‘மதரஸாக்கள், அலிகார் பல்கலைகழகத்தை வெடிவைத்து தகர்க்க வேண்டும்’ என்று அழைப்பு விடுத்து மதகலவரத்தை தூண்டும் அறிக்கைகளை வெளியிட்ட தீவிரவாத இந்துத்துவா தலைவர் யதி நரசிங்கானந்த் மீது உத்தரபிரதேச போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
செப்டம்பர் 18, ஞாயிறன்று அலிகாரில் இந்து மகாசபா ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
“மதரஸாக்கள் முதலில் இருக்கக் கூடாது. அவை வெடிகுண்டுகளால் துண்டுத் துண்டாக்கப்பட வேண்டும், அல்லது சீனாவின் கொள்கையை நாம் கடைப்பிடிக்க வேண்டும். மற்றும் மதரஸாக்களில் வசிப்பவர்களை தடுப்பு முகாம்களுக்கு அனுப்ப வேண்டும், அங்கு குர்ஆன் எனப்படும் வைரஸ் அவர்களின் மூளையிலிருந்து அகற்றப்படலாம்” என்று கூறினார்.
“இந்திய பிரிவினையின் விதை” விதைக்கப்பட்ட இடம் அலிகார் என்று நரசிங்கானந்த் அலிகாரை விவரித்ததாகவும், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தை குண்டுகளை வீசி தூளாக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கை மேலும் கூறியது.
அவரது வெறுப்பு பேச்சுக்கு எதிரான சட்ட நடவடிக்கை குறித்து அவர் கூறுகையில், “நீதிமன்ற வழக்குகள் தொடர்ந்து வருகின்றன. ஒருவேளை, நான் இப்போது என்ன சொல்கிறேனோ அதற்காக, நான் மீண்டும் ஒரு வழக்கை எதிர்கொள்வேன்.”
இதற்கிடையில், காவல்துறை கண்காணிப்பாளர் (நகரம்) குல்தீப் சிங் குணாவத் செய்தி நிறுவனமான பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவிடம் (PTI) கூறுகையில், இந்த நிகழ்ச்சி முன் அனுமதியின்றி நடைபெற்றது, நரசிங்கானந்த் மற்றும் பிறர் மீது 188 (பொது ஊழியரால் முறையாக பிரகடனப்படுத்தப்பட்ட கட்டளைக்கு கீழ்ப்படியாமை), 295 ஏ (வேண்டுமென்றே தீங்கிழைக்கும் செயல்கள், மதம் அல்லது மத நம்பிக்கைகளை அவமதிப்பதன் மூலம் எந்தவொரு வகுப்பினரின் மத உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கத்துடன் ஆத்திரமூட்டும் நோக்கம் கொண்டவை), 298 (மத உணர்வுகளை காயப்படுத்த வேண்டுமென்றே வார்த்தைகளை உச்சரித்தல்), 505 (2) (பகைமையை உருவாக்கும் அல்லது ஊக்குவிக்கும் அறிக்கைகள்) வகுப்புகளுக்கு இடையே வெறுப்பு அல்லது தீய எண்ணம்) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 506 (குற்றவியல் அச்சுறுத்தலுக்கான தண்டனை) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக குணவத் கூறினார்.
கடந்த காலங்களிலும் நரசிங்கானந்த் பேசிய வெறுப்பு பேச்சுக்களால் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 17 முதல் டிசம்பர் 19 வரை நடைபெற்ற ஹரித்வார் தர்ம சன்சாத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மதவெறியை தூண்டும் வகையில் பேசியதற்காக ஹரித்வாரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. பின்னர் நிபந்தனை ஜாமீனில், (பிப்ரவரி 18) அவர் “சமூகங்களுக்கு இடையில் வித்தியாசத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட எந்தவொரு நிகழ்விலும் அல்லது கூட்டத்திலும் பங்கேற்க மாட்டேன் “என்று கூறியிருந்தார். இந்த சம்பவத்தில் அவருக்கு ஜாமீன் வழக்கங்கப்பட்ட போது அவருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனையை ‘முடி’ அளவுக்கு கூட மதிக்கவில்லை என்பது அவர் தொடர்ந்து பேசும் வெறுப்பு பேச்சுக்களை பார்க்கும் போதே தெரிகிறது.
டெல்லியில் நடந்த மற்றொரு நிகழ்வில், இந்துக்களின் இருப்புக்காகப் போராட ஆயுதம் ஏந்துமாறு அவர் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் வெறுப்பு பேச்சுக்காக அவர் மீது மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்குகளைப் பதிவதால் யதி நரசிங்கானந்தை ஒன்றும் செய்ய முடியாது என்பதை நன்கு அறிந்தே மீண்டும், மீண்டும் மதவெறியை தூண்டும் பேச்சுக்களை பேசுகிறார். மேலும் நீதிமன்றங்கள் பலவும் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் கூடாரமாகிவிட்டதை பார்க்க முடிகிறது. யதி நரசிங்கானந்த் போன்ற இந்துத்துவ மதவெறி பேச்சாளர்கள் வெளியில் சுதந்திரமாக உலவும் நேரத்தில் பாசிசத்தை எதிர்த்து கேள்வி எழுப்புபவர்களை எந்தவித ஆதரமும் இல்லாமல் பல வருடங்கள் சிறையில் வைக்கிறது நீதிமன்றங்கள்.
யதி நரசிங்கானந்த் பேசியது பற்றி எதுவுமே தெரியாதது போல் இருக்கிறார் பிரதமர் மோடி. இதுவரை எந்த கண்டனத்தையும் பதிவு செய்யவில்லை. இதிலிருந்து மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் மோடி யதிநரசிங்கானந்த் போன்ற இந்துத்துவ பயங்கரவாதிகளின் பேச்சை ஆதரிக்கிறார் என்று!.
2014-ல் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பார்ப்பன பாசிச கும்பல் சிறுபான்மை மக்களை குறிவைத்து தாக்குதல் தொடுக்கிறது. குறிப்பாக பசு பாதுகாப்பு என்று இஸ்லாமியர்களை கும்பல் கொலை செய்வதும், லவ்ஜிகாத் என்ற பெயரில் படுகொலைகள் செய்வதும், அவர்களின் வாழ்விடங்களை அழித்து அகதிகளாக்குவதும் தொடர்கிறது. அவர்களின் சிறுபான்மையினர் மீதான வெறுப்பை வளர்க்கும் இந்துராஷ்டிர கனவை கலைக்க அணிதிரள்வோம்.
- சுவாதி
மூலக்கட்டுரை: The Wire