2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த இனப்படுகொலை, உலக வரலாற்றில் மட்டுமின்றி சமகாலத்தில் நடந்த மிகப்பெரிய இன அழிப்பு திட்டமாகும்.

ஒரு மாதத்திற்குள் 2000 இஸ்லாமியர்களை படுகொலை செய்து, தான் அமைக்கப் போகின்ற இந்து ராஷ்டிரத்தில் இஸ்லாமியர்களுக்கும், மதச் சிறுபான்மையினருக்கும் என்ன நிலைமை என்பதை முன்னறிவித்தது குஜராத் இனப்படுகொலை.

குஜராத்தில் இத்தகைய இனப்படுகொலை நடந்த உடன், அதுவரை இந்தியாவில் மதச்சார்பற்ற தன்மையின் காரணமாக நம்பிக்கையுடன் வாழ்ந்து வந்த இஸ்லாமியர்கள் தமது உயிருக்கும், உடைமைக்கும் மிகப் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டனர்.

இந்தக் கொடூரமான படுகொலைகளை அம்பலப்படுத்தி ராகேஷ் சர்மா எடுத்த final solution என்ற ஆவணமும், ஆனந்த் பட்டவர்தன் எடுத்த Ram kaa Naam என்ற ஆவணப்படமும் நம் கண் முன்னே இரத்த சாட்சியமாக நிற்கின்றது. குஜராத் இனப்படுகொலை குற்றவாளிகள், சட்டபூர்வமாக நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள். தெகல்கா அம்பலப்படுத்திய ஆவணம் குப்பைத் தொட்டியில் வீசி எறியப்பட்டு விட்டது.

இதையும் படியுங்கள்: இந்து பயங்கரவாதத்தின் நிரூபணங்கள்: மீள்பதிவு!

இந்தியாவின் கடைசி நம்பிக்கை என்று அனைவரும் நம்புகின்ற உச்சநீதிமன்றம் உள்ளிட்ட நீதித்துறை, பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களின் கதறல்களுக்கும், உயிர் வலிகளுக்கும் எந்த மதிப்பையும் கொடுக்கவில்லை.

சமகாலத்தில் நடந்த பார்ப்பன பாசிச பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து போராடிய சமூக செயல்பாட்டாளர் தீஸ்தா செதல்வாத் பொய் வழக்கு புனைந்தார் என்றும், தவறான ஆவணங்களை முன்வைத்து மோடியின் மீது கருத்துருவாக்கம் செய்தார் என்றும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Secretary of The Citizens for Justice and Peace (CJP) Teesta Setalvad addresses media representatives during a press conference in Ahmedabad on August 14, 2010, held under the auspices of The Citizens for Justice and Peace (CJP) organisation. Sandhi spoke of the Gujarat riots in 2002 in the western Indian city which were sparked off by an incident on a train in the town of Godhra. AFP PHOTO/Sam PANTHAKY (Photo credit should read SAM PANTHAKY/AFP via Getty Images)

நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மீதான இந்த இனப்படுகொலையை எதிர்த்து கம்யூனிச புரட்சியாளர்கள், ஜனநாயக சக்திகள், ஊடகவியலாளர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டுதான் உள்ளனர் என்றாலும் படுகொலைக்கான நீதி இன்று வரை இஸ்லாமியர்களுக்கு கிடைக்கவில்லை.

ஆனால் கொலை வெறியாட்டம் நடத்தியவர்களுக்கு; உள்ளூர் கவுன்சிலர், அமைச்சர் பதவி முதல் நாட்டின் பிரதமர் பதவி வரை அனைத்து மட்டங்களிலும் அதிகாரத்தை சுவைக்கின்ற வாய்ப்பு இதனால் உருவாக்கப்பட்டது. பாலியல் வன்முறையை ஏவியவர்கள், கையில் கிடைத்த சொத்துக்களை கொள்ளையடித்த கொள்ளைக்காரர்கள், கையில் சூலாயுதத்துடனும் பல்வேறு பயங்கரவாத ஆயுதங்களுடனும் இஸ்லாமியர்களை தேடித்தேடி படுகொலை செய்த கொலைகாரர்கள், ஆகிய அனைவரும் இன்று இந்து ராஷ்டிரத்தின் ‘தேச பக்தர்கள்’ ஆகிவிட்டார்கள்.

அக்கம் பக்கத்து வீட்டில் சகோதர உணர்வுடன் பழகிய இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளப்படுபவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் என்று சொல்லிக் கொள்ளப்படுபவர்கள் இடையில் குஜராத் இனப்படுகொலை மிகப் பெரும் பகை உணர்ச்சியையும், வெறுப்புணர்ச்சியையும் உருவாக்கி விட்டது.

இந்த வன்முறை வெறியாட்டத்தின் போது பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பமும் இன்று வரை மனதளவிலும், உடலளவிலும் மரித்துப் போய் வெறும் நடைபிணங்களாக வாழ்ந்து வருகின்றனர் என்பது தான் உண்மை நிலவரம் ஆகும்.

2014 ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில் உள்ள 18 கோடி இஸ்லாமியர்களும் தொடர்ந்து இலக்கு வைக்கப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்

மாட்டுக்கறியை வைத்திருந்தார்கள், சமைத்து சாப்பிட்டார்கள் என்ற தாக்குதல்களில் துவங்கி லவ் ஜிகாத் என்ற பெயரிலும் மத மாற்ற பணிகளில் ஈடுபடுகிறார்கள் என்ற பெயரிலும், கடைசியாக எதிர்த்துப் போராடுபவர்களின் வீடுகளின் மீது புல் டோசர் வைத்து இடிப்பது என்பது வரை அவர்கள் மீதான கொலை வெறியாட்டங்கள்,, சொத்துக்களை அழித்தொழிப்பது அதிகரித்துக் கொண்டே போகிறது.

சட்டபூர்வமாகவே இந்த நாட்டின் குடிமகனாக இஸ்லாமியர்கள் வாழ்வதற்கு பெரும் நெருக்கடியை உருவாக்கி,பாசிச பயங்கரவாத வழிமுறைகளில் மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் சங் பரிவார கும்பல் தொடர்ந்து முன்னேறிச் செல்கிறது.

இத்தகைய சூழ்நிலையில் இந்தியாவில் ஊடகங்கள் மற்றும் செய்தி தொலைக்காட்சி சேனல்கள் உள்ளடக்கிய கருத்து சுதந்திரம் முழுமையாக கல்லறை கட்டப்பட்டு வருவதாகவும், கருத்து சுதந்திரம் என்பதில் மிகவும் பின்தங்கி 150வது இடத்திற்கும் மேல் தள்ளப்பட்டுள்ள இந்தியாவில் மீண்டும் ஒருமுறை கருத்துரிமை சட்டபூர்வமாகவே ஒழித்துக் கட்டப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை இறுக்கும் அரசுகள்!!

இந்தியா: தி மோடி கொஸ்டின் என்ற ஆவண படத்தை BBC வெளியிட்டவுடன் அதனை தடை செய்து மோடி அரசாங்கம் உத்தரவு போடுகிறது. சமகாலத்தில் கருத்துரிமைக்கு கல்லறை கட்டுகின்ற, சாவு மணி அடிக்கின்ற இந்த கொடூரமான செயலை கண்டிப்பதற்கு பதிலாக ஆவணப்படத்தை வெளியிட்ட பிபிசி மற்றும் பிரிட்டிஷ்காரர்கள் யோக்கியமா என்று எதிர் கேள்வி எழுப்புகிறார்கள் ஆர் எஸ் எஸ்-பார்ப்பன மத வெறியர்கள்.

நீ தவறு செய்கிறாய் என்று சுட்டிக் காட்டும் போது நீ மட்டும் யோக்கியமா என்ற முதலாளித்துவ தர்க்கம் எப்போதுமே உண்மையான நீதியின் பக்கம் நிற்காது என்பதை மீண்டும் ஒரு முறை இத்தகைய தர்க்கத்தை முன்வைக்கின்ற, சொல்லிக் கொள்ளப்படும் பார்ப்பன, சூத்திர அறிஞர்கள் நமக்கு புரிய வைக்கிறார்கள்.

பிபிசி வெளியிட்டுள்ள இரண்டு பாக ஆவணங்களை சட்டபூர்வமாக தடை செய்வதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் இல்லை என்ற போதிலும் தடை செய்வதை தடுப்பதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் எந்த வழிமுறையும் இல்லை என்பதை அரசியல் அமைப்பு சட்டத்தின் மீது அளவில்லாத நம்பிக்கை கொண்டுள்ள பாமர அறிஞர்கள் புரிந்து கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

இப்படி ஒரு கருத்தை விவாதிப்பதற்கு கூட முன்வராத அளவிற்கு ஜனநாயகத்தின் மீதும் கருத்துரிமையின் மீதும் மலம் கழிக்கின்ற ஆர்எஸ்எஸ் – பாஜக உள்ளிட்ட பார்ப்பன பயங்கரவாத கும்பல் இந்தியாவை தொடர்ந்து ஆள்வது மதச் சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல, பெரும்பான்மை மக்களுக்கும் எதிரானது என்பதை உடனடியாக நாடு முழுவதும் கொண்டு செல்வோம்.

அன்று நடந்த இனப்படுகொலையை இஸ்லாமியர்களே மறந்து விட்டார்கள் மீண்டும் மீண்டும் இவர்கள் ஏன் நினைவுபடுத்துகிறார்கள் என்று அம்பலப்படுத்துகின்ற ஜனநாயக சக்திகள், புரட்சிகர அமைப்புகளின் மீது வக்கிரத்தை கக்குகின்ற பாசிஸ்டுகளின் பித்தலாட்டங்களுக்கு பதிலடி கொடுப்போம்.

கருத்துரிமைக்கு எதிரான பாசிச பயங்கரவாத ஒடுக்கு முறைகளை முறியடிக்கின்ற வகையில் வாய்ப்புள்ள இடங்களில் பிபிசி வெளியிட்ட ஆவண படங்கள் மட்டுமின்றி ஏற்கனவே ஆனந்த் பட்டவர்தன் மற்றும் ராகேஷ் சர்மா ஆகியோர் வெளியிட்ட ஆவணங்களையும் ஒளிபரப்புவதன் மூலம் இந்துராஷ்டிர பைத்தியங்களின் கனவுகளுக்கு முடிவு கட்டுவோம்.

பல்வேறு மதங்களை தனது வழிபாட்டு முறையாகவும், நம்பிக்கையாகவும் கொண்டுள்ள மக்கள் அனைவரையும் அவரவர்கள் விரும்பிய வழிபாட்டு சுதந்திரத்தை வழங்குகின்ற உண்மையான ஜனநாயக அரசு ஒன்றை, ஜனநாயக கூட்டரசு ஒன்றை நிறுவுவதன் மூலம் உறுதிப்படுத்துவோம்.

கார்ப்பரேட்-காவி பாசிசத்திற்கு எதிராக அனைத்து முனைகளிலும் உள்ள சக்திகளை ஒன்றிணைத்து ஒரு ஈட்டி முனையாக எதிர்த்தாக்குதல் தொடுக்க தயாராக வேண்டும்.

  • கணேசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here