• திருச்சி குமார வயலூர் முருகன் கோயில் – அனைத்து சாதி அர்ச்சகர் நியமனத்தை ரத்து செய்துள்ள பிப்ரவரி,24,2023 தேதிய மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பு, மாண்புமிகு. உச்சநீதிமன்றத்தின், சேசம்மாள் (1972) நாராயண தீட்சிதலு (1996) , காசி விசுவநாதர் கோயில் (1997) ஆதித்யன் (2002), ஆதிசைவ சிவாச்சாரியார்கள்(2015), சபரிமலை (2018) – ஆகிய அனைத்து தீர்ப்புகளுக்கும் எதிரானது!

• அரசியல் சட்ட சமத்துவ உரிமை கோட்பாட்டிற்கு முரணான இத்தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்க!

• அரசியல் சட்டம் பிரிவு 25(2)(b)- ன் கீழ், இந்து சமய அறநிலையத்துறை சட்டம் பிரிவு 55(2)-ல் – பழக்கம், வழக்கம், மரபு, சாதி, பிறப்பு அடிப்படையிலான மத, சாதி உட்பிரிவின் கீழ் அரசு பொதுக் கோயில்களில் அர்ச்சகர் நியமனம் கோர முடியாது – என்ற சட்டத்திருத்தம் கொண்டு வருக!

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு
தமிழ்நாடு அரசு நியமன அர்ச்சர்கள் சங்கம்
128, கோகுலம் இல்லம், அரசமரத் தெரு
திருவண்ணாமலை மாவட்டம். தமிழ்நாடு – 90474 00485.
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்
384, முதல் தளம்,கிழக்கு 8-வது தெரு, கே.கே.நகர், மதுரை-20, 9865348163
—————————————————————————————————-

பத்திரிக்கை செய்தி
மார்ச் 7, 2023

பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் எனப்பட்ட, அனைத்து சாதி அர்ச்சகர் நியமனம் மீண்டும் கடும் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது. 50 ஆண்டுகால கருவறை தீண்டாமைக்கு எதிரான போராட்டம் பின்னடைவை சந்தித்துள்ளது.திருச்சி குமாரவயலூர் முருகன் கோயில் நிர்வாகம் நியமித்த, பிராமணர் அல்லாத பிரபு, ஜெயபாலன் ஆகிய இந்து சைவ அர்ச்சகர்களின் பணிநியமன உத்தரவுகள் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி திரு.G.R.சுவாமிநாதன் அவர்களால் பிப்.24,2023 தீர்ப்பின்படி ரத்து செய்யப்பட்டு, பிராமண உட்சாதியினரான கார்த்திக், பரமேஸ்வரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. பிராமண சாதி உட்பிரிவுகளான ஆதிசைவர்,சிவாச்சாரியார்கள், குருக்கள் மட்டுமே, காமிக ஆகம முறையிலான திருச்சி வயலூர் முருகன் கோயிலில் அர்ச்சகராக முடியும், மற்ற இந்துக்கள் அர்ச்சகராக முடியாது, என்பதே இத்தீர்ப்பின் சாரம்.
மார்ச்,3,2023-அன்று மதுரை உயர்நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட இத்தீர்ப்பு, உச்சநீதிமன்றத்தின் சேசம்மாள், ஆதி சைவ சிவாச்சாரியார்கள், ஆதித்யன்,நாரயண தீட்சிதலு, காசிவிசுவநாதர்,சபரிமலை ஆகிய தீர்ப்புகளுக்கு எதிரானது.

வழக்கை தொடுத்த மனுதாரர்கள் கார்த்திக்,பரமேஸ்வரன் ஆகியோர், தாங்கள் மேற்குறிப்பிட்ட ஆதிசைவர் உள்ளிட்ட உட்பிரிவை சேர்ந்தவர்கள் என்பதற்கான ஆவணத்தை, அர்ச்சகர் பணிக்கு மனுச் செய்யும்போதோ, வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்திலோ சமர்பிக்காதபோது, கார்த்திக்கும்,பரமேஸ்வரனும் ஆதிசைவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்ற முடிவிற்கு நீதிபதி எப்படி வந்தார்? என்பதற்கான விளக்கம் தீர்ப்பில் இல்லை.தாங்கள் , ஆதி சைவர்களா? சிவாச்சாரியார்களா? குருக்களா? என்று கூட தங்களது மனுவில் மனுதாரர்கள் சொல்லவில்லை. நீதிமன்றத்தில் கேட்டபோது மூன்று பிரிவுகளும் ஒன்றுதான் ( denominational brahmins) என்று மழுப்பினர். தங்கள் கூற்றுக்கான ஆதாரம் எதையும் காட்டவில்லை.

திருச்சி வயலூர் முருகன் கோயில் பழக்க, வழக்கப்படி அர்ச்சகரை நியமிக்க வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்த பிராமண அர்ச்சகர்கள், அதற்கும் கூட எந்தவித ஆதாரத்தையும் தரவில்லை.பழக்கம்,வழக்கம்(custom and usage ) என்பதை சாட்சியங்கள் வழியே, சிவில் நீதிமன்றத்தில்தான் நிரூபணம் செய்ய முடியும். மனுதாரர்கள் குறிப்பிடும் பழக்க,வழக்கத்தை , இந்து சமய அறநிலையத்துறை ஏற்காதபோது, உயர்நீதிமன்றம் இதுதான் பழக்கம் என்ற முடிவிற்கு வர சட்ட அடிப்படை இல்லை. சைவக் கோயில்களில் வைணவர்களையோ, சைவ மரபில் நம்பிக்கை அற்றவர்களையோ அர்ச்சகராக நியமிக்க யாரும் கோரவில்லை.
இந்திய சாட்சிய சட்டம் பிரிவு.106- ன் படி, வழக்குத் தொடுத்தவர்தான், தனது கூற்றை நிரூபிப்பதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வழக்கில் , நம்பிக்கை என்பதைத் தவிர எந்த ஆவணமும் மனுதாரர்களால் சமர்பிக்கப்படவில்லை.

98 படலங்கள், 7128 சுலோகங்கள் உள்ள உத்தர காமிக ஆகமத்தில் 4 பக்கங்களை மட்டுமே நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில் அர்ச்சனை , ஆதிசைவர்களால் செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருப்பதாக மொழிபெயர்ப்பு செய்துள்ளனர். இந்த ஆவணத்தின் உண்மைத் தன்மை தொடர்பான கேள்விகள் ஒருபுறம் இருக்க, மனுதாரர்கள் கவுசிக முனிவர் வழிவந்த ஆதிசைவர்கள் என்ற மத உட்பிரிவினர்தான் (denomination) என்ற உறுதியான முடிவிற்கு நீதிபதி எப்படி வந்தார்? என்ற கேள்வி மீண்டும், மீண்டும் எழுகிறது.

வயலூர் முருகன் கோயில் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட பிராமணர் அல்லாத அர்ச்சகர்கள் இருவரும் தாங்கள் சைவ மரபை பின்பற்றும் , ஆதிசைவ மத உட்பிரிவினர் என்று மிகத் தெளிவாக பதில் மனுத் தாக்கல் செய்துள்ளபோது, அது குறித்து தீர்ப்பு மவுனம் சாதிக்கிறது. ஒரு தரப்பினரின் வாதத்தை நீதிபதி ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம்; அவர்களின் முக்கிய வாதத்தைக் குறிப்பிட்டு, அதனை ஏற்கவியலாமைக்கான காரணத்தையும் தீர்ப்பு தெரிவிக்க வேண்டும். நீதிபரிபாலனத்தின் அடிப்படையான இந்த நெறியை இத்தீர்ப்பு மீறியிருக்கிறது.
இவை தவிர மிக முக்கியமாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு W.P.NO.17802/2021 வழக்கின் தீர்ப்பில், ஆகமக் கோயில்கள் எவை என்பதை முடிவு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி திரு.சொக்கலிங்கம் தலைமையில் குழு அமைத்துள்ளநிலையில், வயலூர் முருகன் கோயில் ஆகமக் கோயில் என்று தற்போது எவ்வாறு முடிவு செய்ய இயலும்? ஒருவேளை இந்துசமய அறநிலையத்துறை வயலூர் முருகன் கோயில் ஆகமக் கோயில் அல்ல என்ற நிலைப்பாட்டை எடுத்திருந்தால் நீதிமன்றம் ஏற்குமா?

ஆகமங்கள் நான்கு வர்ணங்கள் குறித்து மட்டுமே பேசும்போது, வர்ணத்திற்கு வெளியே உள்ள பஞ்சமர்கள் எனப்படும் பட்டியல் சமூகத்தினர் தொடர்பாக நீதிமன்றத்தின் நிலை என்ன? அவர்கள் இந்துக்கள் இல்லையா? கோயிலில் பூஜை செய்யக் கூடாதா? பூஜை செய்தால் தீட்டாகிவிடுமா?
உச்சநீதிமன்றத்தின் 2015-ஆம் ஆண்டு ஆதிசைவ சிவாச்சாரியார்கள் வழக்கின் தீர்ப்பு – ஆகமங்கள் அரசியல் சட்ட நெறிமுறைகளுக்கு முரணாக இருந்தால் ஏற்றுக் கொள்ளக் கூடாது; சாதி,பிறப்பின் அடிப்படையில் எவரும் அர்ச்சகர் உரிமை கோரமுடியாது என்று மிகத்தெளிவாக கூறி இருக்கும்போது, திருச்சி வயலூரில் உள்ள 5 பிராமண குடும்பங்கள் மட்டும்,பிறப்பு, சாதி அடிப்படையில் அர்ச்சகர் உரிமை கோருவதை நீதிபதி எப்படி ஏற்றுக் கொண்டார்?

அரசியல் சட்டம் பிரிவு 26-ன் படி, அரசு பொதுக் கோயில்களில் , தனிமத உட்பிரிவினர்( denomination) என்று சொல்லி பிராமணர் உள்ளிட்ட எந்த சாதியும் அர்ச்சகர் நியமன உரிமை கோரமுடியாது. ஒரு மத உட்பிரிவினர்( denomination) சொந்தமாக கோயில் கட்டி, நிர்வாகம் செய்து வருவதற்கே ( establish and maintain) பிரிவு 26 பொருந்தும். உதாரணத்திற்கு ஜக்கிவாசுதேவ், ஒரு கோயில் கட்டி, தனி மத உட்பிரிவு என நிரூபித்து, அக்கோயிலில் அந்த மதப்பிரிவின் கொள்கைப்படி, அர்ச்சகர் நியமிக்கலாம். அந்த தனியார் கோயிலும், பொதுமக்கள் வழிபாட்டிற்கு திறந்து விடப்பட்டால் அர்ச்சகர் நியமனம் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டே செய்ய இயலும், திருச்சி வயலூர் முருகன் கோயிலை மனுதாரர்கள் சார்ந்த பிராமண சமூகம் உருவாக்கி,நிர்வாகம் செய்யாதபோது , பிரிவு 26- ன் கீழ் எப்படி உரிமை கோர முடியும்?

அடுத்து, பிரிவு 25(1)- ன் படி மதவழிபாட்டு உரிமையை பிராமண அர்ச்சகர்கள் கோரும்போது , அவ்வுரிமை பிராமணர் அல்லாத அர்ச்சகர்களுக்கும் உண்டுதானே?
மனுதாரர்களின் கூற்றுப்படி ஆதிசைவர்கள் பின்பற்றுவதாக கூறப்படும் சைவ வழிபாட்டு மரபு, தனியான மத உட்பிரிவு (religious denomination) அல்ல, இந்து மதத்தின் ஒரு அங்கம்தான் என்று மிகத் தெளிவாக காசி விசுவநாதர் கோயில் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மத உட்பிரிவு (religious denomination) என்பதற்கு , ஒரு தனிக் கொள்கை,வழிபாட்டு முறை, பொது நம்பிக்கை, பொது நிர்வாக அமைப்பு, குறிப்பான பெயர், தனிச்சிறப்பான அடிப்படை நூல்கள், எவ்வளவு நபர்கள் அப்பிரிவில் உள்ளனர், அப்பிரிவை உருவாக்கியது யார்? – என்பன உள்ளிட்ட அனைத்து கூறுகளும் இருக்க வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.வயலூர் முருகன் கோயில் பிராமண அர்ச்சகர்கள் இப்படி எதையும் நீதிமன்றத்தில் நிரூபிக்கவில்லை.

வழக்குத் தொடுத்த மனுதாரர்கள் தங்கள் பணி விண்ணப்பத்தில் கார்த்திக் – இந்து – பிராமின், பரமேஸ்வரன் – இந்து – குருக்கள் என்று தெளிவாக தங்கள் சாதியை குறிப்பிட்டுள்ளனர். நேர்முகத் தேர்வில் தோற்றுள்ளனர். அவர்கள் அர்ச்சகர் பணிக்கே தேர்வாகாதபோது, பிறப்பு, சாதி அடிப்படையிலான கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றது உச்சநீதிமன்றத்தின் ஆதிசைவ சிவாச்சாரியார்கள் தீர்ப்பை நேரடியாக மீறுவதாகும்.மனுதாரர்கள் குறிப்பிடும் மத உட்பிரிவு என்பது பிறப்பின் அடிப்படையிலான சாதி உட்பிரிவுதான். ஆதிசைவர்கள்/சிவாச்சாரியார்கள்/குருக்கள் – என்ற மத உட்பிரிவில் சைவத்தை ஏற்கும் மற்ற இந்துக்கள் சேர முடியுமா?
கோயில் கருவறையில் குறிப்பிட்ட மத உட்பிரிவை ( denomination) சேர்ந்த அர்ச்சகர்கள் மட்டுமே பூஜை செய்ய முடியுமா? மற்ற இந்துக்கள் தொட்டால் தீட்டாகி விடுமா? என்ற கேள்விக்கு A.S.Narayana Deekshitulu – Vs – State Of A.P (1996) 9 SCC 548 – வழக்கு தீர்ப்பின் பத்தி 125-ல் ”

It is next contended that as per rules laid down in Agmas, the archaka of particular denomination alone is entitled to enter sanctum sanctorum and touch the image of God. A touch by a person of different denomination defiles the image of God. Therefore, persons belonging to that particular family, sect or denomination alone are entitled to perform pooja or ceremonial rituals of daily worship and that the abolition of hereditary right amounts to interference with the religion offending Article 25(1).
Therefore, what would be relevant is not that the candidate who seeks to serve as an archaka must be from that family etc., but must be an accomplished person in Agama rules having faith and devotion in that form of worship and also proficiency to perform rituals and rites, ceremonial rituals appropriate to the temple according to its customs, usages, Sampradayams etc. In other words, the faith and belief in the religion, customs, usages or Sampradayams in that particular Agamas and proficiency in performance of the rituals to the image of God in those particular rituals are conditions precedent to be eligible to hold office of the archaka. One who fulfils those pre-conditions is eligible to be considered and appointed to the office of archaka or other similar offices. The regulation of this secular activity, therefore, does not offend any faith or belief in the performance of those duties by a person other than one hailing from the family, sect/sub-sect or denomination hither to performing the same. Earlier, the field of choice to appoint a particular archaka was confined and limited to that family, sect/sub-sect or denomination, but after the statutory regulation the field of choice is widened and all eligible candidates including those available from the family etc. will be considered; competency is tested and when one is found qualified, appointment is made to the office of archaka according to the prescribed procedure. என்று தெள்ளத் தெளிவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை விசாரணையின்போது சுட்டிக் காட்டியும் நீதிமன்றம் கணக்கில் கொள்ளாதது ஏன்?
மேற்கண்ட கேள்விகள் அனைத்தும் மிகத் தெளிவான வாதங்களாக பிராமணர் அல்லாத இந்து அர்ச்சகர்கள் சார்பில் பதில் மனுவாகவும், நேரடி வாதங்களாகவும் முன்வைக்கப்பட்டது. இந்த வாதங்கள் எதையும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிடவில்லை. விவாதிக்கவுமில்லை. மேற்கண்ட வாதங்களும், உச்சநீதிமன்ற தீர்ப்புகளும் இந்த வழக்கிற்கு பொருந்தாது என்றாவது சொல்ல வேண்டிய நீதிபதி, இந்நிலையில் இருந்து தவறியது அரசியல் சட்ட மாண்பிலிருந்து தவறியது ஆகாதா? இது பிராமணர் அல்லாத இந்து அர்ச்சகர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கருதப்படாதா?

பிராமணர் அல்லாத மற்ற இந்து சாதியினர் மீது பிறப்பின் அடிப்படையில், தகுதியின்மையை ( disability based on birth) இத்தீர்ப்பு சுமத்துகிறது. பணி உத்தரவு ரத்து செய்யப்பட்ட பிராமணர் அல்லாத சைவ இந்து அர்ச்சகர்கள், ஆகமம்,வேதம்,மந்திரங்கள் கற்று தீட்சை பெற்று, முறையாக சான்றிதழ் பெற்று நேர்முகத் தேர்வில் தேர்ச்சியும் பெற்று, சரியாக பூஜை செய்து மக்கள் அங்கீகாரம் பெற்றவர்கள்தான். அவர்களின் பணிநியமனம் இன்று ரத்தாக நீதிமன்றம் சொன்ன ஒரே காரணம் அவர்கள் பிறப்பும், சாதியும்தான். இது அரசியல் சட்டப்படி சரியா?
தீண்டாமையின் அனைத்து வடிவங்களும் ஒழிக்கப்பட்டு விட்டது என்ற அரசியல் சட்டத்தின் பிரிவு 17 – யை தவறாக பொருள் கொள்கிறது தீர்ப்பு. ஸ்மார்த்த பிராமணர்களே, கருவறைக்குள் சென்று பூஜை செய்ய முடியாது என்ற இந்நடைமுறை தீண்டாமை இல்லை, மாறாக பட்டியல் சமூகத்தினர் மட்டும் பூஜை செய்யக் கூடாது என்று சொன்னால்தான் தீண்டாமை குற்றம் வரும் என்று சபரிமலை தீர்ப்பிற்கு மாறாக தீண்டாமையை சாதிக்கு மட்டும் சுருக்குகிறது தீர்ப்பு. சபரிமலை தீர்ப்பின்படி புனிதம் – தீட்டு என்று ஒருவர் ஒதுக்கப்பட்டால் அது தீண்டாமைதான்.
மொத்தத்தில் அரசு பொதுக்கோயிலில் கருவறை தீண்டாமை மீண்டும் ஆழமாய் உறுதி செய்யப்பட்டுள்ளது.ஆகமம்,வேதம்,மந்திரங்கள் கற்று , முறையாக தேர்வான அர்ச்சகர்களின் பணி உரிமை, பிறப்பின் அடிப்படையில் பறிக்கப்பட்டுள்ளது.மதுரை உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு, அரசியல் சட்டத்தின் விழுமியங்களை(constitutional morality) அரசியல் சட்டத்தின் அடிப்படை கூறான(basic structure) சமத்துவ கோட்பாட்டை மீறுகிறது.

எனவே தமிழக அரசு, அரசியல் சட்ட விரோத இத்தீர்ப்பிற்கு எதிராக

1. மறு சீராய்வு மனுத் தாக்கல் செய்வதுடன்,

2. இத்தீர்ப்பிற்கு மூலமாய் உள்ள சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு W.P.NO.17802/2021 வழக்கின் தீர்ப்பிற்கும் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய வேண்டும்.

3. அனைத்து சாதி இந்துக்களையும் அர்ச்சகர் ஆக்க , கோயிலில் சமத்துவம் நிலவ, 2006-ஆம் ஆண்டு கலைஞர் கொண்டு வந்து சட்டமாகாமல் போன இந்து சமய அறநிலையத்துறை சட்டம் பிரிவு 55(2) – ன் கீழான சட்டத் திருத்தத்தை – குறிப்பாக பழக்கம், வழக்கம், மரபு, சாதி, பிறப்பு அடிப்படையிலான மத, சாதி உட்பிரிவின் கீழ் அரசு பொதுக் கோயில்களில் அர்ச்சகர் நியமனம் கோர முடியாது என மீண்டும் கொண்டு வந்து தந்தை பெரியார்,அண்ணா,கலைஞரின் அடிப்படை கொள்கையான அனைத்து சாதி அர்ச்சகர் நியமனத்தை, கோயில்களில் அரசியல் சட்ட சமத்துவத்தை நிலைநிறுத்த வேண்டும்.

4. அனைத்து சாதி அர்ச்சகர் பிரச்சனையில் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து போராடிவரும் நாங்கள் இந்து சமய அறநிலையத்துறையில் ஆர் எஸ் எஸ் – பா ஜ க – பிராமணீய சிந்தனைப் போக்குள்ள சில சட்டத்துறை அதிகாரிகளின் ஊடுருவலை மிகவும் ஆபத்தான போக்காக பார்க்கிறோம். இந்நிலை நீடித்தால் தமிழக அரசால் செய்யப்பட்ட அனைத்து அர்ச்சகர் நியமனங்களும் ரத்தாகும். எனவே தமிழக முதல்வர் உடனே இதில் நேரடியாகத் தலையிட வேண்டுமெனக் கோருகிறோம்.

வா.ரங்கநாதன், தலைவர்
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு.
தமிழ்நாடு அரசு நியமன அற்றவர்கள் சங்கம்
தொடர்புக்கு : 9047400485

வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்.
தொடர்புக்கு : 98653 48163.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here