உரைவீச்சு : (மகாராஷ்டிரா விழாவில்) நரபலி நாயகர்கள்!

0

பூமிப் பந்து வெப்பமயமானால் என்ன?

வருங்காலத்தில் காக்கையும் பூச்சிகளும் மக்களும் வசிக்காத
நாடு நகரமாக இந்தியா அழியக்கூடுமாம்;
மாறட்டுமே என்கிறார்கள் ஆளும் நாயகர்கள்!

மகாராஷ்டிரம், நவிமும்பை கார்கர்பகுதியில்
பூஷண் விருது விழா மேடையில்
பணத்தால் அடித்த பிண்டமான
உள்துறை அமைச்சரின் ஏ.சி காத்து வாங்கிய
கால்மேல்கால் போட்ட ஒய்யாரம்.
ம.பி., குஜராத், மகாராட்டிரம், கர்னாடகாவிலிருந்தெல்லாம்
ஏழெட்டு லட்சம் பேர் திரட்டிக் குவிக்கப்பட்ட திடலில்
பந்தல் இல்லை, தண்ணீர் இல்லை;
வறுத்தெடுக்கும் வெய்யிலில்
புழுப்போலத் துடிக்குமல்லோ மனுசாள்
தலை பித்துப்பிடித்து வெடிக்குமல்லோ, தாங்குவாரோ?

வெய்யிலில் அங்கங்கே சூடுதாங்காத மயக்கமும், சாவுமான
செய்தி வரத்தொடங்கிய உடனே,
“எந்த வழியில் திரும்பிப் போவது” என்ற
அறிவிப்பும் இல்லாததால்,
தள்ளுமுள்ளு! பீதி!
கூட்டம் சிதறத் தொடங்கியது.

போலீஸ் – கணக்குப்படி 13 பேர் இறப்பு;
600 பேருக்கு மயக்கம், நீர்ச்சத்து வற்றிய வேதனை,
அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி , அதில் பலர் சீரியஸ்.
சொல்லாத கணக்கு ஆயிரக் கணக்கில் இருக்கும் என்கிறார்கள்!

ஏப்ரல் 16 – ல் வெப்பம் கூடும் என வானியல்துறை எச்சரித்திருந்தும்
இப்படி கூட்டம் கூட்டுவது
பொறுப்பற்ற திமிர்தானே?
இனி, சமாளிப்பு மட்டுமே பாக்கி!
திட்டமிட்டபிறகு ஏதும் அசம்பாவிதமென்றால்
உளறியாவது சமாளிப்பார் அமித்!

#

ஒருநூறு ஆண்டு திட்டம்னா சும்மாவா?
எத்தனைச் சம்பவங்கள், எத்தனைச் சாவுகள் என்பதல்ல ;
மனித உயிரைச் சல்லீசாகக் கருதும்
சல்லிப்பயக பாசிசக் கும்பல்
இப்படியின்றி வேறெப்படி இருக்கும்?

இவர்களுக்குச் சாவு புதிதா?
கொலைச்சாவுகளே புதிதல்லாதபோது
“அசம்பாவிதச் சாவுகள்” ஒன்றும் புதிதல்ல.
ஒற்றைச் சாருவாகன், ஒற்றைச் சுக்ரீவன்,
ஒற்றை அரவான் – அசுவத்தாமன்,
கலகச் சம்பூகன் மற்றும் அவதாரக் கொலைகள் போக….

“நவபாரத நிர்மாணத்தில்”
இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையில்
ஒற்றை, ஒன்பது, சில ஆயிரம் அல்ல..பல லட்சம்.
மட்டுமா,
குஜராத், காஷ்மீர் முசுலீம் மீது இனக் கொலைகளுக்கு
எண்ணிக்கை உண்டோ? வழக்குகள் உண்டோ?

பில்கிஸ் பானு கேள்விகளைச்சந்திக்கும்  திராணிஉண்டா  இந்த ஒழுக்கங் கெட்டவர்களுக்கு? ஜலசமாதிகள் செய்து ராணுவக் கைகளால்  ரத்தநீராக மாற்றிவிட்டீர்களே என்று கதறும்  காஷ்மீர் ஜீலம் நதியின் தவிப்புக்குப்  பதில்சொல்லும் திராணி உண்டா இவங்களுக்கு?

#

சோகக் குரலில் யாரோ முனகுகிறார்
“அமித்ஷாவே பதவி விலகு”!
கூட்டத்தைப் பார்த்தவுடன்
“மகிழ்ச்சி, மகிழ்ச்சி” என்று
கூவிக்களித்த மூஞ்சியை,
மூஞ்சியைக் காட்டி ஆறுதல் சொல்ல
வக்கற்ற அந்த மூஞ்சியைப்
“பதவி விலகு” என்று சொன்னால் பத்தாது;
“ஓடிப் போ!” என்றால்
அது துப்புக் கெட்ட புலம்பல்;
“தூக்கி எறி!” என்றால்தான் சரி.

எங்கே அந்தக் கோளச் சதைப் பந்து?
தேடிப் பிடியுங்கள்.
“மக்கள்திரளோடு சேர்ந்து
எப்படிப் பாசிசத்தைத்
தூக்கி எறிவது?” என்பதற்கு
வழியை உடனே நாடுவோம்!

  • பீட்டர்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here