கடந்த ஆகஸ்ட் 1 அன்று ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் ரயில்வே பாதுகாப்புப்படை கான்ஸ்டபிள் சேத்தன் சிங் என்ற காவி வெறியன் மூன்று இஸ்லாமியர்களையும் அவனைத் தடுக்கவந்த அவனது அதிகாரியையும் ஓடும் ரயிலில் சுட்டுக்கொன்ற பச்சைபடுகொலைகள் மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

காவிகளின் ராஜ்ஜியமான உத்திரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த மதவெறி மிருகம் 3 கம்பார்டுமெண்டுகளில் தாடிவைத்திருந்தவர்களாகத் தேடித்தேடி சுட்டுக்கொன்றிருக்கிறான். உடனே அவனைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கிய ரயில்வே பாதுகாப்புப்படையின் அதிகாரிகள், சேத்தன் சிங் கடுமையான வேலை நெருக்கடியால் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கதைகட்டிவிட்டனர். மனநிலை பாதிக்கப்பட்டவன் என்றால் இஸ்லாமியர்களை மட்டும் தேடித்தேடி சுட்டுக்கொன்றது ஏன் என்ற கேள்விக்கு விடைதான் கிடைத்தபாடில்லை.

இதையும் படியுங்கள்: ஆந்திர போலீசின் எல்லை மீறிய அராஜகம்!

காவி பாசிஸ்டுகளின் தொடர் வெறுப்புப்பிரச்சாரத்தால் மண்டைகழுவப்பட்டு மனிதமாண்பை இழந்துவிட்ட சங்கிகள் நிகழ்த்தும் படுகொலைகள் நாடெங்கும் நாள்தோறும் ஒருபக்கம் நடந்தேறிவருகின்றன என்றால் ஆளும்வர்க்கத்தின் அடியாட்படையாக இருக்கும் போலீசு தற்போது ஆட்சியிலிருக்கும் காவி பாசிஸ்டுகளின் அடியாட்படையாக மாறி இஸ்லாமியர்களை வேட்டையாடத் துவங்கியிருக்கிறது. அதன் சமீபத்திய வெளிப்பாடுதான் இச்சம்பவம். ரோட்டில் திரியும் பொறுக்கி சங்கிகளைவிட மிகமிக ஆபத்தானவர்கள் இந்த காக்கி உடையில் நிறுவனமயமாக்கப்பட்டுள்ள சங்கிகள். பன்நெடும்காலமாகவே சிறுபான்மை இஸ்லாமிய வெறுப்பில் ஊறித்திளைக்கும் இந்த அடியாள் கும்பலில் ஒருவன்  தற்போது தன்னுடைய வெறுப்பை துப்பாக்கி மூலம் காட்டியுள்ளான்.

1987-ஆம் ஆண்டில் உத்திரபிரதேச போலீசால் சுற்றிவளைக்கப்பட்டு 50-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஹஷிம்புரா படுகொலைகள், முன்னாள் ராணுவ மேஜர் ஸ்ரீகாந்த் புரோஹித் முன்னின்று நடத்திய சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு, அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு, மாலேகோன் குண்டுவெடிப்பு என்று சீருடை அணிந்த அதிகாரவர்க்க அடியாட்களின் வன்முறை கணக்கில் அடங்காதது.

இயல்பிலேயே ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கும், பழங்குடியினருக்கும், சிறுபான்மையினருக்கும், உழைக்கும் மக்களுக்கும் எதிரான மனநிலையில் வளர்க்கப்படும் இந்த அடியாட்கள் தற்போது இன்னுமொரு படிமேலேபோய் தம் துப்பாக்கிகளால் இம்மக்களை தன்னிஷ்டப்படி சுட்டுக்கொள்ள துணிந்திருக்கின்றனர். 2024 பொதுத்தேர்தலில் எப்படியாவது வென்றே தீரவேண்டும் என்று வெறிகொண்டு அலையும் மதவெறி பாசிஸ்டுகளுக்கு அடியாட்படையாக இருந்து சேவைசெய்வதுதான் இந்த கும்பலுக்கு விடப்பட்டுள்ள பணி. அதனால்தான் இந்த காவி போலீசு நான்கு பேரை சுட்டுக்கொன்றுவிட்டு எந்தவித சலனமும் இல்லாமல் அங்கிருந்தவர்களை வீடியோ எடுக்கச்சொல்லி மோடிக்கும் யோகிக்கும் ஓட்டுபோட பிரச்சாரம் செய்தது.

ஆங்கிலப் படங்களில் தங்களுக்கான நேரம் வந்தவுடன் கல்லறையிலிருந்து உயிரோடு எழுந்துவரும் ஸோம்பிகளைக் காட்டுவதுபோல காக்கி உடையிலும், ராணுவ உடையிலும், இன்னும் பல சீருடையில் வலம்வரும் காவி பாசிஸ்டுகள் தங்களுக்கான நேரம் வரும்போது அரிதாரம் கலைத்துத் தெருவில் இறங்குவார்கள் இந்துராஜ்ஜியம் அமைக்க. அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்று இராமல், இப்போதே அதற்கு எதிர்வினையாற்றத் தயாராவோம்.

ஜூலியஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here