காந்தி படுகொலை செய்வதற்கு 10 நாட்களுக்கு முன்பு ஒரு கொலை முயற்சி நடந்தது. அந்தக் கொலை முயற்சிக்கான சதியைக் குறித்து முதலில் அறிந்தவர் பேராசிரியர் ஜகதீஷ் சந்திர ஜெயின். அவர் தன் சுயசரிதையில் என்னால் பாபுவைக் காப்பாற்ற முடியவில்லை _ நான் பாப்புவைக் காப்பாற்ற முடியவில்லை) எழுதியிருக்கிறார். மதன்லால பாஹ்வா தேசப் பிரிவினைக்குப் பின் பம்பாய்க்கு வந்த அகதி. அவனுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஜெய்யின் உதவி செய்திருக்கிறார். காந்தியைக் கொலை செய்யும் திட்டம் இருப்பதாகவும், சவார்க்கர் தன்னைத் தட்டிக் கொடுத்து செல் என்று கூறியதாகவும் ஜெயின் சொல்கிறார். “பிறரால் முடுக்கிவிடப்பட்ட இந்த இளைஞர் வன்முறைச் செயலில் இறங்கலாம். மேலும் அவன் சவார்க்கரைச் சந்தித்து அவனுடைய ஆசைகளையும் பெற்றிருந்தான்,” என்கிறார் ஜெயின். இந்தத் தகவலை அந்த பம்பாயின் உள் அமைச்சரான மொரர்ஜி தேசாயிடம் ஜெயின் சொல்ல, தேசாய் பம்பாயின் துணை கமிஷனரான ஜாம்ஷெட் நகர்வாலாவிடம் அதைச் சொல்லியிருக்கிறார்.

அங்கு என்ன நடந்தது என்கிற விவரங்கள் டீஸ்டா செடல்வாட் வரலாற்று ஆவணங்களின் அடிப்படையில் தொகுத்த ‘அப்பால்

சந்தேகம் – A Dossier on Gandhi’ என்கிற புத்தகத்தில் தந்திருக்கிறார். (2015இல் வெளியிடப்பட்ட இந்தப் புத்தகத்தில் காந்திக்கு எதிராக மொத்தம் ஐந்து கொலை முயற்சிகள் நடந்ததாகப் பட்டியலிடுகிறது).

திட்டமிட்டபடியே ஜனவரி 20 அன்று பாஹ்வாவும் விஷ்ணு கார்க்கரேயும் காந்தி தங்கியிருந்த பிர்லா பவனுக்கு முதலில் சென்றனர். கோட்சே, ஆப்தே, திகம்பர் பாட்கே, ஆகியோர் பின்னர் ஒரு வாடகைக் காரில் சென்றனர். இந்தக் காரை ஓட்டிய சுர்ஜித் சிங் காந்தி கொலை வழக்கில் ஒரு சாட்சியாக உயிரிழந்தார்.

திட்டத்தின்படி, பஞ்சை அமிலத்தில் ஊறவைத்துத் தயாரிக்கப்படும் கன்காட்டன் என்கிற வெடிகுண்டை பாஹ்வா வெடிக்க வேண்டும். அப்போது ஏற்படும் பதட்டத்தைப் பயன்படுத்தி பாட்கேயும், ஷங்கரும் தங்களிடம் இருந்த துப்பாக்கிகளை வைத்து காந்தியைச் சுட வேண்டும். கை வெடிகுண்டையும் அவர்மீது எறிய வேண்டும். கோபால் கோட்சேயும், பாஹ்வாவும், கார்க்கரேயும் தங்களிடமிருந்த கை வெடிகுண்டுகளை காந்தி மீது ஏறிய வேண்டும். நாதுராம் கோட்சேயும் ஆப்தேயும் ஒரு இடத்தில் நின்றுகொண்டு அவரவருக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளைச் செய்யும் வகையில் வழிகாட்ட வேண்டும்.

பிர்லா பவனுக்கு முன்பே சென்று விட்ட பாஹ்வா அங்கு கார் ஓட்டுனராகப் பணிபுரியும் சோட்டுராமிடம் தன்னை ஒரு புகைப்படக்காராக அறிமுகப்படுத்திக் கொண்டு காந்தி மாலை நேரப் பிரார்த்தனை செய்யும் மேடைக்குச் செல்ல அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டார். அவரைப் பின்னாலிருந்து படம் எடுக்க வேண்டுமென்றும் கூறினார். சந்தேகமடைந்த சோட்டுராம் நீ புகைப்படக்காரர் என்றால் கேமரா எங்கே என்று கேட்க, பாஹ்வா காருக்குத் திரும்பச் செல்வது போல் நடந்து சென்றார். ஆனால் அவர் சென்றது மேடைக்குப் பின்புறம் இருந்த ஒரு சுவர். சுவரின்மீது வெடிகுண்டை வைத்துப் பற்ற வைத்தார் பாஹ்வா.  ஆனால் அது சரியாக வெடிக்கவில்லை. திட்டம் தோல்வியுறுவதை உணர்ந்த மற்ற சதிகாரர்கள் காரில் ஏறித் தப்பிச் சென்றனர். பாஹ்வா மட்டும் பிடிபட்டார். ஏழு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சதிகாரர் கூட்டத்தில் நானும் ஒருவர் என்று அவர் ஒப்புக் கொண்டார். முதல் நாள் இரவு அவர்கள் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு போலீசை அழைத்துச் சென்றார். அதற்குள் மற்றவர்கள் தப்பி விட்டனர்.  கோட்சேயும், ஆப்தேவும் மீண்டும் டெல்லிக்கு ஜனவரி 29 அன்று டெல்லிக்கு வந்தனர். இந்த முறை அவர்களிடம் பெர்ரெட்டா தானியங்கி துப்பாக்கியும், 11 குண்டுகளும் இருந்தனர்.

ஜனவரி 30 அன்று அவர்களின் நீண்ட காலத் திட்டம் நிறைவேறியது. பாஹ்வா பேராசிரியர் ஜெயினிடம் கூறியது போல் சவார்க்கருக்கு சதிகாரர்களுடன் தொடர்ந்து ஒரு தொடர்பு இருந்திருக்கிறது.

அப்ரூவர் திகம்பர்  பாட்கேயின் சாட்சியம் இதனைத் தெளிவாக்கியது. பூனாவில் வாழ்ந்த பாட்கே அவருடைய தொழில் குறித்து இப்படிக் கூறுகிறார்:  “1947லிருந்தே நான் நான் துப்பாக்கி ரவைகள், வெடிகுண்டுகள், ரைஃபிள் துப்பாக்கிகள், ஸ்டென் துப்பாக்கிகள் போன்றவற்றை விற்று வந்தேன். புத்தகங்களையும் விற்பேன். வருடாந்திர இந்து மகாசபைக் கூட்டங்களில் பங்கேற்ற நான் அங்கு ஆயுதங்களையும் புத்தகங்களையும் விற்பேன்.” சவார்க்கரின் மெய்க்காப்பாளர் அப்பா கேசர், செயலாளர் கஜானந்த் ராவ் டாம்லே ஆகியொருடனும் பழக்கம் இருந்தது. அவருக்கு சவார்க்கர் அறிமுகமானது 1944—45இல். கோட்சேயை 1941 முதலே தெரியும். 1947 ஜூலை- ஆகஸ்டு மாதஙகளில் கோட்சேவுக்கும், ஆப்தேவுக்கும் முதன் முதலாக ஆயுதம் விற்றிருக்கிறார். நவம்பர் 1947இல் ஆயுதங்கள் அவசரத் தேவை என்று செய்தி வந்ததும் பம்பாயிலிருக்கும் இந்து மகாசபை அலுவலகத்தில் அவற்றை சேர்ப்பித்து விடுவதாக உறுதியளித்தார்.

அதற்குப் பிறகு நடந்தவைகளை நூரானி இப்படி எழுதுகிறார்: “ஜனவரி 14, 1948 அன்று ‘பொருளுடன்’ பம்பாய்க்கு வந்தார் பாட்கே. கோட்சே, ஆப்தேயைச் சந்தித்த சில நிமிடங்களுக்குப் பின் சவார்க்கர் வசித்த சவார்க்கர் சாதனுக்கு, 2 கன்காட்டன் வெடிகுண்டுகள், வெடியைப் பற்ற வைக்கும் கம்பித் திரி போன்ற பொருட்களைக் கொண்ட ஒரு காக்கிப் பையை எடுத்துக் கொண்டு சென்றனர்.  இனி பாத்கே கூறுவதைப் பார்ப்போம்:

“ஆப்தே என் கையிலிருந்த பையை வாங்கிக் கொண்டு என்னை வெளியில் காத்திருக்குமாறு சொன்னார். அவரும் கோட்சேயும் சவார்க்கர் சாதனுக்குள் சென்றனர். 5—10 நிமிடங்கள் கழித்து திரும்பி வந்தனர்.”

இவர்கள் சவார்க்கருடன் நடத்திய சந்திப்புதான் இன்னும் அதிக முக்கியமானது. ஷங்கரும் இவர்களுடன் சேர்ந்து கொண்டார். ஜனவரி 17 அன்று மீண்டும் சவார்க்கர் சாதனுக்குச் சென்றனர்.  அது குறித்து பாட்கே இப்படிச் சொல்கிறார்: “ஆப்தேயும், கோட்சேயும், நானும் சவார்க்கர் சாதன் வளாகத்திற்குச் சென்றோம். வீட்டின் கீழே இருந்த ஒரு அறையில் காத்திருக்குமாறு ஆப்தே என்னிடம் சொன்னார். கோட்சேயும் ஆப்தேவும் மேலே சென்றனர். 5—10 நிமிடங்களுக்குப் பிறகு திரும்பி வந்தனர். அவர்கள் இருவரும் படியில் இறங்கி வரும்போதே  அவர்களைத் தொடர்ந்து தத்யாராவும் (சவார்க்கரை இப்படித்தான் மரியாதையாக அழைப்பார்கள்). அவர்களிடம் யஷஸ்வி ஹூன் யா (வெற்றியுடன் திரும்புங்கள்) என்றார்.  நாங்கள் நால்வரும் காரில் ஏறி ரூயா கல்லூரிக்குச் சென்றோம்.  காரில் செல்லும்போது, காந்திஜியின் நூற்றாண்டு முடிந்து விட்டதென்று தத்யாராவ் தன்னிடம் தீர்க்கதரிசனமாகக் கூறியதாக ஆப்தே எங்களிடம் கூறினார். நம் வேலை வெற்றிகரமாக முடிந்து விடும் என்றும் ஆப்தே கூறினார்.”  இது காந்தியின்மீது ஜனவரி 20ஆம் தேதி அவர்கள் நடத்திய தாக்குதலுக்கு முன் தினம் நடந்தது.

அப்ரூவர் பாட்கேயின் சாட்சியத்தை முற்றிலுமாக மறுத்தார் சவார்க்கர். தன் தரப்பு வாதமாக  எழுத்து பூர்வமாகக் கொடுத்த அறிக்கையில் சதிகாரர்கள் குறித்து எப்படியெல்லாம் அவர் மழுப்பினார் என்பதை ராபர்ட் பேயின் இவ்வாறு விளக்குகிறார்:

“அவர் சதிகாரர்களை எப்போதும் சந்தித்ததே இல்லை; அப்படிச் சந்தித்திருந்தால் அதற்கும் காந்தி கொலைச் சதிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; நான் படியிலிருந்து இறங்கி வரவே இல்லை; அப்படி வந்திருந்தாலும், ‘வெற்றியுடன் திரும்பி வாருங்கள்’ என்று அவர் சொல்லவில்லை. இந்து ராஷ்டிரத்தின் பங்குகளை விற்பது அல்லது ஹைதராபாத் நிஜாமுக்கு எதிரான அமைதிப் போராட்டம் நடத்துவது, அவர்கள் மேற்கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான பணிகள் குறித்து. இப்படி கொலைச் சதிக்கு சம்பந்தமில்லாத ஏதாவது பேசியிருப்பார் என்று புரிந்துகொள்ளப்பட வேண்டும். அவருடைய அறிக்கை முழுவதும் சதிக்கும் அவருக்கும் வெகு தூரம் என்கிற பொருள்படும் வகையில் சட்டப் பூர்வமான சொற்களையே பயன்படுத்தினார். கொலைச் சூழல் சார்ந்த ஆதாரங்கள் வலுவாக இருந்தன. பாட்கேயின் ஒவ்வொரு வாக்கியத்தையும் அதன் சூழலிலிருந்து பிரித்தெடுத்து அதற்கு குறிப்பிட்ட பொருள் இல்லாதவாறு பார்த்துக் கொண்டார்.”

இதைவிடப் பெரிய மோசடி கோட்சே, ஆப்தே ஆகியோருடன் அவருக்கிருந்த உறவு வலுவானதல்ல என்பதை நிரூபிக்க அவர் சொன்ன வார்த்தைகள்தாம். “ஸ்தாபனம் தொடர்பாக நான் எழுதிய கடிதங்கள், சுற்றுப்பயணங்கள், எழுத்துக்கள், பேச்சுக்கள் வாயிலாக நான் இந்து மகாசபையின் ஆயிரக் கணக்கான தலைவர்களுடனும், ஊழியர்களுடனும் உறுப்பினர்களுடனும் தனிப்பட்ட முறையில் தொடர்பிலிருந்தேன். இந்து மகாசபையின் எண்ணிலடங்காத் தொண்டர்கள், ஊழியர்களில் ஒருவர் என்ற முறையில்தான் நாதுராம் கோட்சே எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். மிஸ்டர் ஆப்தே நகர் என்ற இடத்தில் தான் இந்து மகாசபை உறுப்பினர் என்றும், தான் ஒரு ரைஃபிள் கிளப் தொடங்க இருப்பதாகவும் அதற்கு மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளித்துவிட்டதாகவும் எழுதிய கடிதத்தின் மூலாமாக எனக்கு அறிமுகமானார். குவாலியர் இந்து மகாசபாவின் தலைவராக டாக்ட்ர் பர்ச்சூரே அறிமுகப்படுத்திக் கொண்டார். தன்னை இந்து சங்காதனிய உறுப்பினரென்றும், சட்டப்படி உரிமம் தேவைப்படாத ஆயுங்களை விற்பதாகவும் பாட்கே எழுதிய கடிதம் எழுதிய போதுதான் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டேன். குற்றம்சாட்டப்பட்டுள்ள ஷங்கர், கோபால் கோட்சே, மதன்லால் பாஹ்வா ஆகியோரை நான் எப்போதுமே தெரிந்திருக்கவில்லை. அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டதுகூட இல்லை.”

நாதுராமின் சகோதரர் கோபால் கோட்சேயைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை என்றும், ஒரு இந்து மகாசபையின் உறுப்பினராக மட்டுமே நாதுராமை அறிந்திருந்ததாகவும் கூறியது பொய் என்கிற உண்மையை கோபால் கோட்சேவே பின்னர் போட்டுடைத்தார்.  ‘காந்தியின் கொலையும் நானும்’ என்கிற தலைப்பில் அவர் 1967இல் வெளியிட்ட புத்தகத்தில் இப்படி எழுதினார்: “கோட்சேயின் தந்தை சவார்க்கர் வசித்த ரத்னகிரிக்கு 1929இல்  பணிமாற்றம் பெற்றுச் சென்ற போதுதான் நாதுராமும் சவார்க்கரும் சந்தித்தனர். ரத்னகிரிக்குச் சென்ற மூன்று நாட்களுக்குள்ளேயே  வீர் சவார்க்காரை முதன்முறையாகச் சந்திக்கச் சென்றார் நாதுராம். அதற்குப் பிறகு அவர் சவார்க்கரிடம் அடிக்கடி சென்றார். சவார்க்கரின் எழுத்துகளைக் காப்பி எடுத்துத் தரும் பணியைச் செய்வதாகவும் சொன்னார்.”

சவார்க்கரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய தனஞ்செய் கீர் இப்படி எழுதுகிறார்: “தன்னுடைய இளமைக் காலத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊழியராக இருந்த நாதுராம், பின்னர் இந்து மகாசபையின் அகில இந்திய கமிட்டியின் முன்னணி உறுப்பினரானார். அவர் மகாராஷ்டிர மாநிலத்தில் நன்கு அறியப்பட்ட பத்திரிகையாளர். அக்ரானி (தலைவர்) என்கிற மராத்தி தினசரியின்  ஆசிரியர். அதன் பெயர் பின்னர் இந்து ராஷ்டிரா என்று மாற்றப்பட்டது.  பண்டிட் நாதுராம் கோட்சே என்று அதிகமாக அறியப்பட்ட இந்தப் பத்திரிகையாசிரியர் உறுதியான சவார்க்காரியவாதி. சவார்க்கரின் முன்னணி ஊழியர், தளபதி என்பதும் ஓரளவுக்குத் தெரிந்த விஷயம்தான்.”

தனக்கும் சதிகாரர்களுக்கும் அதிகப் பழக்கமில்லை என்று தொடர்ந்து பொய் சொன்ன சவார்க்கர் செங்கோட்டை வழக்கு என்று அழைக்கப்பட்ட காந்தி கொலை வழக்கு விசாரணை நடந்த சமயத்திலும், சிறையில் ஒன்றாக இருக்கும்போதும் அவர்கள் யாரென்றே தெரியாததுபோல்தான் நடந்து கொண்டார். இதைச் சொல்வது கோபால் கோட்சே சார்பாக ஆஜரான வழக்கறிஞர் பி.எல். இனாம்தார்தான்.

விசாரணை நடந்து கொண்டிருந்தபோது நாதுராமின் பக்கம் அவர் திரும்பவுமில்லை; பேசக் கூட இல்லை என்று The Story of the Red Fort Trial 1948-49 என்கிற தலைப்பில் அவர் எழுதிய சுயசரிதையில் இனாம்தார் குறிப்பிடுகிறார். நாதுராம்கூட இதனால் வேதனையடைந்தார் என்றும் அவர் பதிவு செய்கிறார். அவர் எழுதியது இதுதான்: “தத்யாராவ் தங்களுக்கிடையே தொடர்பில்லை என்று திட்டமிட்ட வகையில், வெளிப்படையாக நடந்து கொண்டதால் நாதுராம் ஆழமாகக் காயப்பட்டிருந்தார். சிறையில் இருக்கும் போது தத்யாராவ் தன்னைத் தொடுவாரென்றும், பரிவாக ஒரு வார்த்தைப் பேசுவாரென்றும், குறைந்த பட்சம் கருணையுடன் பார்ப்பார் என்றும் நாதுராம் ஏங்கினார். சிம்லா உயர்நீதி மன்றத்தில் நான் கடைசியாகச் சந்தித்தபோது காயம் பட்ட தன் உணர்வுகள் குறித்து என்னிடம் பேசினார்.”

அவர் காயம் பட்டிருந்தாலும் இறுதி வரை  தன் குருவைக் காப்பாற்றும் வகையில்தான் பேசினார். சீடர்களைக் கைகழுவி விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்த சவார்க்கர் நாதுராம் விஷயத்திலும் அதையேதான் செய்தார்.

பாட்கேயின் சாட்சியத்தை உறுதி செய்யும் வகையில் இன்னும் இரண்டு சாட்சிகள் இருந்தனர். அவர்களில் ஒருவர் சாந்தாபாய் மோடக் எனும் நடிகை. இவர் கோட்சே, ஆப்தேவை ஜனவரி 14 அன்று பூனா எக்ஸ்பிரசில் சந்தித்தார். தன்னுடைய வீடு சவார்க்கர் சாதனுக்கு அருகில் இருப்பதால் அவர்களை தன் தாதர் ரயில் நிலையத்தில் காத்திருக்கும் தன் சகோதரரின் காரில் அங்கு இறக்கி விடுவதாகவும் சொன்னார். அவர்களை அங்கே இறக்கிவிட்ட பின் சவார்க்கர் சாதனுக்குள் அவர்கள் செல்வதையும் அவர் பார்த்திருக்கிறார்.

இன்னொரு சாட்சி ஜனவரி 17 அன்று ஆப்தே, கோட்சே, பாட்கேயை சவார்க்கர் சாதனுக்குக் கொண்டு சென்ற காரின் ஓட்டுனர் ஐத்தப்ப கோட்டியான். அவர்கள் மூவரும் காரிலிருந்து இறங்கிச் சவார்க்கர் சாதனுக்குச் செல்வதைப் பார்த்ததாகக் கூறினார்.

நடிகையின் சாட்சியம் அவர்கள் சவார்க்கர் சாதனுக்குச் சென்ற போதிலும் சவார்க்கரைச் சந்தித்தாகச் சொல்ல முடியாதென்றும் அதே வீட்டில் ஏ.எஸ். ஷிண்டேவும், கஹன் டாம்லே என்கிற இருவரும் கூட வசித்தனரென்றும் நீதிபதி ஆத்ம சரண் கூறிவிட்டார். அதே போல் கார் ஓட்டுனரின் சாட்சியம் ‘வெற்றியுடன் திரும்புக’ என்று சவார்க்கர் கோட்சே, ஆப்தேயிடம் சொன்னதை உறுதி செய்யவில்லை என்றும் கூறிவிட்டார். தெருவில் நின்ற ஓட்டுனர் வீட்டுக்குள் நடந்ததைப் பார்த்திருக்க முடியாது என்பது சிறு பிள்ளைக்கும் தெரியும். சவார்க்கர் அப்படிச் சொன்னதற்கான ஆவணங்களும் இல்லையென்று விசித்திரமாகப் பேசினார்.

பாட்கேயின் சாட்சியத்தை அவரால் முற்றிலும் நிராகரிக்க முடியவில்லை. அவ்வளவு நேர்மையான சாட்சியம் என்பதை அவரே ஒப்புக் கொண்டார். அவர் கூறியது இதுதான்: “விவரங்களாக பாட்கே அறிந்தவற்றை நேரடியாகவும், நேர்மையாகவும் பேசினார். நடக்காத உண்மைகளைக் குறித்து இவ்வளவு நீண்ட நேரமாகவும், குறிப்பாகவும் தடுமாற்றமின்றி யாராலும் பேச முடியாது. அடிப்படை இல்லாத ஒரு விஷயத்தை மனப்பாடம் செய்து இவ்வளவு நீண்ட நேரம் இவ்வளவு விவரமாக ஒருவர் பேசுவார் என்று நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.”

ஆத்ம சரண் ஆத்மார்த்தமாக இப்படிப் பேசினாலும் இறுதியில் சவார்க்கரை விடுவித்தார். அதற்கு அவர் சொன்ன காரணம் இதுதான்:

“வினாயக் டி சவார்க்கர் தன்னுடைய அறிக்கையில் ‘சதி’’ என்கிற ஒன்று நடந்திருந்தால் அதில் தனக்குப் பங்கில்லை என்றும், நாதுராம் வி. கோட்சே மற்றும் நாராயண் டி. ஆப்தே ஆகியோர் எந்த விதத்திலும் தன் கட்டுப்பாட்டில் இல்லையென்றும் கூறியிருக்கிறார். அப்ரூவரின் (பாட்கேயின்) சாட்சியின் அடிப்படையில்தான், அந்த அடிப்படையில் மட்டுமே, அரசுத் தரப்பு தொடுத்த வழக்கு நிற்கிறது என்று இங்கு கூறப்பட்டுள்ளது. அப்ரூவரின் சாட்சியத்தை மட்டும் வைத்து முடிவுகளை எடுப்பது ஆபத்தானது என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் ஜனவரி 20, 1948இலும் ஜனவரி 30இலும் நடந்த சம்பவங்களில் சவார்க்கரின் கை இருந்தது என்று தீர்மானிக்க காரணம் எதுவுமில்லை.”

இதில் துயரம் என்னவென்றால், ஆத்ம சரணின் இந்த சொற்கள் தீர்ப்பில் இடம் பெறவில்லை. விசாரணையின்போதும், தீர்ப்பு வழங்கும்போதும் நீதிபதிகள் வாய்மொழியாக சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். அதற்கு ஆங்கிலத்தில் ஓபிட்டர் டிக்டம் (obiter dictum) என்று பெயர். அப்படி ஒரு ஓபிட்டர் டிக்டம்தான் இந்திய வரலாற்றை மாற்றியது.

கபூர் கமிஷன் விசாரணையில் வெளிவந்த உண்மை

மறைக்கப்பட்ட உண்மைகளையும், மறுக்கப்பட்ட நீதியையும் நம் கண் முன் மீண்டும் கொண்டு வந்து நிறுத்தும் வித்தைக்காரன்தான் வரலாறு. நவம்பர் 12, 1964 அன்று காந்தி கொலை வழக்கில் கைதான கோபால் கோட்சே, மதன்லால் பாஹ்வா, விஷ்ணு கார்க்கரே ஆகியோரின் தண்டனைக் காலம் முடிந்த நிலையில் விடுவிக்கப்பட்டனர். அவர்களுடைய விடுதலையைக்  கொண்டாடும் விதத்தில் பூனாவில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பால கங்காதர திலகரின் பேரன் ஜி.வி. கேட்கர் அந்த நிகழ்வில் கலந்து கொண்டார். இவர் கேசரி, தருண்பாரத் பத்திரிகைகளின் ஆசிரியர். கொலை நடப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன் நாதுராம் தன்னிடம் அது குறித்துப் பேசியதாகவும், அந்தத் திட்டத்தை தான் எதிர்த்ததாகவும், அந்த விவரத்தை அப்போதை பம்பாய் மாகாண முதல்வரிடம் தெரிவித்ததாகவும் கூறினார். இதைத் தொடர்ந்து நீதிபதி ஜே.எ. கபூர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையத்தின் முன் சவார்க்கரின் மெய்க்காப்பாளர் அப்பா ராமச்சந்திர கேசர், சவார்க்கரின் செயலாளர் கஜனன் விஷ்ணு, டாம்லே உட்பட பலர் சாட்சியம் அளித்தனர். சாட்சியங்கள் மீண்டும் சவார்க்கருக்கும் மற்ற சதிகாரர்களுக்குமிடையே இருந்த தொடர்புகளைத் தெளிவாக நிரூபித்தனர். இந்த சாட்சிகள் செங்கோட்டை வழக்கில் விசாரிக்கப்பட்டிருந்தால் தீர்ப்பு வேறு மாதிரியாக இருந்திருக்கலாம். ஆத்ம சரண் கண்டுபிடிக்க முடியாத உண்மைகளை  கபூர் வெளிக்கொண்டு வந்தார். 1909இல் கர்சன் வைலி, ஜாக்சன் ஆகியோரின் கொலைகள், ஹாட்சன் என்கிற ஆங்கிலேய அதிகாரி மீது நடந்த கொலை முயற்சி ஆகியவற்றுக்கும் காந்தி படுகொலைக்கும் பின்னாலிருந்த வலைப் பின்னலை வெளிச்சம் போட்டுக் காட்டினார் கபூர். அவருடைய முடிவு இதுதான்: “சவார்க்கரும் அவருடைய குழுவும் சதியில் ஈடுபட்டனர் என்பதைத் தவிர வேறு எந்தக் கருத்தையும் தகர்க்கும் என்று இந்த உண்மைகளை ஒன்றாக வைத்துப் பார்க்கும்போது தெரிகிறது.”

நடந்த மூன்று அரசியல் கொலைகளுக்குப் பின்னிருக்கும் வலைப் பின்னலை வெளிச்சம் போட்டுக் காட்டினார் கபூர்.

மகாத்மா காந்தியின் நூற்றாண்டை முடிப்பதாக சவார்க்கர் பேசியது இந்துத்வத்தின் நூற்றாண்டைத் துவங்கி வைப்பதற்குத்தான். அவர் இந்துத்வம் என்கிற புத்தகத்தை எழுதிய ஆண்டு 1923. நான்கு ஆண்டுகளில் அதன் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இன்று இந்து மதத்திற்கு அபாயம், வரலாற்றில் வஞ்சிக்கப்பட்ட இந்துக்களுக்கு நியாயம் என்றெல்லாம் பேசித்தான் பொதுமக்களிடையே எளிதாகச் சென்றடைந்து கொண்டிருக்கிறது சங்பரிவாரம். ஆனால் இந்துத்வம் என்பதும் இந்து மதம் என்பதும் வேறு என்று சவார்க்கர் எழுதினார். அவர் ஒரு நாத்திகர். இனி அவர் பேசிய இந்துத்வம் என்பதன் உண்மைப் பொருள் என்ன என்று பார்க்கலாம்.

இந்து மதமும், இந்துத்வமும்

இந்துத்வம் என்ன சொல்கிறது? ஏ.ஜி. நூரானியின் புத்தகத்தில் இருக்கும் சில பத்திகளைப் பார்த்தால் அது புரிந்து விடும்:

“இந்து மதம் (இந்துயிஸம்) என்கிற சொல் தெளிவற்று உணர்த்தும் பொருளும் இந்துத்வமும் ஒரே மாதிரியானவை அல்ல என்று இங்கு சுட்டிக் காட்டினால் போதும். ‘இஸம்’ என்பது பொதுவாக ஒரு கோட்பாட்டையோ அல்லது மதக் கோட்பாடு அல்லது மத அமைப்பின் அடிப்படையிலான ஒரு நெறி முறையையோ குறிக்கும். ஆனால் இந்துத்வம் என்பதன் சாரத்தை ஆய்வு செய்யும்போது  நாம் ஒரு குறிப்பிட்ட இறையியல் அல்லது மதக் கோட்பாட்டை முதன்மையாக _ நிச்சயமாக முதன்மையாக அல்ல _ கருத்தில் கொள்வதில்லை.”

அவர் மேலும் இவ்வாறு விளக்குகிறார்:

“இந்த இரண்டு கருத்தியல்களுக்கு நடுவே ஒரு தெளிவான கோட்டை வரைய நாம் முன்பே முயற்சி செய்தோம்; இந்து மதம் என்பதைச் சனாதன தர்மம் மட்டும் என்று தவறாகப் பொருள் கொள்வதை நாம் ஆட்சேபித்திருக்கிறோம்.  இந்துத்வமும், இந்து தர்மமும் ஒன்றல்ல. அதேபோல் இந்து தர்மம் என்பது இந்து மதமும் ஒரே மாதிரியானவை அல்ல.”

”இந்து மதம் புராதனமானது. இந்துத்வம் என்பது நவீன கட்டுமானம்; ‘கலாச்சார தேசியம்’ என்பதைச் சுருக்கமாகக் குறிப்பிடும் சொல். இந்த வேறுபாட்டிற்குக் கொடுக்கப் படும் அழுத்தம் சவார்க்கரின் எழுத்துகளில் விரவிக் கிடக்கிறது. ”இந்தி என்கிற சகோதரிச் சொல் எப்படி இந்தியனை மட்டும் குறிக்குமோ அது போல் இந்து என்பதன் வேர்ச் சொல்லும் இந்தியனைக் குறித்தாலும், ஒரு முகமதியர் இந்தியாவில் வசிப்பதாலேயே அவரை இந்து என்று குறிப்பிடுவது, இச்சொற்களை அதிகம் பயன்படுத்துவது அவை உடையுமளவுக்குப் போய்விடும் என்கிற ஐயம் நமக்கு இருக்கிறது” என்கிறார் சவார்க்கர். இந்துமதம் என்பது உன்னமானது. இந்துத்வம் என்பது வெறுப்பின் தத்துவம்.

லஜ்பதி ராய் முன்வைத்த இரு தேசக் கொள்கையை மீண்டும் வலியுறுத்துகிறார் சவார்க்கர். அவர்,” இந்துக்கள் வெறும் இந்தியக் குடிமக்கள் மட்டுமல்ல; ஏனெனில் ஒரு பொதுவான தாய்நாட்டின் மீதிருக்கும் நேசத்தினால் மட்டுமின்றி ஒரே ரத்தத்தினாலும் பிணைக்கப்பட்டவர்கள். அவர்கள் ஒரு தேசம் மட்டுமல்ல; அவர்கள் ஒரு  இனம், ஜாதி.” என்கிறார். இது இனவாதத்தின் மிகக் கொடூரமான வடிவம்.

இந்து என்பதைக் கண்டறியும் சோதனையை மிகத் தெளிவாக இப்படி விளக்குகிறார் சவார்க்கர்:

“சந்தால் பழங்குடியினர் முதல் சாதுக்கள் வரையில், ஒவ்வொரு இந்துவுக்கும் இந்த பாரத பூமி பித்ருபூவாகவும் புண்ணியபூவாகவும் இருக்கிறது _அதாவது தந்தை பூமியாகவும், புண்ணிய பூமியாகவும் இருக்கிறது. இதனால்தான் தங்களின் பூர்வீக இந்து மதத்திலிருந்து கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்ட நம் நாட்டுக்காரர்களாகிய முகமதியர்களோ, கிறிஸ்துவர்களோ, இந்துக்களுடன் சேர்ந்து ஒரே தந்தைநாட்டையும் ஒரு பொதுவான கலாச்சாரத்தின் சொத்துக்களையும் _ மொழி, சட்டம், வழக்கங்கள், நாட்டார் கதைகள், வரலாறு போன்றவற்றையும் _ வரித்துக் கொண்டிருந்தாலும், அவர்களை இந்துக்களாக அங்கீகரிக்க முடியாது; அங்கீகரிக்கக் கூடாது.  இந்துக்களைப் போலவே அவர்களுக்கு இந்துஸ்தானம் தந்தை நாடாக இருந்தபோதிலும், அது அவர்களின் புண்ணிய பூமி அல்ல. அவர்களின் புண்ணிய பூமி வெகுதொலைவிலிருக்கும் அரேபியாவோ, பாலஸ்தீனமோதான்.”

அவர்கள் மீண்டும் தங்கள் அமைப்பிற்குள் ”திரும்பி வர வேண்டும்” என்று அழைப்பும் விடுக்கிறார் சவார்க்கர்.

“இன ரீதியாகவும், ரத்த ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், தேசிய இன ரீதியாகவும் இந்துத்வத்தைச் சாரமாகக் கொண்ட நீங்கள், வன்முறையின் கைகளினால் நம் மூதாதையர் பூமியிலிருந்து கட்டாயமாகப் பறித்துச் செல்லப்பட்ட நீங்கள், நம்முடைய பொதுவான தாயிடம் முழு மனதுடன் அன்பு செலுத்தி, அவளை தந்தை நாடாக (பித்ருபூ) மட்டுமின்றி , புண்ணிய பூமியாகவும் (புண்யபூ) ஏற்றுக் கொள்வதை மட்டுமே செய்ய வேண்டும்.;  அப்படிச் செய்தால் நீங்கள் இந்து அமைப்புக்குத் திரும்ப முழுமையான வரவேற்பு கிடைக்கும்.

பின்னிப் பிணைந்திருக்கும் இந்த இரண்டு கருத்துக்களும் ஆர்.எஸ்.எஸ்.சின் சொல்லாடலில் இன்று வரை தொடர்கின்றன. முஸ்லிம்கள் இந்த அமைப்புக்கு சொந்தமானவர்களல்ல என்பதால், அவர்கள் அதற்குத் திரும்ப வேண்டும்.  அவர்கள் இந்திய எல்லைக்குள் பிறந்திருந்தாலும் இந்து அமைப்புக்கு வெளியில் இருப்பதால் அவர்கள் இந்தியாவின் முழு குடிமக்கள் அல்ல. ‘எல்லை சார்ந்த தேசியம்’ என்பது தீர்மானகரமாக நிராகரிக்கப் படுகிறது. இந்துமதம் என்கிற ‘வீட்டிற்குத் திரும்ப வருவது’ மட்டுமே அவர்களுக்கிருக்கும் ஒரே வழி.

“பொதுவான தேசம் (ராஷ்டிரா), பொதுவான இனம் (ஜாதி), பொதுவான நாகரீகம் (சன்ஸ்கிருதி) _ இவைதான் இந்துத்வத்தின் சாரங்கள். சிந்துஸ்தான் என்பது யாருக்கு பித்ருபூ மட்டுமின்றி, புண்யபூவாகவும் இருக்கிறதோ அவர்தான் இந்து என்று இந்த சாரங்களைத் தொகுத்துச் சுருக்கமாகச் சொல்லலாம். தேசம், ஜாதி ஆகிய இரு இந்துத்வச் சாரங்களையும் பித்ருபூ என்கிற சொல் நேரடியாகவும், மறைமுகமாகவும் தெளிவாகக் குறிக்கிறது; மூன்றாவது சாரமான சன்ஸ்கிருதியைப் பிரதானமாகக் குறிக்கும் சொல்தான் புண்யபூ. சடங்குகள், சம்பிரதாயங்கள், வழிபாட்டு முறைகள், விழாக்கள் போன்ற சமஸ்காரங்களை உள்ளடக்கிய சன்ஸ்கிருதிதான்  ஒரு பூமியை புண்ணிய பூமியாக்குகின்றன.”

கிறிஸ்துவர்கள், யூதர்களின் நிலை முஸ்லிம்களை விட மேலானதாக இல்லை.

“யூதர்களைப் பாருங்கள்;  பல நூற்றாண்டுகளாய் அவர்கள் செழிப்பாக வாழ்ந்து வந்தாலும், அவர்களுக்குப் புகலிடமளித்த பல நாடுகள் மீது நன்றியுணர்ச்சி இருந்தபோதிலும், அவர்கள் வாழும் நாடுகளை சமமாகவோ இன்னும் அதிகமாகவோ அவர்கள் நேசிக்க முடியாது. முகமதியர்களைப் போலவே அவர்களும் தங்களின் புனித பூமியின் நலன்களை, தாய்நாட்டின் நலன்களுக்குக் கீழாகவே வைத்திருக்கின்றனர்.”

இதில் சமரசத்திற்கு இடமே இல்லை. ‘கலப்புக் கலாச்சாரம்’ என்கிற கருத்தியல் நிராகரிக்கப்பட்டது. 1937இல் அகமதாபாத்தில் நடந்த இந்து மகாசபை மாநாட்டில் சவார்க்கர் ஆற்றிய தலைமையுரையில் இந்தக் கருத்தியலை உரக்க ஒலித்தார். அதற்குப் பிறகு மகாசபையின் ஏழு வருடாந்திர மாநாடுகளுக்குத் தலைமை தாங்கினார்.

இந்த உரைகளில் தான் ‘இந்துத்வம்’ என்கிற சொல்லை உருவாக்கியதாக பெருமையுடன் நினைவு கூர்ந்தார். யார் இந்து என்பதைக் கண்டறிவதற்கான சோதனை புண்ணிய பூமி என்கிற கருத்தைச் சார்ந்தது. அதன்படி, முகமதியர்கள், யூதர்கள், கிறிஸ்துவர்கள், பார்சிகள் போன்றோர் இந்துஸ்தானத்தை தங்கள் தந்தை நாடாக அங்கீகரித்த போதிலும், தங்களை இந்துக்கள் என்று அழைத்துக் கொள்வதிலிருந்து விலக்கி வைக்கப்படுகின்றனர்; அவர்கள் இந்துக்களும் அல்ல. “இந்து அமைப்புக்குள்ளிருந்த ஜப்பானியர்களும், சீனர்களும், பிறரும் இந்தியாவைத் தங்களின் புனித பூமியாகக் கருதினாலும் அவர்களும் இந்துக்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதிலிருந்து விலக்கி வைக்கப்பட்டவர்கள்தாம். இப்படிப்பட்ட கருத்துக்கள் விசித்திரமானவையாக இருந்த போதிலும், சவார்க்கரின் இந்துத்வக் கொள்கையின் உட்கருவை ஆர்.எஸ்.எஸ்.சும், பிஜேபியும் ஏற்றுக் கொண்டனர் என்பதை மறைக்க முடியாது.

1937இல் சவார்க்கர் இப்படிப் பேசினார்:

“சில விரும்பத் தகாத உண்மைகளை நாம் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். இன்றைய இந்தியா ஒருமைப்பட்ட,  ஒற்றைத் தன்மை கொண்ட தேசம் இல்லை; மாறாக, அதற்குள் இரு தேசங்கள் இருக்கின்றன: ஒன்று, இந்துக்களின் தேசம், மற்றொன்று, முஸ்லிம்களின் தேசம்.”

இந்தக் கருத்து அடுத்து வந்த நாக்பூர் மாநாட்டில் விரிவுபடுத்தப்பட்டது.

“ஆம், இந்துக்களாகிய நாம் இயல்பிலேயே ஒரு தேசம்தான். ஏனெனில், மத, இன, கலாச்சார, வரலாற்றுப் பந்தங்கள் நம்மை ஒரு ஒற்றைத் தன்மை கொண்ட தேசமாக இணைக்கின்றன. இதனுடன் சேர்ந்து அது எல்லைரீதியாகவும் ஒன்றான தேசமாகத் திறன் பெற்றிருக்கிறது. ஓர் இனம் என்ற வகையில் நம் இருப்பு இந்தியாவுடன் அடையாளப்படுத்தப்படுகிறது. இது நம் தந்தை நாடு, நம் புனித பூமி எல்லாவற்றிற்கும் மேலாகவும், எது எப்படி இருந்தாலும், இந்துக்களாகிய நாம் ஒரு தேசமாக இருப்போம். எனவே நாம் ஒரு தேசம், இந்துஸ்தானத்தில் இந்துக்கள் அனைவரும் ஒரு தேசம்; அதில் முஸ்லிம் சிறுபான்மையினர் ஒரு சமூகம்தான்.”

இந்துத்வம் நடைமுறையில் இன்று

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தின் ஒரு தீவிர வெளிப்பாடாக முதல் இரண்டு படுகொலைகளைக் கண்டாலும், மூன்றாவது விடுதலை பெற்ற பன்முகத் தன்மை கொண்ட, கலப்புக் கலாச்சாரத்தின் மாதிரியாக மதச் சார்பற்ற இந்தியா உருவாகிடக் கூடாது என்கிற வெறியின் வெளிப்பாடு. தேசத் தந்தையைக் கொல்லுமளவுக்குச் சென்ற இந்த வெறிக்குப் பின் கலாச்சார தேசியம் என்ற பெயரில் முதலில் சவார்க்கரும், பின்னர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைத் தோற்றுவித்த ஹெட்கேவாரும், அதன் தலைவராக நீண்ட காலமாகப் பணியாற்றிய கோல்வால்கரும், ஜன சங்கத்தைத் துவங்கிய ஷ்யாமா பிரசாத் முகர்ஜியும், பின்னர் பாரதீய ஜனதா கட்சி என்கிற புதிய முகமூடியுடன் வந்த அமைப்பின் தலைவர்களும் பேசிய, எழுதிய, அரசியல் ரீதியாக நிறைவேற்றத் துணிந்த ஒரு அரசியல் கோட்பாடு. இதன் தொடக்கப் புள்ளியாக வந்ததுதான் சவார்க்கர் 1923இல் எழுதிய இந்துத்வம் என்கிற புத்தகம்.

மகாத்மாவின் படுகொலைக்குப் பின் அரசியல்ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ்.சும் இந்து மகாசபையும் ஜனசங்கம் என்ற பெயரில் மீண்டும் அரசியல் கட்சியாக வந்தது. அப்போது அதன் கொள்கை ஒன்றுபட்ட மனிதநேயம் என்று கூறப்பட்டது. எமர்ஜென்சி எதிர்ப்பில் உருவான ஜனதா கட்சியில் ஐக்கிய ஜனசங்கம் அதிலிருந்து பிரிந்து பாரதீய ஜனதா கட்சியாக வெளியேறியது. அப்போது அந்த கோட்பாடு காந்திய சோஷலிசம் என்று கூறப்பட்டது.

இந்தக் காலகட்டத்தில் பிஜேபி இந்துத்வம் என்கிற சொல்லைத் தவிர்த்தே வந்தது. ராமஜென்ம பூமி குறித்து அது 1989இல் பாலம்பூரில் நடந்த கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தில் கூட இந்துத்வம் என்று குறிப்பிடவில்லை.  ஆனால் செப்டம்பர் 1990இல் ரத யாத்திரையைத் தொடங்கிய எல்.கே. அத்வானி, “கொள்கைரீதியாக நான் இந்தப் பிரச்சினையில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் எதிராக நிற்கிறேன். அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாகச் சிந்திக்கிறார்கள்,” என்றார். பிரச்சினை ராம ஜென்ம பூமியல்ல. அது இந்துத்வத்தைக் காப்பதற்கான போர் என்று தன் பேச்சில் உணர்த்தினார். ஆயினும் பிஜேபி 1989இலும் 1991இலும் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளில் இந்துத்வம் என்று குறிப்பிடப்படவில்லை. அது முதன்முதலாக 1996 தேர்தல் அறிக்கையில்தான் இடம் பெற்றது.

பிஜேபி முதன் முறையாக ஆட்சிக்கு வந்த பின் சவார்க்கர் உயிர்த்தெழுந்தார். அந்தமான் சிறையில் அவர் இருந்த சிறைக் கொட்டடியில் ஒரு நினைவுச் சின்னம் வைக்கப்பட்டது.  அந்தமானின் தலைமையிடமான போர்ட்பிளேரின் விமான நிலையத்துக்கு வீர் சவார்க்கர் விமான நிலையம் என்று பெயர் சூட்டப்பட்டது. பிறகு பாராளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் காந்தியின் உருவப் படத்திற்கு அருகிலேயே சவார்க்கரின் உருவப் படமும் திறந்து வைக்கப்பட்டது.

தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துப் பிரதமராயிருக்கும் மோடி இவர்கள் இருவரின் படத்திற்கு முன் நின்றும் வணங்குவதுதான் மிகப் பெரிய வரலாற்று விசித்திரம்.

சவார்க்கரின் இந்துத்வத்தின் நூற்றாண்டு நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதன் விழா கொண்டடப்படும் நேரத்தில் இந்துத்வக் கொள்கையின் லட்சியமாகிய இந்து ராஷ்டிரத்தை அமைப்பது என்கிற முனைப்பில் மோடி அரசு செயல்படுகிறது.

தேசத்தின் அவதார புருஷர்களின் வரிசையில் சவார்க்கரை நிறுத்தும் நோக்கத்துடன்தான் அவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்திருக்கிறது.

யார் உண்மையான பாரத ரத்னா?

கருணை மனு புகழ் சவார்க்கரை இந்த நேரத்தில் வேறு ஒருவருடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியிருக்கிறது. அவரின் பெயர் பகத்சிங்.

பகத்சிங்கும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் ஒரு மனுவை அளித்தார். அது கருணை மனு அல்ல. இரக்கமற்று என்னைச் சுட்டுக் கொல்லுங்கள் என்று கூறும் விருப்ப மனு.

அவர் லாகூர் சிறையிலிருந்து  பஞ்சாப் கவர்னருக்கு 1931ஆம் ஆண்டு இந்த மனுவை அனுப்பினார். அதில் அவர் சொன்னதன் சாரம் இதுதான்: “அக்டோபர் 7, 1930 அன்று ஒரு சிறப்பு நீதிமன்றம் எங்களுக்கு மரண தண்டனை வழங்கியது. இங்கிலாந்து அரசுக்கு எதிராக நாங்கள் போர் தொடுத்தோம் என்பதுதான் எங்கள் மீதான குற்றச் சாட்டு. பிரிட்டிஷ் தேசத்த்துக்கும் இந்திய தேசத்துக்கும் இடையே ஒரு போர் நடப்பதாகவும், அந்தப் போரில் நாங்கள் உண்மையாகப் பங்கேற்றதால், நாங்கள் போர்க் குற்றவாளிகள் என்றும் கூறியிருக்கிறீர்கள். இந்தக் குற்றச்சாட்டை நாங்கள் ஏற்றுக் கொள்வதாக வைத்துக் கொண்டாலும், அப்படி ஒரு போர் நடக்கிறதென்றும், ஒரு சில ஒட்டுண்ணிகள் இந்தியாவின் உழைக்கும் மக்களையும், இயற்கை வளங்களையும் சுரண்டும் வரை அந்தப் போர் தொடருமென்றும் நாங்கள் பிரகடனம் செய்கிறோம். அந்த ஒட்டுண்ணிகள் பிரிட்டிஷ் முதலாளிகளாக மட்டுமோ அல்லது பிரிட்டிஷ் மற்றும் இந்தியர்களின் கலப்பாகவோ அல்லது இந்தியர்கள் மட்டுமாகவோ இருக்கலாம்.

“எனவே. போர் தொடரும். அது வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு வடிவங்களை எடுக்கலாம். அது பகிரங்கமாவோ, ரகசியமாகவோ, போராட்டங்களாக மட்டுமாகவோ  அல்லது வாழ்வா சாவா என்கிற உக்கிரமானதாகவோ இருக்கலாம். அது ரத்தம் தோய்ந்ததாக இருக்குமா அல்லது ஒப்பீட்டு வகையில் அமைதியானதாக இருக்குமா என்பதைத் தெரிவு செய்யும் பொறுப்பு உங்களிடம்தான் இருக்கிறது. எது உங்களுக்கு விருப்பம் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் ஒரு சோஷலிசக் குடியரசு உருவாகும் வரை அந்தப் போர் புதிய வேகத்துடனும், இன்னும் அதிகத் திமிருடனும், குலைக்க முடியாத உறுதியுடனும் தொடரும்.”

இறுதியாக பகத் சிங் எழுதிய வரிகள்தாம் வீரம் என்பது என்னவென்று நமக்கு உணர்த்தும்.

“தூக்கிலடப்படுவதைவிட சுட்டுக் கொல்லப்படுவதையே நாங்கள் விரும்புகிறோம். நீங்கள் கருணை கூர்ந்து உங்களுடைய ராணுவத் துறையின் ஒரு பிரிவை அனுப்பி எங்களுடைய மரண தண்டனையை நிறைவேற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம். அதைச் செய்வீர்கள் என நம்புகிறோம்.”

கருணைக்காக மன்றாடிய சவார்க்கர் ஒருபுறம். சுட்டுக் கொல்லப்படுவதற்காக மனு அளித்த பகத்சிங் மறுபுறம். மற்றவர்களின் கையில் துப்பாக்கியைக் கொடுத்து கொலை செய்யத் தூண்டிய சவார்க்கர் ஒருபுறம். தானே கையில் ஆயுதம் தாங்கிச் சென்று அரசாங்கத்தை அதிர வைத்த பகத்சிங் மறுபுறம். விடுதலை அளித்தால் அரசாங்கத்திற்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்துவேன் என்ற சவார்க்கர் ஒருபுறம். உயிரே போனாலும் என் போர் தொடரும் என்ற பகத்சிங் மறுபுறம். உங்கள் போருக்கு உதவுவேன் என்ற சவார்க்கர் ஒருபுறம். உழைக்கும் மக்களையும் இயற்கை வளங்களையும் காப்பதற்காக எங்களின் போர் நிற்காது என்ற பகத்சிங் மறுபுறம். இந்துக்களின் ராஷ்டிரத்தை உருவாக்குவதே லட்சியம் என்றிருந்த சவார்க்கர் ஒருபுறம். சோஷலிசக் குடியரசை உருவாக்குவோம் என்ற பகத்சிங் மறுபுறம்.

இதில் யார் பாரத ரத்னா?

(இந்த நீண்ட கட்டுரையின் பெரும்பகுதி அறிஞர் ஏ.ஜி. நூரானி எழுதிய இரு புத்தகங்களிலிருந்து தொகுக்கப்பட்டவை. அவை: 1. Savarkar and Hindàˆva: The Godve Connecˆion; 2. The RSS: A Menace ˆo India.

உயிர்மை இதழுக்காக நான் சவார்க்கர் குறித்து ஒரு கட்டுரை எழுதுவதற்கு இந்தப் புத்தகங்களிலிருந்து மேற்கோள்களையும் எடுத்துக்கொள்வதற்கு மிகுந்த மகிழ்ச்சியுடன் அனுமதி தந்த அவருக்கு நன்றி. கட்டுரையில் இருக்கும் மேற்கோள்களின் மொழிபெயர்ப்பு என்னுடையது)

நன்றி

நன்றி: விஜயசங்கர் ராமச்சந்திரன்.
ஃப்ரண்ட் லைன், ஆசிரியர் (உயிர்மை இதழில் எழுதியது)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here