ஆதிக்க சாதி வெறியனால் ராஜஸ்தானில் சிறுவன் கொலை!
இரண்டு செய்திகள் அக்கம்பக்கமாக வந்துள்ளன.
ஒன்று, 75வது சுதந்திர தினத்தையொட்டி மோடி அரசு அறிவித்த ‘அமுத பெருவிழா’ கொண்டாட்டம். மற்றொன்று, ஜலோர் மாவட்டத்தை சேர்ந்த 9 வயது சிறுவன் உயர்சாதியினருக்கான பானையில் இருந்து தண்ணீர் எடுத்து குடித்ததற்குக்காக பள்ளி ஆசிரியரால் அடித்துக் கொல்லப்பட்டது. இதுதான் இன்றைய இந்தியா!
ராஜஸ்தானின் ஜலோர் மாவட்டத்தில் உள்ள சரஸ்வதி வித்யா மந்திர் என்ற பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் கடந்த ஜூலை 20ஆம் தேதி உயர்சாதியினருக்காக வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பானையில் தண்ணீர் எடுத்து குடித்ததற்காக பள்ளியின் ஆசிரியர் ஷைல்சிங் என்பவரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளான். இதனை அறிந்த சிறுவனின் தந்தை அவரது மகனை மீட்டு ஜலோர் மாவட்ட மருத்துமனைக்கு கொண்டு சென்றுள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக உதய்பூர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஒருவாரத்துக்கு பிறகு நிலைமை மோசமாக அகமதாபாத் மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர். ஆனால் அங்கும் சிகிச்சை பலனளிக்காததால் கடந்த சனிக்கிழமை சிறுவன் இந்திரகுமார் இறந்துள்ளான்.
சிறுவனின் முகம் மற்றும் காதில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்ததாகவும், தாக்குதலுக்கு பிறகு மயங்கி விழுந்துவிட்டதாகவும் சிறுவனின் தந்தை கூறியுள்ளார். மூர்க்கதனமாக தாக்கியதில் மூளையில் உள்ள நரம்பில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறுகிறார்கள். ஆசிரியர் ஷைல்சிங் என்பவன் சாதிவெறி தலைக்கேறி சிறுவனை கொடூரமாக தாக்கியதால் தான் சிறுவன் கொல்லப்பட்டுள்ளான் என்பது மட்டும் தெரிகிறது.
ராஜஸ்தானில் தற்போது அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸின் ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. இதை பயன்படுத்திக் கொண்டு பாஜகவால் அரசியல் செய்திருக்க முடியும். ஆனால் சாதாரணமாக அரசை கண்டிக்கிறோம் என்பதோடு நிறுத்தியுள்ளது, ராஜஸ்தான் பாஜக. ஆட்சியை கவிழ்ப்பதற்கும், கைப்பற்றுவதற்கும் எதையும் செய்ய துணியும் பாஜக, இந்த கொலையை அரசியலாக்க விரும்பாததன் காரணம் என்ன?
முதலில் இந்த கொலையானது தலித் சிறுவனின் மீது ஆதிக்க சாதிவெறியன் ஹைல்சிங் என்ற ஆசிரியனால் நிகழ்த்தப்பட்டுள்ளது. பள்ளியும் சரஸ்வதி வித்யாமந்திர் என்ற இந்துத்துவ பள்ளி. இது அனைத்தையும் தாண்டி இந்த கொலைக்கான மைய காரணமே பார்ப்பனியம் தான்.
உயர் சாதியினருக்கான தனிப்பானை தண்ணீர் என்பதை அம்பேத்கரின் கதையிலேயே கேட்டிருப்போம். இந்தியா சுதந்திரம் அடைந்ததாக சொல்லப்படும் 1947க்கு முன்னரே இருந்த நிலை தான் 2022 லும் தொடர்கிறது. பார்ப்பனியம் தனது விசக் கருத்தை இந்திய மக்களின் மீது பலமாக திணித்துள்ளது. சிறுவனின் கொலை நமக்கு உணர்த்துவதை புரிந்துக் கொள்ள வேண்டும்.
இந்த கொலைக்கு காரணமே பார்ப்பனியம் என்பதால் இதனை அரசியலாக்க பாஜக விரும்பவில்லை. ஆனால் இன்னொரு பக்கம் சிறுவன் படித்த பள்ளிக்கும், கொலை செய்த ஆசிரியருக்கும் சப்போர்ட் செய்வதை இந்துத்துவ ஊடகங்கள் மூலமாக செய்து வருகிறது. பள்ளியில் ஒரே பானையில் தான் அனைவரும் தண்ணீர் அருந்துவதாகவும் பாஜக சார்பு ஊடகங்கள் எழுதியுள்ளார்கள். கொல்லப்பட்டது 7 வயது சிறுவன் என்பதால் பொய்யான குற்றச்சாட்டை அவன் மீது சுமத்துவதற்கு வழியில்லாமல் போய் விட்டது. இல்லையென்றல் சிறுவன் மீது அபாண்ட பழி சுமத்தவும் தயங்கியிருக்கமாட்டார்கள்.
சிறுவனின் கொலையை இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302 மற்றும் SC/ST சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஆசிரியர் ஷைல்சிங்கை கைது செய்துள்ளது காவல்துறை.
இந்த சம்பவம் சமூக வலை தளங்களில் வைரலானதால் அரசியல் தலைவர்களும், தலித் உரிமை ஆர்வலர்களும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்ததோடு ஆசிரியருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்களை 2000 ஆண்டுகளாக அடிமைப்படுத்தி வைத்துள்ளது பார்ப்பனியம். அதன் தடத்தில் இன்றும் பயணிக்கிறார்கள் ஆதிக்கசாதி வெறியர்கள். இவர்களுக்கெல்லாம் பக்கபலமாக இருந்து பார்ப்பனியத்தை பாதுகாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார்கள் இந்தியாவை ஆளும் காவி பாசிச கும்பல்.
இவர்களை வீழ்த்தாமல் சாதி ஆகிக்க படுகொலைகளை இப்போது இருக்கும் பெயரளவிலான சட்டங்களை வைத்துக் கொண்டு தடுக்க முடியாது என்பதை நாம் உணர வேண்டும். சிறுவன் இந்திரகுமாரை போல பல சிறுவர்களும் இளைஞர்களும் தான் எதற்கு அடிக்கப்படுகிறோம், கொல்லப்படுகிறோம் என்பதை அறியாமலே சென்று விட்டார்கள் அவர்களுக்காகவும் நாளைய இளைய தலைமுறைக்காகவும் பார்ப்பனியத்தை வீழ்த்த போராடுவோம்.
- மாரிமுத்து