மழைக்காலத்திற்கும் தொழிலாளர்களை வேலையை விட்டு துரத்துவதற்கும் என்ன தொடர்பு என்று யோசிக்கிறீர்களா? நான் பேசுவது அசாமை வெள்ளத்தில் தத்தளிக்கவிட்ட மழையை அல்ல.
தொழில் நிறுவனங்கள் அதுவும் குறிப்பாக, புதிதாக தொடங்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு (Unicorns) வரும் முதலீடு குறைந்து வருவதை சுட்டிக்காட்டி “Funding Winter” வந்துவிட்டதாக தொழில் நிறுவனங்களும் பத்திரிகைகளும் தெரிவிக்கின்றன.
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்தியாவில் செழித்து வளருவதாக சில வாரங்களுக்கு முன்பு பிரதமர் மோடி மார்தட்டி அறிவித்தார். தனது அரசின் சாதனை என தனது முஷ்டியை உயர்த்தி காத்திருந்த கேமராக்களுக்கு போஸ் கொடுத்தார்.
122 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 100 கோடி டாலர் மதிப்பை எட்டவுள்ளதே அதற்கு காரணம். 100 கோடி டாலர் மதிப்பை எட்டிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களை யுனிகார்ன் நிறுவனங்கள் என்றழைப்பர். அத்தகைய கோடிஸ்வரர்களின் எண்ணிக்கை பெருகுவதால்தான்மோடி பேருவகை கொண்டார் என புரிந்து கொள்ளலாம்.
படிக்க:
- பைஜுஸ் : இந்தியக் கல்வி அமைப்பில் என்ன பாதிப்பை உண்டாக்குகிறது?
- ஃபோர்டு: பன்னாட்டு நிறுவனமும், பலியாகும் தொழிலாளர்களும்!
இதற்கும் நான் சொன்ன மழைக்காலத்துக்கும் உள்ள தொடர்பை புரிந்து கொள்ள யுனிகார்ன் நிறுவனங்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் ஐஐடியில் படித்தவர்களும், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்தவர்களும் தங்கள் சொந்த ஐடியாக்களைக் கொண்டு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்குவது வாடிக்கை. மற்றவர்கள் தொடங்க முடியாதா எனில் பக்கோடா கடை வேண்டுமானால் போடலாம். ஒரு தொழில் நிறுவனம் தொடங்குவதற்கு ஆரம்ப கட்ட நிதி ஏற்பாடு செய்ய அதற்குரிய தொடர்புகள் தேவை. அத்தகைய தொடர்புகள் அதிகார வர்க்கம் முதல் வங்கி வரை பார்ப்பன – பனியாக்களுக்கே வாய்க்கும்.
இப்படி தொடங்கப்படும் நிறுவனங்கள் குறிப்பிட்ட காலம் தனித்து செயல்பட்ட பிறகு, அந்த நிறுவனங்களின் செயல்பாட்டுக்கு ஏற்றவாறு நிதி முதலீடுகள் கிடைக்கும். அத்தகைய நிதி முதலீடுகளை செய்பவர்கள் பெயர் “Venture Capitalists“.
Zomato, Byju’s, Unacademy, MPL போன்ற நிறுவனங்கள் ஸ்டார்ட் அப்பாக இருந்து யுனிகார்ன் நிறுவனங்களாக மாறியவை. இந்த நிறுவனங்கள் மீது வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டு மிகை மதிப்பீடு ஆகும். Venture capital முதலீடுகள் காரணமாக ஊதிப்பெருக்கப்படும் இந்நிறுவனங்களின் மதிப்பு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் நீடிக்க முடியாது. ஏகாதிபத்திய முதலாளித்துவ பொருளாதார கட்டமைப்பு நெருக்கடியை சந்திக்கும் காலங்களில் முதலீடுகளை பெரிய நிதி நிறுவனங்கள் திரும்பப் பெற்றுவிடும். இது தற்போது உலகம் முழுவதும் நடந்து வருகிறது. இந்த நெருக்கடியை யுனிகார்ன் நிறுவன முதலாளிகள் தொழிலாளர்கள்மீது சுமத்தப் பார்க்கிறார்கள். இந்த ஆண்டு இதுவரை 12,000 தொழிலாளர்களை இந்நிறுவனங்கள் வேலையை விட்டு அனுப்பி உள்ளன. இந்தாண்டு இறுதிக்குள் இந்நிறுவனங்களில் வேலை செய்யும் 60,000 தொழிலாளர்களின் வேலை பறிபோகும் என கணிக்கப்பட்டுள்ளது.
” நாம் நமது வழியை மாற்றிக் கொள்ள வேண்டும். மழைக்காலம் வந்து விட்டது. உலகளாவிய இறுக்கமான நிதி கொள்கை மற்றும் வட்டி விகித உயர்வு காரணமாக தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் சரிவதும் பற்றி எரிவதும் நிகழ்கிறது. அடுத்த 12-18 மாதங்களுக்கு நிதி வரத்து குறையும் சூழலில் உள்ளோம். சிலர் 24 மாதங்கள் இந்த நிலை நீடிக்கும் என்கின்றனர். நாம் தகவமைத்துக் கொள்ள வேண்டும்.”
கல்வி வணிகத்தில் ஈடுபடும் Unacademy நிறுவன CEO முன்ஜால் தனது ஊழியர்களுக்கு அனுப்பி உள்ள மெயிலில் ” நாம் நமது வழியை மாற்றிக் கொள்ள வேண்டும். மழைக்காலம் வந்து விட்டது. உலகளாவிய இறுக்கமான நிதி கொள்கை மற்றும் வட்டி விகித உயர்வு காரணமாக தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் சரிவதும் பற்றி எரிவதும் நிகழ்கிறது. அடுத்த 12-18 மாதங்களுக்கு நிதி வரத்து குறையும் சூழலில் உள்ளோம். சிலர் 24 மாதங்கள் இந்த நிலை நீடிக்கும் என்கின்றனர். நாம் தகவமைத்துக் கொள்ள வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார். (Economic Times)
அந்த தகவமைப்பு என்பதன் வேலையை விட்டு தூக்கியெறியப்படுவதற்கு தயாராவதே.
அந்நிறுவனம் 600 பேரை வேலையை விட்டு நிறுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான கோடிகள் புரளும் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஸ்பான்ஸர் செய்யும் அளவு வளர்ந்த Byju’s நிறுவனமும் 600 தொழிலாளர்களை வேலையை விட்டு துரத்தி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் இந்நிறுவனங்கள் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டது. இந்நிறுவனங்கள் தற்போது ஆட்குறைப்பில் ஈடுபடுவது நெருங்கி வரும் பேரபாயத்தையே உணர்த்துகிறது.
மேலும், 2008 ஆம் ஆண்டு நெருக்கடியின் போது வீட்டுக்கடன் துறைமட்டுமே ஊதி பெருக்கப்பட்டிருந்தது. தற்போது பல்வேறு துறைகளிலும் ஊதி பெருக்குவது நடந்துள்ளது. குப்புற விழந்த குதிரை குழியும் பறித்த நிலைமை வந்துவிட்டது. விழித்துக் கொள்வோம். சங்கமாக இணைந்து வேலையை பாதுகாத்துக் கொள்ள போராடுவோம். நாட்டை நிதியாதிக்க கும்பலின் வேட்டக்காடாக மாற்றியுள்ள கார்ப்பரேட் – காவி பாசிசத்துக்கு எதிராக அணிதிரள்வோம்.
- திருமுருகன்