நக்சல் பாரி எழுச்சி தினமான மே 25 வரலாற்றில் பல முக்கியத்துவத்தை கொண்டது.
மே மாதம் வரலாற்றின் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தனக்குள் சுமந்துக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி தான் மாவோயிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பசவராஜ் படுகொலை செய்யப்பட்டார்.
நக்சல்பாரி இயக்கத்தின் பலவிதமான போக்குகள் குறித்து நக்சல்பாரி இயக்கத்தின் முதல் பொதுச் செயலாளரன சாரு மஜூம்தாரின் மகன் அபிஜித் மஜூம்தார் முன்வைத்த பேட்டியை தமிழில் மொழி பெயர்த்த சி. பி.ஐ (எம்-எல்) லிபரேஷன் தோழர் மதிவாணன் அவர்களுக்கு நன்றி.
000
♦️சாருமஜூம்தாரின் மகன் நேர்காணல்♦️
(“நக்சல்பாரி ஐம்பதாவது ஆண்டு தினத்தில் புரட்சிகர தந்தை அளித்துச் சென்ற மரபுரிமை செல்வம் என்னவென்று பரிசீலிப்போம்” என்ற தலைப்பிடப்பட்டு வெளிவந்த கட்டுரை. 1972ல் மரணிக்கும் வரையிலும் இந்திய அரசோடு வன்முறை மோதலை நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்டை வழி நடத்திச் சென்ற சாரு மஜூம்தாரின் மகன் அபிஜித் மஜூம்தாருடன் நேர்காணல்) நேர்காணல் : M. சுசித்ரா
(பேட்டியாளர் எம். சுசித்ரா கேரளாவின் கொச்சினைச் சேர்ந்த சுதந்திரமான பத்திரிகையாளர் ஆவார். இந்த பேட்டி, முதலில் மே 21-27, 2019 மாத்ருபூமி இதழில் மலையாளத்தில் வெளிவந்தது.)
புரட்சியாளர் சாரு மஜூம்தார் குறித்த நினைவுகளை அவரின் மகன் அபிஜித் மஜூம்தார் பகிர்ந்துகொள்கிறார்.
ஜூலை 28, 1972
அது மாலை நேரம். கல்கத்தாவின் எஸ்.எஸ்.கே.எம். மருத்துவக் கல்லூரியிலிருந்து இறந்தவரின் உடலை கல்கத்தாவின் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர். அது முழு இரகசியமாக செய்யப்பட்டது. ஆயுதம் தாங்கிய காவலர்கள் சாலைகளில் பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்தனர். நகரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது போல தோன்றியது. சாலையிலிருந்த அனைவரையும் வீட்டுக்குப் போகச் சொன்னார்கள். சாலையின் இரண்டு பக்கமும் போலீஸ் அணி வகுத்திருந்தது. வெகு நேரம் கழித்த பின்னர் அந்த உடல் சுடுகாட்டுக்கு எடுத்து வரப்பட்டது. அங்கேயும் கூட துணை ராணுவப்படைகள் எல்லா இடத்திலும் நிறுத்தப்பட்டிருந்தனர். சிறுவன் ஒருவனிடம் ஒரு போலீஸ்காரர் தீப்பந்தத்தை அளித்தார். அந்தப் பையனின் தந்தைதான் அங்கு சடலமாக கிடந்தார். சடலத்திற்கு தீ வை என்று அந்த பையனுக்குச் சொல்லப்பட்டது.
இப்படியாக, புரட்சிகரமான தலைவரான சாரு மஜூம்தாரின் உடல், நள்ளிரவில் தீக்கு இரையாக்கப்பட்டது. அவர்தான் நக்சல்பாரியின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாலெ)-யின் கருத்தியலைக் கட்டமைத்தவர். மக்கள் மத்தியில் அளப்பரிய மரியாதைப் பெற்ற அந்த மனிதர் அரசின் கண்களுக்கு, மிகப் பயங்கரமான எதிரியாக தெரிந்தார். அழித்தொழிப்பையும், வன்முறை அரசியலையும் முன்னெடுத்துச் சென்றவர் என்று அவரைப் பற்றி சொல்லப்பட்டது.
இந்த சம்பவம் 45 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. ஆனால், தந்தையின் சிதையிலிருந்து எழுந்த தீ, 57 வயதான அபிஜித் மஜூம்தாரின் மனதில் இன்னமும் கனன்றுகொண்டிருக்கிறது. அதுபோன்ற ஒரு மனிதருக்கு மகனாக இருப்பது அத்தனை எளிதான விஷயம் இல்லை. எப்போதும், பிள்ளையைத் தந்தையோடு ஒப்பிட்டுக்கொண்டிருப்பார்கள். அவன் தன் தந்தையின் பாதையைப் பின்பற்றுகிறானா என்று பார்ப்பார்கள். சொந்த தந்தையின் அரசியல் இலக்குகள்தான் மகனின் அரசியல் இலக்குகளா என்று யோசிப்பார்கள். விடாது எழும் கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஊடகங்கள் உள்ளிட்டு, பல தரப்பாரும் எப்போதும் கேள்வி கேட்பார்கள்.
அபிஜித் சாக் பீஸ் கொண்டு கல்கத்தாவின் தெருக்களில் “துப்பாக்கி முனையிலிருந்துதான் அதிகாரம் பிறக்கிறது” என்று எழுதித் திரிந்த சிறு பையனாக ஒரு காலத்தில் இருந்தபோதும், பல ஆண்டுகள் அவர் அரசியல் செயல்பாடுகளை விட்டுவிட்டார். அவரின் தந்தை இறந்து 25 ஆண்டுகள் கழித்த பின்னர்தான் அவர் மறுபடியும் அரசியலில் கால் எடுத்து வைத்தார். தற்போது அவர் CPI ML (Liberation) கட்சியின் டார்ஜிலிங் மாவட்ட செயலாளராக இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அக்கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினருமாகவும் இருக்கிறார். சிலிகுரியில் உள்ள ஒரு கல்லூரியில் ஆங்கில ஆசிரியராக இருக்கிறார்.
அவரின் தந்தை வழி நடத்திய கட்சியைப் போலல்லாமல் சிபிஐ எம்எல் சட்ட ரீதியாக, வெளிப்படையாக இயங்கும் ஒரு கட்சியாக இருக்கிறது. தேர்தலில் பங்கெடுக்கிறது. ‘ஆயுதப் போராட்டத்தில்’ ஈடுபடுவதில்லை.
இந்த நேர்காணலில் அபிஜித் நக்சல்பாரியைப் பற்றி பேசுகிறார். அவரது பெற்றோர்களைப் பற்றி, இப்போதைய புதிய யதார்த்தம் குறித்து விரிவாக பேசுகிறார். பேட்டியின் போது, ஒரே ஒரு சமயம் மட்டும் அபிஜித் கண் கலங்கினார். அது அவர் தன் தாய் லைலா பற்றி பேசிய நேரம்.
🔴 கேள்வி: நக்சல்பாரிக்குப் பின்பு அரை நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. இன்னதும் அந்த நாட்களை நினைவில் வைத்துள்ளீர்களா?
🟢 பதில்: நக்சல்பாரி எழுச்சி நடக்கும்போது எனக்கு ஏழு வயதுதான். எனவே, என் அனுபவத்தின் ஒரு பகுதியாக அதனைப் பற்றி நான் பேச முடியாது. ஆனால், நான் ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். மே 25, 1967 அன்று போலீஸ் துப்பாக்கியால் சுட்டது அமைதியாக போராட்டம் நடத்திக் கொண்டிருந்த ஒரு பெண்கள் குழு ஒன்றின் மீது! எட்டு பெண்கள், இரண்டு குழந்தைகள், ஒரு ஆண் அன்று இறந்துபோனார்கள். அதுபோன்ற நிகழ்வுகள் இன்றும் நடக்கின்றன. நந்திகிராம், சிங்கூர், பாங்கார்… இப்படி மேற்கு வங்கத்திலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இது நடந்துகொண்டுதான் இருக்கிறது.
நக்சல்பாரி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அதனைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார்கள். அனைவருக்கும் நக்சல்பாரியின் கதை தெரியும். ஆனால், அப்போதிருந்த (ஒன்றுபட்ட) கம்யூனிஸ்ட் கட்சிக்குள் என்ன நடந்துகொண்டிருந்தது என்று வெகு சிலருக்கு மட்டுமே தெரியும். ஒரு நாள் காலையில் எல்லாமும் துவங்கின என்று பலரும் நினைக்கிறார்கள். அது உண்மையல்ல. பல்வேறு தொடர் நிகழ்வுகளின் உச்ச கட்டம்தான் நக்சல்பாரி. பற்பல ஆண்டுகளாக, கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள் ஆற்றிய கடும் பணி அதன் பின்னே உள்ளது.
🔴 கேள்வி: நக்சல்பாரியில் என்ன நடந்தது? அது ஓர் ஆயுதப் போராட்டம்தானே?
🟢 பதில்: ஆமாம். அது ஓர் ஆயுதப் போராட்டம்தான். நக்சல்பாரியும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் பழங்குடிகள் அதிக அளவு வாழும் பகுதிகள். அங்கே உள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்களும், விவசாயத் தொழிலாளர்களும் நிலமற்றவர்கள். அவர்கள் நிலப்பிரபுக்களின் கடும் சுரண்டலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவர்கள் தங்களின் பாரம்பரிய ஆயுதங்களைத் தாங்கிக்கொண்டு கலகம் செய்தனர். விவசாயிகளிடம் துப்பாக்கிகளும் இல்லை. துப்பாக்கி குண்டுகளும் இல்லை. வெடி குண்டுகளும் இல்லை. அரசிடம்தான் அதுபோன்ற ஆயுதங்கள் இருந்தன. போலீசிடமிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றுங்கள் என்று தெளிவான அறைகூவல் விடுக்கப்பட்டிருந்தது.
உண்மை என்னவென்றால், தெபகா இயக்கத்தின் தொடர்ச்சிதான் நச்கல்பாரி இயக்கம். தெபகா இயக்கம், வடக்கு வங்கத்திலும், தற்போது வங்கதேசமாக இருக்கும் சில பகுதிகளிலும் 1940களில் நடைபெற்றது.இங்கே தெபகா இயக்கம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, தெலுங்கானாவிலும் விவசாயிகள் தொழிலாளர்களின் ஆயுதப் போராட்டம் நடந்துகொண்டிருந்தது. தெபகா இயக்கத்தின் படிப்பினைகளைப் பெற்ற சாரு மஜூம்தார், கனு சன்யால், ஜங்கல் சந்தல், சரண் கோஷ் மற்றும் தெபகா இயக்கத்தின் தலைவர்கள் பலரும் நக்சல்பாரியில் தோட்டத் தொழிலாளர்களையும், விவசாயத் தொழிலாளர்களையும் அமைப்பாக்கத் துவங்கினர். நான் முன்னமேயே சொன்னது போல அது பல ஆண்டுகள் எடுத்துக்கொண்டது.
🔴 கேள்வி: தெபகா இயக்கம் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?
🟢 பதில்: 1946 -47 ஆண்டுகளில் தெபகா இயக்கம் நடைபெற்றது. தெபகா என்றால் மூன்றில் (2/3) இரண்டு பங்கு என்று பொருள். நேரடியாக விவசாயத்தில் ஈடுபட்ட குத்தகையாளர்கள், நில உடமையாளர்களுக்கு விளைச்சலில் சரி பாதியைக் கொடுக்க வேண்டியிருந்தது. அவர்கள் அதியார்கள் என்று அழைப்பார்கள். அதாவது அதா என்றால் பாதி என்று பொருள். பாதி விளைச்சலை வரியாக கொடுத்துவிட வேண்டும் என்பதால் அவர்கள் அதியார்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் பண்ணை அடிமைகள் போல இருந்தனர். அவர்களுக்கு உரிய பாதி கூட அவர்களுக்கு கிடைக்காது.
1939-களின் இறுதியின்போது, கம்யூனிஸ்ட் கட்சி இப்பிரச்சனையைக் கையில் எடுத்தது. வாரக் குத்தகையாளர்களை அருகாமையில் உள்ள ஜெல்பெய்குரி மாவட்டத்திலும் அமைப்பாக்கியது. இந்த சமயத்தில்தான் என் தந்தை கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். அவர் 1939ல் அவருக்கு 20 வயது ஆனபோது கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். வாரக் குத்தகைதாரர்கள் அறுவடையில் மூன்றில் ஒரு பகுதியைத்தான் குத்தகையாக கொடுப்போம் என்று உறுதியாக சொன்னார்கள். அவர்கள் அமைப்பான பின்பு அவர்கள் தங்களுக்குத் தேவையானதை தங்களுக்கு என்று வைத்துக்கொண்டார்கள். இயக்கம் மெதுவாக வலுப்பெற ஆரம்பித்தது. அத்துடன் சேர்ந்து அரசு ஒடுக்குமுறையும் வலுப்பெற ஆரம்பித்தது. 1942ல் கட்சியின் வேலைகள் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மத்தியிலும் விரிவடைந்தது. ரயில் வே தொழிலாளர்கள் மத்தியிலும் அமைப்பு உருவானது.
அடுத்த ஆண்டு மாபெரும் பஞ்சம் ஏற்பட்டது. தொழிலாளர்கள் பட்டினி கிடக்க ஆரம்பித்தனர். மக்கள் ஒன்றுபட வேண்டும் என்று சாரு மஜூம்தாரும் மற்ற தலைவர்களும் வலியுறுத்தினர். நிலப்பிரபுக்களின் தானிய களஞ்சியங்களைக் கைப்பற்றுங்கள், தானியங்களை பறிமுதல் செய்யுங்கள் என்று வழிகாட்டினர். “நாங்கள் துப்பாக்கி குண்டுகளால் சாவோம்… பட்டினியால் சாக மாட்டோம்” என்ற முழக்கம் எழுப்பப்பட்டது. விரைவில் போராட்டம் வேகம் பிடித்தது. தொழிலாளர்களும் விவசாயிகளும் பேரணிகளை நடத்தினர். தொழிலாளர்கள் பயிரை அறுவடை செய்தனர், தானியக் களஞ்சியங்களைத் தாக்கி, பதுக்கப்பட்ட தானியத்தை மக்களுக்கு வினியோகம் செய்தனர்.
மக்களை ஒடுக்குவதற்கான அரசின் தாக்குதல் மேலும் மேலும் காட்டுமிராண்டித்தனமானது. அதுபோன்ற பேரணியொன்றில் விவசாயிகள் போலீசிடமிருந்து துப்பாக்கியைப் பிடுங்க முயன்றனர். இதன் காரணமாக போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது. 11 விவசாயத் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே இறந்துபோனார்கள்.
🔴 கேள்வி: போராட்டம் தொடர்ந்ததா?
🟢 பதில்: தலைவர்கள் தொடர்ந்து விவசாயிகளை அமைப்பாக்கினர். 1953ல், மத்தியில் இருந்த நேரு அரசாங்கம் ஜமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தது. ஆனால், அது நடைமுறைக்குக் கொண்டுவருவது நேரு அரசாங்கத்தின் நோக்கம் அல்ல. மக்களை ஏமாற்றி திசை திருப்புவதற்காகத்தான் அந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. அப்போதைய கம்யூனிஸ்ட் கட்சி அதனைப் பற்றியும் கேள்வி எழுப்பியது. 1959-ல், உச்சவரம்புக்கு அதிகமாக நிலப்பிரபுக்களிடம் இருக்கும் நிலத்தை பறித்தெடுங்கள் என்று கட்சி அழைப்பு விடுத்தது. இயக்கம் மேலும் மேலும் வலுப்பெற ஆரம்பித்தது. கட்சியின் மாநில தலைமை போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தது.
என் தந்தை தனது ஊருக்கு, அதாவது சிலிகுரிக்கு 1952-ல் திரும்பியிருந்தார். டார்ஜிலிங் மாவட்டத்தில் விவசாயிகளை அமைப்பாக்குவதில் முழுமையும் ஈடுபட்டிருந்தார். அவர் கட்சியின் போராட்ட வாபஸ் அறிவிப்பால் அதிர்ச்சியடைந்தார். அவர் மட்டுமல்ல, மாவட்டத்தின் பிற தலைவர்களும் ஏமாற்றம் அடைந்தார்கள். கட்சியின் கருத்துரையை ஏற்காமல் மாவட்டத்தில் வேலையைத் தொடர்ந்தனர். விவசாயிகளையும், தேயிலை தொழிலாளர்களையும் அமைப்பாக்கினர். உபரி நிலத்தைக் கைப்பற்றுங்கள் என்று சொன்னார்கள். நிலப்பிரபுக்களின் சுரண்டலுக்கு எதிராக கலகம் செய்யுங்கள் என்றனர். அதன் உச்சமாக நக்சல்பாரி நடந்தது.
🔴 கேள்வி: சாரு மஜூம்தார் மிகவும் கண்டிப்பான தந்தையாக இருந்தாரா?
🟢 பதில்: ஒரு நாளும் அவர் அப்படி இருந்ததில்லை. அவர் மிகவும் அன்பான, பரிவுணர்ச்சியுள்ள தந்தை. இரக்கமேயில்லாத புரட்சியாளன், தொழிலாளர்களின் வர்க்க எதிரிகளைக் கொன்றொழிக்கச் சொன்னவர் என்பதெல்லாம் ஊடகங்களும், அரசாங்கமும் வேண்டுமென்றே பரப்பிய கட்டுக்கதை. அவர் ஒரு நாளும் அப்படிப்பட்டவர் இல்லை. அவருக்கு எங்களோடு செலவு செய்ய நேரமிருக்கவில்லை. இருந்தாலும் அவர் வீட்டிலிருக்கும்போதெல்லாம் எங்களோடு அன்போடு பழகுவார். அவருக்கு அரசியல் மட்டுமே பிடித்திருந்தது என்பது இல்லை. அவருக்கு இலக்கியம் பிடிக்கும். சாஸ்திரிய சங்கீதம் பிடிக்கும்.
எனக்கும் என் அக்காவுக்கும் அவர் இலக்கியங்களையும் சங்கீதத்தையும் கற்றுக்கொடுத்தார். (எனது பெரிய அக்கா ஒரு மருத்துவர். இரண்டாவது அக்கா மதுமிதா ஓர் ஆசிரியர்). அவர் எங்களுக்கு ரவீந்திரநாத் தாகூரை அறிமுகம் செய்தார். பக்கிம் சந்திர சட்டர்ஜியையும் பிறரையும் அறிமுகம் செய்தார். வங்க இலக்கியத்தை மட்டும் அவர் எங்களுக்கு அறிமுகம் செய்யவில்லை. ஆங்கில நாவல்களையும் படிக்க கொடுத்தார். இலக்கணம் படித்தால் மட்டும் ஆங்கிலம் வசப்படாது. நல்ல புத்தகங்களைப் படிப்பதன் மூலமே ஆங்கிலத்தில் புலமை பெற முடியும் என்று சொல்வார். எனது ஹீரோ எனது தந்தைதான்.
🔴 கேள்வி: நக்சல்பாரி எழுச்சியின் போது உங்களுக்கு ஏழு வயது என்று சொன்னீர்கள். உங்கள் குழந்தைப் பிராயம் எப்படி இருந்தது?
🟢 பதில்: எனது குழந்தைப் பருவம் மற்றவர்கள் போல இருக்கவில்லை. எனது நண்பர்கள் வளர்ந்தது போல நாங்கள் வளரவில்லை. கட்சித் தலைவர்களும், ஊழியர்களும், மாணவர்களும் என் தந்தையைப் பார்க்க வருவார்கள். மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல… ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கேரளாவிலிருந்தெல்லாம் வருவார்கள். என் தந்தையைப் பார்த்துவிட்டு இங்கிருந்து புறப்பட்ட, ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த, பஞ்சடி கிருஷ்ணமூர்த்தி, பலசாவில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இயக்கத்தின் தலைவர்கள் பலரையும் பார்க்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.
நாங்கள் வளர்ந்தபோது புரட்சி என்பது எங்களுக்கு மிகவும் பழக்கமான சொல் ஆகிவிட்டது. ஆனால், இயற்கையாகவே, சிறார்களான எங்களுக்கு அரசியல் புரியவில்லை. ஆனால், எங்களுக்கும் ஒரு பாத்திரம் இருக்கிறது என்று நாங்கள் கருதினோம்.
எங்களுக்குப் புரட்சியைப் பற்றி எதுவும் தெரியாது என்றாலும் பெரிய புரட்சியாளர்கள் போல நடந்துகொண்டோம். அது மிகவும் துணிச்சல்கரமான காரியம் என்று நாங்கள் புரிந்து வைத்திருந்தோம். அந்த நேரத்தில் இயக்கத்தின் முழக்கங்கள் எல்லாம் மிகவும் பிரபலமாகிவிட்டன. அந்த முழக்கங்களை எழுப்பியபடி நாங்கள் ஊரைச் சுற்றி வருவோம். எங்கள் வீட்டில் மர சுவர்களால் ஆன சிறு அறை ஒன்று இருந்தது. அதனை வாடகைக்கு விட்டு வைத்திருந்தோம். ஆனால், நக்சல்பாரி நிகழ்ந்தபோது அந்த அறை காலியாக இருந்தது. சிறுவர்கள் எல்லாம் அந்த அறையில் கூடுவோம். அந்த மரச் சுவர்களில் உடைந்த கையெழுத்தில், “துப்பாக்கிக் குழாயில் இருந்து அரசியல் அதிகாரம் பிறக்கிறது”, “சீனத் தலைவர் எம் தலைவர்” என்றெல்லாம் எழுதி வைப்போம். (சிரிக்கிறார்).
புரட்சியென்பது மிகவும் துணிவுகரமான வேலை என்று நாங்கள் நினைத்தோம்.
🔴 கேள்வி: வீட்டில் நிதி நிலைமை எப்படியிருந்தது? வீட்டு செலவுகளை எப்படி சரிக்கட்டினீர்கள்?
🟢 பதில்: எங்கள் குடும்பம் ஒரு நடுத்தர வர்க்க குடும்பம். ஆமாம். நாங்கள் வாழ்வதற்குப் போராட வேண்டியிருந்தது. எங்கள் தாய் (லைலா மஜூம்தார்) எல்ஐசி முகவராக செயல்பட்டு வந்தார். அதுதான் எங்களின் ஒரே வருமானம். எங்களின் உறவினர்கள் சிலரும் எங்களோடு வாழ்ந்து வந்தனர். அம்மாதான் எல்லோரையும் பார்த்துக்கொண்டார். அவர் மிகவும் கடினப்பட்டு உழைக்க வேண்டியிருந்தது. பல வீடுகளுக்கும் சென்று எல்ஐசி பாலிசி எடுத்துக்கொள்ளுங்கள் என்று பேசுவார். அப்படித்தான் அவர்கள் எங்களைப் பார்த்துக்கொண்டார். நாங்கள் எங்கள் தாயிற்கு மிகவும் கடன்பட்டுள்ளோம். நாங்கள் வாழ்க்கையில் என்ன பெற்றிருக்கிறோமோ அதெல்லாம் அம்மா கொடுத்தது. நல்ல கல்வி உட்பட அனைத்தையும் அவர் கொடுத்தார். அதற்காக அரும்பாடுபட்டார்.
🔴 கேள்வி: அவருக்கு அரசியலில் எப்போதாவது ஆர்வம் இருந்ததா?
🟢 பதில்: அம்மாவைப் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. எல்லோருக்கும் என் அப்பாவைப் பற்றி தெரியும். அவரைப் பற்றி நிறைய எழுதப்பட்டாகிவிட்டது. ஆனால், வெகு சிலருக்கே அம்மாவைப் பற்றி தெரியும். நான் சந்தித்ததிலேயே மிகவும் தைரியமான பெண் என் அம்மாதான். அவரின் உள்ளும் புறமும் அரசியல்தான் இருந்தது. அவர் கேட்டதெல்லாம் அரசியல்தான். பேசியதெல்லாம் அரசியல்தான். 13 அல்லது 14 வயது முதல் அவர் மூச்செல்லாம் அரசியல்தான்.
🔴 கேள்வி: அவருடைய பின்னணி என்ன?
🟢 பதில்: அம்மாவின் தந்தை ஒரு மருத்துவர். ஹரேந்திர குப்தா என்பது அவரின் பெயர். அவர் அரசு மருத்துவராக இருந்தார். அவர் கடைசியாக ஜெய்பல்குரி மாவட்டத்தில் ராஜ்கன்ஞ் மருத்துவமனையில் பணியாற்றினார். அப்போது அம்மாவுக்கு 13 அல்லது 14 வயது. அவரின் வீட்டுக்கு அந்த நாட்களில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பலர் வருவார்கள். அவர்களில் பலர் மீது வழக்கு இருந்ததால் அவர்கள் மாவட்டத்தை விட்டு வெளியே செல்ல முடியாது. படித்த மருத்துவரின் பார்வையாளர் கூடத்தில் பல்வேறு பத்திரிகைகள் இருக்கும். அவர்கள் அங்கே வந்து பேப்பர் படிப்பார்கள். அரசியல் பேசுவார்கள். அம்மா அவர்களுக்கு தேனீர் அளிப்பார். அவர்களுடன் உட்கார்ந்து அம்மாவும் அரசியல் பேசுவார். அதனால், அவர் மனதில் ஏகாதிபத்திய எதிர்ப்பு கருத்துகள் ஆழமாகப் பதிந்தன. பின்னர், அவர் ஒரு கம்யூனிஸ்ட் ஆனார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் பெண்கள் பிரிவில் அவர் துடிப்போடு பணியாற்றினார். அதுபோல தெபகா விவசாய போராட்டத்திலும் பங்காற்றினார். அதன் பின்பு அவர் ஜெய்பெல்குரி மாவட்டத்தின் தலைவர்களில் ஒருவராக ஆனார். 1948-ல் கட்சி தடை செய்யப்பட்ட போதும், 1950-ல் கட்சி தடை செய்யப்பட்டபோதும் அவர் சிறையிலடைக்கப்பட்டார்.
🔴 கேள்வி: அவர் முழு நேர கட்சி ஊழியரா? அல்லது வேறு ஏதாவது வேலை பார்த்தாரா?
🟢 பதில்: அவர் எப்போதுமே உழைக்கும் பெண்தான். அம்மா பாலர் வகுப்புப் பிள்ளைகளுக்குப் பாடம் எடுப்பார். அவர் மிகப் பெரிய குடும்பத்திலிருந்து வந்தவர். அதனால், அவர் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டியிருந்தது.
🔴 கேள்வி : ஆக, உங்கள் தந்தையும் தாயும் ஜெய்பெல்குரியில் முதலில் சந்தித்துக்கொண்டனர்?
🟢 பதில் : ஆமாம். 1940களில் சந்தித்துக்கொண்டனர். அவர்கள் இருவரும் தோழர்கள். அவர்கள் இருவரும் கட்சியின் துடிப்பான ஊழியர்கள். அவர்கள் சேர்ந்தே வேலை செய்தார்கள். ஒருவரை ஒருவர் அறிந்துகொண்டனர். வாழ்க்கைத் துணைவர்களாக இருக்கலாம் என்று முடிவு செய்தனர். அவர்களின் திருமணம் 1952-ல் நடைபெற்றது. அதன்பின் அவர்கள் இருவரும் சிலிகுரி வந்துவிட்டனர். அதுதான் என் தந்தையின் ஊர். அவர்கள் இருவரும் டார்ஜிலிங் சிபிஐ கட்சியில் உறுப்பினர்களாக இருந்தனர்.
1964-ல் கட்சி பிளவுபட்டபோது இருவரும் சிபிஐ எம் கட்சிக்கு வந்தனர். எனது தந்தை மேற்கொண்ட புரட்சிகரமான நிலைப்பாடுகளை சிபிஐ எம் கட்சியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவரை கட்சியை விட்டு நீக்கிவிட்டனர். அவரும், சிபிஐ எம்மில் தொடர தனக்கு விருப்பமில்லை என்ற நிலையெடுத்துவிட்டார். அவரும் அவரைப் போன்ற தலைவர்களும் சிபிஐ எம்மை விட்டு வெளியே வந்தனர். தாங்கள் செய்துவந்த புரட்சிகர வேலைகளைத் தொடர்ந்து விவசாயிகள் மத்தியில் செய்து வந்தனர். நக்சல்பாரிக்குப் பின்பு 1969-ல் அவர்கள் சிபிஐ எம்எல் கட்சியை நிறுவினர்.
🔴 கேள்வி: உங்கள் தாயின் நிலை என்ன? அவர் இந்த அரசியல் மாற்றத்தை ஏற்றுக்கொண்டாரா?
🟢 பதில் : சிபிஐ எம்மில் தொடர விரும்பவில்லை என்று அம்மா ஒருபோதும் சொன்னதில்லை. அதேசமயம் அவர் கட்சி உறுப்பினர் தகுதியைப் புதுப்பித்துக்கொள்ளவும் இல்லை. அவர் கட்சியில் துடிப்பாக வேலை செய்வதை நிறுத்திக்கொண்டார். அதற்கு மாறாக, அப்பாவிற்கு அவர் கட்சி வேலைகளில் துணையாக நின்றார். கணவருக்கான ஒரு பெண் தனது அரசியல் பாத்திரத்தை விட்டுத்தருவது சரியானதுதானா என்ற கேள்வி எழும்புகிறது.
படிக்க:
♦ மே-25: நக்சல்பாரி எழுச்சியின் 57 –ம் ஆண்டு! மறையாது மடியாது நக்சல்பரி!
♦ மக்கள்திரள் பாதையில் தஞ்சை மண்ணில் மணம் பரப்பும் நக்சல்பாரி வித்துக்கள்
ஆனால், என்ன செய்வது… அதுதான் நிகழ்ந்திருந்தது.
1960-களின் நடுப்பகுதியில் அப்பாவின் உடல் நலம் சீர்கெட ஆரம்பித்தது. 1965-ல் அவருக்கு இதய தாக்குதல் ஏற்பட்டது. அடிக்கடி நெஞ்சுவலி ஏற்படுவது வழக்கமான ஒன்றாக ஆகிவிட்டது. அவருக்கு ஆஸ்துமாவும் இருந்தது. எனவே, அம்மாவின் கைநிறைய வேலை வந்துவிட்டது. அப்பாவின் அரசியல் வேலை, அவரின் உடல் நலப் பிரச்சனைகள், தினமும் வீட்டுக்கு வரும் தோழர்கள், குடும்பத்தை ஓட்டுவது, எங்களின் கல்வி, அப்பாவின் தலைமறைவு வாழ்க்கை, போலீஸ் ரைடு.. ஆனால், இவை எவற்றாலும் அம்மாவை உடைக்க முடியவில்லை. அவர் மிகவும் வலுவான மனதுள்ள பெண். துணிச்சலான பெண்.
🔴 கேள்வி: ஆனால், நக்சல்பாரியால் உருவான சூழல்… அது எப்படி உங்கள் வீட்டைப் பாதித்தது?
🟢 பதில்: அரசியல் காரணங்களுக்காக போலீஸ் சோதனை நடப்பது வழக்கமான ஒன்றாக ஆகிவிட்டது. நக்சல்பாரிக்கு முன்பும் பின்பும் போலீஸ் சோதனை இரவில்தான் நடக்கும். கதவைத் தட்டினார்கள் என்றால், அப்பாவை அழைத்துப்போக போலீஸ் வந்துவிட்டது என்று எங்களுக்குப் புரிந்துவிடும். எங்கள் வீட்டில் ஒரே ஒரு பெரிய படுக்கைதான் இருந்தது. நாங்கள் ஐந்துபேரும் அந்தப் படுக்கையில்தான் படுத்து உறங்குவோம். மின்சாரம் கிடையாது. ஒரு மண்ணெண்ணெய் விளக்குதான் எரிந்துகொண்டிருக்கும். போலீஸ் வரும்போது அம்மா தான் முதலில் எழுந்திருப்பார். பிடியாணை இருக்கிறதா என்று கேட்பார். இல்லையென்றால் அவர்களை உள்ளே விட மாட்டார். அப்போது மழையாக இருந்தாலும், வெயிலாக இருந்தாலும், குளிராக இருந்தாலும் போலீஸ் வெளியேதான் காத்திருக்க வேண்டிவரும்.
அதுமட்டுமல்ல.. போலீஸ் கொண்டுவந்த துப்பாக்கிகளையும், துப்பாக்கிக் குண்டுகளையும் அம்மா பட்டியலிட்டுக்கொள்வார். போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்த பட்டியலில் கையெழுத்து இட வைப்பார். அது ஓர் ஆவணம் ஆகிவிடும். போலீஸ் பொய் சொல்லி ஏமாற்றிவிடக் கூடாது என்று இந்த ஏற்பாடு. பொய்யான குற்றச்சாட்டைத் தடுப்பதற்காக, அனைத்துவிதமான முன்தயாரிப்பையும் அம்மா செய்வார். இந்த முன் தயாரிப்பு எல்லாவற்றையும் முடித்த பின்னர்தான் அவர்களை அம்மா உள்ளே விடுவார். குறிப்பிட வேண்டிய முக்கியமான மற்றொரு விசயம் அம்மாவின் குரல். அது கணீர் என்று உரத்ததாக, ஆழமான ஒன்றாக இருக்கும். அதனைக் கேட்கும் எவரும் அதிர்ந்து போவார்.
🔴 கேள்வி: போலீஸ் உள்ளே வருவதற்கு பலப்பிரயோகம் செய்ய மாட்டார்களா?
🟢 பதில்: இல்லை. அவர்கள் ஒருபோதும் அதற்குத் துணியவில்லை. நாங்கள் இங்கே உள்ள அனைவருக்கும் தெரிந்தவர்கள். அப்பாவின் மீதும், அம்மாவின் மீதும் இங்குள்ளவர்களுக்கு அளப்பரிய மரியாதை. அப்பா சிலிகுரியில் பிறந்து வளர்ந்தவர். அவர் பண்பாட்டுத் தளத்திலும் வேலை செய்து வந்தார். இந்த காரணங்களால் போலீஸ் மரியாதையாக நடந்துகொண்டார்கள் என்று நினைக்கிறேன்.
🔴 கேள்வி: நக்சல்பாரிக்குப் பின் உங்கள் அப்பா தலைமறைவாக சென்றுவிட்ட பின்பு இங்கே நிலைமை எப்படியிருந்தது?
🟢 பதில்: எங்கள் வீட்டைச் சுற்றி எப்போதும் ஆயுத போலீஸ் நின்றுகொண்டிருக்கும். வங்க போலீஸ், சிஆர்பிஎப் எல்லோரும் இருப்பார்கள். எங்களுக்கு அது போகப்போக பழகிவிட்டது.
🔴 கேள்வி: நக்சல்பாரிகள் என்றால் பயங்கரவாதிகள், கொலைகாரர்கள் என்று முத்திரை குத்தப்பட்ட காலம் அது. அரசு, அரசியல் கட்சிகள், ஊடகம் என்று அனைவரும் இயக்கத்துக்கு எதிராக நின்றனர். உங்களுக்கு அருகாமையில் வாழ்ந்தவர்கள் உங்களை எப்படி பார்த்தனர்? அவர்கள் உங்களை விட்டு விலகவில்லையா?
🟢 பதில் : ஒருபோதும் இல்லை. அவர்கள் எப்போதும் எங்களின் பெற்றோர்களை மதித்தனர். எங்களுக்கு ஆதரவு அளித்தனர். நக்சல் என்ற வார்த்தையை உருவாக்கியதே ஊடகங்கள்தான். துவக்கத்தில் சிபிஐ எம்மை விட்டு விலகியவர்களை தூற்றவும், அவமானப்படுத்தவும் நக்சல் என்ற வார்த்தையை அவர்கள் உருவாக்கினார்கள். இயக்கத்தை சிதைப்பதுதான் அவர்களின் நோக்கம். ‘இங்கே பயங்கரவாதிகள் இருக்கின்றனர். ஆயுதங்களைச் சேகரிக்கின்றனர்’ என்று அவர்கள் தினமும் கதை கட்டினார்கள்.
வழக்கமான போக்கிலிருந்து உடைத்துக்கொண்டு வெளியேறியவர்களை அசிங்கப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட வார்த்தைதான் நக்சல் என்பது. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக அந்த வார்த்தைக்கு மரியாதை கிடைக்க ஆரம்பித்தது. நக்சல் என்ற அடைமொழியைச் சேர்த்தால் அது மரியாதைக்குரியது என்ற காலமும் வந்தது. எப்படியிருந்தாலும் உள்ளூர் மக்கள் அரசின், போலீசின் துஷ்பிரச்சாரங்களை நம்பவில்லை. மக்கள், அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, எங்களுக்கு எப்போதும் உதவியாக இருந்தனர். உண்மையிலேயே அதனை அங்கீகரித்து பாராட்ட வேண்டும்.
🔴கேள்வி: உங்கள் தந்தையை நீங்கள் கடைசியாகச் சந்தித்து எப்போது ?
🟢பதில்: கடைசியாக என் தந்தை 1969 நவம்பரில் தலைமறைவானார். 1972 ஜூலையில் அவர் கைது செய்யப்பட்டார். அவரை கொல்கத்தாவின் லால்பஜார் போலீஸ் லாக் அப்பில் வைத்திருந்தனர் 12 நாட்கள் கடந்த பின்னர், ஜூலை 28 அன்று அவர் இறந்துபோனார். அவர் போலீஸ் காவலிலிருந்தபோது நானும் எனது சகோதரிகளும் அம்மாவும் அவரை இரண்டு முறை சந்தித்தோம். கடைசியாக அப்பாவை 25 அன்று சந்தித்தோம். அந்த சமயத்தில் என் மூத்த அக்கா மருத்துவ முன் படிப்புக்காக கொல்கத்தாவில் தங்கியிருந்தார்.
🔴கேள்வி: கைதுக்குப் பின்பு அவரை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றார்களா?
🟢பதில்: இல்லை. நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லாமல் இருப்பது சட்ட விரோதம் என்றபோதும், ஒருமுறைகூட அழைத்துச் செல்லவில்லை. அவர் போலீஸ் காவலிலேயே செத்துப் போனார். அவர் உடல் நலமின்றி இருந்தார்.
🔴கேள்வி: அவர் காவலிலிருந்தபோது உடல் ரீதியாக அவரைத் துன்புறுத்தினார்களா?
🟢பதில்: தெரியாது. எனக்குத் தெரியாது. அவரை நான் பார்த்தபோது அவர் நிலைகுலைந்திருந்தார். எப்போதும்போல, போலீசின் முன்னிலையில்தான் சந்திப்பு நடந்தது. டெபி ராய், விபூதி சக்கரவர்த்தி போன்ற, நக்சலைட்டுகளைக் கொன்றதால் புகழ்பெற்ற காவல் அதிகாரிகள் அப்போது இருந்தார்கள். அவர்கள் எப்போதும் அங்கேயே இருப்பார்கள். இருந்தாலும், ‘நீங்கள் பலவீனமாகி விட்டீர்களே?’, ‘போலீஸ் அதிகாரிகள் உங்களை என்ன செய்தார்கள்?’ என்ற கேள்விகளை அம்மா கேட்டார். ‘உங்களைச் சித்திரவதை செய்தார்களா?’ என்பதுதான் அம்மா கேட்டதற்கான பொருள்.
‘அவர்கள் எப்போதும் வருகிறார்கள். காலை, மதியம், மாலை, இரவு என்று எல்லா நேரமும் வருகிறார்கள்.அவர்கள் என்னைத் தூங்க விடுவதில்லை ‘ என்று அப்பா சொன்னார். அப்படியென்றால், விசாரணை இடைவெளியின்றி தொடர்ந்து பல மணி நேரம் நடந்தது என்று பொருள். மேலும், அவரின் உயிரைக் காப்பதற்கான மருந்துகள் அவருக்கு லாக்கப்பில் கொடுக்கப்படவில்லை.
அவருக்கு இதயப் பிரச்சனை இருந்தது என்பதால், சில மருந்துகளை அவர் ஒருவேளை கூட தவறாது சாப்பிட வேண்டும். வீட்டில் இருக்கும்போது அவருக்கு ஒருசமயம் நெஞ்சுவலி ஏற்பட்டது. பக்கத்தில் உள்ள ஒரு மருத்துவரை அழைப்போம். மருத்துவர் ஒரு கம்யூனிஸ்ட். அவர் வந்து அப்பாவின் அருகிலிருந்து பார்த்துக்கொள்வார். ஆனால், இந்த வசதிகளெல்லாம் லாக்கப்பில் இல்லை. அவரை ஓய்வெடுக்க விடவில்லை. மருந்து கொடுக்கவில்லை. உயிர் காக்கும் வசதி எதுவும் அங்கிருக்கவில்லை. இது ஒவ்வொன்றுமே சித்திரவதைதானே? இலையா? இவை அனைத்துமே ஒட்டுமொத்த மனித உரிமை மீறல்கள்.
🔴கேள்வி: அவரின் இறப்பு பற்றி எப்படி உங்களுக்குத் தெரிய வந்தது?
🟢பதில்: என் சகோதரிக்குத்தான் முதலில் தகவல் வந்தது. பெரிய அக்கா தங்கியிருந்த மருத்துவக் கல்லூரி விடுதிக்கு போலீஸ் வந்து, அவசரமாக எங்கள் தந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். அக்காவை தன்னோடு வரும்படி போலீஸ் அழைத்திருக்கிறார். ஆனால், இதெல்லாம் நாடகம் என்று என் அக்காவின் உள் மனது சொல்லியிருக்கிறது.
என் அப்பா போலீசிடம் அதுபோன்ற உதவிகளை ஒருபோதும் கேட்க மாட்டார் என்று அக்காவுக்குத் தெரியும். இறந்த உடலை ஒரு வெள்ளை துணியால் போர்த்தியிருந்த காட்சிதான் என் அக்காவிற்குக் காட்டப்பட்டது. சிலிகுரியில் இருந்த எங்களுக்கும் போலீஸ் தகவல் வந்தது. எங்களின் அண்டை அயலார் விமான டிக்கெட் ஏற்பாடு செய்து கொடுத்து கொல்கத்தாவுக்கு அனுப்பி வைத்தனர்.
நாங்கள் மாலையில் மருத்துவமனைக்குச் சென்று சேர்ந்தோம். அந்த சமயத்தில் உடலைப் பிணவறைக்குக் கொண்டு சென்றிருந்தனர். இறந்தவரை அடையாளம் காணவும், உறுதி செய்யவும் போலீஸ் எங்களை அழைத்துச் சென்றது. அந்த இடம் முழுவதும் போலீஸ்காரர்கள்தான் இருந்தார்கள். என் அப்பா பாதங்களின் பின்புறம் கருப்பாக இருந்தது. அட்டைக் கரி போலக் கருப்பாக இருந்தது. அப்படி இருப்பது இயற்கையா என்ன? அந்த கருப்புப் பாதங்கள் இப்போதும் கண் முன்னே இருக்கின்றன. அவை ஒருபோதும் மறையாது.
🔴கேள்வி: உடலை சிலிகுரி கொண்டுவந்தீர்களா?
🟢பதில்: இல்லை. உடலை எங்களிடம் கொடுங்கள் என்று அம்மா கேட்டார். உடலை சிலிகுரியிலிருந்து கொண்டு செல்ல வேண்டும் என்று அவர் விரும்பினார். அவர்கள் முற்றிலுமாக மறுத்துவிட்டார்கள்.
🔴கேள்வி: உடலை எங்கே எரித்தார்கள்?
🟢பதில்: கொல்கத்தா சுடுகாட்டில். வங்கத்தின் ஆயுதப் போலீசும், சிஆர்பிஎப்-பும் சுடுகாட்டில் நிறைக்கப்பட்டிருந்தனர். நகரத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது போன்ற நிலை இருந்தது. ஆனால், எனக்கு நன்கு நினைவில் இருக்கிறது. சுடுகாட்டிற்கு அப்பா உடலை எடுத்துச்சென்றபோது, சின்ன சந்து போன்ற தெருக்களிலிருந்து 4 அல்லது 5 பேர் கொண்ட குழுக்களாக, சட்டென்று தோன்றி அப்பாவுக்கும், இயக்கத்துக்கும் செவ்வஞ்சலி செலுத்தி, புரட்சிகர முழக்கங்களை எழுப்பி்விட்டு சட்டென்று மறைந்தனர். மூலை முடுக்கெல்லாம் போலீஸ் நிறைந்திருக்க இப்படிச் செய்வதற்கு விசேஷமான துணிச்சல் வேண்டும்.
அந்த ஒருமைப்பாடு நிகழ்வை நான் என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்.
அப்போது கட்சிக்காரர்கள் தலைமறைவாக இருந்தார்கள். அவர்கள் வெளியே வந்தால் பிடிக்கப்படுவார்கள், சித்திரவதைக்கு ஆளாவார்கள், கொலை செய்யப்படுவார்கள். இதற்கெல்லாம் துணிந்து அஞ்சலி செலுத்த வந்தவர்களை நினைத்து நாங்கள் பெருமைகொண்டோம். அதுமட்டுமல்ல, எங்களுக்கு அது ஆறுதல் தருவதாக இருந்தது. அந்த மிகப்பெரும் இழப்பின் நடுவே, துயரின் நடுவே, நாங்கள் தனியே இல்லை என்பதை நாங்கள் உணர்ந்தோம்.
🔴கேள்வி: உங்கள் அப்பாவின் மரணத்தை உங்கள் தாய் எப்படி எதிர்கொண்டார்?
🟢பதில்: அவர் நொறுங்கிப்போனார். அவர் அழுததை அந்த நாள் நாள் நாங்கள் யாரும் பார்த்ததில்லை. அதன்பின் அம்மா எவரோடும் அரசியல் பேசவில்லை. அவர் ஊடகங்களிடமும் பேசவில்லை. போனில் கூட ஊடகங்களுக்கு பதில் சொல்வதில்லை. அது மிக ஆழமான மெளனம். இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் கூட பலரும் அழைப்பார்கள். ஆனால், அந்த அழைப்புகளுக்கு அம்மா பதில் கொடுப்பதில்லை. அந்த முழுமையான அரசியல் மௌனம் அவர் இறப்பது வரை நீடித்தது.
🔴கேள்வி: அம்மா எப்போது இறந்தார்?
🟢பதில்: ஜூன் 25, 1995.
🔴கேள்வி: உங்கள் தாய் ஓர் அரசியல்வாதி என்று சொன்னீர்கள்? அவர் ஏன், ஏறக்குறைய 20 ஆண்டுகள், மௌனம் சாதித்தார்?
🟢பதில்: உண்மையிலேயே எனக்குத் தெரியாது. ஆனால், அது அப்படித்தான் நடந்தது. ஒருவேளை, குழந்தைகளின் பாதுகாப்பு கருதி அவர் மௌனம் சாதித்திருக்கலாம். எங்களைப் பாதுகாப்பாக, பத்திரமாக வளர்க்க வேண்டும் என்று அவர் கருதியிருக்கலாம். அரசியல் ஈடுபாடு உள்ள ஒருவரின் சிந்தனையும் செயல்பாடும் எப்படி இப்படி மாற முடியும் என்று நாங்களும் ஆச்சரியப்பட்டிருக்கிறோம். அவர் மௌனத்திற்கு மற்றொரு காரணமும் இருக்கலாம்.
1972 வாக்கில் இயக்கம், அரசின் ஒடுக்குமுறை காரணமாக, கணிசமாக பலவீனப்பட்டுவிட்டது. மேலும் கருத்து வேறுபாடுகளும் இருந்தன. சாரு மஜூம்தாரின் அரசியல் வழிக்கு எதிராகவும், செயல் தந்திரங்களுக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்கள் வந்தன. கட்சி பிளவுபட்டுப் போனது. அவர் இறந்த பின்னர் மோதல்கள் கடுமையாக மாறின. எங்கள் தந்தையோடும், குடும்பத்தோடும் நெருக்கமாக இருந்த பலர் தங்களுக்குள் முரண்பட்டு பிரிந்து நின்றனர். இயக்கத்தில் பல சின்னஞ்சிறு குழுக்கள் உருவாகின.
குடும்ப உறுப்பினர்கள் என்கிற அளவுக்கு கருதப்பட்ட சிலர் பிரிந்து நின்றதும், விலகி நின்றதும் அம்மாவை மிகவும் காயப்படுத்தியது. ஏதோ ஒரு பக்கத்தில் சேர்ந்து நிற்பது சரியானது அல்ல என்று அவர் கருதினார். உண்மையில் அது ஒரு பெரிய பிரச்சனையாக இருந்தது. இதுபோன்ற சூழலில் மௌனமாக இருப்பது நல்லது என்று அம்மா யோசித்திருக்கலாம்.
🔴கேள்வி: அவர் இந்த சமயத்திலும் உழைத்துக்கொண்டிருந்தாரா?
🟢பதில்: ஆமாம். அவர் ஓய்ந்தது இல்லை. அவரின் உழைப்புதான் வருமானத்திற்கான ஒரே வழி. அம்மாவுக்கு ஓய்வாக இருப்பது என்பதே தெரியாது. அவர் எல்ஐசி முகவர் வேலையைத் தொடர்ந்தார். ஊரெங்கும் சுற்றி பலரையும் பாலிசி எடுத்துக்கொள்ள வைத்தார். எனது மூத்த சகோதரி அம்மாவைப் பற்றி வங்க மொழியில் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். என் அப்பா எதிரிகளைக் கொன்றொழித்தார், கொலை செய்தார் என்று கதைகள் பரப்பப்படும் சூழலில், பிள்ளைகளைப் பாதுகாப்பதற்காக லைப் இன்சூரன்சை எங்கள் அம்மா விற்பதில் உள்ள முரண்பாட்டை அந்த நூலில் என் சகோதரி பேசுவார்.
🔴கேள்வி: உங்கள் அப்பாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரவில்லையா?
🟢பதில்: அந்த சமயத்தில் நாங்கள் கேட்கவில்லை. உலகத்தைப் பார்க்காமல் அம்மா முகத்தைத் திருப்பிக்கொண்டுவிட்டார் என்று நாங்கள் உங்களுக்குச் சொன்னேன் அல்லவா? அப்போது நாங்கள் படித்துக்கொண்டிருந்தோம். எங்களில் தோழர்கள் பலரும் ஒன்று தலைமறைவாக இருந்தார்கள் அல்லது சிறையிலிருந்தார்கள். அந்த சமயத்தில் எங்களோடு யாரும் இல்லை. அப்புறம், 1997ல் நான் அரசியலில் இறங்கிய பின்னர், நீதி விசாரணை வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தை அணுகினோம். எங்கள் அப்பா, வங்கத்தின் கட்சி மாநில செயலாளராக இருந்த சரோஜ் தத்தா மரணம், அந்த சமயத்தில் நடத்தப்பட்ட பிற கொலைகள் குறித்து நீதி விசாரணை வேண்டும் என்று கோரினோம். அந்த மனு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதன்பின் உச்சநீதிமன்றம் சென்றோம். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை.
🔴கேள்வி: நீங்கள் மாணவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டீர்களா?
🟢பதில்: இல்லை. நாங்கள் மாணவர் அரசியலில் ஈடுபடவில்லை.எங்களின் படிப்பிலேயே கவனமாக இருந்தோம். ஆனாலும் நாங்கள் சமூக சேவை செய்தோம். தந்தையின் மரணம். அவரைப் பற்றிய பாரதூரமான குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள்…. இவையெல்லாம் எங்களை மிகவும் ஆழமாக பாதித்தன.
படிப்பை விட்டு வெளியேறுங்கள், கிராமங்களுக்கு சென்று புரட்சிகர பணியாற்றுங்கள் என்று மாணவர்களுக்கு அழைப்பு விடுத்த ‘சாரு மஜூம்தாரின் பிள்ளைகள் பூர்ஷ்வாக்களின் படிப்பைப் படிக்கிறார்கள்’ என்று எங்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
சாரு மஜூம்தாரின் பிள்ளைகள் என்பதால் நாங்கள் எப்போதும் கவனிக்கப்பட்டுக் கொண்டிருந்தோம். தெருவில் நடக்கும் போது கூட எங்களைக் கவனிக்கிறார்கள் என்ற உணர்வு எங்களுக்கிருந்தது. கடைகளில் நிற்பவர்கள் எங்களைப் பார்க்கிறார்கள், நல்லதாகவோ, வேறு மாதிரியோ பேசுகிறார்கள் என்று நாங்கள் என்பதைக் கவனித்தோம். எப்போதுமே கவனத்துடன் இருந்தபடி வளர்வது சிறார்களுக்கு நல்லதல்ல. எங்கள் தாய் நாங்கள் நாங்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று நினைத்தார். அதே சமயம், ‘நீங்கள் எந்த தொழிலை தேர்ந்தெடுத்தாலும் மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும்’ என்று எங்களிடம் சொன்னார்.
(தொடரும்…)
ஆங்கிலம் மூலக் கட்டுரை : The Wire
முகநூலில் – ஆங்கிலம் வழி தமிழாக்கம் : 💥சி. மதிவாணன்
(சி.மதிவாணன் – சிபிஐ(எம்.எல்) லிபரேசன் கட்சியின் மாநில கமிட்டி உறுப்பினர்)