அன்பார்ந்த வாசகர் தோழர்களே!

தமிழகத்தின் அரசியல் சூழலானது பார்ப்பன பாசிசத்தை முன்வைக்கின்ற, கார்ப்பரேட் பாசிசத்துடன் கைகோர்த்துக்கொண்டு வெகுஜன மக்களை அடக்கி ஒடுக்குகின்ற, ‘மாற்றத்தை முன்வைக்கின்றோம்’ என்ற போர்வையில் முளைத்துள்ள பாசிசக் கோமாளி விஜய்யின் ஆட்சியின் கீழ் விழுந்துள்ளது.

இத்தகைய சூழலில் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது; புரட்சியின் மையமான கடமையான அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு பெரும்பான்மையான உழைக்கும் மக்களை, அதாவது பாட்டாளி வர்க்கத்தை தயார்படுத்துவது என்ற அரசியல் தேவை முன்னபோதையும் விட பல மடங்கு அதிகரித்துள்ளது.

கார்ப்பரேட் காவி பாசிச எதிர்ப்பு என்ற வகையிலும் சரி! புதிய ஜனநாயகப் புரட்சியை நோக்கி பெரும்பான்மை உழைக்கும் மக்களை அணி திரட்ட வேண்டும் என்ற வகையிலும் சரி! மார்க்சிய லெனினியத்தை பரந்துபட்ட மக்களின் அரசியல்-சித்தாந்தமாக, அவர்களின் சித்தாந்த கண்ணோட்டமாக மாற்றுவதன் மூலம் தான் மேற்கண்டக் கடமைகளை நிறைவேற்ற முடியும் என்று கருதுகிறோம்.

இதற்கு உதவுகின்ற வகையில் மார்க்சிய லெனினிய ஆசான்கள் முன்வைத்த முக்கியமான அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கட்டுரைகளை அவ்வப்போது புதிய ஜனநாயகம் தினசரியில் வெளியிடலாம் என்று கருதுகிறோம்.

“இதையெல்லாம் புத்தகத்தை கூறிவிட்டால் வாசகர்களே படித்துக் கொள்ள மாட்டார்களா? தினசரியை கலைக்களஞ்சியமாக மாற்ற முயற்சிக்கிறீர்களா? இதையெல்லாம் உட்கார்ந்து படிக்கின்ற அளவிற்கு வாசகர்களுக்கும் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கும் பொறுமை இருக்கின்றதா?” என்ற கேள்விகளை எழுப்புவதன் மூலம் மார்க்சிய லெனினியத்தை கற்றுக் கொடுக்கும் அடிப்படைத் தேவைகளில் இருந்து விலகிச் செல்ல நினைக்கின்றவர்களுக்கு நாம் முன்வைக்கின்ற பதில் இது ஒன்றுதான்.

பாசிச எதிர்ப்பு காலகட்டங்களில் சோசலிச அல்லது புதிய ஜனநாயகப் புரட்சிக்கு முன்னதாக ஒரு இடைக்கட்டத்தை கடக்கும்போது, எதிரிகள் யார்? நண்பர்கள் யார்? என்பதை தெளிவாக புரிந்து கொண்டு வரையறை செய்வதும், எதிரிகளுக்கு எதிராக ஊசலாடுகின்ற சமரச சக்திகளை எவ்வாறு கையாள்வது என்பதை புரிந்துக் கொள்வதற்கும் மார்க்சிய லெனினியம் மட்டும் தான் ஒரே தீர்வு என்பதை மீண்டும் ஆணித்தரமாக முன்வைக்கின்றோம்.

பாசிச எதிர்ப்பில் ஊசலாடுகின்ற திராவிட இயக்கங்கள் மற்றும் நாடாளுமன்ற இடதுசாரிகள், ஜனநாயக சக்திகள் மற்றும் தனி நபர்கள் ஆகியவர்களை பாசிச எதிர்ப்பு அணியின் கீழ் ஒன்றிணைப்பதற்கு எமது முயற்சிகளை ஆதரிக்கும்படி தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

தோழமையுடன்,
ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்.

எளிமையான வாழ்க்கை, கடுமையான உழைப்பு,
சாமானிய மக்களுடன் பிணைந்த வாழ்க்கை நடைமுறை-
இதுவே நமது பாதை!
தோழர் மாசேதுங்,
மார்ச் 1957.

நெறிப்படுத்து இயக்கத்தை விரைவில் நடத்த உள்ளோம். இந்த இயக்கத்தின் போது வெளிவர உள்ள விமர்சனங்கள், சுய விமர்சனங்கள் யாவும் கட்சிக்குள் நிலவும் முரண்பாடுகளை மட்டுமல்ல. கட்சிக்கும் மக்களுக்கும் இடையே நிலவும் முரண்பாடுகளையும் தீர்க்க உதவும். நெறிப்படுத்து இயக்கத்தின் நோக்கமும் அதுவே. அதிகார போதை, குழுவாதம், அகநிலை வாதம் ஆகிய மூன்று தீமைகளுக்கு எதிராக இந்த இயக்கத்தை நடத்த உள்ளோம். ‘எளிமையான வாழ்க்கை, கடுமையான உழைப்பு’ என்ற நமது கட்சியின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்ல நெறிப்படுத்து இயக்கத்தை பயன்படுத்திக் கொள்வோம்.

புரட்சியை வென்ற பிறகு நமது தோழர்களில் பலருக்கு புரட்சிகர சிந்தனை தேய்ந்து வருகிறது. நமது பணி மக்களுக்கு சேவை செய்வதே என்ற சிந்தனையும் தேய்ந்து வருகின்றது. புரட்சி நடந்த காலத்தில் அவர்கள் மரணத்தையும் துச்சமாக மதித்து எதிரியுடன் போரிட்டார்கள். ஆனால் அந்த மன உறுதியும் மெல்ல தேய்ந்து வருகின்றது. இப்போது புகழ், பதவி, ஆடம்பரம், விளம்பரம் தேடும் சொகுசு மன நிலைக்கு வந்து விட்டார்கள். ஆடம்பரமான வாழ்க்கை, ஊதியம், உணவு, உடை போன்றவற்றில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார்கள். கடந்த வருடம் தோழர்களுக்கு பொறுப்புகளை பகிர்ந்தளிக்கும் போது பல தோழர்கள் வெதும்பி கண்ணீர் வடித்ததாகவும், சலசலப்பை உண்டாக்கியதாகவும் அறிகின்றேன். மனிதனுக்கு முகத்தில் கண்களாகிய இரண்டு கிணறுகள் உள்ளன. தங்களது ஆசைகளுக்கு ஏற்ற பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்காத போது இந்த கிணறுகள் நிரம்பி கண்ணீராக வழிகின்றன.

தோழர்களை பார்த்து நான் கேட்க விரும்புகின்றேன். சியாங்கே ஷேக்குக்கு எதிராக போராட்டத்தின் போதும், கொரியாவை ஆக்கிரமித்த அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போரின்போதும், விவசாய சீர்திருத்தத்தின் போதும் எதிர்புரட்சியாளர்களை ஒடுக்கும் நடவடிக்கைகளின் போதும், இன்று உணர்ச்சி வசப்படும் தோழர்களே நீங்கள் ஒரு துளி கண்ணீரும் வடிக்கவில்லையே?, சோசலிச நிர்மாணப் பணிகளின் போது நீங்கள் ஒரு துளி கண்ணீரும் வடிக்கவில்லையே? உங்களது சுயநலன்கள் பாதிக்கப்படும் போது மட்டும் உங்கள் கன்னங்களில் கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகின்றதே ஏன்? உங்களில் சிலர் 3 நாட்கள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தியதாகவும் அறிகின்றேன். உண்மையா? மூன்று நாட்களுக்கு ஒருவர் உண்ணவில்லை எனில் குடிமுழுகி விடாது. ஆனால் அதுவே ஒரு வாரத்திற்கு நீடிக்குமானால் நாம் கவலையுடன் கவனிக்க வேண்டும்.

இந்த மனச்சோர்வும் அதிர்ச்சியும் எங்கிருந்து வந்தது. புகழ், பதவி, ஆடம்பரம், விளம்பரம் தேடும் சொகுசு மனோநிலை, வசதியான ஊதியம், உணவு உடையில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டால் கட்சியும், கொள்கையும் இரண்டாம் பட்சமாகி பின்னுக்குப் போய்விடும் என்பதை இவர்கள் மெய்ப்பிக்கின்றார்கள். சுயநலன்களுக்காக கண்ணீர் வடிப்பதும், உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்குவதும் மக்களிடையே நிலவும் முரண்பாட்டின் ஒரு வடிவம் தான். “ஒரு வாளின் கதை” (The Story of a Sword) என்ற இசை நாடகத்தில் “லிங் சுங் நள்ளிரவில் ஓடிப் போன கதை” ( Lin Chung Flees at Night) என்றொரு காட்சி வருகிறது.

படிக்க:

 மக்களுக்கு தொண்டு செய்க! – தோழர் மாவோ.

 நூல் அறிமுகம்: மாவோவின் மூன்று சொற்பொழிவுகள்

அக்காட்சியில் “தனது இதயமே நொறுங்கிப் போனால் அன்றி ஒரு ஆண் அவ்வளவு எளிதில் கண்ணீர் வடிக்க மாட்டான் என ஒரு வசனம் உண்டு. நமது ஆண் தோழர்கள் (பெண்களும் உண்டு) பலருக்கு இந்த வசனம் பொருந்தும். இவர்கள் அவ்வளவு எளிதில் அழுவதில்லை. ஆனால் கட்சிக்குள் தகுதி அடிப்படையில் பொறுப்புகள் பகிர்ந்து அளிக்கப்படும் போது அவர்கள் “ஐயோ!” என்று வெதும்பிக் கண்ணீர் வடிக்கிறார்கள். இந்த போக்கு தவறானது. திருத்தப்பட வேண்டியது. எடுத்ததற்கெல்லாம் கண்ணீர் வடிப்பது தேவையில்லாதது. ஆனால் ஒருவர் இதயம் நொறுங்கி கண்ணீர் வடிக்கின்ற நியாயமான சூழல் எப்போது தோன்றுகிறது. பாட்டாளி வர்க்கத்தின், சாமானிய மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் போது தான் இதயம் நொறுங்கும். கண்களில் நீர் சொறியும். உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பொறுப்பு உங்கள் தகுதிக்கும், தரத்துக்கும் போதுமானதாக இல்லை என்று நீங்கள் கருத உரிமை உண்டு.. ஆனால் அதை ஒதுக்கி வைத்துவிட்டு அளிக்கப்பட்ட பொறுப்பை ஏற்பது தான் ஒரு கட்சி உறுப்பினரின் கடமையாகும். இதில் கண்ணீர் வடிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.

உலகத்தில் பல விஷயங்கள் நமக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். சமூகத்தில் உங்களுக்கான பொருத்தமான இடமில்லாமல் இருக்கலாம். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக உண்பதற்குப் போதிய உணவு இருக்கின்றதா என்பதுதான் முக்கியமானதாகும். நமது கட்சி ஒரு புரட்சிகர கட்சி. தனி ஒரு மனிதன் எவனும் உணவின்றி பட்டினியால் மடியக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டிய கடமை நமக்கு உண்டு. அனைவருக்கும் உணவு உத்தரவாதம் என்ற நிலைமை நீடிக்கின்ற வரை ஒவ்வொருவரும் தனது புரட்சிகர கடமையை தொடர்ந்து ஆற்ற வேண்டும். உழைக்க வேண்டும். இன்னும் ஒரு பத்தாயிரம் ஆண்டுகள் ஆன பின்னும் மனித சமூகம் உழைக்க வேண்டிய அவசியமும், சூழலும் இருந்தே தீரும். உழைப்பு என்பது தொடர் நிகழ்வு.

ஒரு கம்யூனிஸ்ட் என்பவன் கடுமையான உழைப்பாளி. உளப்பூர்வமாக மக்களுக்கு தொண்டாற்றக் கடமைப்பட்டவன். இதில் சிறிதளவு ஊசலாட்டத்துக்கும் இடமில்லை. அவனது புரட்சிகர உணர்வுகள் மழுங்கத் தொடங்குமேயானால் தனது தவறுகளை உணர்ந்து காரணங்களை கண்டறிந்து, கொள்கை ரீதியாக தன்னை கூர்மைப்படுத்திக் கொண்டு, மீண்டும் சரியான தடத்தில் நடை போட வேண்டியது தான் அவனது கடமை.

(தொடரும்…)

புதிய ஜனநாயகம் தினசரி 

1 COMMENT

  1. சிறந்ததொரு முன்முயற்சி!

    “சமூகப் பொருளாதார அரசியல் நிகழ்வுப் போக்குகளையும், சமூக மாற்றத்திற்கான மார்க்சிய லெனினிய தத்துவார்த்த கோட்பாடுகளையும் இன்னென்ன நூல்களைத் தெரிவு செய்து படித்துக் கொள்ளுங்கள்” என்று
    தோழர்கள் மட்டத்திலும், பொதுவான சமூக மாற்ற விரும்பிகள் மத்தியிலும் எடுத்துரைப்பதன் மூலம் – விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் மத்தியில் மட்டும் தான் அது ‘விலை’ போகிறது. வாசிப்புப் பழக்கம் என்பது பலருக்கு வேப்பங்காயாய் கசக்கிறது. ஆனாலும் அவர்களது ஆழ் மனதிற்கு கொண்டு செல்லப்பட வேண்டிய ஆசான்களின் அரிய பல கருத்துக்களை
    எந்தெந்த எளிய வடிவங்களில் கொண்டு செல்ல முடியுமோ, அந்தந்த வடிவங்களில் எல்லாம் கொண்டு சேர்த்தேயாக வேண்டும். அந்த வகையில் ஆசான் மாவோ அவர்களின் கருத்தோட்டங்களுடன் “புதிய ஜனநாயகம் தினசரி – யில் துவங்கப்பட்டுள்ள மிகச்சிறந்த இத்தொடர், வாசிப்பு பழக்கம் அற்றவர்களையும் கூட தட்டி எழுப்பிப் படிக்கத் தூண்டும் என்று நம்புவோமாக! இம்முயற்சி அவசர அவசியமும் கூட!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here