தந்தை பெரியாரின் 51-வது நினைவு நாள் இன்று!
(17-09-1879– 24-12-1973)
“தொண்டு செய்து பழுத்த பழம்;
தூய தாடி மார்பில் விழும்;
மண்டைச் சுரப்பை உலகு தொழும்;
மனக்குகையில் சிறுத்தை எழும்;
அவர்தாம் பெரியார்!”
என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தந்தை பெரியாரைப் பற்றி நறுக்குத் தெறித்தார் போன்று கவிதை பாடி இருப்பார்!
தந்தை பெரியார் 17-09-1879-ல் ஈரோட்டில் பிறந்தார். 24-12-1973-ல் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மானிட உலகின் மகத்தான சிற்பி தமிழினத்தின் தனிப்பெரும் தந்தை, பகுத்தறிவு வாழ்வுக்கு உயிர் மூச்சாம் நம் தந்தை பெரியார் இறுதி மூச்சைத் துறந்தார்.
தந்தை பெரியார் அயல்நாட்டு பயணம் ஒரு வருடம் முடித்து இருந்தார். அப்படி அயல்நாடுகளில் அவர் பயணித்த போது அதிக நாட்கள் அவர் சுற்றுப் பயணம் மேற்கொண்டது சோவியத் ரஷ்யாவில் தான். காரணம் அவர் சமதர்மக் கொள்கையில்- கம்யூனிசக் கொள்கையில்
மிகவும் நாட்டம் கொண்டிருந்
தார். கம்யூனிச புரட்சியாளராக
உருவெடுத்து இருக்க வேண்டிய அவர், இன்றளவிலுங்கூட இந்திய நாட்டில் நாம் காணும் சனாதன பார்ப்பனியக் கொடுங்கோன்மை, சாதிய ஏற்றத்தாழ்வுகள், மதவெறி கோரத்தாண்டவம்… இவை யாவும் அக்காலத்தில் அவரது மனதினை கடுமையாக உலுக்கி விட்டது. எனவேதான், அவர் நாட்டை உலுக்கும் குறிப்பாக பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடியின அருதிப் பெரும்பான்மை மக்களை இந்த பார்ப்பனீய இந்து மதவெறி
இரும்பு பெரும் வலையிலிருந்து வெளியேற்றி விட வேண்டும்; அதனைத் தொடர்ந்து சமதர்மக் கொள்கைகளை நிலைநாட்டு
வதற்காகப் பாடுபட வேண்டும் என்று கருதி இருந்தார்.
நான் யார்?
தந்தை பெரியார் தன்னைப் பற்றி ‘நான் யார்?’ என்றே வரையறுத்து சில வரிகளை தனது பத்திரிக்கையில் வெளியிட்டிருந்தார். அவை இதோ:
“ஈ.வெ. ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரை போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேம்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன். அந்தத் தொண்டு செய்ய எனக்கு “யோக்கியதை” இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால், நான் அதை மேம்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன்.
இதைத் தவிர வேறு எந்த பற்று ஒன்றும் எனக்கு இல்லாததாலும், பகுத்தறிவையே அடிப்படையாகக் கொண்டு கொள்கைகளையும், திட்டங்களையும் வகுப்பதாலும், நான் அத்தொண்டுக்கு தகுதி உடையவன் என்றே கருதுகின்றேன். சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இது போதும் என்றே கருதுகின்றேன்”
இப்படியாக தன்னைப் பற்றி தன்னடக்கமாக கருத்து வெளியிட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு ஈடு இணையற்ற பங்களிப்பினை பெரியார் செய்திருக்கிறார் என்றால் அதை நாம் எளிதில் கடந்து செல்ல முடியாது.
அவதூறுகளும்- அவமானங்களும்:
பெரியார் சாதி-தீண்டாமை ஒழிப்பு;
பெண் அடிமைத்தன ஒழிப்பு; தேவதாசி முறை ஒழிப்பு; மூடநம்பிக்கைகள் ஒழிப்பு; பகுத்தறிவுப் பிரச்சாரம்; பார்ப்பன சனாதனக் கொடுங்கோன்மைக்கு எதிரான பிரச்சாரம்; இந்தி சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிரான பிரச்சாரம், போராட்டம்; மனுஸ்மிருதி, பகவத் கீதை, கம்பராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட அனைத்து புராண இதிகாச குப்பைகளையும் அக்குவேறு ஆணிவேராக பிய்த்து எடுத்து பிரச்சாரம்; சூத்திர பஞ்சம மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட நிலையில் பார்ப்பனர்களுக்குச் சமமான முறையில் அவர்களும் முன்னேற வேண்டும் என்ற பிரச்சாரம், போராட்டம்; அனைவருக்கும் பொது சுடுகாடு, பொதுக் குளம்…
இப்படி அவரது திட்டமிட்ட பணிகளை பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம்.
இதற்காக அவர் தமிழ்நாடு எங்கனும் சுற்றி சுழன்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அக்காலக் கட்டங்களில் பொதுக்கூட்ட மேடையில் செருப்பெடுத்து எறிந்தார்கள் வஞ்சகர்கள்! முட்டை ஓட்டுக்குள் மலத்தை அடைத்து முகத்தில் அடித்தார்கள் பாதகர்கள்! வரவேற்பு பதாகைகளுக்கு பதில் செருப்புத் தோரணங்களைக் கட்டித் தொங்க விட்டார்கள் ஈனர்கள்! கல்லெறிந்துக் காயப் படுத்தினார்கள் கொலைவெறி பிடித்த சாதி மத வெறியர்கள் …
இப்படியாக அவர் பட்ட துன்ப துயரங்கள் கொஞ்சநஞ்சம் அல்ல! இவர் கொண்ட கொள்கைகளுக்காக களம் இறங்கி பல்வேறு தருணங்களில் போராடவும் செய்தார். அதில் ஒன்றுதான் கேரளத்தில் 1924-ல் நடந்த வைக்கம் போராட்டம். பார்ப்பன அக்ரஹாரத்திற்குள் – கோவில்கள் நிறைந்திருக்கும் வீதிகளில் சூத்திர பஞ்சம மக்கள் நடமாடக்கூடாது என திருவாங்கூர் சமஸ்தானம் கட்டுப்பாடு விதித்திருந்ததால், கேரள மாதவன் தலைமையிலான போராட்டம் நடந்த போது அவர்களெல்லாம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, அவர்களால் தந்தை பெரியார் வரவழைக்கப்பட்டு தந்தை பெரியாரும் 1924-ல் களம் இறங்கி போராடினார். அதற்காக இருமுறை கைது செய்யப்பட்டார். அத்தருணத்தில் அவரது துணைவியார் அன்னை நாகம்மையாரும், பெரியாரின் தங்கை கண்ணம்மாவும் போராட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்தினார்கள். 1925 இல் போராட்டம் வெற்றி அடைந்தது. அதன் பொருட்டு தமிழ் தென்றல் திரு வி.க. அளித்த பட்டமே “வைக்கம் வீரர் பெரியார்” என்ற பட்டம்!
படிக்க: வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்வோம்!
தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக அனைத்து துன்ப துயரங்களையும் இன்னல்களையும் இன்முகத்துடன் ஏற்றார் பெரியார். எந்த மக்களை உயர்த்த வேண்டும் என்று அவர் பாடுபட்டாரோ அந்த மக்களாலேயே சொல்லடியும், கல்லடியும் பெற்றார் பெரியார்.
அதுமட்டுமா? சேரன்மாதேவி குருகுலத்தில் பார்ப்பன மாணவர்களுக்கு தனித் தண்ணீர்ப் பானை; பார்ப்பனர் அல்லாத அனைத்து மாணவர்களுக்கும் தனித் தண்ணீர் பானை நடைமுறையில் இருந்த காலக்கட்டத்தில்
பெரியார் வெகுண்டெழுந்தார். ராஜாஜி, வ.வே.சு ஐயர், காந்தியார் அனைவருடைய கருத்துகளுக்கும் மாறாக தண்ணீர்ப் பானைகளை உடைத்தெறிந்து சம உரிமையை நிலைநாட்டினார். இந்நிகழ்வு அவரை காங்கிரசிலிருந்து வெளியேறிக் கொள்ள வழி வகுத்தது.
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வேண்டும்!
இளித்த வாய்த் தனமான நிலப் பிரபுத்துவ பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சார்ந்த மன்னர்கள் பெரும் நிதி அளித்தார்கள்; சூத்திர- பஞ்சம மக்கள் கல் சுமந்தார்கள்; மண் சுமந்தார்கள்; மரம் சுமந்தார்கள்; சிமெண்ட் கலவை; சுண்ணாம்பு கலவை செய்து கொடுத்தார்கள்; கட்டிடங்கள் கட்டினார்கள்; தச்சு வேலை செய்தார்கள்; கோபுரங்களாக எழுப்பினார்கள் ; அதில் வரிசையாக கலசங்களைப் பொருத்தினார்கள்; கோபுரத்தில் பல்வேறு வகையான சிற்பங்களையும் உருவாக்கினார்கள்;
கடவுள் சிலைகளை சிற்பிகள் வடித்தார்கள்; அந்த சிலைகளை கர்ப்பக் கிரகத்தினுள் நட்டு வைத்தார்கள்; மாபெரும் உயரத்தில் மதில் சுவர்களை எழுப்பினார்கள்; தூக்க முடியாத அளவிலான மாபெரும் நிலைகளையும்,
கதவுகளையும் நிறுவினார்கள்!… இவை யாவற்றையும் செய்து முடித்தவர்கள் சூத்திர-பஞ்சம மக்கள்! இந்த உடல் உழைப்பு சார்ந்த கடுமையான வேலைகளில் ஒரு எள்ளின் முனையளவு எந்த ஒரு பார்ப்பனனோ, எந்தவொரு பார்ப்பனத்தியோ பங்களிப்பு செலுத்தியதில்லை. எல்லா பணிகளையும் முடித்த பிறகு, இந்தப் பார்ப்பன ‘விளக்கெண்ணெய்கள்’, சம்ப்ரோட்ஷணம் செய்து, மந்திரம் ஓதி கோவில்களை கைப்பற்றிக் கொண்டு பார்ப்பனர்களின் வைப்பாட்டி மக்களான சூத்திர பஞ்சமர்களை கோயிலுக்கு வெளியே தள்ளிவிட்டு, கோவில்கள் அனைத்தும் இனி எங்களுக்கு சொந்தம் என்ற பாணியில் அவர்களே அர்ச்சகர்களாக நியமனமாகிக் கொண்டார்கள்;
உண்டியல் வைத்துக் கொண்டார்கள். தட்டேந்தி தட்சணை வாங்கிக் கொண்டார்கள்.இவை யாவற்றையும் தந்தை பெரியார் தமிழ் மக்களிடையே புட்டு புட்டு வைத்தார்! அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று குரல் கொடுத்தார்! அதற்கான போர் தொடுத்தார்! அவர் இறப்பதற்கு (23-12-1973) நான்கு நாட்களுக்கு முன் சென்னை தியாகராய நகர் பொதுக்கூட்டம் 19-12-1973-ல் நிகழ்ந்தது. அக்கூட்டத்தில் பெரியார் தனக்கு நீண்ட காலமாக இருக்கக்கூடிய ஹிரனியா பிரச்சினையால் வலி தாங்க முடியாமல் துடிதுடித்துக் கொண்டே மூன்று மணி நேரம் பேசினார். “எனக்கு வயதாகி விட்டது; அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க முடியாமல்; உங்களை எல்லாம் பார்ப்பனர்களின் வைப்பாட்டி மக்களாக சூத்திர பஞ்சமர்களாக விட்டு விட்டு சென்று விடுவேனோ…” என்ற ஆழ்ந்த கவலையைக் கண்ணீர் மல்க அக்கூட்டத்தில் வெளிப்படுத்தினார். அவரது உரை முழுமையுமாக “மரண சாசனம்” என்ற தலைப்பில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நூல் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
அவரது பெண் ஏன் அடிமையானாள்? கடவுள் ஒரு கற்பனையே! சாதியும் தீண்டாமையும்! இனி வரும் உலகம்! போன்ற எண்ணற்ற நூல்களை வெளியிட்டார். சாக்ரடீஸ், பிளாட்டோ, இங்கர்சால், பெர்ட்ரண்ட் ரசல், காரல் மார்க்ஸ்- ஏங்கெல்ஸ்-ன் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என எண்ணற்ற அறிஞர் பெருமக்களின் நூல்களை வெளியிட்டார்.
பகத்சிங்கை நேசித்தவர் பெரியார்!
மாவீரன் பகத்சிங்கின் நான் நாத்திகன் ஆனது ஏன்? என்ற நூலை தந்தை பெரியார் தான் தமது நிறுவனத்தின் மூலமாக முதன்முதலாக தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார்.
“நற்கொள்கையுடைய பகத்சிங் போன்ற லட்சிய உணர்வு கொண்ட இளைஞர்களை பிரிட்டிஷார் தூக்கில் தொங்கவிடப்பட்டதன் மூலம் அவரது புகழை மேலும் உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தி உள்ளனர். அதனால் பகத்சிங்குக்கும் அவரது தோழர்களுக்கும் தூக்குத் தண்டனை அளித்தது போல், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பற்பல இளைஞர்களை இதே மாதிரி பிரிட்டிஷார் தூக்கில் போட்டால் நலமாயிருக்கும்; எங்கள் மக்கள் வீறு கொண்டு எழுந்து தமது லட்சியத்தை விரைவாக நிறைவேற்றிக் கொள்வார்கள்..”
என்ற கிண்டல் கலந்த பாணியில் வெள்ளையனைக் கண்டித்தார். பகத்சிங்கிற்கு ஆதரவுக் குரல் கொடுத்தார்.
அம்பேத்கரும் பெரியாரும்
தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் கொள்கை ரீதியில் ஏறத்தாழ ஒன்றுபட்டவர்கள். வடநாட்டில் பெரியாரை அறிமுகப் படுத்தியவர் அண்ணல் அம்பேத்கர். தென்னாட்டில் அம்பேத்கரை அறிமுகப் படுத்தியவர் தந்தை பெரியார்! இன்று நாம் காண்கின்ற பார்ப்பன சனாதனக் கொடுமைகளை நன்குணர்ந்த அண்ணல் அம்பேத்கர் இந்து மதத்தை விட்டு வெளியேறுவதற்கு முடிவெடுத்து தன்னோடு சேர்ந்து பௌத்த மதத்தைத் தழுவுவதற்கு பெரியாரை அழைத்தார்.
பெரியாரோ “நீங்கள் மதம் மாறுங்கள்; நீங்கள் மட்டும் அல்ல; உங்களோடு லட்சக்கணக்
கான மக்களை அணி திரட்டிச் சென்று மதம் மாறுங்கள்; நான் உங்கள் வழியில் வருவதற்கான சந்தர்ப்பமாக இதனைக் கருதவில்லை; ஏனெனில், நான் இந்து மதத்தில் நீடித்தால் தான் இந்தப் பார்ப்பனர்களையும், இந்து மதப் புராணப் புரட்டுகளையும், சாதி தீண்டாமையையும், அழித்து ஒழிக்க தொடர்ந்து போராடி, பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடியின ‘இந்து’ மக்களின் சுயமரியாதையை மீட்டெடுக்க முடியும்; எனவே என்னை விட்டு விடுங்கள்…” என்று பெரியார்
அண்ணல் அம்பேத்கரிடம்
தெரிவித்துவிட்டார். அதன் பின்பே அண்ணல் அம்பேத்கர் தம்முடன் லடசக்கணக்கான மக்களை இணைத்துக் கொண்டு பௌத்த மதத்தைத் தழுவினர்.
பெரியாரின் கல்வித் தகுதியும் அவரது அபரிதமான செயற்பாடும்:
“நான் என்னுடைய ஒன்பதாவது, பத்தாவது வயதிற்கு மேல் எந்த பள்ளிக்கூடத்திலும் வாசித்தவனும் அல்ல; அந்தப் பத்து வயதிற்கு உட்பட்ட காலத்திலும் என் பெற்றோர்கள் என்னை பள்ளிக்கு அனுப்பிய காரணமெல்லாம் நான் வீட்டில் இருப்பவர்களுக்குத் தொல்லை விளைவிக்காமல் இருக்க வேண்டும் என்ற கருத்துக் கொண்டு, ஓர் இடத்தில் என்னைக் காவலில் வைப்பதற்காகவே…” – என்று 1928-ஆம் ஆண்டு மே 19-ல்
பூந்தமல்லியில் ‘செங்கல்பட்டு ஜில்லா போர்டு ஆரம்ப ஆசிரியர் மாநாட்டில்’ பெரியார் பேசியுள்ளார்.
இந்த அளவிற்கு ஆரம்பக் கல்வி, உயர்நிலைக் கல்வி, பட்டயக் கல்வி எதையுமே பெறாத பெரியார் தான் மிகப்பெரிய பண்டித சிகாமணிகள் என்று வர்ணித்துக் கொண்டவர்கள் எல்லாம் கண்டுபிடிக்காத தமிழ் மொழி எழுத்துச் சீர்திருத்தத்தை வடிவமைத்துக் கொடுத்தார். எண்ணற்ற நூல்களை எழுதி வெளியிட்டார். சூத்திர-பஞ்சம மக்களின் சுயமரியாதை உணர்வுக்காகவும், வாழ்க்கை மேம்பாட்டுக்காகவும் எழுதினார்; பேசினார்; போராடினார்; சிறை சென்றார்; தியாகங்கள் பல புரிந்தார்.
தந்தை பெரியாரின் இறுதிக்கால உதவியாளர் நான்:
தந்தை பெரியாரின் இறுதிக்கால உதவியாளராக 1972-1973 காலகட்டத்தில் பணியாற்றிய பெருமை எனக்கு உண்டு.
அந்த அனுபவங்களை இங்கு விவரித்தால் அது பெருகும். இருப்பினும் நூல்களாக வெளிவந்துள்ள நேர்காணல்களில் சில அனுபவங்களை பகிர்ந்து உள்ளேன்; வீடியோக்களில் பகிர்ந்துள்ளேன். அது பற்றி தேவைப்படின் மொத்தமாக தொகுத்து நூலாக கொண்டு வருவதற்கும் விருப்பம் கொண்டுள்ளேன்.
கார்ப்பரேட் – காவிப் பாசிசம் வீழ்த்தப்பட பெரியாரையும் ஆயுதமாகப் பயன்படுத்துவோம்!
பார்ப்பன சனாதனத்தை உயர்த்தி பிடிக்கும் ஆர் எஸ் எஸ் பாஜக இந்து மதவெறி கும்பலின் பிரதிநிதியான ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்திலேயே அம்பேத்கரை மிகவும் இழிவுபடப் பேசினார். தமிழ்நாட்டிலும் எச்.ராஜா போன்ற ‘கழிசடை நாயகர்கள்’ திரிபுராவில் லெனின் சிலைகள் தகர்க்கப்பட்டுள்ளது போல் தமிழகத்திலும் பெரியார் சிலைகள் தகர்க்கப்படும்’ என்று ஓலமிட்டு
கைதாகி சிறை செல்ல நேரிடும் என்று தெரிந்தவுடன் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்கின்றான்.
‘இசைஞானி’ இளையராஜா திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஜீயர்களால் கருவறையில் நுழையவிடப்படாமல் அர்த்த மண்டபத்திற்கு வெளியவே தடுத்து நிறுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளார்.
அந்த அவமானம் எல்லாம் கோடிகளில் புரளும் சங்கிகளாக மாறிப்போன இளையராஜாவுக்கோ, கங்கை அமரனுக்கோ அவமானமாகத் தெரியாது!
நாடு முழுவதும் சாதி மத கலவரங்கள், கொலைகள், கொள்ளைகள், மசூதிகள் இடிக்கப்படுதல், ஆலயங்கள் தகர்க்கப்படுதல் சிறுபான்மையினர் இல்லங்கள் தரைமட்டமாக்கப்படுதல் தொடர்ச்சியாக நடக்கின்றன.
இவற்றையெல்லாம் இல்லாதொழிக்க – கார்ப்பரேட் காவிப் பாசிசத்தை முற்றாகத் துடைத்தெறிய இன்றைய தந்தை பெரியார் நினைவு நாளில் சபதம் ஏற்போம்.
- எழில்மாறன்.