மோடியின் ஆசியால் பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளிய அதானி!
இந்தியாவின் கார்ப்பரேட் முதலாளிகளான முகேஷ் அம்பானியும், கௌதம் அதானியும் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்று இந்தியாவுக்கு ‘பெருமை’ சேர்த்துக் கொண்டுள்ளார்கள். அம்பானியின் வளர்ச்சியாவது அவரது அப்பாவிலிருந்து ஆரம்பித்தது. ஆனால் அதானியின் வளர்ச்சியை பார்த்து உலகமே மூக்கின் மேல் விரல் வைக்கிறது. மத்தியில் பாஜகவின் மோடி ஆட்சி அமைத்த 2014 – ல் 50 ஆயிரம் கோடியாக இருந்த அதானியின் சொத்து மதிப்பு, இப்போது 8 லட்சத்து 80 ஆயிரம் கோடியாக (11,400 கோடி டாலர்) உயர்ந்துள்ளது.
இந்த அபரிதமான வளர்ச்சி, மோடியின் ஆசீர்வாதத்தால்தான் சாத்தியமானது. அரசு வங்கிகள் மூலமாக கடன் வழங்குவதும், அதை வாராக்கடன் என தள்ளுபடி செய்வதும், அன்னிய செலாவணி மற்றும் பங்குச் சந்தைகளில் தில்லுமுல்லுகள் செய்வதும் என அனைத்து வகையிலும் அடித்த கொள்ளைதான் இன்று இத்தனை லட்சம் கோடியாக பூதாகர வளர்ச்சி கண்டுள்ளது. இந்த ஆண்டின் துவக்கத்தில் சொத்து மதிப்பில் முகேஷ் அம்பானியை மிஞ்சிய கௌதம் அதானி, இப்போது மைக்ரோசாப்ட்டின் பில்கேட்ஸையே பின்னுக்கு தள்ளி உலகின் நான்காவது பெரும் பணக்காரர் ஆகியுள்ளார். இதே நிலை நீடித்தால் எலான் மஸ்க்கையும் மிஞ்சி, முதல் இடத்துக்கும் முன்னேற வாய்ப்புண்டு.
கார்ப்பரேட்டுக்கு விசுவாச சேவை செய்வதன் மூலம் காவியும் இலாபமடைகிறது. இரண்டும் சேர்ந்து வீரிய ஒட்டு ரகமாக புதுவகை பாசிச அபாயமாக நம்மை அச்சுறுத்துகிறது. எழுச்சிகரமான மக்கள் போராட்டங்களால் மட்டுமே இதை எதிர்கொண்டு வீழ்த்த முடியும்.
ஆக்கம்: குரு