!

பாசிச மோடி ஆட்சிக்கு எதிரான மக்கள் இயக்கங்கள் பரவட்டும்!

கார்ப்பரேட்-காவி பாசிசத்தை வீழ்த்தட்டும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here