“ஐ லவ் முகமது” வடமாநிலங்களில் இதுதான் தற்பொழுது சங்கிகளை துடிதுடிக்க வைத்துக் கொண்டிருக்கும் முழக்கம்.
இஸ்லாமிய மதத்தினர் முகமது நபி பிறந்த நாளை “மிலாடி நபி” என்ற பெயரில் மத விழாவாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி அன்று மிலாடி நபி விழா இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டது.
மிலாடி நபி விழாவை முன்னிட்டு செப்டம்பர் 4ஆம் தேதி அன்று உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் நகருக்கு அருகில் உள்ள ராவத்பூர் கிராமத்தில் “ஐ லவ் முஹம்மத்” என்ற வாசகம் அச்சிட்ட பேனரை பிடித்தபடி இஸ்லாமியர்கள் ஊர்வலமாக சென்றுள்ளனர்.
இதற்கு அந்த ஊரில் உள்ள சங்கிகள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் இஸ்லாமியர்கள் தங்களின் மத பேனர்களை தடியால் அடித்து சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டி பிரச்சனை செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து அந்த மாநிலத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கிற பாசிச பாஜகவின் காவல்துறை 21 பேர் மீது வழக்கு பதிவு செய்தது.

ஒரு கிராமத்தில் ஊர்வலம் சென்றதுடன் முடிந்திருக்க வேண்டிய “ஐ லவ் முஹம்மது” என்ற ஒரு முழக்கம் உத்தரப் பிரதேசத்தின் பிற பகுதிகளுக்கும் பரவியது. இந்த முழக்கம் அச்சிட்ட போஸ்டர்களை இஸ்லாமியர்கள் தங்களின் வீடுகளில் ஒட்டியுள்ளனர்.
அதுமட்டுமின்றி மகாராஷ்டிரா, தெலுங்கானா, உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் “ஐ லவ் முகமது” என்ற முழக்கத்துடன் ஊர்வலங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடந்திருக்கின்றன.
“ஐ லவ் முகமது” என்று இஸ்லாமியர்கள் கூறுவது அவர்களின் மத உரிமை. விருப்பமில்லாத நபர்களையும் கூட “ஜெய் ஸ்ரீ ராம்” என்று சொல்ல வேண்டும் என்று இந்து மத வெறியர்கள் கட்டாயப்படுத்துவதைப் போல இஸ்லாமியர்கள் யாரையும் கட்டாயப்படுத்தவோ வற்புறுத்தவோ இல்லை எனும் பொழுது இதை ஒரு பிரச்சனையாக்க வேண்டிய அவசியமே இல்லை.
இந்த எதார்த்தத்தை – நியாயத்தை இந்துக்களும் கூட உணர்ந்துள்ளனர். அதன் வெளிப்பாடாக இந்தப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்த சில இடங்களில் இந்துக்களும் கூட கலந்து கொண்டு “ஐ லவ் முகமது” என்ற முழக்கத்திற்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். மேலும், இந்து ஆண்களும் பெண்களும் ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கும் பொழுது இந்தக் கருத்தை எதிரொலித்துள்ளனர்.
படிக்க:
ஹிஜாப்பு அணிந்தால் என்ன தப்பு? | மகஇக பாடல் || HIJAB || PALA
இது இந்து முஸ்லிம்களிடையே மதக் கலவரத்தை உருவாக்குவதற்காக அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கும் பாஜக – ஆர் எஸ் எஸ் கும்பலுக்கு மிகப்பெரும் பேரிடியாக அமைந்திருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிந்த பள்ளி மாணவிகள் தங்களை அச்சுறுத்த வந்த காவி காலிகளை எதிர்த்து முழக்கமிட்ட“அல்லாஹ் அக்பர்” பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோ அதையே இன்று “ஐ லவ் முகமது” வட மாநிலங்களில் ஏற்படுத்தி வருகிறது.
இந்த முழக்கத்திற்காக மக்கள் களத்தில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கும்போது சமூக ஊடகங்களிலும் “ஐ லவ் முகமது” என்ற முழக்கத்தை மக்கள் பரவலாக ட்ரெண்ட் செய்துள்ளனர். மேலும் மிகவும் பரவலான அளவில் மக்கள் இந்த முழக்கத்தை தங்கள் “ப்ரொபைலில்” வைத்துள்ளனர். இதைக் கண்டு வெறியேறிய சங்கிகள் இந்த முழக்கத்திற்கு போட்டியாக சங்கிகளும் தங்கள் பங்கிற்கு “ஐ லவ் ராம்”, “ ஐ லவ் மகாதேவ்”, “ ஐ லவ் அனுமான்” என்று ட்ரெண்ட் செய்ய முயன்றுள்ளனர்.
“ஐ லவ் முகமது” என்ற இந்த முழக்கம் மிகப்பெரும் அளவில் இந்துக்களிடையேயும் ஆதரவை பெற்றுள்ளது என்பது உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இந்து மத வெறியர்களின் மதவெறிப் பிரச்சாரத்திற்கு பலியாகியிருந்த இந்துக்கள் விழிப்படைந்து கொண்டிருப்பதை உலகத்திற்கு வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இது ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல் இந்து தங்களின் செல்வாக்கை இழந்து வருகிறது என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
– குமரன்






