டிசம்பர் 6, 1992- காவி குண்டர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள். மதசார்பற்ற, ஜனநாயக இந்தியா என்ற கருத்தாக்கத்தின் மீது மாபெரும் இடி விழுந்த நாள். வருகிற டிசம்பர் 6 ந்தேதியோடு அந்த பேரிடர் நடந்து 32 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் எத்தனை மின்னொளியில் ஜொலித்தாலும் பாபர் மசூதி இடிக்கப்பட்டு இந்திய நாட்டின் மீது கவிழ்க்கப்பட்ட இருளை அதனால் ஒருபோதும் அகற்ற முடியாது.
பாபர் மசூதி இடம் பற்றிய உச்சநீதிமன்ற தீர்ப்பின் பிறகு பல அப்பாவி ஜனநாயக சக்திகள் அயோத்தியோடு பிரச்சினை முடிந்தது என பெருமூச்சு விட்டனர். பல எதிர்கட்சிகளும் வழிபாட்டுத் தலங்கள் பற்றிய பிரச்சினை ராமர் கோயில் கட்டும் தீர்ப்புடன் முடியட்டும் என அறிக்கை விட்டனர்.
1991ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் சட்டம் எந்த ஒரு வழிபாட்டுத் தலமும் ஆகஸ்ட் 15, 1947 அன்று எந்த மதத்தினுடையதாக இருக்கிறதோ அப்படியே நீடிக்க வேண்டும். அதனை வேறு மதத்திற்குரியதாக மாற்றக் கூடாது. மாற்றுவதற்கு அனுமதி இல்லை என்கிறது. நீதிமன்ற வழக்கைக் காரணம்காட்டி பாபர் மசூதிக்கு மட்டும் அந்த சட்டத்தில் இருந்து விலக்களிக்கப்பட்டது. அதுவே ஒரு சந்தர்ப்பவாதமான முடிவு என்பது தனிக்கதை. 1991 வழிபாட்டுத்தலங்கள் சட்டப்படி எல்லாம் அமைதியாக இருக்கும் என்று பலரும் நம்பினர்.
படிக்க: கியான் வாபி (ஞான வாபி) மசூதி : மறுபடி பிரச்சனை புதுப்பிக்கப்படுவதேன்?
ஆர்.எஸ்.எஸ் சங் பரிவார் கும்பலோ அயோத்தியோடு நிற்பதாக இல்லை. அவர்களின் திட்டம் பெரியது.1992 பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னரே ஆர்.எஸ்.எஸ்- விஎச்பி காலிகள் முன்வைத்த முழக்கம் “அயோத்தி முடிந்துவிட்டது, அடுத்தது காசி, மதுரா” என்பதாகும். கடந்த பத்தாண்டு கால மோடி ஆட்சியில் அதற்கான வேலையைத் தீவிரப்படுத்தியுள்ளது காவி கும்பல். தற்போது அவர்கள் காசி, மதுரா போன்ற மசூதிகள் மீது மட்டுமல்ல, உலக புகழ்பெற்ற தாஜ்மகால், குதுப் மினார் போன்ற வரலாற்றுச் சின்னங்கள் மீதும் குறி வைத்துள்ளனர்.
ராமர் கோயில் கிடைத்த உத்வேகத்துடன் அடுத்தடுத்த மசூதிகள், முகலாயர் காலத்து வரலாற்றுச் சின்னங்கள் ஆகியவற்றை இடிக்கும் வேலையை நீதிமன்றத்தில் இருந்து பூஜை போட்டுத் தொடங்கியுள்ளது ஆர்.எஸ்.எஸ் சங் பரிவார் கும்பல். அயோத்தியும் இப்படித்தான் தொடங்கியது.
நீதிமன்ற வழக்குகளும் அதன் மூலம் நடத்தப்படும் ஆய்வுகளும் எப்படி மசூதிகளுக்கு ஆபத்து என்பதை புரிந்து கொள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்ட வரலாற்றை சுருக்கமாகவேனும் திரும்பி பார்ப்பது அவசியமாகிறது.
அயோத்தி பாபர் மசூதி 1520களில் கட்டப்பட்ட ஐநூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சின்னம். அயோத்தி நகரில் ராமர் பிறந்ததாக கதை இருந்தாலும் அந்த ஊரில் உள்ள பல்வேறு மடங்கள் ஆளுக்கு ஒரு இடத்தைக் குறிப்பிட்டு அங்குதான் ராமர் பிறந்ததாக கூறி பூஜை செய்துவந்தனர். அதில் ஒரு கும்பல் பாபர் மசூதிக்கு அருகாமை இடத்தை குறிவைத்து வேலை செய்தது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வழக்குகள் நடத்தப்பட்டாலும் பாபர் மசூதி இடம் முக்கிய பிரச்சினையாக இருந்தது இல்லை. உள்ளூரில் இந்து-முஸ்லிம் மக்களிடையே பெரும் மோதல் இருக்கவில்லை.
1947க்குப் பிறகுதான் பாபர் மசூதி முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாக ஆர்.எஸ்.எஸ்- இந்து மகாசபா கும்பலால் மாற்றப்பட்டது. 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 22 அன்று நள்ளிரவில் குழந்தை ராமர் சிலை திருட்டுத்தனமாக பாபர் மசூதிக்குள் வைக்கப்பட்டது. அப்படி திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட சிலையை அகற்ற அப்போதைய பைசாபாத் கலெக்டர் கே.கே.நாயர் ஏற்கவில்லை. பிரச்சினை அதிகமானதன் விளைவாக பாபர் மசூதிக்குப் பூட்டுப் போடப்பட்டது.
அதிலிருந்து 40 ஆண்டுகள் கழித்து நீதிமன்றத்தின் துணையுடன் பிரதமர் இராஜிவ் காந்தியால் இந்துக்களின் வழிபாட்டுக்காக பாபர் மசூதி பூட்டு திறக்கப்பட்டது. (இதே காலத்தில்தான் இந்தியாவின் சந்தைக்குப் போடப்பட்டிருந்த பூட்டு திறக்கப்பட்டது. மறுகாலனியாக்க பொருளாதாரக் கொள்கை அமலுக்கு வந்தது). அதுவரை மெல்ல நகர்ந்த ராமஜென்ம பூமி இயக்கம் அத்வானி தலைமையில் தீயாய் பரவியது. அத்வானியின் ரதயாத்திரையினால் கலவரங்கள் வெடித்து ஆயிரக்கணக்கானவர்கள் பலியானார்கள். 1991 ஆம் ஆண்டு பாபர் மசூதியை இடிக்க வந்த காவி கும்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தடுத்தது உ.பி முலாயம்சிங் அரசு.
அதே ஆண்டு, முலாயம்சிங் ஆட்சி கவிழ்க்கப்பட்டு பாஜக ஆட்சிக்கு வந்தது. டிசம்பர் 6, 1992 பாபர் மசூதி முன்பு கரசேவை கும்பலுடன் பூஜை நடத்த அனுமதி கோருகிறது அத்வானி தலைமையிலான பாஜக கும்பல். பாபர் மசூதிக்கு எதுவும் அசம்பாவிதம் நடக்காது என்று உறுதி அளித்து இருந்த பாஜக முதல்வர் கல்யாண் சிங் டிசம்பர் 6,1992 அத்வானி தலைமையிலான கரசேவகர் கும்பல் கூட அனுமதித்தார். அந்த கரசேவகர்கள் கும்பல் கூடிய சில மணி நேரங்களில் பாபர் மசூதி தரைமட்டமானது.
அயோத்தி பாபர் மசூதியில் நள்ளிரவில் திருட்டுத்தனமாக ராமர் சிலை வைக்கப்பட்ட போதோ, பாபர் மசூதி பூட்டு ராமர் சிலை வழிபாட்டுக்காக திறக்கப்பட்ட போதோ, அத்வானியின் ரதயாத்திரை தொடங்கிய போதோ அவை பாபர் மசூதி இடிப்புக்குக் கொண்டு செல்லும் என்று யாரேனும் புரிந்து கொண்டிருப்பார்களா? பாபர் மசூதியை காவிகள் இடிக்கும் அபாயம் உள்ளது என்று கூறியிருந்தாலோ ஏற்றிருப்பார்களா என்பது சந்தேகமே. ஆனால் பாபர் மசூதி இடிப்பு காவிக் குண்டர்களால் நடந்தேறிவிட்டது. பாபர் மசூதி இடிப்பு கடப்பாரையுடன் தொடங்கவில்லை என்பதே அதன் வரலாறு நமக்கு உணர்த்துவது.
பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது நடந்த வழக்கிலும் பாபர் மசூதி இருந்த இடத்தின் மீதான வழக்கிலும் இழைக்கப்பட்ட அநீதி நமக்கு தெரிந்ததே.
அதேசமயம், பாபர் மசூதி பிரச்சினையில் இருந்து புதிய வழிமுறையை அனுபவமாக கற்றுக் கொண்டுள்ளனர் ஆர்.எஸ்.எஸ் சங்கி கும்பல். ஒரு மசூதியை தேர்ந்தெடுத்து அங்கு முன்பு இந்து கோயில் இருந்ததாக பிரச்சினையை கிளம்புவது, அதையே பிரச்சாரமாக செய்வது, போதுமான அணிதிரட்டலுக்குப் பிறகு, அந்த கும்பலின் மூலம் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வது என்பதே அதுவாகும். எளிமையாக சொல்ல வேண்டும் எனில் பயிரிடுவதற்கு முன் மண்ணை நன்கு உழுது, தண்ணீர் விட்டு பதப்படுத்துவது போல இந்த வேலையை செய்கிறது சங்கி கும்பல்.
படிக்க: டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு கருப்பு தினம்!
மசூதிகள், வரலாற்றுச் சின்னங்களை இடித்துத் தள்ளுவதற்கு முதற்படியாக அந்த மசூதிகள், வரலாற்றுச் சின்னங்களுக்குக் கீழே பழமையான இந்து கோயில் உள்ளது. அதை ஆய்வு செய்ய வேண்டும் என நீதிமன்றங்களில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். ஞானவாபி, சம்பல் ஆகிய இரண்டு இடங்களிலும் அதற்கான ஆய்வுநடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழிபாட்டுத்தலங்கள் சட்டம் வழிபாட்டுத்தலத்தின் தன்மையை மாற்றுவதை தடைசெய்கிறது, ஆய்வு செய்வதை தடுக்கவில்லை என்று வியாக்கியானம் செய்து 2022 ஆம் ஆண்டு ஞான்வாபி மசூதியை திறந்துவிட்டவர் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட். அவர் இந்த நாட்டிற்கு இழைத்த துரோகங்களில் இது மிக முக்கியமானது. ஒட்டுமொத்த இந்திய சமூகத்தையே மதரீதியாக பிளவுபடுத்தக் கூடியது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் இத்தகைய தீர்ப்பு இது போன்ற பல வழக்குகளின் போக்கில் தாக்கம் செலுத்தக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நடந்த சம்பல் பிரச்சினையை எடுத்துக்கொள்வோம். சம்பல் பகுதியில் உள்ள பாபர் காலத்து 500 ஆண்டு கால பழமை வாய்ந்த ஷாகி ஜமா மசூதியை தேர்ந்தெடுத்தனர். சம்பல் நகரத்தில்தான் கல்கி அவதாரம் தோன்றவுள்ளதாக புராணம் சொல்கிறது. அவரது கோயிலை இடித்துவிட்டே இந்த மசூதி கட்டப்பட்டுள்ளது. அதனை ஆய்வு செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. முஸ்லிம் தரப்பு வாதத்தைக் கேட்காமலேயே ஆய்வுக்கு உடனடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த ஆய்வை எதிர்த்த முஸ்லிம் மக்கள் போராட்டம் கலவரமாக மாற்றப்பட்டது. அது பற்றிய விவாதங்களில் போராடிய முஸ்லிம் மக்களே வன்முறையாளர்கள் எனக் குற்றஞ்சாட்டப்படுகிறார்கள்.
இந்த கலவரம் பற்றி வட இந்திய ஊடகங்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் நடக்கும் ஆய்வை எப்படி தடுக்கலாம் என்று சட்டத்தை பாதுகாக்க முழங்குகின்றனர். வெறும் ஆய்வுக்கு ஏன் அஞ்ச வேண்டும் என கேள்வி எழுப்புகின்றனர்.
அன்று, பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது ஊடகங்கள் ஏறத்தாழ அனைத்துமே அந்த படுபாதக செயலை கண்டித்தன. இந்தியா டூடே இதழ் “தேசத்தின் அவமானம்” என்று வெளியிட்ட அட்டைப்பட கட்டுரை மிக முக்கியமான சான்று.
32 ஆண்டுகள் கழித்து, இன்று பரிசீலித்தால், இன்று அத்தகைய குற்றச் செயல் நடந்தால் ஊடகங்கள் கண்டிக்குமா என்பதைவிட அதை ஆதரித்து எழுதுவார்கள் என்பதே நாம் வந்தடைந்துள்ள மிக மோசமான நிலைமை.
“இஸ்லாமிய மக்களை இரண்டாந்தர குடிமக்களாக்க வேண்டும், இந்துராஷ்டிரம் அமைக்க வேண்டும்”
என்று ஆர்.எஸ்.எஸ் காவி கும்பல் கங்கனம் கட்டிக்கொண்டு அலைகின்றது. அதற்கு உறுதுணையாக நீதித்துறையும் ஊடகங்களும் செயல்படுகின்றன என்பதுதான் மிகவும் கவலைக்குரிய நிலைமை.
இன்னொரு புறம், ஜனநாயக சக்திகளும், இஸ்லாமிய மக்களும் பெரிதும் நம்பியுள்ள 1991 வழிபாட்டுத் தலங்கள் சட்டமும் மோடி அரசால் தூக்கியெறியப்படும் அபாயமும் உள்ளது. நாம் இனியும் வேடிக்கை பார்த்தால் காசா பேரழிவின் இந்திய பிரதியை பார்க்க நேரிடும்.
இந்த நாட்டின் கால் பகுதி மக்கள் மீது நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்களை ஒரு போதும் நாம் ஏற்க கூடாது. உணவு, உடை, இருப்பிடம், வழிபாட்டுத்தலம் ஆகியவற்றில் சிறுபான்மை மக்களின் உரிமைகள் நசுக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இந்துராஷ்டிர திட்டத்தை நோக்கி ஆர்.எஸ்.எஸ்.-பாஜக முன்னேறுவதை முறியடிக்க வேண்டும்.
இத்தகைய மதரீதியான பிளவுபடுத்தல்களின் ஊடாக கார்ப்பரேட் சேவையையும் தீவிரமாக நடத்தி வரும் பாசிச மோடி அரசை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றுவதோடு மட்டுமல்லாமல், ஆர்.எஸ்.எஸ் சங் பரிவார் கும்பலை தடை செய்யவும், கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கப்படும் சலுகைகளை ரத்து செய்யவும் கூடிய ஜனநாயகக் கூட்டரசு ஒன்றை கட்டியமைப்பதே நம்முன் உள்ள கடமையாகும்.
- திருமுருகன்