ந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்றுவதற்கு முனைப்பு காட்டி வருகிறது ஆளும் பாசிச பாஜக அரசு. அதற்கான முன்னோட்டமாக அரசு விளம்பரங்களில் பாரத் என்ற பெயரை பயன்படுத்தியிருக்கிறது.

பாசிச பாஜகவை எதிர்த்து எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து வரும் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி INDIA கூட்டணியை உருவாக்கியுள்ளது. மக்களிடம் பாசிச கும்பலுக்கு எதிரான மனநிலையும் எதிர்கட்சிகளின் ஒற்றுமையும் பாஜகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என மாற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் வரும் 9,10 ஆகிய தேதிகளில் நடந்த ஜி 20 உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி பாரத் என்ற பெயருடன் கலந்துக் கொண்டுள்ளார் .

இதற்கான அழைப்பிதழை குடியரசு தலைவர் சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. அதில் இந்திய குடியரசு தலைவர் என்றில்லாமல் பாரத குடியரசு தலைவர்(பிரசிடெண்ட் ஆஃப் பாரத்) என்று குறிப்பிட்டுள்ளது.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் பெயரை முழுமையாக கைவிடும் முட்டாள்தனமான முடிவை மத்திய அரசு எடுக்காது என நம்புகிறேன் எனக்கூறியுள்ளார். டெல்லி முதல்வர் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் “நாங்கள் இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளதால் தான் மத்திய அரசு இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றியுள்ளது. இந்த நாடு 140 கோடி மக்களுக்கானது. ஒரு கட்சிக்கானது மட்டுமல்ல. இந்தியா கூட்டணியின் பெயரை நாங்கள் பாரத் என மாற்றினால், பாரத் என்ற பெயரையும் மாற்றிவிடுவார்களா” என்றார்.

அடிமைத்தனத்தின் பெயர் தான் இந்தியாவாம்!

இந்தியா என்ற பெயரை மாற்ற வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ் கும்பலின் நீண்ட காலத் திட்டம். ஆர்.எஸ்.எஸ் இந்திய என்ற பெயரையும், இந்திய கொடியையும், காந்தியையும் ஏற்றுக் கொள்வதில்லை. (காந்தியை சுட்டுக் கொன்றவர்களின் வாரிசு தானே இவர்கள்)

கடந்த டிசம்பர் 2022-ல் குஜராத் மாநிலம் ஆனந்த் தொகுதி பாஜக உறுப்பினரான மிதேஷ் படேல் மக்களவையில் கடந்த 2022 டிசம்பர் மாதம் “இந்தியா என்பது பிரிட்டனை சேர்ந்த கிழக்கிந்திய கம்பெனி வைத்த பெயர். இந்த பெயர் அடிமைத்தனத்தை குறிப்பதாக உள்ளது.  எனவே இந்தியாவின் பெயரை ‘பாரத்’ அல்லது ‘பாரத்வர்ஷ்’ என மாற்ற வேண்டும் என்றார்.

இது மிதேஷ் படேலின் கருத்து மட்டுமல்ல. ஆர்.எஸ்.எஸ்-ன் கருத்தும் கூட. இவர்களுக்கு பெயரை மாற்றுவது புதிதல்ல. மாநிலங்களின் பெயரையும் சில நகரங்களையும் பெயரையும் கூட மாற்றியுள்ளார்கள். குறிப்பாக முகலாயர்கள் காலத்தில் வைக்கப்பட்ட பெயர்களை பெரும்பாலும் மாற்றிவிட்டார்கள்.

அடையாளங்களை அழிக்கும் பாசிஸ்ட்டுகள்!

உத்தரபிரதேசத்தின் ஃபைசாபாத் மாவட்டம் அயோத்தியா மாவட்டம் என்றும், அலகாபாத் நகருக்கு ‘பிரயாக்ராஜ்’ என்று மாற்றம் செய்துள்ளார்கள். குஜராத்தின் அகமதாபாத் நகரை பெயரைக் கூட ‘கர்ணாவதி’ என மாற்ற முனைந்து எதிர்ப்பு கிளம்பியதும் நிறுத்தி விட்டார்கள்.

கடந்த சட்டசபைத் தேர்தலில் தமிழ்நாடு என்கிற பெயரை மாற்றி ‘நிச்சல பிரதேசம்’ எனவும், ‘தஷிண பிரதேசம்’ எனவும் அறிவிப்போம் என்று தமிழக பாஜக பேசியது. தமிழக மக்கள் காறி துப்புவதை அறிந்த பின்னர் அதைப் பற்றி பாஜக வாய்த் திறக்கவே இல்லை.

இந்தியாவில் இஸ்லாமியர்கள் பெயர் தாங்கிய சாலைகளின் பெயர்களை கூட பாஜக ஆளும் மாநிலங்களில் மாற்றியுள்ளார்கள். அடிமைத்தனத்தை தாங்கிய பெயர்கள் என்று கூறி கலாச்சார சின்னங்களாகிய அடையாளங்களை அழிக்கும் செயல்களை செய்துள்ளார்கள்.

பிரிட்டிஷாரின் (கர) சேவகர்கள்!

இந்தியா என்பதே ஆங்கிலேயர்கள் சுரண்டுவதற்கு ஏற்ப ஒன்றிணைக்கப்பட்ட பல தேசிய இனங்களின் சிறைக் கூடாரம் தான். ஆங்கிலேயர்கள் உருவாக்கினார்கள் என்பதற்காக இந்த சிறைக் கூடாரத்தை உடைத்து விடுவார்களா என்ன? பல வகையில் ஆங்கிலேயர்கள் உருவாக்கிய இந்த கட்டமைப்பை பாதுகாத்து தனக்கேற்ற வகையில் பயன்படுத்திக் கொள்வதே இந்துத்துவா கும்பல் தான்.

அவர்களுக்கு ஆங்கிலேயர்கள் மீதெல்லாம் வெறுப்பு கிடையாது. அவர்களை காப்பாற்றிக் கொள்வதற்காக நாட்டையே காட்டிக் கொடுத்தவர்கள் இந்த இந்துத்துவ கும்பல், இது வரலாறு.

1799இல் ஆங்கிலேயர்களுக்கு உள்நாட்டு நீதிநெறிகளை தொகுக்க வேண்டிய கட்டாயம் வந்த பொழுது கல்கத்தாவில் இருந்த சர்.வில்லியம் ஜோன்ஸ் (இந்த பெயரை ஆர்.எஸ்.எஸ் கார்ர்கள் கொண்டாடுவார்கள்) உள்நாட்டு நீதிநெறிகளைத் தொகுத்து அதற்கு HINDU LAW என்று பெயரிட்டார். அப்பொழுது தான் இந்து என்ற சொல் முதன்முதலாக அரசியல் அங்கீகாரம் பெற்றது. இந்த சொல் வெள்ளைக்காரன் கண்டுபிடித்த சொல். இஸ்லாம், கிறுத்துவர்கள் அல்லாத மக்களை இணைத்து ஹிந்து என்று அறிவித்தார். (தொ.பரமசிவன் – இந்து தேசியம் நூல்)

இதையும் படியுங்கள்:

♦ பொது சிவில் சட்டம்: இந்துத்துவ நிகழ்ச்சி நிரலின் அங்கம்!
♦ இந்திய ராணுவம் இயங்குவது இந்து மத வெறிச் செயல் திட்டத்திலா?

வெள்ளைக்காரன் கண்டுபிடித்த இந்து என்ற சொல் மட்டும் நமக்கு அவமானம் கிடையாது. இந்தியா என்ற சொல் அவமானமா? இந்துத்துவம் இன்று வாழ்ந்துக் கொண்டிருப்பதற்கு சர்.வில்லியம் ஜோன்ஸ் போட்ட விதை தான் காரணம். அதனால் தான் வில்லியம் ஜோன்ஸை கொண்டாடுகிறார்கள் இந்துத்துவவாதிகள்.

நாட்டின் பெயரை பாரத் என்றோ இல்லை வேறு பெயர் வைப்பதினாலேயோ இந்தியாவில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும்,  உழைக்கும் மக்களுக்கும் வாழ்க்கைத் தரம் மாறப்போவதில்லை. மாறாக எந்த பெயர் வைத்தாலும் அதானி, அம்பானிகளின் கட்டற்ற சுரண்டலும் குறைய போவதில்லை. இது பாசிஸ்டுகள் ஆளும் இந்தியாவின் நிலைமை.

பாசிஸ்ட்கள் மக்களை திசைத்திருப்ப சில பைத்தியகார நடவடிக்கைகளை எடுப்பார்கள். நாம் அதனை வேடிக்கை பார்க்காமல் தக்க பதிலடி கொடுப்பதோடு நின்று விடாமல் உழைக்கும் மக்களின் விடுதலைக்காக உரத்த குரல் எழுப்புவோம்.!

  • நலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here