உலகம் அறிந்திராத வியக்கத் தக்க சோவியத் சாதனைகள்

சோவியத் யூனியன் ஸ்தாபிக்கப்பட்ட பின்னர், உலகில் வேறெந்த நாட்டிலும் வாழும் மக்கள் அறிந்திருக்காத வசதி வாய்ப்புகள், சோவியத் பிரஜைகளுக்கு வழங்கப் பட்டன. மேற்கத்திய நாடுகளில் கூட, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தான் அவை நடைமுறைக்கு வந்தன. அந்த வகையில், இன்றைக்கு மேற்குலகில் வாழும் மக்கள் அனுபவிக்கும் சலுகைகளை, சோவியத் யூனியன் தான் முதன் முதலாக அறிமுகப் படுத்தியது.

சோவியத் மக்கள் அனுபவிக்கும் வாழ்க்கை வசதிகளைப் பற்றிக் கேள்விப்படும் தமது மக்கள், புரட்சி மூலம் ஆட்சியைக் கவிழ்த்து விடுவார்கள் என்று மேற்குலக அரசுகள் அஞ்சின. அதனால் தான், எதிர்காலப் புரட்சியை தடுக்கும் நோக்கில், தாமும் அதே மாதிரியான வசதிகளை தமது மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க முன்வந்தனர். மனித சமுதாயம் முழுவதற்கும் சோவியத் யூனியன் வழங்கிய நன்கொடைகளின் விபரம்:

  1. உலக வரலாற்றில் முதல் தடவையாக, சோவியத் யூனியனில் மட்டும் தான், எட்டு மணி நேர வேலை நடைமுறைக்கு கொண்டு வரப் பட்டது.
  2. வேலை செய்யும் அனைவருக்கும், வருடத்திற்கு ஒரு தடவை ஒரு மாத விடுமுறை வழங்கப் பட்டமை இன்னொரு சாதனை ஆகும். சில தொழிற்துறைகளில் ஒரு மாதத்திற்கும் மேற்பட்ட விடுமுறை கிடைத்தது. அது மட்டுமல்ல, விடுமுறைக் காலம் முழுவதும் முழுச் சம்பளம் வழங்கப் பட்டது. இதுவும் உலக வரலாற்றில் முதல் தடவை என்பது குறிப்பிடத் தக்கது.
  3. ஒவ்வொரு தொழிற்துறைக்கும் ஏதாவதொரு தொழிற்சங்கம் பொறுப்பாக இருக்கும். அதில் அங்கத்தவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், தொழிற்சங்கப் பாதுகாப்பு கிடைத்து வந்தது. உதாரணத்திற்கு, தொழிற்சங்கத்தை கலந்தாலோசிக்காமல் எந்த நிறுவனமும் தமது ஊழியரை பணி நீக்கம் செய்ய முடியாது.
  4. கல்லூரி, பல்கலைக்கழகங்களில் படித்து முடித்த ஒவ்வொரு பட்டதாரிக்கும், வேலை தேடிக் கொடுக்கும் பொறுப்பை அரசு ஏற்றுக் கொண்டது. அனைவருக்கும் வேலை வாய்ப்பு உறுதிப் படுத்தப் பட்டது.
  5. பாடசாலைக் கல்வியில் திறமைச் சித்தி பெற்ற அனைவரும், தாம் விரும்பிய கல்லூரிக்கோ, அல்லது பல்கலைக்கழகத்திற்கோ செல்ல முடிந்தது. தரப்படுத்தல் கிடையாது. கல்விக் கட்டணமும் அறவிடப் பட மாட்டாது.
  6. பாலர் பாடசாலை தொடங்கி, ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரையில், முற்றிலும் இலவசமாக வழங்கப் பட்டது. உலகிலேயே இலவசக் கல்வியை அறிமுகப் படுத்திய முதல் நாடு சோவியத் யூனியன் தான்.
  7. உலகிலேயே முதல் தடவையாக, சோவியத் குடிமக்கள் தான் இலவச மருத்துவ வசதியை அனுபவித்தனர். மருத்துவ ஆலோசனை முதல் சத்திர சிகிச்சை வரையில் அனைத்தும் இலவசம். எங்கேயும், எப்போதும், காலவரையறை இன்றி இலவச மருத்துவ வசதி வழங்கப் பட்டது. எந்த மருத்துவமனையிலும் நோயாளிகள் வரிசையில் காத்திருக்கவில்லை. காலந் தாமதித்து சிகிச்சை வழங்கவில்லை. ஒவ்வொரு நகரத்திலும் பத்துக்கும் குறையாத மருத்துவ மையங்கள் (poliklinikas) இருந்தன. அந்த இடங்களுக்கு எவரும் சென்று வைத்திய ஆலோசனை பெறலாம். எக்ஸ் ரே படம் பிடித்தல், பற்களை கட்டுதல் அனைத்தும் இலவசம்.
  8. ஒவ்வொரு உழைப்பாளியும், தனது நிறுவனத்தை சேர்ந்த முகாமையாளரிடம் சுற்றுலா பயணம் கோரி விண்ணப்பிக்க முடிந்தது. கடற்கரைக்கோ அல்லது வேறெந்த விரும்பிய சுற்றுலா ஸ்தலத்திற்கோ சென்று வர அனுமதி கோர முடிந்தது. ஒவ்வொரு வருடமும், தமது தொழிலாளரின் சுற்றுலா செலவுகளை, அந்த நிறுவனம் முழுமையாக பொறுப்பெடுத்தது. அதாவது, தொலைதூர பிரதேசத்திற்கான சுற்றுலா பயணமும் முற்றிலும் இலவசம்.
  9. உலக வரலாற்றில் முதல் தடவையாக, ஒவ்வொரு சோவியத் பிரஜையும் இலவச வீட்டுக்கு உரிமை உடையவராக இருந்தார். வீட்டு வாடகை கிடையாது. முற்றிலும் இலவசம். உங்களது பெயரில் வீடு எழுதித் தரப் படும். அதை நீங்கள் சொந்தமாக்கிக் கொள்ளலாம். உங்களுக்குப் பின்னர் உங்களது பிள்ளைகள் அங்கே வசிக்கலாம். வீடு கிடைப்பதற்காக காத்திருக்க வேண்டி இருந்தமை உண்மை தான். ஆனால், ஒவ்வொரு மாதமும் நாடு முழுவதும் ஆயிரக் கணக்கானோருக்கு புது வீடுகள் வழங்கப் பட்டன. இன்றும் கூட, ரஷ்யாவிலும், முன்னாள் சோவியத் குடியரசுகளிலும் பெரும்பான்மையான மக்கள் சொந்த வீடுகளில் வாழ்கிறார்கள் என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது.
  10. ஒவ்வொரு சோவியத் பிரஜையும், தங்கியுள்ள இடத்தில் இருந்து வேலை செய்யும் இடத்திற்கு சென்று வர இலவச பயணச் சீட்டு வழங்கப் பட்டது. பஸ், மெட்ரோ, ரயில் எதுவாக இருந்தாலும், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்திக் கொள்வதற்கு இலவச பயணச் சீட்டுகள் கொடுத்தனர். இதுவும் உலகிலேயே முதல் தடவை.
  11. தாயாகப் போகும் ஒவ்வொரு பெண்ணுக்கும் மூன்று வருட மகப்பேற்று விடுமுறை வழங்கப் பட்டது. ஆமாம், மூன்று வருடங்கள்! முதலாவது வருடம், அவர் சம்பாதித்த அதே சம்பளம் வழங்கப் பட்டது. இரண்டாவது, மூன்றாவது வருடங்கள் அரசு உதவித் தொகை கொடுக்கப் பட்டது. அது மட்டுமல்ல, மூன்று வருடங்கள் முடிந்ததும், அவர் முன்பு செய்த அதே வேலையை திரும்பவும் பெற்றுக் கொள்ள முடிந்தது.
  12. ஒவ்வொரு தாய்க்கும் குழந்தைகளுக்கான பால் அல்லது பால்மா இலவசமாக வழங்கப் பட்டது. பிறந்த குழந்தை ஒவ்வொன்றும் மூன்று வயதாகும் வரையில் இலவசப் பால் கிடைத்தது. இதற்காக, ஒவ்வொரு ஊரிலும் பால் நிலையங்கள் இருந்தன. பெற்றோர்கள் எந்த நேரத்திலும் அங்கே சென்று, தமது குழந்தைகளுக்கான பாலை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

ஆதாரம்:

12 Awesome things Soviet Union gave to the people ahead of every other country in the world

நன்றி: கலையரசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here