முதல் பகுதி

இந்துமதமும்! இந்துத்துவாவும் ஒன்றல்ல! 

ஒரு மதத்தின் வரலாறு குறித்து நாம் ஆய்வு செய்யும்போதும், அந்த மதத்தில் இவ்வாறு மாறுபட்ட பல்வேறு அம்சங்கள் நிலவுவது ஏன் என்றும், இத்தகைய மாறுபாடு ஒவ்வொன்றையும் ஆதரிப்பது யார் என்றும் கேள்வி எழுப்பும்போது இந்த அம்சம் மேலும் தெளிவாகிறது.

தனித்துவமான சூத்திரங்களைக் கொண்டதாக இருப்பதையும், அவற்றில் சில கணிசமான மாற்றங்களுக்கு உள்ளாகியிருப்பதையும் இந்து மதத்தின் வரலாறு எடுத்துக் காட்டுகிறது. ஹரப்பா காலத்து மதம் என்னவாக இருந்தது என்று நமக்குத் தெளிவாகத் தெரியாது. எனினும் இந்து மதத்தின் அடித்தளம் என்பது கிறித்து காலத்திற்கு முந்தைய ஆயிரம் ஆண்டுகளில் (கி.மு. 1000 முதலான காலப்பகுதி) உருவானது என்று பொதுவாகக் குறிப்பிடப்படுகிறது. தொடக்கத்தில் அது சூரியனையும் வருணனையும் முக்கிய கடவுள்களாகவும், பின்பு இந்திரன், அக்னி (நெருப்புக் கடவுள்) ஆகியோரை இணைத்துக் கொண்டதாகவும் இருந்தது. அதுவும் இந்தக் கடவுளர்கள் எந்தவொரு உருவமும் இல்லாமல் பெருமளவிலான பலி சடங்குகளைக் கொண்டே வணங்கப்பட்டனர். பவுத்த, சமண மதங்களுக்குப் போட்டியாக அரசின் ஆதரவைப் பெறுவதற்காக மவுரிய, குப்தர்கள் காலத்தில் அது இதர கடவுளர்களை நோக்கி முன்னேறியது.

கிறித்துவிற்குப் பிந்தைய முதல் ஆயிரம் ஆண்டுகளில் இந்து மதத்தில் மிகப்பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. சிவன், விஷ்ணு போன்ற இதர தெய்வங்கள் முன்னணிக்கு வந்தன. இந்தக் கடவுள்களோடு தொடர்புடைய தெய்வங்களைப் பற்றிய கதைகளும் அதிகரிக்கத் தொடங்கின. அதைப் போன்று சாக்த-சக்தி வழிபாட்டிற்கும் முக்கியத்துவம் அதிகரித்தது. இவை அனைத்துமே வேதகால பிராமணியத்தினை பின்புலமாக வைத்து நடந்தவை ஆகும். வழிபாட்டு முறையானது கடவுளர்களை உருவங்களாக மாற்றுவதாக மாறியதோடு, அவற்றை குறிப்பிட்ட கட்டமைப்புகளுக்குள் வைப்பது என்பதாகவும் மாறியது. அதாவது முதல்முறையாக கோயில்களின் மையமாக இந்தக் கடவுள்களர்கள் மாறினர். இதை புராண அடிப்படையிலான இந்து மதம் என்றும் சிலர் அழைக்கின்றனர். ஏனெனில் இந்தப் புராணங்களே நம்பிக்கைக்கும் வழிபாட்டிற்குமான முக்கிய பொருட்களாக மாறின. இந்தப் புராணங்கள் ஒவ்வொன்றும் பொதுவாக ஒரு குறிப்பிட்ட கடவுளை மையமாகக் கொண்டதாக, அதற்கு மட்டுமே தன்னை அர்ப்பணம் செய்வதாக இருந்தன. நேரடியாக ஈடுபாடு கொள்வதன் மூலமும் பக்தி செலுத்துவதன் மூலமும் சிவன் மற்றும் விஷ்ணு மீது கவனம் செலுத்த ஊக்கம் தரப்பட்டது. இது நாட்டின் தென் பகுதியில் தொடங்கி படிப்படியாக வட நாட்டிலும் வெளிப்படத் தொடங்கியது. கி.பி. 1000 ஆண்டுகளில் இருந்து இந்திய துணைக்கண்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இந்து மதம் என்பது பக்தியில் மூழ்கிய ஒன்றாக இருந்தது. பவுத்த மதத்திற்கு அதுவரை கிடைத்து வந்த ஆதரவு சரியத் தொடங்கியது. அதே நேரத்தில் புராண அடிப்படையிலான கடவுளர்களுக்கான ஆதரவு அதிகரிக்கத் தொடங்கியது. இவற்றுடன் சமூகத்தின் பல துணைப்பிரிவினரும் இணைக்கப்பட்டனர். மேலும் ஒவ்வொரு பிராந்தியத்தின் பல்வேறு விவசாய மற்றும் பழங்குடி கலாச்சாரங்களின் அடிப்படையில் ஏற்கனவே இருந்த உள்ளூர் மதங்களின் பல உள்ளீடுகள் இவற்றில் பிரதிபலிக்கத் தொடங்கின. அதைப் போன்றே வர்த்தகம், படையெடுப்பு ஆகியவற்றின் வழியாக வந்த கிறித்துவம், இஸ்லாம் ஆகிய மதங்களிலிருந்தும் இவற்றின் மீது பாதிப்பு இருந்தது.

தற்போது நம்மை ஆள்பவர்கள் கூறிக் கொள்வது போல கிறித்துவிற்குப் பிந்தைய இரண்டாவது ஆயிரம் ஆண்டுக் காலம் என்பது இந்துக்களை கொடுமைப்படுத்தும் ஒரு காலமாக இருக்கவில்லை. இந்தக் காலப்பகுதியில் பல்வேறு வகையான மக்கள், மத ரீதியான நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள் ஆகியவற்றில் கணிசமான கலப்பு நிகழ்ந்தது. இதுவே பல வகையான பக்தி இயக்கக் குழுக்களுக்கு பெருமளவிற்கு ஊக்கமளித்ததோடு, புராண அடிப்படையிலான இந்து மதம் அக்காலப்பகுதியில் உருப்பெறுவதற்கும் வழிவகுத்தது. ஒடிசாவில் ஜகந்நாதா, மகாராஷ்டிராவில் விட்டோபா, சிந்த் பகுதியில் ஹிங்லஜ்மதா, சுந்தர்பானில் போன்பிபி போன்ற பிராந்திய அடிப்படையிலான புதிய தெய்வங்கள் இந்தியாவின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் தோன்றிய காலம் இது. இந்த தெய்வங்களுக்கு அவற்றின் சிலைகளுடன் அமைந்த கோயில்கள் கட்டப்பட்டன. இந்த தெய்வங்களோ அல்லது அவற்றின் வழிபாட்டு முறைகளோ வேத மதத்தைப் போன்றதாக இருக்கவில்லை. இந்த இடங்கள் பெரும்பாலும் முந்தைய மத நம்பிக்கைகளின்படி புனிதமாகக் கருதப்பட்டு வந்த இடங்களாகவே இருந்தன.

மத ரீதியாக பல்வேறு பிரிவுகளில் இருந்து வந்த பக்தர்கள் வந்து குவியும் வகையில் பெரிய அளவிலான யாத்திரைகளை மேற்கொள்ளவும் இது ஊக்கமளித்தது. இந்தக் கடவுள்களை வணங்க வந்த, புனித யாத்திரை மேற்கொண்டு வந்த மக்களைப் பற்றிய ஆய்வுகள் மிகத் தெளிவான ஒரு விஷயத்தை சுட்டிக் காட்டுகின்றன.

இவர்கள் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்பது மட்டுமின்றி, தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்களை விட அதிகமானோர் இந்தப் புனித யாத்திரைகளை மேற்கொள்கின்றனர் என்பதையும் இந்த ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.

அதே நேரத்தில் நமது கவனத்தைக் கவரும் வகையில் 15-16ஆம் நூற்றாண்டுகளில் இந்த வடிவத்திலான இந்து மதம் மற்றும் பக்தி இயக்கம் ஆகியவற்றின் மீது சமூகத்தின் மேல்தட்டில் உள்ளவர்களில் இருந்து கடைக்கோடியில் உள்ளவர்கள் இடையே ஆர்வம் அதிகரித்துக் கொண்டே வந்தது. ராமாயணம், மகாபாரதம் போன்ற தொடக்க கால சமஸ்கிருத நூல்களை அன்றைய ஆட்சி மொழியாக இருந்த பாரசீக மொழியில் மொழிபெயர்க்க ஆட்சியாளர்கள் நிதியுதவி செய்தனர். இந்த நூல்கள் வட இந்தியாவிலும் தென் இந்தியாவிலும் அப்போது நடைமுறையில் புழக்கத்தில் இருந்த மொழிகளிலும் மீண்டும் சொல்லப்பட்டன. சமூகத்தின் உயர்மட்டத்தில் இருந்த ராஸ் கான், அப்துல் ரஹீம் கான் –இ- கானன், மீராபாய் போன்றவர்கள் கடவுளான கிருஷ்ணரின் பக்தர்களாக இருந்ததோடு, ராதையைப் பற்றியும் கிருஷ்ணரைப் பற்றியும் புகழ்ந்து விதந்தோதும் வகையில் இந்தி மொழியில் பாடல்களை இயற்றினர். இந்தப் பாடல்கள் நமக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமாகியிருந்த சூர் தாஸின் பாடல்களோடு கூடவே மக்களால் கூட்டாக பாடப்பட்டன.

காலனிய காலத்து அறிஞர்கள் இந்து மதம் என்று கூறப்பட்டு வந்த விஷயத்தைப் புரிந்து கொள்ள முயற்சித்ததோடு, அதை மறுகட்டமைப்பு செய்யவும் முயற்சி செய்ததன் மூலம் மதத்தின் கருத்தாக்கம் மற்றும் அதன் வடிவம் ஆகியவற்றில் தங்களை அறியாமலேயே மாற்றங்களை அறிமுகம் செய்தனர். அவைதான் இன்று நமக்கு நன்கு அறிமுகமானவை ஆகும். மதம் குறித்த தங்களது இந்தப் புரிதலை மேலும் செழுமைப்படுத்த அதற்கு ஒற்றைக் கடவுள் வடிவத்தைக் கொடுக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இத்தகைய முயற்சியானது இந்து மதத்திற்கே மிக முக்கியமான அம்சமாக விளங்கும் மதரீதியான நம்பிக்கை மற்றும் நடைமுறையில் நிலவி வந்த செறிவான பன்முகத்தன்மை, பன்முக வாதம் ஆகியவற்றின் வீச்சைக் குறைக்க முயற்சித்தன. வரலாற்று ரீதியாக ஒரு நிறுவனரால் தொடங்கப்பட்டு அதன் பிறகு ஒரு நேர்க்கோட்டு வகையில் உருவான ஆபிரஹாமிய வகைப்பட்ட மதங்களில் இருந்து (அதாவது யூத மதம், கிறித்துவம், இஸ்லாம் ஆகியவை ஆபிரஹாம் என்பவரின் வம்சாவழியாக வந்தது என்ற கருத்தை வலியுறுத்துவது) முற்றிலும் வேறுபட்ட ஒன்றாக இந்து மதம் இருந்து வந்தது என்பதை நாம் இங்கு அங்கீகரிக்க வேண்டியது அவசியம். இந்து மதத்தின் உள்ளார்ந்த அம்சமான பன்முகத் தன்மை மற்றும் பன்முக வாதம் ஆகியவற்றுக்குப் பதிலாக ஒற்றைக் கடவுள் வடிவத்தை அதற்குக் கொடுத்து, இந்துக்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அனைவருக்கும் அதை ஒரே மாதிரியாக அமல்படுத்த முயற்சித்து வரும் இந்துத்துவா தத்துவத்தின் இந்த முயற்சியானது காலனிய வகைப்பட்ட சிந்தனை வடிவத்தை தொடர்ந்து பயன்படுத்தும் ஒரு முயற்சியே ஆகும்.

இந்துத்துவாவும் இந்து மதமும்

இந்துத்துவா என்பது இந்து மதத்தைப் போன்றது அல்ல. இந்து ராஷ்டிராவை உருவாக்குவது போன்ற அரசியல் நோக்கங்களுக்காக மதத்தைப் பயன்படுத்தும் வகையில் அதை எளிதாக்குவதே அதன் நோக்கம். இதனால்தான் 20 ஆம் நூற்றாண்டில் தோன்றிய சிண்டிகேட் இந்து மதம் என்று அதற்குப் பெயரிட்டுள்ளேன். இது அரசியல் அதிகாரத்திற்கு நெருக்கமானவர்களால் ஒழுங்குபடுத்தப்படுகிறது. ஒரு கலாச்சார அமைப்பு என்று அவர்கள் தங்களைக் கூறிக் கொள்வது அரசியலில் தலையிடுவதிலிருந்து அவர்களைத் தடுக்காது. ஒரு அரசியல் திட்டத்தை இலக்காகக் கொண்ட பல குழுக்களை இந்துத்துவா ஒன்றாக இணைக்கிறது. அவை தங்களது தனிப்பட்ட அடையாளங்களை முன்னெடுத்துச் செல்லக்கூடும் என்றாலும் சங் பரிவார் என்றே கூட்டாக அழைக்கப்படுகின்றன. இந்து என்பவருக்கு புதியதொரு வரையறையும் கொடுக்கப்பட்டுள்ளது: ஒன்று, அவரும் அவரது மூதாதையர்களும் பித்ரு பூமி என்று அவர்கள் அழைக்கும் இந்தியாவின் எல்லைகளுக்குள் பிறந்திருக்க வேண்டும், அவருடைய மதமும் புண்ணிய பூமி என்று அழைக்கப்படும் இந்தியாவின் எல்லைகளுக்குள் இருந்து வந்திருக்க வேண்டும். இத்தகைய ஒரு வரையறை எந்தவொரு பண்டைய நூல்களிலும் கொடுக்கப்படவில்லை.

ஆபிரஹாமின் அடியொற்றி உருவான யூத, கிறித்துவ, இஸ்லாமிய மதங்களைப் போல் அல்லாமல், இந்து மதமானது இன்றும் கூட ஒற்றைக் கடவுள் என்ற கொள்கையை ஏற்காது பல கடவுள்கள் கொள்கையையே பின்பற்றி வருகிறது. நவீன காலத்தின் புதிய இந்து மதத்தை விவரிக்கும் வகையில் கூட்டமைப்பான இந்து மதம் என்ற புதியதொரு சொற்றொடரையும் நீங்கள் உருவாக்கி இருக்கிறீர்கள். ஒரு மதம் என்ற வகையில் இந்து என்ற வார்த்தையைப் பயன்படுத்தும் வழக்கம் எப்போதிலிருந்து தொடங்கியது? அத்தகைய காலப்பகுதி வரையில் இந்திய வரலாற்றில் இந்து என்ற வார்த்தை எதைக் குறிப்பதாக இருந்தது?

இந்து மதம் என்ற வார்த்தையானது மிகச் சமீபத்தில் புழக்கத்திற்கு வந்த ஒன்றாகும். இது ஒரு காலனிய கண்டுபிடிப்பு என்றும் கூட ஒரு சில வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். காலனி ஆதிக்கத்திற்கு முந்தைய கடந்த காலத்தில் மதரீதியான நம்பிக்கைகள், நடைமுறைகள் ஆகியவற்றுக்கு இத்தகைய அடையாளம் தரப்படவில்லை. கிறித்துவ, இஸ்லாமிய மதங்களைப் போன்றோ, அல்லது பவுத்த, சமண மதங்களைப் போன்றோ, குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியைச் சேர்ந்தவர் என்று அடையாளப்படுத்தும்படியான, வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒருவரது போதனைகளை அடிப்படையாகக் கொண்டதாக, இந்து மதம் என்று இன்று நாம் அழைக்கும் மதம், இருக்கவில்லை என்பதும் இதில் ஒரு பகுதி ஆகும்.

இத்தகைய நிலையானது அதன் கட்டமைப்பு மற்றும் உருவாக்கம் ஆகிய அம்சங்களில் இதர முக்கிய மதங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இந்து மதத்தை ஆக்குகிறது. ஒற்றைக் கடவுளை மையமாகக் கொண்ட ஒரு மதம் என்று சித்தரிக்கப்படுவதற்குப் பதிலாக, பெரிய அல்லது சிறிய வேறுபாடுகளையும் பதிவுசெய்கின்ற, பிற பிரிவுகளுடன் ஒரு தொடர்பைக் கொண்டிருக்கக் கூடிய பல பிரிவுகளின் மூலம் இந்த மத நம்பிக்கை வெளிப்படுத்தப்படுகிறது என்பதும் இதற்குக் காரணமாகும்.

இந்த பிரிவுகளின் தோற்றம் மற்றும் அவை எவ்வாறு மதம், நம்பிக்கைகள் மற்றும் வழிபாட்டு முறைகள் ஆகியவற்றை மறுசீரமைத்தன என்பதற்கான வரலாற்றை முந்தைய கேள்விக்கான எனது பதில் ஒன்றில் நான் கூறியுள்ளேன். அவற்றை அடையாளம் காண பயன்படுத்தப்பட்ட சில அடையாளங்களையும் நான் குறிப்பிட்டுள்ளேன். அவற்றில் எதுவுமே இந்து என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை.

இந்த வார்த்தை கி.பி முதல் ஆயிரம் ஆண்டுகளின் இறுதிப்பகுதியில் எழுந்த சொற்களோடு இணைக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆசியாவிலிருந்து பார்க்கும் போது சிந்து நதியோரப்பகுதியான வட இந்தியா அல்-ஹிந்த் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, சிந்து நதி சமஸ்கிருத மூலங்களில் சிந்து என்றும் பழைய ஈரானிய மொழியில் ஹெண்டு என்றும் அழைக்கப்பட்டது. இவ்வகையில்தான் அல்-ஹிந்து சிந்துவோடு இணைக்கப்பட்டது. அல்-ஹிந்த் பகுதியில் வாழ்ந்த மக்கள் இந்து / இந்தி என்று அழைக்கப்பட்டனர்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் 14 அல்லது 15 ஆம் நூற்றாண்டுகளின் பிற்பகுதியில், இந்து என்ற சொல் சில சமயங்களில் உள்ளூர் மதத்திற்கும், பாரசீக மற்றும் அரபு மூலங்களிலும், இந்திய பிராந்திய மொழி மூலங்களிலும் பயன்படுத்தப்பட்டது. இது இஸ்லாம் மற்றும் ஆபிரகாமிய மதங்களைத் தவிர்த்த இந்தியாவில் இருந்த மதங்களுக்குப் பயன்படுத்தப்பட்டது.

பதினாறாம் நூற்றாண்டில், பிராமண மதத்திற்கும் நாத்திகர்கள் / கடவுளை நம்பாதவர்கள் ஆகியவர்களுக்கும், அதாவது பவுத்தம் மற்றும் சமண மதத்தினருக்கும் இடையிலான வேறுபாடு சமஸ்கிருத நூல்களில் காட்டப்பட்டது. புவியியல்ரீதியான – பிராந்தியரீதியான பெயர் அல்-ஹிந்த் என்பதிலிருந்து இந்துஸ்தான் என மாற்றப்பட்டது. அதாவது இந்துக்களின் நிலம். இந்த பிந்தைய சொல் குடிமக்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. அதன் நீட்சியாக அவர்களின் மதத்திற்கும் வருகிறது.

இந்த பெயர் பின்னர் பல்வேறு ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகளால் மதத்திற்கான ஒரு முத்திரையாக பயன்படுத்தப்பட்டது. அவர்கள் பிரதேசத்திற்கும் பெரும்பான்மை மதத்திற்கும் இடையில் வேறுபாடு காட்டினர். இந்தோஸ் என்ற கிரேக்க பயன்பாட்டினை அடியொற்றி இந்த பகுதி இந்தியா என்றும், மதம் ஜென்டூ என்றும் பின்னர் இந்து என்றும் அழைக்கப்பட்டது. இவற்றில் பிந்தையதிலிருந்துதான் இந்து மதம் பற்றிய குறிப்பு வந்தது.

குறிப்பு: ரொமீலா தாபரை பேட்டி கண்ட ஜிப்சன் ஜான், ஜிதேஷ், பி.எம். ஆகிய இருவரும் உள்நாட்டு, வெளிநாட்டு நாளிதழ்களுக்கும் பிற இதழ்களுக்கும் தொடர்ந்து பங்களித்து வருபவர்கள். இவர்களது கட்டுரைகளும் பேட்டிகளும் ஃப்ரண்ட்லைன், த வயர், இந்தியன் எக்ஸ்பிரஸ், மன்த்லி ரிவ்யூ போன்றவற்றில் வெளிவருகின்றன.

தமிழில்: வீ. பா. கணேசன்

முதல் பகுதி

இந்துமதமும்! இந்துத்துவாவும் ஒன்றல்ல! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here