
சமீபத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் 33 பேரில் ஒரேயொரு இஸ்லாமியரும், ஒரேயொரு கிறித்தவரும் மட்டுமே இருக்கிறார்கள் என்ற செய்தியை வாசிக்க நேர்ந்தது. அதோடு கூடவே, 33 நீதிபதிகளில் 9 பேர் விஸ்வ இந்து பரிசத்தின் ஒரு நிகழ்ச்சியிலாவது கலந்து கொண்டுள்ளனர் என்ற செய்தியையும் வாசிக்க நேர்ந்தது. இதில் முதலில் சொன்ன இரண்டு நீதிபதிகள் தவிர 31 நீதிபதிகளில் 9 பேர் விஸ்வ இந்து பரிசத் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள் என்று கொண்டால் கிட்டத்தட்ட 30 சதவிகிதம் நீதிபதிகள் வெளிப்படையாக தாங்கள் இந்தியாவில் மிகத் தீவிரமாக வெறுப்புப் பிரச்சாரத்தையும் வன்முறையையும் விதைக்கும் ஒரு அமைப்போடு தொடர்பில் இருக்கிறார்கள் என்று பொருள்.
நாடாளுமன்ற பலம் மூலம் 2 கோரிக்கை நிறைவேற்றம்
சங்பரிவார் ஆரம்ப காலம் முதல் இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் மற்றும் மதச்சார்பின்மைக்கு சவால் விடும் வகையில் முன்வைத்த கோரிக்கைகள் மூன்று.
1. அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து விட்டு அந்த இடத்தில் ராமருக்கு கோவில் கட்டுவது,
2. இந்திய மக்களின் சார்பாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மூலம் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவை நீக்குவது,
3. பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்துவது.
நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு எதிர்க்கட்சிகள் மற்றும் பெரும்பான்மை மக்களின் கருத்துக்கு எதிராக தனக்கு இருக்கும் நாடாளுமன்ற பலத்தை பயன்படுத்தி முதல் இரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொண்டார்கள். சங்பரிவார் அமைப்புகளின் தன்மை, ஆர்எஸ்எஸ் எனும் பாசிசத் தன்மை கொண்ட அமைப்பு, அதன் தாளத்திற்கு ஏற்ப ஆடும் பாஜக இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டால் அது ஒன்றும் ஆச்சரியமான விஷயம் அல்ல. ஆனால், இவை இரண்டும் வழக்குகளாக நீதிமன்றத்திற்கு அதுவும் உச்சநீதிமன்றத்திற்கு சென்றபோது, இரண்டிலும் அளிக்கப்பட்ட தீர்ப்புகள் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் அமைந்திருந்தது.
இரண்டுக்கும் நீதிமன்ற ஒப்புதலை பெற்றார்கள்
அயோத்தி தீர்ப்பு வழங்கப்பட்ட போது 5 நீதிபதிகள் கொண்ட அமர்வின் சார்பில் ஏகோபித்து எழுதப்பட்ட தீர்ப்பை எழுதியது யார் என்பது வெளிப்படுத்தப்படவில்லை. ஆனால், அந்த தீர்ப்பை பின்னர் இந்திய தலைமை நீதிபதியாக உயர்த்தப்பட்ட தனஞ்செய் சந்திர சூட் எழுதியதாக செய்திகள் வெளியாகின. அந்த தீர்ப்பு எழுதப்படுவதற்கு அடிப்படையாக ஆவணங்களையும், அரசமைப்புச் சட்டத்தையும் தேடி பரிசீலித்து எழுதியதாக அவர் சொல்லவில்லை. மாறாக, பகவான் ராமனிடம் தான் வேண்டுகோள் வைத்ததாகவும் அவர் வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்த தீர்ப்பை எழுதியதாகவும் தெரிவித்தார். உண்மையில், இந்த வழக்கில் பகவான் ராமர் (ராம் லல்லா) ஒரு தரப்பு என்கிறபோது ராமரிடமே அப்படி கேட்டேன் என்று சொன்னது முற்றிலும் ஏற்க இயலாத கருத்தாகும். இது சங்பரிவாரை விஞ்சும் நம்பிக்கையே ஆதாரம் என்று செயல்பட்ட மிக மோசமான நடவடிக்கை ஆகும். இதன் மூலம் நீதிபதி சந்திர சூட் சட்டங்களின் அடிப்படையில் தீர்ப்பு எழுதுவதற்கு பதிலாக நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு எழுதியிருக்கிறார் என்று பொருள். உண்மையில் அப்படி எழுதப்பட்ட தீர்ப்பு செல்லத்தக்கதாகவோ, ஏற்கத்தக்கதாகவோ அமையாது.
இதேபோன்று, 370ஆவது பிரிவு ரத்து செய்தது சம்பந்தமான வழக்கில் அவர் முந்தைய வழக்கில் இருந்தது போல 5 நீதிபதிகளில் ஒருவர் என்றில்லாமல் அவரே தலைமை நீதிபதியாகவும் இருந்தார். அந்த வழக்கில் 2024 செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தலை நடத்தி விடுவோம் என்றும், விரைவில் யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்ட ஜம்மு – காஷ்மீர் பகுதிகளை மாநிலமாக மீண்டும் உருவாக்கம் செய்வோம் என்றும் ஒன்றிய அரசாங்கம் சொன்னதை ஏற்று அந்த வழக்கையும் முடித்து வைத்தார். அதாவது, சங்பரிவாரின் நீண்ட நாள் கோரிக்கைகள் மூன்றில் இரண்டை நிர்வாக ரீதியாக அவர்கள் நிறைவேற்றிக் கொண்டதை உச்சநீதிமன்றத்தின் ஒப்புதலுக்கு உள்ளாக்கினார்.
விநோத விளக்கம் மூலம் கலக விதை விதைப்பு
பாபர் மசூதியை இடிக்க வேண்டுமென்று சங்பரிவார் இந்தியா முழுவதும் குறிப்பாக வட மாநிலங்களில் கலகங்களையும், வன்முறைகளையும் கட்ட விழ்த்து விட்டுக் கொண்டிருந்த காலத்தில் ஒன்றிய அரசாங்கம் வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடு கள்) சட்டம் ஒன்றை 1991 ஆம் ஆண்டு நிறைவேற்றியிருந்தது. அதன்படி, எந்த ஒரு வழிபாட்டுத் தலமும் 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று அதாவது இந்தியா சுதந்திரம் பெற்ற அன்று எந்த மதத்திற்கு அல்லது ஒரு மதத்தின் எந்த குறிப்பிட்ட பிரிவுக்கு உரியதாக இருந்ததோ அப்படியே இருக்க வேண்டும். அதில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது என்பதாகும். பாபர் மசூதி பிரச்சனை அப்போது உச்சநீதிமன்ற விசாரணையில் இருந்ததால் அதற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்தான் கலகக் கும்பல் அடுத்ததாக ஞானவாபி மசூதிக்கு கீழே கோவில் இருப்பதாக கதை கட்டியது.
படிக்க: நீதிபதி டி.ஒய். சந்திரசூட்: நம்பத்தகுந்த நீதிமானா?
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் முன்பு வந்த போது அந்த மசூதிக்கு கீழே ஆய்வு செய்ய சந்திரசூட் ஒப்புதல் அளித்தார். அதற்கு மிகவும் விநோதமாகவும் எள்ளி நகையாடத்தக்க வகையில் ஒரு விளக்கம் அளித்தார். இன்னும் சொல்லப் போனால் அந்த தீர்ப்பு நீதித்துறைக்கு தலைக்குனிவை ஏற்படுத்துவதாகும். அதைவிட, ஒரு பாபர் மசூதிக்கு நடந்து கொண்டிருந்த கலகங்களையும் வன்முறைகளையும் ரத்தக் களறிகளையும் ஒவ்வொரு மசூதியையும் முன் வைத்து நடப்பதற்கான வழி ஏற்படுத்திய தீர்ப்பாகும். அதாவது 1947 ஆகஸ்ட் 15 அன்றைய நிலையை மாற்றக் கூடாது என்று தான் சட்டம் இயற்றப்பட்டதே தவிர ஆய்வு செய்யக் கூடாது என்று சட்டம் சொல்ல வில்லை. எனவே, ஆய்வு செய்வதற்கு தடை ஏதும் இல்லை என்று அவர் தீர்ப்பு எழுதினார். மாற்றுவதற்கு வாய்ப்பில்லை என்றால் ஆய்வு செய்து என்ன செய்யப் போகிறோம். ஆய்வை முன்வைத்து மாறுதல் செய்ய வேண்டுமென்று கலவரக்காரர்கள் திட்டமிட்டு கலகத்தில் ஈடுபடுவதற்கு இது ஒரு வாய்ப்பை அளித்துவிட்டது. உண்மையில், சங்பரிவாரின் எதிர்பார்ப்பையும் மிஞ்சி மசூதிகளுக்கு கீழே எல்லாம் தோண்டலாம் என்கிற வாய்ப்பை வழங்கிய தீர்ப்பாகும் இது.
எத்தனை பெரிய கலக விதையை அவர் விதைத்து விட்டுச் சென்றிருக்கிறார் என்பதை நாடு தற்போது பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த தீர்ப்பிற்கு பிறகு சம்பல் மசூதியை முன்வைத்து நடைபெற்ற வன்முறையில், போலீஸ் துப்பாக்கிக் சூட்டில் நான்கு இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதையும் மறந்திருக்க முடியாது. உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த சந்திரசூட் சங்பரிவாரத்தின் ஒரு அங்கமா என்று நமக்கு தெரியாது. ஆனால், சங்பரிவாரத்தை மிஞ்சி அதன் தேவைகளை நிறைவேற்றியவராக அவரது தீர்ப்புகள் அமைந்திருக்கின்றன என்று சொன்னால் அது மிகையல்ல.
சிறுபான்மையினரை சிறுமைப்படுத்தும் நீதிபதிகள்
அரசமைப்புச் சட்டம் உட்பட எல்லாவித பிரச்சனைகளின் மீது இந்த சமூகத்தின் அங்கம் என்கிற முறையில் நீதிபதிகளுக்கு தனிப்பட்ட கருத்துக்கள் இருப்பதற்கு வாய்ப்புண்டு. ஆனாலும், நீதிபதிகள் தீர்ப்பு எழுதும்போது சட்டத்திற்கும், நீதிக்கும் உட்பட்டு தீர்ப்புகளை எழுதி வந்திருக்கிறார்கள். அதே போன்று, அரசமைப்புக்கும், சமூக அமைதிக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் ஊறுவிளைவிக்கும் கருத்துக்கள் எதையும் பதவியில் உள்ள நீதிபதிகள் தெரிவிப்பதில்லை. மாறாக, நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு நீதிபதிகளும் பெரும்பான்மை வாதத்தை ஆதரித்தும், சிறுபான்மை மக்களை சிறுமைப்படுத்துகிற அல்லது அச்சுறுத்துகிற கருத்துக்களையே சொல்வதும் அவர்கள் அதன் மூலம் பதவி உயர்வு பெற்றுச் செல்வதும் புதிய போக்காக வளர்ந்திருக்கிறது.
படிக்க: வி.எச்.பி கூட்டத்தில் மதவெறியைக் கக்கிய உயர்நீதிமன்ற நீதிபதி மீது நடவடிக்கை எடு!
1. 2024ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதி சேகர்குமார் யாதவ் இஸ்லாமியர்களையும், இஸ்லாமியக் குழந்தைகளையும் இழிவுபடுத்தும் வகையிலான வார்த்தைகளை பயன்படுத்தியதோடு “நாடு பெரும்பான்மை மதத்தவர் விருப்பப்படியே ஆளப்பட வேண்டும்” என்றும் தெரிவித்திருந்தார். அதைவிட 3 ஜிக்கள் தான் இந்தியாவின் புனிதம். பசு (Gaay), கங்கை மற்றும் கீதை என்று கூறியிருக்கிறார். அதாவது இந்த மூன்றுக்கும் மாற்றானது அல்லது இந்த மூன்றையும் புனிதமாக கருதவில்லை என்றால் அது இந்தியாவை அவமானப்படுத்துவது என்கிற பொருளில் குறிப்பிட்டிருந்தார்.
2. 2024ஆம் ஆண்டு கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி வேதவியாசச்சார் ஸ்ரீஷானந்தா பெங்களூரில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் கோரிப்பாளையா பகுதியை பாகிஸ்தான் என்று அடையாளப்படுத்தினார்.
3. 2019ஆம் ஆண்டு கொச்சி தமிழ் பிராமணர் உலக மாநாட்டில் பேசிய சிதம்பரேஷ் என்கிற கேரள உயர்நீதிமன்ற நீதிபதி “சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை எதிர்க்க வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.
4. 2019ஆம் ஆண்டு மேகாலயா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த எஸ்.ஆர்.சென் “நாடு பிரிவினைக்குப் பின்னர் இந்தியாவை இந்துராஷ்டிரமாக அறிவித்திருக்க வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.
5. 2024ஆம் ஆண்டு கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த சித்தரஞ்சன்தாஸ் ஓய்வுபெறும் போது வெளிப்படையாகவே “நான் நீண்ட காலமாக குழந்தைப் பருவம் முதல் ஆர்.எஸ்.எஸ்.சில் உறுப்பினராக இருந்திருக்கிறேன்” என்று பேசியிருக்கிறார்.
6. 2023ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற விக்டோரியா கௌரி வழக்கறிஞராக இருந்த போது 2018இல் “இங்கே பச்சை பயங்கரவாதம் மட்டுமல்ல; வெள்ளை பயங்கரவாதமும் இருக்கிறது” என்று ஒருசேர இஸ்லாமிய வெறுப்பையும், கிறித்துவ வெறுப்பையும் சேர்த்து விதைத்திருக்கிறார்.
7. 2024ஆம் ஆண்டு கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த எம்.நாகப்பிரசன்னா மசூதிக்குள் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்த போது உள்ளே நுழைந்து ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்ட இருவர் மீதான வழக்கில் “ஒரு இந்து மசூதிக்குள் ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டால் என்ன தவறு இருக்க முடியும்” என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்.
விஎச்பி மாநாட்டில் 40 நீதிபதிகள்…
இப்படி தொடர்ச்சியாக சொல்லிக்கொண்டே போக முடியும். ஒரு கணக்கின்படி 2024ஆம் ஆண்டு விஸ்வ இந்து பரிசத் நடத்திய ஒரு மாநாட்டில் சுமார் 40 உயர் நீதிமன்ற நீதிபதிகளும், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
இப்படி வெறுப்பு விதையை தொடர்ச்சியாக விதைத்துக் கொண்டிருக்கும் ஒரு அமைப்பின் கூட்டங்களில் வெளிப்படையாக பங்கேற்பதும் பேசுவதும் இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் குறிவைத்து தாக்குவதையும் நாட்டை பெரும்பான்மை மதத்தவரின் விருப்பத்திற்கு உட்பட்டு நடத்த வேண்டும் என்று சொல்வதும் அப்பட்டமான சட்ட மீறல்கள். இவை அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான அறைகூவல்களே. இப்படிப்பட்டவர்கள் தங்களிடம் வரும் சிறுபான்மையினர் சார்ந்த, மதச்சார்பின்மை சார்ந்த, வழிபாட்டுத் தலங்கள் சார்ந்த வழக்குகளில் நடுநிலைமையாக நேர்மையோடு தீர்ப்பளிப்பார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்.
ஆர்.எஸ்.எஸ்.சின் துணை அமைப்பான அகில பாரதிய அதிவக்தா பரிசத் இந்தியா முழுவதும் 15 ஆயிரம் வழக்கறிஞர்களையும் அரசு தலைமை வழக்கறிஞர்களையும், அரசு வழக்கறிஞர்களையும் தனது உறுப்பினராகச் சேர்த்துள்ளது. நீதிபதிகள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் இவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாகச் சொல்லப் படுகிறது. பாதிக்கப்பட்ட மக்களின் கடைசிப் புகலிடம் நீதிமன்றம் என்ற நம்பிக்கை பொய்த்துப் போகும் அளவிற்கு நீதித்துறை சங்பரிவாரின் ஆதிக்கத்தில் இருக்கிறது என்பதே கவலைக்குரிய உண்மையாகும்.
நன்றி
க.கனகராஜ் (மாநில செயற்குழு உறுப்பினர் சிபிஎம்)








தோழர் கனகராஜ் அவர்களின் நீதித்துறையில் ஆர் எஸ் எஸ் சங் பரிவார் கூட்டம் எந்த அளவிற்கு ஊடுருவி வியாவித்துள்ளது என்பதனை தெட்டத் தெளிவாக விளக்கியுள்ளார். ‘மதச்சார்பின்மை கொள்கையை நிலைநாட்டும் இந்தியாவில்’ ஜனநாயக தூண்களில் ஆகப பெருந்தூண் என மார் தட்டிக் கொள்ளும் நீதிமன்றங்களின் லட்சனங்களே இந்த அளவில் உள்ளது என்று சொன்னால் நாட்டில் சாதாரண ஏழை எளிய மக்கள் தங்களின் பிரச்சனைகளுக்காக நீதியை எங்கே சென்று பெற முடியும்? நீதித் துறை மட்டுமல்ல; அனைத்து அதிகாரவர்க்க துறைகளிலும் காவிக் கூட்டம் ஊடுருவிப் பாய்ந்துள்ளது என்பது வெள்ளிடை மலை
உண்மை. அதற்கு குஜராத் உ,பி. ம.பி. ராஜஸ்தான் பீகார் அரியானா என வட மாநிலங்களை மட்டும் தேட வேண்டிய அவசியம் இல்லை. குஜராத் ஒன்றின் உதாரணத்தை எடுத்துக் கொண்டாலேயே
அங்கு நிகழ்ந்த குலைபாதகச் செயல்களுக்கு எல்லாம் ‘நீதி அரசர்கள்’ என்று பவனி வருவோர் இவ்வளவு இழிந்த தீர்ப்புகளை அளித்தார்கள் என்பதையும், சங்கிகளுக்கு எதிராக திருப்பலித்த நீதிபதிகள் எப்படி கொலை செய்யப்பட்டார்கள் என்பதையும் விரிவாகவே விளக்கலாம். ஆனால் அது பின்னூட்டமாக இருக்காது. தனித்த கட்டுரையாக மாறிவிடும்.
ஒன்றைச் சொல்லி எனது கருத்தினை முடிக்கிறேன். தமிழ்நாட்டில் அண்மையில் மதுரை திருப்பரங்குன்றத்தில் முருகன் கோவில் சிக்கந்தர் தர்கா பிரச்சனையில் வேண்டுமென்றே காவி கூட்டம் உட்பகுந்து அயோத்தி பாபர் மசூதியை போன்று இங்கேயும் கலவரத்தை தூண்டி ஆண்டாண்டு காலமாக மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு வழிபாட்டுத்தலமாக திகழ்ந்துவரும்
சிக்கந்தர் தர்காவை இடித்துத் தள்ள சங்கிகள் எக்காளமிட்டு இருப்பதையும், அதனை நீதித்துறையின் கீழ் – வருவாய்த் துறையின் கீழ் பஞ்சாயத்துக்கு கொண்டு செல்லப்பட வைத்ததற்கும் அதனை ஏற்று மதுரை வருவாய் கோட்டாட்சியர் சங்பரிவார் கூட்டத்திற்கு ஏதுவான அறிக்கை ஒன்றை கொடுத்ததையும், சமீபத்திய மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பு ஒன்றில் ஆர் எஸ் எஸ் காரரின் மனைவியான ஸ்ரீமதி என்ற நீதிபதி சிக்கந்தர் தர்காவில் ஆடு கோழி பலிகிட கூடாது என்றும், அது தாவாவிற்குரிய இடம் தான் என்றும், இது தொடர்பாக சிவில் கோர்ட்டில் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் வழங்கிய இழிவான தீர்ப்பினைக் கண்டோம். அதனால் தான் தந்தை பெரியார் உச்சநீதிமன்றத்தையே ‘இது உச்ச நீதிமன்றம் அல்ல; உச்சி குடுமி
நீதிமன்றம் ‘ என அன்றே சொன்னார்; அது இன்றும் இருக்கிறது என்பதுதான் கொடுமை. இவற்றைத் தான் கட்டுரையாளர் சிறப்பாக பதிவு செய்து எச்சரித்திருக்கிறார்.
சங்பரிவாரக் கூட்டம் அரிசி பெரும்பான்மை மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளை எல்லாம் ஒற்றடைகளை போல ஒதுக்கி தள்ளிவிட்டு பாசிச பார்ப்பன RSS மதவெறி செயற்பாடுகளின் மூலம் தம் இருப்பைத் தொடர்ந்து அராஜகமாக தக்கவைத்துக் கொள்ளவும், நாட்டை இந்து ராஷ்ட்ரா என அறிவிக்கவும் துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறது. ஹிட்லர் பாணியில் நாட்டை ஒற்றை சர்வாதிகாரத்தின் கீழ் கொண்டுவரத் துடிக்கிறது. நாமும் ஹிட்லர் முசோலினிகளுக்கு, ஆசான் ஸ்டாலின் தலைமையிலான மக்கள் படையாம் செம்படை புகட்டிய பாடம் போல காவிக் கூட்டத்திற்கும் அதன் தலைமை சக்திகளுக்கும் புகட்டியே ஆக வேண்டும் என்பதைத்தான் இக்கட்டுரை நமக்கு உணர்த்துகிறது என்பதாக உணர்கிறேன்.
மேற்கண்ட எனது பின்னூட்டத்தில் வழக்கம்போல் ஒரு சில எழுத்துப் பிழைகள் உள்ளன. அதனைப் பொருத்தாற்றி கொண்டு திருத்தி சரியாக படித்துக் கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.