மோடியும் அதானியும் ஒண்ணு என்பதை நாடே அறியும். 2014 ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பிலிருந்து அதானி குழுமம் அவருக்கு செய்த பிரச்சார பயண ஏற்பாடுகள், விமான போக்குவரத்து, வாகன ஏற்பாடுகள், கோடிக்கணக்கான ரூபாய் நிதி உதவி போன்ற அனைத்தும் நாட்டில் உள்ள படித்தவர்கள் முதல் அரசியல் ஆர்வலர்கள் வரை அனைவரும் அறிந்த உண்மை.

2008 உலகளாவிய பொருளாதார நெருக்கடி, ஏகாதிபத்திய நிதி மூலதன கட்டமைப்பின் தோல்வியை பறைசாற்றியது. இதன் வெளிப்பாடான, ஆக பிற்போக்கு தன்மை கொண்ட பாசிச பயங்கரவாதம், இந்தியாவைப் பொறுத்தவரை தேசங்கடந்த தரகு முதலாளிகளின் அரசியல், பொருளாதார, பண்பாடாக வடிவெடுத்துள்ளது.

குறிப்பாக 2008 உலகப் பொருளாதார நெருக்கடிக்கு பிறகு இந்தியாவில் உருவான தேசங்கடந்த தரகு முதலாளிகளில் ஒருவரான அதானி மற்றும் அவரது குழுமமும், அதன் வளர்ச்சியும்,, ஆர்எஸ்எஸ்சின் கார்ப்பரேட் ஆதரவு பொருளாதாரக் கொள்கையுடன் நெருங்கிய தொடர்புடையது என்பது பலருக்கும் தெரியாத உண்மை.

அதானிக்கும் மோடிக்கும் உள்ள உறவை ஹிண்டன்பர்க் அறிக்கை அம்பலப்படுத்தியவுடன் அதற்கு எதிராக பல்வேறு தாக்குதல்களைத் தொடுத்து வரும் ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் ஊடகங்கள் அனைத்தும் அதானி போன்ற கையடக்கமேயான தேசங்கடந்த தரகு முதலாளிகள் இந்தியாவை சூறையாடு வதற்கு முழு சேவை செய்கிறது.

இந்தியாவை ஒரு நூற்றாண்டாக சுரண்டி வரும் டாட்டா, பிர்லா போன்ற பாரம்பரிய தரகு முதலாளிகளையே ஓரங்கட்டி குறுகிய காலத்தில் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த அதானியின் வளர்ச்சி ஆர்எஸ்எஸ் உருவாக்கத் துடிக்கும் இந்துராஷ்டிரத்தின் பொருளாதாரத்துடன் நெருங்கிய தொடர்புடையது. சுதேசி, சுயசார்பு, மேக் இன் இந்தியா போன்ற பல அவதாரங்களில் வெளியாகி வரும் ஏகாதிபத்திய கார்ப்பரேட் நலனுக்கான பொருளாதாரக் கொள்கையே ஆர்எஸ்எஸ்-ன் பொருளாதாரக் கொள்கையாகும்.

இத்தகைய ஆர்எஸ்எஸ் தன்னை எப்போதும் முழுமையாக வெளிப்படுத்திக் கொள்வதில்லை. ஏனென்றால் ஒரு சிலரை மட்டும் வெளிப்படையாக அறிவித்து லட்சக்கணக்கானவர்களை ரகசியமாக வைத்துக் கொண்டு செயல்படும் பார்ப்பன பயங்கரவாத அமைப்புதான் ஆர்எஸ்எஸ். மோடி, ஆதித்யநாத் போன்றவர்கள் அதன் முகமூடிகள் மட்டுமே! அந்த முகமூடிகளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு இந்துராஷ்டிரம் என்ற பெயரில் ஏகாதிபத்திய மேல்நிலை வல்லரசுகளின் காலடியில் இந்தியாவை மறுகாலனியாக்கத் துடிக்கும் தேச விரோத பயங்கரவாத கும்பலே ஆர்எஸ்எஸ். அவர்களுக்கும் அதானிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதை அம்பலப்படுத்தும் வகையில் மக்கள் அதிகாரம் இணையத்திலும், புதிய ஜனநாயகம் பத்திரிக்கையிலும் இது தொடர்பாக வந்துள்ள பல்வேறு கட்டுரைகளைத் தொகுத்து சிறப்பு வெளியீடாக கொண்டு வருகிறோம்.


இதையும் படியுங்கள்: புதிய ஜனநாயகம் ஏப்ரல் இதழில்… | NEW DEMOCRACY APRIL ISSUE

ஆர்எஸ்எஸ்சும், அதானியும் ஒண்ணு! அறியாதவன் வாயில மண்ணு கொலைகார ஆர்.எஸ்.எஸ் ஐ தடை செய்! கொள்ளைக்கார அதானி சொத்துக்களைப் பறிமுதல் செய்! என்ற முழக்கம் நாடெங்கிலும் எதிரொலிக்கட்டும்!

ஆர்.எஸ்.எஸ்-அதானிக்கு எதிரான போராட்ட களத்தில் அணிவகுத்து நிற்பவர்களின் கைகளில் இந்த வெளியீடு போர்வாளாக விளங்கும்.

ஆசிரியர் குழு
புதிய ஜனநாயகம்.

விலை: ரூ.35
பக்கம்: 60

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here