மருத்துவ மாணவரின் உறுதிமொழி மாற்றமானது
இந்தியாவினை குப்தர் காலத்துக்குப் பின் தள்ளும் ஒரு முயற்சி
மதுரை அரச மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் சமற்கிரதத்தில் உறுதிமொழி எடுத்த செய்தி இன்று ஊடகங்களின் பேசு பொருளாகக் காணப்பட்டது. இங்கு மொழியினை விட எடுத்த உறுதிமொழியின் பொருளே மிகவும் நோக்கத்தக்கது. இது வரை இந்திய மாணவர்களும் உலகெங்குமுள்ள மிகப் பெரும்பான்மையான மருத்துவ மாணவர்களைப் போல, Hippocratic Oath இனையே எடுத்து வந்தனர். {அலோபதி} மருத்துவத்துறையின் தந்தை எனப் பொதுவாக அழைக்கப்படும் இப்போக்கிரட்டீசு என்ற கிரேக்க மருத்துவ அறிஞரின் பெயரில் அழைக்கப்படும் இப்போக்கிரட்டீசு உறுதிமொழி யினைப் படம் 3 இல் காண்க.
அதனையே `Charaka’ oath என இப்போது மாற்றியுள்ளார்கள். பொது ஆண்டு 6 ம் நூற்றாண்டில் ( CE 6th cent ) சமற்கிரதத்தில் எழுதப்பட்ட இந்த உறுதிமொழிகளையும்(சமற்கிரத மொழியிலான) அவற்றுக்கான ஆங்கில மொழி பெயர்ப்பினையும் கீழுள்ள இணைப்பில் காண்க.
https://en.wikipedia.org/wiki/Charaka_shapath
முதல் உறுதிமொழியே மாணவர்களுக்கு தூய நெருப்பு, பிராமணர் முன்னிலையில் அறிவுறுத்த வேண்டும் எனத் தொடங்குகின்றது. அதாவது இனி மருத்துவ விரிவுரைகள் யாக குண்டம் (தூய நெருப்பு), பார்ப்பனர் முன்னிலையே தொடங்கப்பட வேண்டும் எனப் பட்டையினைக் கிளப்புகின்றது. இரண்டாவது உறுதிமொழி மருத்துவர்கள் புலால் (இறைச்சி) சாப்பிடக் கூடாது என்பதாகும். இப்படிப் பல வியப்புகள்.
இத்தகைய மாற்றத்தினையே இந்தியா முழுவதும் ஒன்றிய அரசு கொண்டு வரவுள்ளது. பனகல் அரசர் ஆட்சி வரை சமற்கிரதம் தெரிந்தாலே மருத்துவம் படிக்கலாம் என்றிருந்த நிலைமையினை மாற்றி , இன்று அடைந்த முன்னேற்றத்தினை மீண்டும் பின் நோக்கி நகர்த்தும் ஒரு முயற்சியே இந்த உறுதிமொழி மாற்றம். வேத காலத்துக்கு இந்தியாவினைப் பின் நகர்த்தும் RSS இன் திட்டப்படி காய்கள் விரைவாக நகர்த்தப்படுகின்றன.
இன்றைய நிகழ்வில் மகரிசியின் (Charaka’ oath ) உறுதிமொழிகள் மொழி பெயர்க்கப்பட்டு ஆங்கில வடிவத்திலேயே படிக்கப்பட்டதாகப் பிந்தி வரும் செய்திகள் சொல்லுகின்றன. இரண்டாவது படத்திலுள்ளவை மட்டுமே இன்று மதுரையில் மருத்துவ மாணவர்கள் எடுத்த உறுதிமொழிகள். அதில் ஒன்று பெண் ஒருவருக்கு ஆண் மருத்துவர் மருத்துவம் பார்த்தால், அப் பெண்ணின் கணவர் அல்லது உறவினர் அருகில் இருக்கவே மருத்துவம் செய்யப்பட வேண்டும். தலிபான்கள் நினைவுக்கு வருகின்றதா! இது இந்துத்துவா தலிபான்கள்
குரங்கு, குட்டியினை விட்டு ஆழம் பார்க்கும் முயற்சியே இது!
இந்தியா மீண்டும் குப்தர் காலத்துக்குப் போவதா அல்லது இன்றைய அறிவியல் உலகோடு நிலைத்திருப்பதா! என இந்திய மக்கள் முடிவெடுக்க வேண்டிய வேலை வந்துவிட்டது.
குகநாதன் வி இ.